Sunday, November 21, 2010

மனம் திறக்கிறேன்...!



சரிகாஷா என்ற பெயரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். ஈவ் டீசிங்-க்கு எதிராக சட்டப்பேரவையில் தனிச்சட்டம் கொண்டுவரக் காரணமான பெண். வன்பகடிக்கு தன் உயிரையே பறிகொடுத்தவள். அந்தக் காலகட்டத்தில் எங்கு திரும்பினாலும் சரிகாஷாதான். ஒரு பெண்ணின் மரணம் தமிழகத்தில் இந்தளவுக்கு இதற்கு முன்பு பேசப்பட்டிருக்குமா என்பது சந்தேகம் தான். இதற்கு என்ன காரணம்?

அந்தச் சம்பவம் நடந்ததும் சரிகாஷாவின் முகம் பத்திரிகைகளில் வெளியானது. ஈவ் டீசிங் பற்றி அப்போது யார் பேசினாலும் அந்த முகம் ஞாபகம் வந்து போகும் அளவுக்கு அழகு வடியும் முகம் அந்தப் பெண்ணுக்கு. குமரி மாவட்டத்தில் ஈவ் டீசிங்கிற்கு சரிகாஷாவுக்கு முன்பும் பின்பும் பல இளம் பெண்கள் பலியானார்கள். பாதிக்கப்பட்டார்கள். ஆனாலும் சரிகாஷாவுக்குக் கிடைத்த அனுதாபமும் கவனிப்பும் அவர்களுக்கெல்லாம் கிடைக்கவில்லை.

அதே குமரி மாவட்டத்தில் என்று நினைக்கிறேன், காதலிக்க மறுத்த அக்காள் தங்கை மீது ஆசிட் ஊற்றப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பணஉதவி அளித்த கதையெல்லாம் கூட நடந்தது. அந்தப் பெண்களின் முகமோ, பெயரோ நமக்கு இப்போது ஞாபகமில்லையே?

‘சிகப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்‘ என்ற வடிவேலு டைலாக்கை இந்த இடத்தில் ஞாபகப்படுத்துவது சரியாக இருக்கும் . பாதிக்கப்படும் பெண்கள் அழகாக இருந்துவிட்டால் அவர்கள் எப்போதும் கூடுதல் கவனத்தைப் பெறுவார்கள் என்பதை யாராவது மறுக்க முடியுமா? பத்திரிகைகளும் அழகான பெண்கள் என்றால் அவர்களின் புகைப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பத் திரும்ப பிரசுரிக்கத் தயங்கியதில்லை. சரிகாஷா விஷயத்திலும் அதுதான் நடந்தது.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். செங்கற்பட்டில் சாலையோரம் கட்டுமானத் தொழிலாளர்கள் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு தொழிலாளியின் பெண் குழந்தையை தூங்கிச் சென்ற அவ்ர்களில் ஒரு காமுகன், அந்தக் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து அங்கிருந்த பாறையில் அடித்துக் கொண்டிருக்கிறான். பின்னர் ஒன்றும் தெரியாதவன் போல் வந்து அதே இடத்தில் படுத்துக் கொண்டான். அடுத்த நாள் அவனும் அந்தக் குழந்தைகயை தேடுவது போல் நடித்திருக்கிறான். குழந்தையின் சிதைந்த சடலம் கிடைக்க போலீஸ் விசாரணையில் அந்தக் காமுகனும் சிக்கினான்.

இப்போது அனேகமாக அவன் சிறையில் இருப்பான் என்று நினைக்கிறேன். இந்தச் செய்தி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? எத்தனை பத்திரிகைகள் அது பற்றி எழுதின. அந்தக் குழந்தையின் இறுதி ஊர்வலத்தில் செங்கற்பட்டு மக்கள் கூட்டமாக கலந்து கொள்ளவில்லையே ஏன்?

ஒரே நேரத்தில் கட்டுமானத் தொழிலாளியும் ஜவுளிக்கடை நடத்தும் பணக்கார மார்வாடியும் தங்கள் குழந்தைகளைக் காணவில்லை என்று காவல் துறையினரிடம் புகார் கொடுக்கச் சென்றால் யாருடைய புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்? மார்வாடி போலீஸ்காரர்களை தன்னுடைய சொந்தக் காரில் உட்காரவைத்து குழந்தையைத் தேடிச் செல்வான். கட்டுமானத் தொழிலாளி? இதுதானே யதார்த்தம்!

கோவை சம்பவத்திலும் இதேதான் நடந்தது. மார்வாடி, பணக்காரனும் கூட. காணாமல் போன அந்தக் குழந்தைகளின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டன. கோவை மக்களின் ஒட்டுமொத்த அனுதாபமும் கவனிப்பும் அந்தக் குழந்தைகளின் மீது விழுந்தன. அவர்களின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்களும் கலந்து கொண்டனர். அந்த அனுதாபம் கொலையாளி மீது வெறுப்பாக மாறியது.

மார்வாடிகளின் கோரிக்கை போலீசின் காதுகளில் விழும். அவர்கள் என்ன தொழிலாளிகளா இல்லை தங்கள் உரிமைக்காகப் போராடும் பாட்டாளி வர்க்கமா? பணக்கார மார்வாடிகள் ஆயிற்றே. அவர்களுக்கு உடனடியாக நீதி கிடைக்கச் செய்ய வேண்டும், என்பதற்காக நடத்தப்பட்டதுதான் அந்த என்கவுன்டர். (இதில் நடந்த ஒரு நன்மை என்னவென்றால், என்கவுன்டர்கள் எல்லாம் ஜோடிக்கப்பட்டவைதான் என்பதை அனைத்துத் தரப்பு மக்கள் உணர்ந்துவிட்டார்கள்)

போலீஸார் சொந்த லாபமின்றி இதைச் செய்திருக்க மாட்டார்கள். மார்வாடிகள் அவர்களை ‘கவனித்து’ விட்டார்கள் என்று எனக்கு வரும் செய்திகள் சொல்கின்றன. என்கவுன்டரில் கொல்லப்பட்ட வெங்கடேசப் பண்ணையாரின் மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து, மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தது, நாடார் ஓட்டு வங்கிக்காகவே. இப்போது மார்வாடிகளின் ஓட்டு வங்கியைக் குறிவைத்து இந்த என்கவுன்டர் நடத்த அரசும் அனுமதி அளித்திருக்கிறது. இல்லை என்றால் சட்டப்பேரவை கூடும் நேரத்தில் இப்படியொரு என்கவுன்டர் நடத்த அனுமதி கிடைத்திருக்காது.

ஓர் அரசின் ஓட்டு அரசியலையும் அந்த அரசுக்காக இயங்கும் காவல்துறையின் அடவாடித் தனத்தையும் புரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக கோயமுத்தூர் காரர்களும், உணர்ச்சிவயப்பட்ட பலரும் அவர்களை ஆதரிக்கிறார்கள். போலீஸ்காரர்களிடம் நியாயத்தை எதிர்பார்ப்பதும் அவர்கள் நியாயமாக நடந்திருப்பார்கள் என்று நம்புவதும் ஆபத்தானது. அவர்கள் என்றைக்குமே அரசின் அடையாட்கள்.. பணக்காரர்களின் வேலையாட்கள்... எங்காவது விதிவிலக்காக சிலர் இருக்கலாம். மேற்கு மண்டல ஐ.ஜியாக இருந்த சுப்பிரமணி உண்மையிலேயே மனிதாபிமானம் நிறைந்த ஒரு காவல் அதிகாரி. ஆனால் ஒட்டுமொத்த காவல் துறையையும் அவரை வைத்து மதிப்பிட முடியாது.

அந்தக் குழந்தைகளை கொன்ற கொடூரனுக்குத் தேவை மனநல சிகிச்சை அல்லது சிறை தண்டனை. அதைவிடுத்து இந்தத் தண்டனை சரியென்றால், டிவி ஷோக்களில் சின்னஞ்சிறிய குழந்தைகளுக்கு ஆபாசமாக ஆடை அணிவித்து ஆடவைத்து அழகு பார்க்கும் பெற்றோர்களையும் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் அதை ரசிக்கும் பார்வையாளர்களான நம்மையும் என்கவுன்டர் செய்யலாம் தப்பில்லை....

Sunday, November 14, 2010

மலையாளிகளுக்கு ஓணம்! மார்வாடிகளுக்கு என்கவுன்டர்!!-ஒரு கோணல் பார்வை

மோதல் சாவு, அதாங்க என்கவுன்டர். சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றம் கூடும் தருணத்தில் மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, இந்த முறை பயன்பட்டது கோவையில் நடந்த மோகன கிருஷ்ணனின் என்கவுன்டர் சாவு.

கடந்த மாதம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும் ஈர்த்த விவகாரம், இரண்டு பள்ளிக் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டது. சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து அந்தச் சிறுமியையும் அவளது சகோதரனையும் கொன்ற மகிழுந்து ஓட்டுநர் மோகன கிருஷ்ணன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வழக்கம் போல் அதற்கென புனையப்பட்ட கதைகளுடன் இந்த என்கவுன்டர் நடந்து முடிந்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான பொதுமக்கள், காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஏகோபித்த ஆதரவளித்துள்ளனர். இதை எதிர்பார்த்துதான் இந்த என்கவுன்டரும் நடந்திருக்கிறது. என்கவுன்டர் நடத்திய கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபுவை பூங்கொத்துடன் சென்ற பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.

இந்த என்கவுன்டர் பற்றி நாளிதழ்களில் செய்திகள் வெளியான அதே நாளில் டென்னீஸ் வீராங்கனையும் பள்ளி மாணவியுமான ருசிகா மானபங்க வழக்கில் ஹரியாணா முன்னாள் டிஜிபி ரத்தோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட செய்தியும் வெளியாகியிருந்தது. ரத்தோரின் பாலியல் கொடுமையால் அந்த மாணவி 1990-ல் தற்கொலை செய்து கொண்டார். ருசிகா வழக்கில் கீழ் நீதிமன்றத்தால் ரத்தோருக்கு ஆறு மாதம் (!) தண்டனை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து ருசிகாவின் பெற்றோர் உயர்நீதிமன்றம் சென்றனர். அங்கே தண்டனைக் காலம் 18 மாதங்களாக அதிகரிக்கப்பட்டது. கோவை மாணவிக்கு இருந்த நியாயங்கள் அனைத்தும் ருசிகாவுக்கும் உண்டு என்றால் ரத்தோர் இன்னும் உயிருடன் நடமாட என்ன காரணம்?

காவல்துறையினரால் மோதல் சாவில் கொல்லப்படுபவர்கள் எல்லாம் கொடுங்குற்றவாளிகள் என்றே வைத்துக் கொண்டாலும், அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறையினரால் என்கவுன்டரில் கொல்லப்பட்ட வெங்கடேசப் பண்ணையாரின் மனைவிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும், இந்திய அரசின் உள்துறை இணை அமைச்சர் பதவியை தி.மு.க. பெற்று தந்ததை எந்த வகையில் சேர்ப்பது? என்கவுன்டர் செய்யப்பட்ட வீரப்பன் விவகாரத்திலும் அ.தி.மு.க.வின் நிலைப்பாடும், தி.மு.க. நிலைப்பாடும் நேர் எதிராக இருந்ததை இங்கே கவனிக்க வேண்டும்.

குற்றவாளிகளில் தங்களுக்குப் பிடிக்காதவர்களையும், தங்களுக்கு எதிரானவர்களையும் மட்டுமே என்கவுன்டர் செய்வதை இந்த அரசுகள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. என்கவுன்டர் என்பதே குற்றத்தை குறைக்கும் அரசின் எண்ணமாக அதை ஆதரிப்பவர்களால் பார்க்கப்படுகிறது. உண்மையில் அரசுக்கு அப்படியொரு எண்ணம் இல்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை.

கோவை நிகழ்வைப் பொறுத்தவரையில், கடத்திக் கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மார்வாடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கோவையில் மார்வாடி உள்ளிட்ட வட இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், துணி-நகை உள்ளிட்ட பணம் கொழிக்கும் முக்கிய வர்த்தகங்களில் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதையும் மறுக்க முடியாது.

பணத்துக்காக அந்தக் குழந்தைகளை கடத்திக் கொலை செய்த நிகழ்வு கொடூரமானதும், தண்டிக்கத்தக்கதும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் யாருக்கும் இல்லை. நேரடியாகப் பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பமும் அவர்களின் உறவினர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மக்களுமே அந்தக் குழந்தைகளுக்காக கண்ணீர் வடித்தனர். அதுதான் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்தியிருக்கிறது. எதையும் ஓட்டுகளாக்கி விட வேண்டும் என்று நாக்கைத் தொங்க விட்டு அலையும் கருணாநிதி அரசு, அந்தக் குழந்தைகளுக்காக எழுந்த அனுதாபத்தையும் நாசுக்காக பயன்படுத்திக் கொண்டது.

அதாவது, மார்வாடிகளின் வாக்குகளைக் குறிவைத்தே இந்த என்கவுன்டர் நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்கு கோவைக்கு வந்த கருணாநிதி, அங்கே பெரும்பான்மையாக வாழும் கேரள மக்களின் வாக்குகளை குறிவைத்து ஓணம் பண்டிகைக்கு அரசு விடுமுறை அளிப்பேன் என்று வாக்குறுதியளித்து அதை நிறைவேற்றினார். மலையாளிகளுக்கு ஓணம் என்றால் இந்திக்காரர்களுக்கு என்கவுன்டர்!

சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற அவை கூடும் போது இப்படியொரு என்கவுன்டர் நடத்தியிருப்பதையும் கவனிக்க வேண்டும். விலைவாசி, ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற விவகாரங்களில் இருந்து மக்களை திசை திருப்பவும் இந்த என்கவுன்டர் உதவும் என்று கங்காணி கருணாநிதி அரசு நினைத்திருக்கலாம். என்கவுன்டர் என்பது மனித உரிமை மீறல் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்க, என்கவுன்ட்ர் என்பதே வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆயுதம் என்று கருணாநிதி சிரித்துக் கொண்டிருக்கிறார். தமிழன் கொத்துக் கொத்தாக செத்தாலும் பதவி போதும் என்று பக்குவமாக நடந்து கொண்ட கருணாநிதியிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

Wednesday, November 10, 2010

அருந்ததி ராய் சீமான் :- ஓர் ஒப்பீடு




அருந்ததிராயின் கருத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் விவாதங்கள் ஊடகங்களால் முன்வைக்கப்படுகின்றன. அப்படி என்ன சொல்லிவிட்டார் அருந்ததி ராய்? “காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி அல்ல என்பதுதான் வரலாற்று உண்மை” என்று சொல்லியிருக்கிறார். ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “இந்த வரலாறு எல்லோரும் அறிந்ததே. நான் ஒன்றும் மக்களுக்கு ஆரம்பக்கல்வி நிலையில் சரித்திரப் பாடம் புகட்டவில்லை ஆனால் சிக்கலான காஷ்மீர் வரலாறு இன்றைய காஷ்மீர் சிக்கலுக்கும் காரணமில்லை என்றால், இந்திய அரசு 7 இலட்சம் ராணுவ வீரர்களை காஷ்மீரில் ஏன் நிறுத்தி வைத்திருக்கிறது? காஷ்மீர் தெருக்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்த நிஜங்களைக் கண்டு கொள்ளாமல் எப்போது நாம் ஏன் நம் கண்களை மூடிக் கொள்கிறோம்?” என்று பதிலளித்திருக்கிறார், அ.ராய்.

இந்தக் கருத்துக்குத்தான் டைம்ஸ் நவ் செய்தித் தொலைக்காட்சி அருந்ததிராயை தேசத் துரோகி என்று வர்ணிக்கிறது. காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் அருந்ததி ராயின் அக்கருத்துகள் மிகவும் சரியானதே.

அருந்ததி ராயின் அந்தப் பேச்சை அடுத்து, பா.ஜ.க. போன்ற இந்துத்துவக் கட்சிகளும், இந்திய தேசியத்தைத் தூக்கிப்பிடிக்கும் சில ஆங்கில இந்தி ஊடகங்களும் அருந்ததிராயைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. அருந்ததிராயின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிரானதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம் என்று இந்திய அரசும் அறிவித்தது. இதற்கிடையே, பா.ஜ.க. உள்ளிட்ட சில இந்துத்துவ அமைப்புகள் அருந்ததிராயின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்தளவுக்கு எதிர்ப்பு இருந்தும் அருந்ததிராயைக் கைது செய்யப் போவதில்லை என்று இந்திய அரசு அறிவித்துவிட்டது. இந்திய அரசு அருந்ததி ராயை ஏன் கைது செய்ய வில்லை என்பது ஆராய வேண்டிய கேள்வி. அருந்ததிராயைக் கைது செய்யாமல் தவிர்ப்பதற்கு பா.ஜ.க. கோரிக்கை விடுக்கிறது; அதற்கு அடிபணியக் கூடாது என்ற அரசியல் காரணம் மட்டுமே காரணம் அல்ல. அருந்ததிராய் இந்திய அளவில் அறியப்பட்ட சமூகப் போராளி. அதற்கு மேலும் அருந்ததி ராய் கேரளத் தாய்க்கும் வங்காள தந்தைக்கும் பிறந்தவர். ஆங்கிலத்தில் எழுதக் கூடியவர். (தில்லியில் படித்ததால் இந்தி பேசக் கூடியவர்). இன்னும் பச்சையாக சொல்ல வேண்டும் என்றால் அருந்ததி ராய் தமிழர் அல்ல.இவைதான் அவரைக் கைது செய்யாமல் இருப்பதற்கான காரணங்கள்.

சரி, நேராக விஷயத்துக்கு வருகிறேன். சீமான் ராமேஸ்வரத்தில் பேசுகிறார். ஈரோட்டில் பேசுகிறார். புதுவையில் பேசுகிறார். சென்னையில் பேசுகிறார். அந்தப் பேச்சுகளுக்கு எல்லாம் அவர் கைது செய்யப்படுகிறார். சீமானை ஏன் கைது செய்யவில்லை என்று (பரம) எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா அறிவிக்கை விடுகிறார். உடனே தி.மு.க. அரசு அவரைக் கைது செய்கிறது. சீமானை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கேட்கிறது, உடனே கலைஞர் கைது செய்ய உத்தரவிடுகிறார்.

இத்தனைக்கும் அருந்ததிராய் பேசியது, இந்தியத் தேசியத்துக்கு எதிராக. சீமான் பேசியது இலங்கை அரசுக்கு எதிராக. அருந்ததிராயை கைது செய்ய மத்திய அரசு ஆலோசனை செய்கிறது. ஆனால் சீமானைக் கைது செய்வதற்கு முன்பு இதுபோன்ற எந்த ஆலோசனையும் நடக்கவில்லையே ஏன்? நான் அருந்ததிராய்க்கு எதிரானவனல்ல. சீமானுக்கு ஆதரவாளனும் அல்ல. (தேவர் சிலைக்கு மாலை அணிவித்தது, தேர்தலில் போட்டியிடும் அவரது முடிவு உள்ளிட்ட விவகாரங்களில் அவருடன் வேறுபடுகிறேன்)

வடஇந்திய ஊடகங்கள் அருந்ததிராய்க்கு எதிராக செயல்படுகின்றன என்றும் அருந்ததி ராய் வீடு தாக்கப்பட்டது என்றும் சொல்லி தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் போராட்டத்துக்குத் தயாராகி வருகிறார்கள். இந்தப் போராட்டடும் அவசியமே. அதை நான் வரவேற்கிறேன். ஆனால் தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் எல்லாம் தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்கு குரல் கொடுக்கிறதா என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும். சினிமாக்காரர் மணிவண்ணன், சினிமாக்காரர் பாரதிராஜா என்று இன்றுவரை எழுதும் தினமலரை எதிர்த்து இவர்கள் போராடவில்லையே ஏன்? (சினிமாக்காரர் பாலச்சந்தர், சினிமாக்காரர் மணிரத்னம் என்று எழுதுவார்களா?)

கடந்த 2009 மே மாதம் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து தமிழகக் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று, யாராவது கேட்டுச் சொல்வார்களா? தமிழ் மொழி சமஸ்கிருத்ததையும், இந்தியையும் எதிர்த்து நிற்கிறது. இதனாலேயே தமிழனை இன்னும் எதிரியாகவே பார்க்கிறது, இந்தி(ய) அரசு. அப்படிப்பட்ட இந்திய அரசுக்கு கேடுகெட்ட திராவிட கட்சிகள் துணை போய் அவர்கள் கைகாட்டும் நபர்களை எல்லாம் கைது செய்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் வைகோ கைதும், தி.மு.க. ஆட்சியில் சீமான் கைதும் இதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன. (தற்போது வைகோ அ.தி.மு.க.வை ஆதரிப்பது போல், நாளை சீமான் தி.மு.க.வை ஆதரித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.)

இந்தியாவுக்கு எதிராக கருத்து சொன்ன அருந்ததிராயைக் கைது செய்ய இந்திய அரசு யோசிக்கும் வேளையில் இலங்கை அரசுக்கு எதிராக கருத்து சொன்ன சீமானை கைது செய்தது ஏன் என்று இந்தப் போராட்டக்காரர்கள் கேட்க வேண்டும். டைம்ஸ் நவ்வை எதிர்க்கும் அதே வேளையில் இங்கே தமிழர்களுக்கு விரோதமாக செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
இந்திய அரசால் புறக்கணிக்குள்ளாகும் ஆறு கோடி தமிழர்களின் பிரதிநிதியாகவே இதைக் கேட்கிறேன். மற்றபடி, நானும் தோழர் அருந்ததி ராய் போல் காஷ்மீர் மக்களின் விடுதலையை ஆதரிக்கிறேன்.

Thursday, October 28, 2010

கன்னடர்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம்...

கடந்த சனிக்கிழமை பெங்களூரு சென்றிருந்தேன். அதற்கு முன்பு 2000ம் ஆண்டில் கல்லூரியிலிருந்து internship க்காக (அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்?) பெங்களூருவில் 50 நாள்களுக்கு மேல் தங்கியிருந்தேன். அதன்பிறகு ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பின் அங்கே சென்றேன். ஒரே ஒரு நாள் தங்கியிருந்தேன். அந்த ஒரு நாள் முழுக்க பெங்களூரு நகரை சுற்றி வந்தேன்.

ஆட்டோ ஓட்டுநர் முதல் ஹோட்டல் ஊழியர்கள் வரை அந்த ஊர் அரசியல் சமூக நிலவரம் குறித்து என் ஐயப்பாடுகளை கேட்டுத்தெரிந்து கொண்டேன்.

எல்லோருமே எடியூரப்பா நன்றாகவே ஆட்சி செய்வதாக கூறினார்கள். சில குறைகளும் அவரிடம் உண்டு என்பதை அதில் பாதிப் பேர் ஒப்புக் கொண்டனர். ஆனால் இதற்கு முன்பு இருந்தவர்களை விட, எடியூரப்பா நல்லவராகவே இருக்கிறார் என்று நற்சான்றிதழ் வாசித்தனர்.

அப்புறம் ஏன் அவரை ஆட்சியிலிருந்து அகற்ற உள்கட்சியிலும், வெளியிலும் பலர் முனைகிறார்கள் என்று கேள்வி எழுவது இயல்பு. இந்தக் கேள்விக்கு பதிலை பின்னர் பார்க்கலாம்.

பெங்களூரு புறநகர்ப் பகுதிக்குப் போயிருந்த போது அங்கிருந்த தொழிற்பேட்டையில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லாத தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தன. மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொழிற்சாலை மேம்பாட்டுப் பணிகள் நடக்கக் கூடாது என்று முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளதாகச் சொன்னார்கள். பெரிய பெரிய தொழிற்சாலைகள் இருக்கும் இடங்களுக்கு மிக அருகிலேயே விவசாயமும் செய்கிறார்கள். சுற்றுச்சூழலைப் பாதிக்காத அளவுக்கே அங்கே தொழில் வளர்ச்சியை எடியூரப்பா அனுமதிக்கிறார் என்றால் அவரை பதவியில் தொடர எப்படி அனுமதிப்பார்கள்? இங்கேதான் முன்னாள் பொருளாதார அடியாள் ஜார் பெர்கின்ஸை பொருத்திப் பார்க்க வேண்டும்.

பெரு முதலாளிகளை இயற்கை வளங்களை சுரண்டுவதற்கு அனுமதிக்கவில்லை என்றால், லத்தீன் அமெரிக்க நாடுகளில் அந்நாட்டு அதிபர்களை கொன்று விடுவார்கள். இங்கே ஆட்சியிலிருந்து மட்டும் அகற்ற முயல்கிறார்கள். எடியூரப்பாவை ஆட்சியிலிருந்து அகற்ற நினைக்கும் சக்திகளுக்குப் பின்னால் பெரு முதலாளிகளின் சதி இருக்கலாம் என்பதை சாதாரணமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆந்திராவில் சுரங்கத் தொழில் மூலம் இயற்கையை சுரண்டும் ரெட்டி சகோதரர்கள் எடியூரப்பாவுக்கு எதிராக உள்ளதையும் கவனிக்க.

அடுத்து பெங்களூரு நகர்ப் பகுதிகளில் வலம் வந்த போது, அங்குள்ள சுவர்களில் பெங்களூரு மாநகராட்சியினர் கன்னட மக்களின் கலாசாரத்தை விளக்கும் அழகான ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன. இவை சில ஆண்டுகளுக்கு முன்பே வரையப்பட்டதாம். இதையே சென்னையிலும் நம் மாநகராட்சி பின்பற்றுகிறது. (காப்பி அடித்தால் என்ன, நல்லது நடந்தால் சரி) அதுபோலவே பெங்களூரு நகரில் ஓடும் தாழ்தளப் பேருந்து, சொகுசுப் பேருந்து, குளுகுளு பேருந்து ஆகியவற்றையும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தினர் இங்கே பின்பற்றியிருக்கிறார்கள். அந்தப் பேருந்துகளைப் பார்த்தால் சென்னைக்கே வந்துவிட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது

அந்த ஊரின் மிகப்பெரிய பேருந்து நிலையமான மெஜஸ்டிக்கில் போக்குவரத்து அதிகாரிகள் (சீருடை அணிந்து) எந்நேரமும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை நேரில் தந்துகொண்டேயிருக்கிறார்கள். இதனால் தேவையற்ற குழப்பங்கள் நடப்பதில்லை. புதிதாக வரும் மொழி தெரியாத பயணிகளும் தயக்கமின்றி பயணம் செய்ய ஏதுவாக இருக்கிறது. பயணிகளும் நம்மூரைப் போல முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறுவது கிடையாது. ரெஸ்டாரன்ட் ஒன்றில் மதிய உணவு சாப்பிட்டோம். சொகுசான அந்த ஹோட்டலில் மீல்ஸ் வெறும் 30 ரூபாய். அந்தளவுக்கே அநத் ஊரில் விலைவாசி. இங்கே புரசைவாக்கத்தில் சாதாரண ஹோட்டலில் கூட சாப்பாடு 40 ரூபாய். விலைவாசியும் அங்கே பரவாயில்லை.

தமிழனுக்கு காவிரி நீரை தராத அந்த ஊரு மக்களுக்கு இவ்வளவு இந்தளவுக்கு வக்காலத்து வாங்குவது சரியா என்று நீங்கள் கேட்கலாம். காவிரி நீர் நம்முடைய உரிமைதான். அந்த உரிமையைப் போராடிப் பெற்றே ஆக வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் நம்முடைய சொந்த மண்ணில் நீராதாரத்தை அழிக்கும் மணல் கொள்ளையை தடுக்க நாம் என்ன செய்திருக்கிறோம். நம்முடைய அரசியல் வாதிகள் என்ன செய்திருக்கிறார்கள். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மணல் கொள்ளையை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்களே ஏன்? சொந்த மண்ணிலிருக்கும் நீராதாரத்தைப் பாதுகாக்க முடியாத நாம், நம்முடைய வறட்சிக்கு கன்னடர்களை மட்டும் காரணமாகச் சொல்வது சரியா?

நெஞ்சில் கையை வச்சு சொல்லுங்க, கன்னடர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள நெறைய விஷயங்கள் நமக்கிருகிறதா, இல்லையா?

Friday, October 22, 2010

ஆச்சார கோவையும் எந்திரனும்!



அக்டோபர் முதல் வாரம். தேனீர் கடை, பேருந்து நிறுத்தம் என பொது இடங்களில் நண்பர்கள், உறவினர்கள் சந்தித்துக் கொண்டால் மறக்காமல் கேட்டுக் கொண்ட கேள்வி, “எந்திரன் பாத்தாச்சா?“ தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்களால் பார்க்கப்படும் சன் தொலைக்காட்சியிலும், அதிக வாசகர்களைக் கொண்டதாகச் சொல்லப்டும் தினகரன் நாளிதழும் சேர்ந்து எந்திரன் படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்கிற உளவியல் அழுத்தத்தை ஒவ்வொருவரின் மனதிலும் விதைத்துக் கொண்டிருந்தன/ கொண்டிருக்கின்றன. (கொஞ்சம் அசந்தால் நம்முடைய சட்டைப் பையில் கையைவிட்டு பணத்தை எடுத்து அவர்களே படத்தின் அனுமதிச் சீட்டையும் கொடுத்துவிடுவார்கள் போல!)

ஆசியாவிலேயே அதிக சம்பளம் பெரும் நடிகர்களில் சாக்கிசானுக்கு அடுத்த இடத்திலிருக்கும் ரஜினியும், பிரமாண்ட இயக்குநர் ஷங்கரும் இணைந்த இந்தப் படத்தைத் தயாரித்தது, கருணாநிதி பேரன் கலாநிதி மாறனின் சன் குழுமம். படத்தின் தயாரிப்புச் செலவு 150 கோடியாம்! உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் அக்.முதல் தேதியன்று திரையிடப்பட்டன. அரசு நிர்ணயித்த தொகைதான் வசூலிக்க வேண்டும் என்ற விதியை மீறி குறைந்தபட்சம் (!) 300 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை அனுமதிச் (டிக்கெட்கள்) சீட்டுகள் விற்கப்பட்டன.

சிறிய ஊரான புதுக்கோட்டையிலும் கூட ஆறு திரையுரங்குகளில் இந்தப் படம் திரையிடப்பட்டன. அங்கேயும் 200 ரூபாய் அனுமதிக் கட்டணம். இதெல்லாம் எப்படி சாத்தியம்? பணபலத்தாலும், அரசியல் செல்வாக்கினாலும் பெருவாரியான திரையரங்குகளில் எந்திரன் படத்தை திரையிட்டார்கள். திரையிட்ட எல்லா திரையுரங்குகளிலும் கூடுதல் விலை. இதனால் நியாயமான விலையில் அந்தப் படத்தை பார்க்கவே முடியாத நிலை! ஏகபோக மனோபாவத்தால் பாவம், தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்துவிட்டார்கள்.
நடைமுறையில் உள்ள நான்கு காட்சிகளுக்குக் கூடுதலான காட்சிகள் திரையிட தமிழக ஆளுநரே சிறப்பு அனுமதி அளித்தார். தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆளுநர் இப்படியொரு அனுமதியை அவசர அவசரமாக அளித்து, நம் மக்களின் மீதான அதீத அக்கறையைக் காட்டிவிட்டார்.

இந்தப் படத்தை வரவேற்கும் ரஜினி ரசிகர்கள் அவரது ஆளுயரப் படங்களுக்கு பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்கிறார்கள். அந்தப் படம் வெற்றி அடைய வேண்டி கன்னியாகுமாரி முதல் சென்னை வரை பாத யாத்திரை நடத்துகிறார்கள். கோயில் படிக்கட்டுகளில் மண்டியிட்டு முழங்கால்களில் நடந்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள். மண்சோறு தின்கிறார்கள். சன் தொலைக்காட்சி ஒட்டுமொத்த தமிழக இளைஞர் கூட்டமே எந்திரனுக்காக ஏக்கித் தவிப்பதாக சித்தரித்தன. ரசிகர்கள் மனம் மற்றும் ஆர்வக் கோளாறில் செய்யும் இதுபோன்ற செய்கைகள் பாகவதர் காலத்திலிருந்து நடப்பதுதான். ரசிகர்களின் பொறுப்பற்ற இச்செய்கைகளை இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக திரும்பத் திரும்ப காட்டியதன் மூலம் அவர்களின் மனப் பிறழ்வுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்திருக்கிறது. சன் குழுமம்.

இந்தப் படத்திற்கான பாடல் வெளியீட்டு விழா சில கோடி ரூபாய் செலவில் கோலாலம்பூரில் கோலாகலமாக நடக்கிறது. தமிழில் பெயர் வைத்த்தற்காக கேளிக்கை வரி விதிப்பிலிருந்து (கிடைத்த வரைக்கும் லாபம்) வரிவிலக்கும் பெற்றிருக்கிறான், எந்திரன். திரையறங்குகளில் விநியோகிக்கப்பட்ட அனுமதிச் சீட்டில் கட்டணம் எதுவும் அச்சிடப்படவில்லை. அனுமதிச் சீட்டின் பின்புறம் இருக்க வேண்டிய மாவட்ட நிர்வாகத்தின் முத்திரையும் இல்லை. இதுக்குப் பேருதான் பகல் கொள்ளை!

ரஜினி, கமல், அஜித், சூர்யா, விஜய் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாள்களில்தான் திரையிடப்பட வேண்டும் என்ற திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் விதியை இந்தப் படத்தின் மூலம் காற்றில் பறக்கவிட்டிருக்கிறார்கள். பிற நாள்களில் குறைந்த செலவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் திரையிடப்பட்டு, சில நாள்களாவது ஓடினால் குறைந்தபட்ச லாபமாவது கிடைக்கும். திரையில் ஊர் நியாயம், உலக நியாயம் பேசும் நடிகர்கள், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியோர் இந்த விதிமீறல் குறித்து வாய் திறக்கவே இல்லையே, ஏன்?

எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கோலாலம்பூருக்கு காணொளி மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பிய முதல்வர், காவல்துறை இப்போது எந்திரன் திருட்டு விசிடியை ஒழிக்க முடுக்கி விட்டுள்ளார். 150 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் மூலம் தமிழகத்துக்கு கிடைத்த வரி வருமானம், எவ்வளவு தெரியும்? 0-தான்!

ஒவ்வொரு தமிழனும் பார்த்தே ஆக வேண்டும் என்று சிந்தனையில் புகுந்து சித்திரவதை செய்த எந்திரன் படத்தில் அப்படி என்ன புரட்சி செய்து விட்டார்கள்?

1. படத்தில் கார்கில் போரில் கணவன், தந்தையை இழந்த பெண்கள் தங்கியிருக்கும் விடுதியைக் காண்பிக்கிறார்கள். அந்தப் பெண்கள் எல்லோரும் பார்ப்பனர்கள் என்பதை பல்வேறு காட்சிகளில் திரும்பத் திரும்ப காட்டப்படுகிறது. உண்மையில், கார்கில் போரில் உயிரிழந்த பார்ப்பனர்கள் எத்தனை பேர் என்று ஷங்கரால் சொல்ல முடியுமா? கார்கில் போரில் வேறு இனத்தவர்கள் யாரும் தங்கள் இன்னுயிரை இழக்கவில்லையா?

2. படத்தின் நாயகனான விஞ்ஞானி வசீகரன் (ரஜினி) பெற்றோரும் அவர்களின் வீடும் அவர்கள் பார்ப்பனர்கள் என்பதையே வலியுறுத்துகிறது. ராணுவத்துக்கு உதவும் வகையில் ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானியும் பார்ப்பனரே. வாழ்க ஷங்கரின் பார்ப்பன வெறி!

3. எந்திர மனிதனுக்கு மனித உணர்வுகளை கற்றுத் தருவதற்காக அதை சென்னையிலுள்ள பிரித்தானிய நூலகத்துக்கு அழைத்துச் செல்கிறார், வசீகரன். அங்கே எந்திர மனிதனுக்கு படிப்பதற்காக அவர் கொடுக்கும் புத்தகங்களில் இடம் பெறும் ஒரே ஒரு தமிழ்ப் புத்தகம், ஆச்சார கோவை! பார்ப்பனர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறைகளை (திண்டாமையை) வலியுறுத்தும் இந்த நூலைக் கொடுத்து எந்திர மனிதனையும் பார்ப்பனனாக்கப் பார்க்கும் இயக்குநரின் சாமர்த்தியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

4. படத்தில் ஒரு காட்சியில் மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் திருவிழா நடக்கிறது. திருவிழாவை நடத்தும் ரௌடிகள் படத்தின் கதாநாயகியை கிண்டல் செய்கிறார்கள். மாரியம்மன் கோயில் திருவிழா நடத்துவோர் எல்லாம் ரௌடிகள் என்றால், பார்ப்பனர்கள் மட்டும்தான் கோயில் திருவிழாக்களை நடத்த வேண்டும் என்கிறாரா ஷங்கர்? கருவறைக்குள் சல்லாபத்தில் ஈடுபட்ட காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் பற்றியெல்லாம் இவர் படம் எடுக்க மாட்டாரா?
மொத்தத்தில், பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு போன்ற ஏகபோக மனோபாவத்தில் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்ட எந்திரன் ஒரு பூணூல் அணியாத பார்ப்பனன்

Monday, September 6, 2010

ஜோதியை அணைத்த ‘மன்னர் ஜவகர்’கள்!!



பத்தாம் வகுப்பில், 500க்கு 475 மதிப்பெண்கள்! பனிரெண்டாம் வகுப்பில் 1200க்கு 1105 மதிப்பெண்கள்!! நாமக்கல் மாவட்டம் முள்ளக்குறிச்சி அருந்ததியர் தெருவில் வசித்து வந்த 18 வயதான ஜோதி பெற்ற மதிப்பெண்கள் தான் இவை. பத்தாம் வகுப்பு வரை அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் படிப்பு. நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி இவரை இலவசமாக பனிரெண்டாம் வகுப்பு படிக்கவைத்தது.

அரசு ஒதுக்கீட்டில் சென்னை அண்ணா பல்கலையில் பொறியியல் (இசிஇ) படிக்க வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. இதற்கும் அவரது தாத்தா விவசாயக் கூலியாக வேலை பார்க்கும் பண்ணையின் உரிமையாளர் பணஉதவி செய்து பல்கலையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு ஜோதி உயிருடன் இல்லை.

கடந்த மாதம்தான் ஜோதி பல்கலையில் சேர்ந்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்கலை விடுதியிலிருந்து வீடுக்குச் சென்றவர், துப்பட்டாவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கிறார். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஜோதி தமிழ் வழியில் படித்த கிராமத்து மாணவி. சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியாத இவரை கல்லூரியில் சகமாணவர்கள் கேலியும் கிண்டலும் செய்திருக்கிறார்கள். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள். ஆனால் “மூன்று ஆண்டுகளாக எங்கள் பல்கலையில் ராக்கிங் கிடையாது. ஜோதியின் தற்கொலைக்குக் காரணம் குடும்பப் பிரச்னைதான்” என்று துணை வேந்தர் மன்னர் ஜவகர் கூறுகிறார். பதினெட்டு ஆண்டுகளாக இல்லாத குடும்பப் பிரச்னை அண்ணா பல்கலையில் சேர்ந்த ஒரு மாதத்திற்குள் வந்தது எப்படி? அதுவும் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குப்போகுமா என்பதை யோசிக்க வேண்டும்.

பத்திரிகைகளும் ஜோதியின் தற்கொலைக்கு ராக்கிங் தான் காரணம் என்று தவறுதலாக எழுதுகிறார்கள். உண்மையில் இது ராக்கிங் கிடையாது. ஆங்கிலம் பேசத் தெரியாத கிராமத்து மாணவ மாணவிகளை கேலி கிண்டல் செய்யும் போக்கிது! இதை சீனியர் மாணவர்கள் என்றில்லை சக மாணவர்களும் கூட செய்திருக்கலாம். மாணவர்கள் என்றில்லை சில ஆசிரியர்களும் ஆங்கிலம் தெரியாத மாணவ மாணவிகளை எளக்காரமாக நடத்துவதை மறுக்கமுடியாது.

தமிழ் வழியில் படித்த அதுவும் கிராமத்து மாணவ மாணவிகள் சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு கல்வி கற்க வரும்போது ஏராளமான சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. இப்போது ஜோதியின் தற்கொலை மூலமாக அந்தப் பிரச்னை வெளிப்பட்டிருக்கிறது. பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்ததால்தான் கிராமத்து
மாணவ மாணவிகள் அதிகளவில் இந்தப் படிப்புகளில் சேர வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அதுவும் ஜோதி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இடஒதுக்கீட்டால் மேல்சாதி உயர்த்தட்டு மக்களின் கல்வி வாய்ப்பு மறுக்கப்படுவதாக ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. அதை நகரத்து மேல்தட்டு இளம் மாணவர்களின் மனதில் அவர்களின் பெற்றோர்களும், சில ஊடகங்களும் பதியச் செய்கிறார்கள். இதனாலேயே ஜோதி போன்ற மாணவிகள் ஆயிரம் தடைகளைத் தாண்டி முதல் தலைமுறையாக கல்லூரிகளுக்குள் நுழையும்போது நகரத்தைச் சேர்ந்த சகமாணவர்களாலேயே கேலியும், கிண்டலுக்கும் ஆளாக நேரிடுகிறது.

சமூகவியல் இளங்கலை முடித்துவிட்டு (கோவை பூ.சா.கோ) அதே கல்லூரியில் எம்.ஏ., மாஸ் கம்யூனிகேஷன் மக்கள் தொடர்பியல் துறையில் சேர்ந்தேன். அப்போது துறைத் தலைவரான பிச்சாண்டி, இளங்கலையில் ஆங்கிலம் இலக்கியம் படித்தவர்கள் மட்டுமே மாஸ் கம்யூனிகேஷன் படிக்க முடியும் என்று கூறி மாணவர்களை பயமுறுத்தினார். இதனால் சில மாணவர்கள் பயந்தடித்துக் கொண்டு வேறு துறைகளுக்கு மாறிச்சென்றனர். நானும் அப்படிச் சென்றிருந்தால் அது எனக்கேற்பட்ட மிகப்பெரிய இழப்பாக இருந்திருக்கும். பின்னாளில் ஆங்கில இலக்கியம் படித்த மாணவிகளை விட நான் கூடுதல் மதிப்பெண் பெற்றேன்.

ஜோதியும் பொறுமை காத்திருந்தால் சிறந்த பொறியாளராக வந்திருப்பார். பள்ளிக் கல்வியில் முதல் மாணவியாக சிறந்து விளங்கிய இவரால் அண்ணா பல்கலையில் நேர்ந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்திருக்கிறார். இத்தனையும் மறைத்துவிட்டு “எங்களிடம் தவறில்லை. ஜோதியின் குடும்பத்தினர்தான் தவறு செய்திருக்கிறார்கள்“ என்று வாய்கூசாமல் மன்னர் ஜவகர் பேசுகிறார். மீடியாக்களும் மன்னர் ஜவகரை வழிமொழிகின்றன. முன்னதாக ஜோதியைப் பற்றி காவல்துறை மற்றும் ஊடகங்களிடம் எதுவும் பேசக்கூடாது என்று மன்னர் ஜவகர் தன்னுடைய மாணவர்களிடம் அறிவுறுத்தியிருக்கிறார். மடியில் கனமில்லை என்றால் வழியில் எதற்குப் பயம்?

ஜோதியின் தற்கொலை, ஏழை-கிராமத்து மற்றும் தமிழ் வழியில் படிக்கும் மாணவிகள் மீது நமது கல்வி முறை ஏவும் வன்முறையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. இந்த உண்மையை மறைக்க முயல்வதை கைவிட்டு, இந்த சமூகக் குற்றத்தை சரிசெய்தால் (கல்வி)ஜோதிகள் அணையாமல் இருந்து தன் சமூகத்துக்கு வெளிச்சம் பாய்ச்சும்!

Saturday, August 28, 2010

ஜூனியர் விகடனிடம் அடைக்கலமாகும் தினமலர்!



ஜூனியர் விகடன் விவகாரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் ஒன்றாக இணைந்து அழகிரி ஆதரவாளர்களுக்கு எதிராக களம் இறங்கியிருப்பது ஆக்கப் பூர்வமான ஆரம்பம். தினகரன் ஊழியர்கள் மூன்று பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தினகரன் நிர்வாகம் அடித்த அல்தர் பல்டிக்கு இது ஒரு பாடம்.

ஜூனியர் விகடன் விவகாரத்தில், அண்மையில் முதல்வரை சந்தித்த பத்திரிகையாளர்கள் குழு, தினமலர் செய்தி ஆசிரியர் (உண்மையில் அப்படியொரு பதவி தினமலரில் யாருக்கும் தரப்படுவதில்லை) லெனின் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று கோரியிருந்தார்கள்.தினமலர் மீது ஏன் வழக்குத் தொடரப்பட்டது, எதற்காக லெனின் கைது செய்யப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

நடிகை புவனேஸ்வரி கைது விவகாரத்தைத் தொடர்ந்து பாலியல் தொழில் செய்யும் நடிகைகளின் பட்டியலை தினமலர் வெளியிட்டது. ரஜினி உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையுலகமும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க அதிர்ந்து போன தினமலர் மறுநாள் வருத்தம் தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட நடிகைகள் சார்பில் ஒட்டுமொத்த நடிகர்களும் இணைந்து தினமலருக்கு எதிராகப் புகார் கொடுக்க தினமலர் உரிமையாளர்கள் பதுங்கிக் கொண்டு, லெனினை போலீசில் காட்டிக் கொடுத்தார்கள். லெனினும் கைது செய்யப்பட்டார்.

இதில் பலருக்கும் தெரியாத ஓர் உண்மை மறைக்கப்பட்டது. அப்படியொரு செய்தியை ஆதாரமின்றி வழங்கியதற்காக செய்தியாளர் விஜய் என்பவர், உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இப்போது திருச்சி காலைக்கதிரில் அவர் வேலை பார்க்கிறார். இதை மறைத்துவிட்டு, அந்தச் செய்தியில் என்ன தவறு இருக்கிறது என்கிற பிரசாரத்தில் இறங்கிய தினமலர், தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்களை (நயவஞ்சகமாக) ஒன்று திரட்டி நடிகர் நடிகைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அந்த நேரத்தில் நடிகர் நடிகைகளும் ஒட்டுமொத்த பத்திரிகை உலகையே கொச்சைப்படுத்தி பேசிய பேச்சும், அனைத்து பத்திரிகையாளர்களையும் கோபம் மூட்டியது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த லெனின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இப்போது அவர் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வரிடம் கோரியிருக்கிறார்கள். முதல்வரோ, “குடும்பத்துடன் வாழும் பெண்களைப் பற்றி இஷ்டத்துக்கு அவதூறாக எழுதியது சரியா? சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரிலேயே நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அவர்களிடம் பேசித்தான் முடிவு எடுக்க முடியும்” என்று மிகச் சரியாகப் பேசியிருக்கிறார்.

தினமலர் அந்த வழக்கிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைத்தால் சம்பந்தப்பட்ட அந்த நடிகைகளிடம் போய், மன்னிப்புக் கேட்டு வழக்கை திரும்பப் பெற கோர வேண்டும். அதைவிடுத்து குறுக்கு வழியில் முதல்வரிடம் முறையிட்டு அதுவும் ஜூனியர் விகடன் விவகாரத்தை சாக்காக வைத்து ஆதாயம் தேட நினைப்பது கோழைத்தனம்.

ஜூனியர் விகடன் ஆளும் கட்சியில் அதிகாரத்தில் இருப்பவர்களின் அடாவடித் தனத்திற்கு எதிராக செய்தி வெளியிட்டு அதற்குக் கிளம்பிய எதிர்ப்பை மிக நேர்மையாக சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நடிகைகள் பாலியல் தொழில் செய்வதாக எந்த ஆதாரமும் இன்றி அந்த நடிகைகளின் புகைப்படத்துடன் (வாடிக்கையாளர்களிடம் படுப்பதற்கு அவர்கள் வாங்கும் தொகையையும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள்) செய்தி வெளியிட்டது எந்த வகையில் பத்திரிகை தர்மத்துக்கு உகந்தது?

பத்திரிகை சுதந்திரம் என்ற போர்வையில் ஜூனியர் விகடனுடன் தன்னை இணைத்துப் பார்க்கும் தகுதி தினமலருக்கில்லை. பத்திரிகை சுதந்திரத்தை தமிழர்களுக்கும், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கும், தலித்களுக்கும் எதிராக தினமலர் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. தினமலருக்கு தைரியம் இருந்தால் அந்த வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்கட்டும். அப்படி சந்தித்தால் ‘சந்தி சிரித்துவிடும்!‘

Friday, August 20, 2010

திருட்டு வி.சி.டி.யில் மட்டும் படம் பாருங்கள்!



திரையரங்குக்குள் தின்பண்டம் கொண்டுசெல்வதை திரையரங்கு நிர்வாகம் தடுப்பது முறையல்ல என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. யாரோ ஒரு புண்ணியவான் தொடர்ந்த பொதுநல வழக்கால் மக்கள் தங்களுடைய உரிமையை உணர்ந்திருக்கிறார்கள். சினிமாவில் அநியாயத்துக்கு எதிராகப் பொங்கும் ஹீரோக்கள், திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்காதீர்கள் என்று பொதுமக்களிடம் கெஞ்சுவார்கள். ஆனால் திரையரங்கு நிர்வாகத்தின் கொள்ளை லாபம் பற்றி எல்லாம் வாய் திறக்கவே மாட்டார்கள். உண்மையில் அவர்களால் அது பற்றி பேசவே முடியாது. திரையரங்கு உரிமையாளர்களுக்கும் படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இடையே கமுக்கமான உடன்பாடு உண்டு.

அது பற்றி பார்ப்போம். சுறா படத்துக்கு 5 கோடி சம்பளம் வாங்கிய விஜய் அடுத்த படமான காவலனுக்கு 7 கோடி வரை சம்பளம் வாங்கியதாக சொல்கிறார்கள். இத்தனைக்கு சுறா படம் படுதோல்வி. பிறகு எப்படி இது சாத்தியமானது என்கிறீர்களா? இதற்கு மினிமம் கியாரண்டி என்ற வியபார உத்திதான் காரணம். அதாவது தயாரிப்பாளர்கள் தங்களுடைய படத்தை திரையரங்குகளுக்கு குறிப்பிட்ட விலை வைத்து கொடுத்துவிடுவார்கள். அதில் நட்டம் ஏற்பட்டால், அதுபற்றி தயாரிப்பாளர்களுக்குக் கவலை இல்லை. லாபம் கிடைத்தால் அதில் தயாரிப்பாளர்களுக்கு பங்கு தரவேண்டும் என்பதுதான் இந்த மினிமம் கியாரண்டியில் உள்ள சூட்சமம்.

ரஜினி, கமல், அஜித், விஜய், (இப்போது சூர்யாவும்) போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் மினிமம் கியாரண்டியில் வியாபாரம் செய்யப்படுகிறது. வேட்டைக்காரனை விட அதிக விலைக்கு சுறாவையும் சுறாவை விட அதிக விலைக்கு காவலனையும் திரையரங்கு உரிமையாளர்கள் வாங்கியாக வேண்டும். எனவேதான் நடிகர்கள் படத்துக்குப் படம் தங்கள் சம்பளத்தை உயர்த்திக் கொள்ள முடிகிறது.

திரையரங்கு உரிமையாளர்களும் டிக்கெட் விலையை உயர்த்தியும், ப்ளாக்கில் விற்பது மூலம் கிடைக்கும் கமிஷன், கேண்டீன், பார்க்கிங் வசூல் ஆகியவை மூலமும் லாபம் பார்த்து விடுகின்றனர். நடிகர்கள், தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறது. அதன்படி, திரையரங்குகளில் டிக்கெட் விலையை எவ்வளவு உயர்த்தி விற்றாலும் அது பற்றி யாரும் கேள்வி கேட்கக் கூடாது. திரையரங்கு உரிமையாளர்கள் ஆட்சியில் இருப்பவர்களையும் கவனித்து விடுவதால் அவர்களின் அத்துமீறல்கள் கவனிக்கப்பட மாட்டாது. அண்மையில் அபிராமி மால் (மல்டி ஃபிளக்ஸ்) திரையரங்கு தரம் உயர்த்தப்பட்ட போது அதை திறந்து வைத்தவர், நமது முதல்வர்! அங்கு குறைந்த பட்ச டிக்கெட் விலை 100.

அரசும் ஹீரோக்களும் திரையரங்குகளின் அத்துமீறல்களுக்கு எதிராக நிச்சயம் எதுவும் செய்யப் போவதில்லை. எனவேதான் சொல்கிறேன் எல்லோரும் திருட்டு வி.சி.டி.யில் மட்டும் படத்தைப் பார்த்து ரசியுங்கள். திரையரங்கு பக்கம் வரவே வராதீர்கள்.அதுதான் சரி.. என்று எனக்குப் படுகிறது!

Wednesday, August 11, 2010

சீமான் முதல் உமா சங்கர் வரை....

# எதிர்க்கட்சியாக இருக்கும் போதெல்லாம் மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள் என்று தி.மு.க. மார்த்தட்டிக் கொள்ளும். தி.மு.க. ஆளும் கட்சியாக இருக்கும் போது தங்களை எதிர்ப்பவர்களுக்கு மிசாவையே காட்டிவிடுவார்கள். சீமானின் தொடங்கி உமா சங்கர், ஜூனியர் விகடன் என போய்க் கொண்டே இருக்கிறது உடன் பிறப்புகளின் அத்துமீறல்.

# பத்திரிகையாளர்கள் மீதான அச்சுறுத்தலை கண்டித்து சென்னையில் செவ்வாய் அன்று நடந்த போராட்டத்தில் நக்கீரன் கோபால் கலந்து கொண்டாரா என்பதை கேட்டுச் சொல்லவும்/ நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

# தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்ட இதழ் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் உள்பட மூன்று பேர் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டுள்ளனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்யாமல் கள்ள மௌனம் சாதிக்கின்றனர்/ இதற்குப் பேருதான் எமர்ஜென்ஸி!

# ஆளும் கட்சி ஜூனியர் விகடன் மீது கடுங்கோபத்திலிருக்கிறது. அப்படியென்றால் மற்ற பத்திரிகைகள் ஆளும் கட்சியினருக்கு ஜால்ரா போடறாங்களா என்று, கேட்காதீர்கள்?

# நான் எழுதிய இனப்படுகொலையில் கருணாநிதி புத்தகங்கள் விற்ற பணம் வரவில்லை என்று என்னுடைய ஆதங்கத்தைப் படித்த பாடலாசியர்-கவிஞர் கவிபாஸ்கர் என்னைத் தொடர்பு கொண்டார். அவ்வப்போது வசூலாகும் தொகையை உடனுக்குடன் கொடுத்து வருபவர் அவர். எதிர்வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகக் கடை போடலாம் என்று இருவரும் பேசியிருக்கிறோம். (திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் கையை சுட்டுக் கொண்டது போதாக்கும் என்கிறாள் என் மனைவி)

# இந்திய அரசின் போலி ஜனநாயகத்தை ஆதாரங்களுடன் பட்டியலிட்டு புத்தகம் எழுத வேண்டும் என்பது ஆசை. சோம்பேறித்தனத்தால் அந்த வேலை தள்ளிக் கொண்டே போகிறது.

# எந்திரன் படத்தின் தெலுங்கு பதிப்பான ரோபோவின் உரிமை தன்னிடம் இருப்பதாகப் போலி ஆவணங்களைக் காட்டி ஆந்திர தியேட்டர் உரிமையாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிய இயக்குநர் ஷங்கரின் அலுவலக மேலாளர், உதயகுமார் கைது. நீங்கள் வருமான வரித்துறையை ஏமாற்றுகிறீர்கள். உங்களை ஒருவன் ஏமாற்றுகிறான். ஏமாத்துக்கு ஏமாத்து சரியா போச்சுப்போ...

Sunday, August 8, 2010

இனப்படுகொலையில் கருணாநிதியும் இயக்குநர் ஷங்கரும்!



# நான் எழுதிய இனப்படுகொலையில் கருணாநிதி (ஆயிரம் புத்தங்கங்கள்) விற்றுத் தீர்ந்து விட்டன. ஆனால் விற்பனைத் தொகைதான் கைக்கு வந்தபாடில்லை.

# த்ரி இடியட்ஸ் படத்தை தமிழில் ஷங்கர் இயக்கலாம் என்கிறார்கள். எந்திரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் எல்லோரும் ஷங்கரைப் புகழ்ந்து தள்ளினார்கள். இடியட்ஸ்!

# தோள்பட்டை சவ்வில் ஏற்பட்ட பாதிப்பால் அறுபத்து சொச்சம் வயதான என் தாய் புஷ்பம் கடுமையான வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். காலையில் கைப்பேசி வழியாக ஊரிலிருந்து வந்த இந்தத் தகவல் மனசஞ்சலத்தை ஏற்படுத்திவிட்டது. 87 வயதில் முதல்வர் பணியை செய்யும் ஓய்வறியா சூர்யன் இருக்கும் தமிழ்நாட்டில் என் தாய்க்கு ஏனிந்த கொடுமை?

# பதிவெழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. சமூக அரசியல் சர்ச்சைகள் குறித்து குறுந்தகவல் அனுப்புவது, இணைய தளங்களில் எழுதுவது போன்றவற்றால் தங்கள் சமூகக் கடமை தீர்ந்து விட்டதாக இன்றைய இளைய தலைமுறை நினைக்கிறது. நம்முடைய மதிப்புமிக்க நேரத்தை யும் இணையம் வீணடித்து வருகின்றன. நானும் இவற்றிலிருந்து முழுவதுமாக விடுபட்டு விட்டேன் என்று சொல்வதற்கில்லை. அதேநேரத்தில் இணைய தளங்களில் எழுதுவதோடு என் அரசியல் நடவடிக்கைகளை முடிந்து போவதில்லை.

# அமானுஷ்யத்தைக் கருவாகக் கொண்ட நெடுந்தொடருக்கு கதை, திரைக்கதை தயாரித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கிடையே அரசியல் வேலைகளும் பத்திரிகைப் பணிகளும் போய்க் கொண்டிருதானிருக்கிறது.

# ஒரு சொந்தத் தொழில் அமைந்து விட்டால், முழுமையாக சினிமாவில் இறங்கிவிடலாம். என் ஆசைக்காக மனைவியை கஷ்டப்படுத்தக் கூடாதல்லவா?

# ஜெயமோகனின் லோகி, எமர்ஜென்ஸியில் நடந்தது என்ன?, ஜே.ஜே.சில குறிப்புகள் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே நேரத்தில வெவ்வேறான புத்தகங்களை மாறி மாறிப் படிப்பது (திட்டமிடாத) பழக்கமாகிவிட்டது.



# லோகியின் கிரீடம் பார்த்தேன். அற்புதம். மலையாளம் சாந்துப் பொட்டு பார்த்தேன். தமிழில் விக்ரம் அல்லது சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும்.

Tuesday, June 15, 2010

“என்ன கொடுமை இது ஞாநி?“ -தாமரை




9-6-2010 குமுதம் ஓ... பக்கங்களில் சீரழிவு என்று தலைப்பிட்டு ஞாநி எழுதியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சர்வதேச இந்திய திரைப்படக் கழகத்தின் (ஐஃபா) விருது வழங்கும் விழாவை வலியப் போய் கொழும்பில் நடத்துவதன் அரசியல் ஞாநிக்குப் புலப்படவில்லை போலும். தென் கொரியாவின் சியோலுக்கு உறுதியளிக்கப்பட்ட நிகழ்வை அவசர அவசரமாகக் கொழும்புக்கு மாற்றியது இனப்படுகொலையின் கரையை மறைத்து வெள்ளையடிக்கத்தான் (அல்லது மூவர்ணம் பூசத்தான்) என்பதே உண்மை!

கொழும்பு விழா வெறும் கலைவிழா அல்ல. காசேதான் கடவுளடா என்று கொலைக்களத்தில் சந்தை தேடிப் புறப்பட்டுள்ள இந்தியப் பெரு வணிகர்களின், பெரு முதலாளிகளின் (FICCI) ஆதாய வேட்டை விழா. பண்பாட்டுச் சீரழிவின் இருமுனைகள் (வணிகத் திரையும், வணிகக் கிரிக்கெட்டும்) இணைந்து பட்டுத் திரையிட்டுப் படுகொலைகளை மறைக்கும் விழா என்பதெல்லாம் ஞாநிக்குத் தெரியாததா?
‘சிலருடைய மிரட்டல் அரசியல்‘ என்கிறார் ஞாநி. ‘குருதி பிசுபிசுக்கும் கொலைக்களத்தில் கூத்துக் கும்மாளமா? தடுக்க வேண்டும் தமிழ்த் திரையுலகம்‘ என்று தமிழ்த் திரைத்துறையினருக்கு வேண்டுகோள் வைத்து முன்கை எடுத்த என் போன்றோருக்கு அரசியல் ஏதுமில்லை. மனிதஉரிமை, மக்கள் பிரச்னை, தமிழர்நலம் தவிர வேறெந்த அரசியலும் நான் செய்கிறேனோ என்று ஞாநி சொல்லட்டும்! நாங்கள் எப்போது யாரை மிரட்டினோம் என்று விளக்கட்டும்! அறப்போராட்டங்களுக்கு மிரட்டல் என்று பெயர் சூட்டலாமா?

ஓராண்டு முன்னால் ஏராளமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு ராஜபக்சேயின் இனவெறி அரசியலை காரணம் என்பதை மறைத்து பழியில் பாதியைப் புலிகள் மீது சுமத்துகிறார், ஞாநி. என்ன கொடுமை இது? தாக்குகிறவனையும், தாக்கப்படுகிறவனையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுகிற மகா அறிவாளிகளின் பட்டியலில் ஞாநியும் சேர்ந்துவிட்டாரா?
ஒரு லட்சம் மக்களைக் கொன்று இனப்பேரழிப்பை நடத்தியவர், ராஜபக்சே என்று உலகமே அறியும். விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் தமிழ்மக்களை இனஅழிப்பிலிருந்து காப்பாற்ற இயன்ற வரை போராடித் தோற்றார்கள். அவர்கள் தங்கள் ஆயுதங்களை மவுனித்தப் பின்புதான். முள்ளிவாய்க்காலில் முழுப் பேரழிவு நடந்தது என்பதை ஞாநியின் மனசாட்சி அறியாமலிருக்காது.
‘கொடூரங்கள் முடிந்து ஓராண்டு கழிந்தது‘ என்கிறார் ஞாநி. ஓராண்டு என்ன நூறாண்டு ஆனாலும் இந்தக் காயம் ஆறாது. இனக்கொலை புரிந்தவர்களைக் கூண்டில் ஏற்றி தண்டிக்கும் வரை, தமிழ்மக்களுக்கு அவர்கள் விரும்பும்படியான அரசியல் தீர்வுகிட்டும் வரை பன்னாட்டுச் சமூகம் எல்லா வகையிலும் கொழும்பு அரசைத் தனிமைப்படுத்தக் கோருவோம். இந்த நோக்கங்களை அடைவதற்கு சிங்கள மக்களும் ஆதரவு தர வேண்டுவோம்.
இந்த ஐஃபா விழாவைக் கராச்சியிலோ இஸ்லாமாபாத்திலோ இந்திய நட்சத்திரங்கள் நடத்துவார்களா என்று ஞாநி கேட்டுச் சொல்லட்டும்!
சிங்களவர்கள் கண்தானம் செய்வதைப் பாராட்டுகிறார், ஞாநி. வெலிக்கடை சிறையில் குட்டிமணி, தங்கதுரையின் கண்களைப் பிடுங்கிப் போட்டு காலில் மிதித்த சிங்களக் காடையர்களின் இனவெறிக்கு முன்னால் எத்தகைய தானமும் எடுபடாது என்பதைப் புரிந்து கொள்ளட்டும்!

ஞாநி போகிற போக்கைப் பார்த்தால், ‘மிரட்டலுக்கு அஞ்சாமல் கொழும்பு கொலை விழாவில் கலந்து கொண்ட ‘விவேக் ஓபராய்‘வுக்கு இந்த வாரப் பூச்செண்டும், இராஜபக்சேயின் அன்பான அழைப்பை நிராகரித்த நமீதாவுக்கு இந்த வாரத் திட்டும் தருவார் என எதிர்பார்க்கலாம். எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலையோடு பேசுவது போல் பாசாங்கு செய்யும் ‘போலிநீதிபதி‘களுக்குரிய ‘நரிநாட்டாமை‘ ஞாநிகளுக்கு அழகில்லை.

Thursday, June 3, 2010

மணிமேகலையும் கிரண்பேடியும்




புழல் சிறை டூ திகார் சிறை

'சிறைக்கோட்டமெல்லாம் அறக்கோட்டமாகட்டும்' என்று அட்சயப் பாத்திரத்தோடு புறப்பட்ட காப்பிய நாயகி மணிமேகலை பற்றி நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிட்டால், குற்றவாளிகள் ஏன் உருவாகப்போகிறார்கள்? என்பதுதான் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை உணர்த்தும் உண்மையோ?

குற்றவாளிகளை சமூகத்திலிருந்து பிரித்து அவர்களை நல்வழிப்படுத்தி நல்லவர்களாக உருவாக்கி மீண்டும் சமூகத்தில் உலவவிடுவதுதான் சிறைச்சாலைகள் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் என்று ஏட்டளவில் உண்டு. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் திரும்பத் திரும்ப சிறைக்கு வரும் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்று பயமுறுத்துகிறது, ஒரு புள்ளி விவரம். திருந்த வேண்டியவர்கள், மீண்டும் சிறைக்குத் திரும்ப வேண்டிய அவசியம் என்ன? சிறை பற்றி நியாயமாக இருக்க வேண்டிய அச்சம் அவர்களுக்கு இல்லாமல் போனதற்கு என்ன காரணம்? யார் காரணம்?

களி உருண்டையும், அச்சுச் சோறும் கிடைத்துக் கொண்டிருந்த சிறைகளில், வாரந்தோறும் கறிக்குழம்பு, தினமும் காலை பொங்கல், மதியம் அன் லிமிட்டேட் மீல்ஸும் கிடைத்தால் கைதிகள் திருந்துவது எப்படி என்றொரு ஆதங்கத்தை பல இடங்களிலும் கேட்க முடிகிறது. "சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மின்விசிறி வசதி செய்து தரப்படும்" என்ற தமிழக முதல்வர் கருணாநிதி அறிவிப்புக்கு பரவலாக அதற்குக் கிடைத்த எதிர்ப்பே இதற்குச் சாட்சி.

உண்மையில் சிறை சுகவாசிகளின் கூடாரமாகிவிடட்தா? சிறைகளில் அடிக்கடி பிடிபடும் பல கிலோ கஞ்சாக்களும், செல்போன்களும் 'சிறையில் எல்லா வசதிகளும் கிடைக்கும் போல' என்றொரு சந்தேகம் பாமரனுக்குள் விதைத்திருக்கிறது. இதை எல்லாத்தையும் விட, பல கோடிகளை சுருட்டிய நிதிநிறுவன அதிபர் கைதாகி சிறைக்குச் செல்லும்போதும், ஊழல் வழக்கில் சிக்கும் முன்னாள் அமைச்சர்களும் ஃபோட்டோகளுக்கு போஸ் கொடுத்துக் கொண்டே காவல்துறை வாகனத்தில் ஏறும் காட்சிகள், இவர்கள் என்ன சிறைக்கு பிக்னிக் போகிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. திரைப்படங்கள், ஊடகங்கள் மூலம் சிறையைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் உண்மையில் யதார்த்தத்திற்கு வெகு தொலைவிலிருக்கிறது.

தமிழகத்தைப் பொருத்தவரையில் புழல் (சென்னை), கடலூர், சேலம், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, கோவை என ஏழு மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. பெண்கள் மையச் சிறைகள் புழல், வேலூர், சேலம், திருச்சி என மொத்தம் நான்கு உள்ளன. இதுதவிர மாவட்டச் சிறைகள் ஆறு, கிளைச் சிறைகள் (ஆண்கள்) 98, பெண்கள் கிளைச்சிறைகள் 9, சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஒன்று, திறந்தவெளி சிறைச்சாலைகள் இரண்டு என பல்கலைக்கழகங்களுக்கு இணையான எண்ணிக்கையில் சிறைச்சாலைகளும் உள்ளன. இங்கெல்லாம் தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள் என பல லட்சம் பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அண்டைமாநிலமான கர்நாடகச் சிறையில் கைதிகள் தங்கள் குடும்பத்தாருடன் தினமும் பேசுவதற்காக சிறை வளாகத்தில் தொலைப்பேசி வசதிகூட செய்யப்பட்டுள்ளன!

24 மணிநேரமும் கண்காணிப்பும், அதிகாரிகளின் கண்டிப்பும், வெளியுலகத் தொடர்பின்மையும் சிறையின் அடிப்படை விதிகள். இந்த விதிகள் கடுமையாகும் போதுதான் சிறைச்சாலைகளில் மனநோய்க் கைதிகளுக்கான வார்டுகள் தனியாக உருவாக்கப்படுகின்றன. இன்றைக்கும் சென்னை புழல் சிறைச்சாலை வாசலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில் அந்தச் சிறையிலுள்ள மன நோயாளிகளின் எண்ணிக்கை சிறை வாழ்வின் கொடூரமுகத்தைப் பறைசாட்டுகிறது.

அவர்கள் எல்லாம் மனநோயாளிகளாக உள்ளே போனவர்கள் அல்ல. கைதி மனநோயாளிகளாக இருந்தால், அவர்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை மனநோயாளிகள் வார்டில் சேர்க்கப்படுவார்கள். கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் கைதிகளுக்கென்று பிரத்யேகமான வார்டு உண்டு என்பதை அறிக.

செய்த தவறுக்கு அல்லது செய்யாத தவறுக்குக் கிடைத்த சிறைவாசத்தை எண்ணி வருந்தும் கைதிகள் மற்றும் தனிமையில் தவிக்கும் கைதிகள் ஆகியோர் மனநோயால் பாதிப்புக்குள்ளாகிவிடுகின்றனர். இவர்களைக் குறிவைத்து ஒருசில ஆன்மிக அமைப்புகள் சிறைக்குள் யோகா, தியானம் மற்றும் அற்புத எழுப்புதல் கூட்டங்களை நடத்துகின்றன. அவற்றின் பலனாக திருந்துவோரின் எண்ணிக்கை எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பதற்கான எந்தவொரு புள்ளிவிவரமும் இதுவரை கிடைக்கவில்லை. (இந்த வகுப்புகளை நடத்தியவர்களே பின்னொரு நாள் கைதாகி நிரந்தர சிறை வாசிகளாகிவிடுவதை பார்த்துக் கொண்டுதானிருகிறோம்.)

சிறைச்சாலைகளுக்குள் இயங்கும் திறந்த வெளிப் பல்கலைக்கழகங்கள் விருப்பமும், தகுதியுமுள்ள கைதிகளுக்கு வகுப்பெடுத்து, தேர்வுகள் நடத்தி பட்டதாரிகளாக்கி வருகிறார்கள். இதெல்லாம் சரி, அடிக்கடி சிறைச்சாலைக்குள் அதிகாரிகளின் சோதனைகளில் சிக்கும் செல்போன்களும், கஞ்சா உள்ளிட்ட பொருட்களும் உள்ளே போனது யாருக்காக? எதற்காக? எப்படி? என்று சாக்ரடீஸ் பாணியில் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களில் (பிஸ்கட், பழம், பவுடர், சோப் உள்ளிட்ட பொருட்களை கைதிகளுக்கு அவர்களின் உறவினர்கள்,நண்பர்கள் மூலம் கொடுக்கலாம்) மறைத்து வைத்து சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருகிறார்கள் என்று சிறை அதிகாரிகள் சொல்லலாம். ஆனால் சிறைக்குள் சென்று வருவது என்றாலே சோதனை என்ற பெயரில் சல்லடையாக துளைத்து எடுத்து விடுகிற நிலையில் சிறைக் காவலர்களுக்குத் தெரியாமல் அந்தப் பொருட்கள் உள்ளே கொண்டு செல்லப்படுகிறது என்பதை ஒப்புக் கொள்ளவே முடியாது. தவறு செய்ததாக அவ்வப்போது சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவங்களே இதற்கு சாட்சி. ஆனால் பெரும்பாலும் தவறிழைக்கும் காவலர்கள், அதிகாரிகள் தவிர்த்து கைதிகள் மட்டுமே சிக்குகிறார்கள்.

உலகம் முழுவதும் மனித உரிமைகள் மீதான பார்வை மாறிவரும் சூழலில் சிறை வாசிகளுக்கு சில வசதிகள் கிடைக்கத்தான் செய்கின்றன. ஆனால் வெளியே நடக்கும் கோஷ்டி மோதல்களுக்கு சற்றும் குறைவில்லாத வகையில் சிறைக்குள் நடக்கும் கலவரங்களும் கொலைகளும் தவறு செய்தவர்களை திருந்தக் கூடிய இடம் சிறைச்சாலை என்கிற மாயையை சுக்கு நூறாக்கிவிடுகின்றன. பணமும், ஆள்பலமும் கொண்ட கைதிகள் சிறைக்குள்ளும் கோலோட்சி வரும் செய்திகளை முற்றிலும் வதந்தி என்று ஒதுக்கிவிடமுடியாது. சிறையிலிருந்து பகத்சிங் (எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன்?), சி.என்.அண்ணாதுரை, கருணாநிதி வைகோ ஆகியோர் படைத்த இலக்கியங்களுக்கு இணையாக சிறைக்குள் மிகப் பெரிய கொலை, கொள்ளைத் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கினற்ன. ஆபாசப் படங்கள் எடுத்து இணைய தளங்களில் உலவவிட்ட டாக்டர் பிரகாஷ் (தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் கைதான முதல் நபர்) கூட நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதிவிட்டாராம்.

வசதிகள் பெருகிக் கொண்டே போனாலும் வானமே எல்லை என சுதந்திரமாக வாழும் உலக வாழ்க்கையோடு சிறை வாழ்க்கையை ஒப்பிட முடியாது. சிறைக்கோட்டங்கள் அறக்கோட்டங்கள் ஆகட்டும் என்ற காப்பிய நாயகி மணிமேகலையின் கனவை ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பேடி திகார் சிறையில் நடைமுறைப்படுத்தினார் என்பதை காலம் பதிவு செய்திருக்கிறது. மணிமேகலைகளும், கிரண்பேடிகளும் உருவானால் சிறைச்சாலைகள் இல்லாத கைதிகள் இல்லாத ஒரு சமூகம் நிச்சயம் உருவாகும்.

-பொன்னுசாமி (நன்றி:www.earangam.com)

Tuesday, May 11, 2010

பார்வதியம்மாள் மீது தினமலர் அவதூறு... கண்டனத்தைப் பதிவு செய்யுங்கள்..




காலையில் தினமலர் செய்தித் தாளைப் பிரித்ததும் எனக்கேற்பட்ட உணர்வுகளை என்னவென்று சொல்வது! தினமலரின் வக்கிரத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பார்வதியம்மாள் வருகைக்கு நிபந்தனைகள் விதிக்கவில்லை (அடப்பாவிகளா?) என்ற ரீதியில் முதல்வர் கருணாநிதி பேரவையில் பேசிய செய்தி வெளியாகியிருந்தது. அந்தச் செய்தியில் தலைப்பு முதற்கொண்டு செய்தியில் எல்லா இடத்திலும் ‘பார்வதி‘ என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதுவும் கருணாநிதி பேச்சிலும் பேவை உறுப்பிளர்களின் பேசியதாக வெளியான கருத்துகளிலும் ‘பார்வதி’ என்றே குறிப்பிட்டிருந்தார்கள். உண்மையில் அவர்கள் அப்படி சொல்லவில்லை. பார்வதியம்மாள் என்றுதான் குறிப்பிட்டார்கள்.

‘பார்வதி என்ற குறிப்பிட்டால் போதும் அம்மாள் என்று குறிப்பிட அவறொன்றும் நமக்கெல்லாம் அம்மா இல்லை’ என்ற ரீதியில் தினமலர் நிர்வாகம் நிருபர்களுக்கு உத்தரவிட்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. (எல்லாம் அங்கிருப்பவர்கள் சொல்லும் தகவர்கள்தான்) ஒருவருடைய பெயரை மாற்றி குறிப்பிடும் அளவுக்கு அவர் மீது வெறுப்பு இருக்கும் பட்சத்தில் அவரைப் பற்றிய செய்தியை வெளியிட வேண்டிய அவசியம் என்ன வந்தது?

இன்றைக்கும் தினமலரில் பெரியார் என்று எழுத மாட்டார்கள். ஈ.வே.ரா. என்றுதான் எழுதுவார்கள்.தினமலர் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கருணாநிதி, தினமலர் நிறுவனர் டி.வி.ஆரும், ஈ.வே.ரா.வும் ஒத்தக் கருத்துடையவர்கள் என்று பேசி நம்மையெல்லாம் புல்லரிக்க வைத்ததை மறந்துவிட வேண்டாம்.

தினமலரின் இந்த வக்கிரமான எண்ணத்திற்கு அங்குள்ள ஊழியர்கள் (அதாங்க நிருபர்கள்) கொஞ்சமாவது சூடு சொரணையோடு நம்மிடம் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ளாமல், தினமலர் நிர்வாகம் செய்வதை நியாயம் போல் பேசுகிறார்கள். (அவர்கள் எப்பவுமே அப்படித்தான் பாஸு) நடிகைகள் விவகாரத்தில் தான் எழுதியதே சரி என்று வாதிடும் தினமலர், அந்தச் செய்தியை ஆதாரம் இல்லாமல் எழுதிய நிருபரை வேறு ஊருக்கு மாற்றி டார்ச்சர் செய்து வருவதை தினமலர் ஊழியர்கள் வசதியாக மறந்தும், மறுத்தும் விடுவார்கள்.

‘தந்தை பெரியார் என்று சொல்லி நம் தாயை அசிங்கப்படுத்துகிறார்கள்’ என்று பி.ஜே.பி.யின் எச். ராஜா ஒரு கூட்டத்தில் பேசியதை நான் கேட்க நேர்ந்தது. அப்படியென்றால், நேரு மாமா என்றால் நம் அத்தைகளை அசிங்கப்படுத்துகிறோமா, காந்தி தாத்தா என்றால் நம் பாட்டியை அசிங்கப்படுத்துகிறோமா? அந்த வக்கிரத்தின் அடுத்த படிதான் பார்வதியம்மாள் பெயரை ‘பார்வதி’ என்றாக்கியிருக்கிறாள்.

தினமணியில் பெயர்களைக் குறிப்பிடும் போது முடிந்தவரை இன்ஷியலோடுதான் எழுத வேண்டும் என்ற மரபு இன்றும் பின்பற்றப்படுகிறது. அது தினமணி கடைபிடிக்கும் பத்திரிகை தர்மம். தினமலருக்கு அப்படியொன்றும் இல்லை என்பது நமக்கும் தெரியும். புலிகளையோ பிரபாகரனையோ ஆதரிப்பது அவரவர் சொந்த அபிப்ராயம். ஆனால் ஒரு பெயரை மாற்றி எழுதுவது எப்படி சரியாகும்? அதுவும் பார்வதி அம்மாள் ஒன்றும் பயங்கரவாதி இல்லையே. அந்த அம்மாளை வைத்து அரசியல் பண்ணத் துடிக்கும் கருணாநிதி, வைகோ, பழ.நெடுமாறன், திருமாவளவன் ஆகியோரைவிட கேவலமான காரியத்தை செய்திருக்கும் தினமலருக்கு ஒரு ஃபோன் போட்டு அவர்களின் இந்த வக்கிர செயலை கண்டியுங்கள் என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். செய்வீர்களா?

நீங்கள் உங்கள் கண்டனத்தை கீழ்கண்ட எண்களில் பதிவு செய்யலாம்.


சென்னை 044 2841 3553, 2855 5783, பேக்ஸ் 044 2852 3695

பாண்டிச்சேரி Ph: 0413 224 9301/03

மதுரை Ph: 0452 238 0903-04,435 2901 Fax: 0452 238 0907

கோவை Ph: 0422 267 6021-23

பெங்களூரு h: 080 2228 3635 மும்பை Ph: 022 3258 9958 / 3266 3394
Fax: 080 2220 0693 Fax: 022 2421 2149

நியூ டெல்லி h: 011 2371 7263, 2373 9407
Fax: 011 2371 9732

நன்றி...

Thursday, May 6, 2010

உண்மை கண்டறியும் சோதனையும், சில உண்மைகளும்!!



குற்றம் சாட்டப்பட்டவரின் ஒப்புதல் இல்லாமல் உண்மை கண்டறியும் நார்கோ அனாலிசிஸ் சோதனை நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு நவநாகரீக தேசியப் பற்றாளர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். அப்படியென்றால், குற்றவாளிகளை விசாரிப்பது எப்படி என்று கொதிக்கிறார்கள். முத்திரைத்தாள் மோசடி வழக்கில் தெல்கியிடம் நடத்திய விசாரணையில் நார்கோ சோதனை மூலம் பல உண்மைகளைக் கண்டறிந்ததாக சொல்கிறார்கள். இதை அவர்கள் உதாரணமாகக் கூறுவதற்கு தெல்கி மீதான குற்றச்சாட்டை நிரூபித்து தண்டனை வாங்கிக் கொடுத்ததுவிட்டார்கள் என்பதுதான் காரணம்.

போலீஸாரால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகளா என்பது குறித்து போலீஸாரிடம் இதே சோதனையை நடத்த அனுமதி வழங்கப்படுமா என்பது என்னுடைய சந்தேகம். தாங்கள் கைது செய்யும் சாமானியர்களுக்கு எப்பாடு பட்டாவது சிறை தண்டனை வாங்கித் தந்துவிடும் போலீஸார், அரசியல் செல்வாக்குள்ள பெரிய மனிதர்கள் எத்தனை பேருக்கு தண்டனை வாங்கித் தந்திருக்கிறார்கள் என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது.

பத்து பதினைந்து பெண்களைக் கற்பழித்துக் கொன்றதாக அண்மையில் தென் மாவட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் கொன்றதாகக் கூறும் ஒரு பெண்ணை கொலை செய்ததாக ஏற்கெனவே சிலரை போலீஸார் கைது செய்திருந்தது தான் அதிர்ச்சி! இதில் யார் உண்மையான குற்றவாளி. கணக்குக் கர்ட்டுவதற்காக யாரை வேண்டுமானாலும் கைது செய்வதை இப்போதும் எப்போதும் வழக்கதில் வைத்திருப்பவர்கள் நம் போலீஸார். இவர்களுக்கு எதற்கு இந்த உண்மையறியும் சோதனைகள் எல்லாம்.

உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நொய்டா சிறுமிகள் பாலியல் கொலைகளில் கைது செய்யப்பட்ட மொனீந்தர் சிங் பின்னாளில் விடுதலை செய்யப்பட்டார். உண்மையில் அவர் குற்றவாளி இல்லை என்றால் அவரை சிறையில் தள்ளித் துன்புறுத்தியது ஏன்? உண்மையான குற்றவாளி அவர்தான் என்றால் அவருக்குத் தண்டனை வாங்கித் தராமல் தப்பிக்க வைத்தது ஏன்?

ராஜிவ் கொலையில் காட்டும் அக்கறையில் பாதிக் காட்டியிருந்தால் கூட டென்னிஸ் விளையாடச் சென்ற சிறுமியை பலாத்காரம் செய்து அவரது சாவுக்குக் காரணமாக இருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி ரத்தோருக்குத் தண்டனை வாங்கித் தந்திருக்க முடியும். ஆக, போலீஸாருக்குத் தேவை தொழில்நுட்பங்கள் அல்ல, அரசியல் தலையீடு இல்லாத
சுதந்தரமான செயல்பாடுதான். அதற்கு இந்த அரசு வழிவகை செய்யுமா? அல்லது இதற்கு முன்பு இருந்த அரசுகள் செய்திருக்கிறதா?

குற்றப்பத்திரிகை தயாரிக்கும் போதே குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தப்பிக்க வகைச் செய்யும் அளவில், அதில் ஓட்டைகளுடன் தயாரிப்பதுதானே நம்முடைய காவல்துறையின் வழக்கமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தவறுதலாக கைது செய்யப்பட்ட இஸ்லாமிய டாக்டரை உடனடியாக விடுதலை செய்ததோடு அதற்கு மன்னிப்பும் கோரினார்கள். இந்தியாவில் அப்படியொரு சம்பவம் நடக்குமா? தினகரன் எரிப்பு, நாவரசு கொலை போன்றவற்றில் குற்றவாளிகள் யார்?

தன் உறவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று காவல்துறை அதிகாரியிடம் பேசிய
தமிழக அமைச்சர் பூங்கோதையின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதும், அவர் திரும்பவும் அமைச்சரானதும் நாம் அறிந்ததே. சாதாரண போலீஸாரை விடுங்கள், மெத்தப் படித்த காவல்
துறை அதிகாரிகளும் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கால்பிடிக்கத்தானே விரும்புகிறார்கள்.
ஆகவேதான் சொல்கிறேன், உண்மையறியும் சோதனை நிச்சயம் வேண்டும் என்று இந்த அரசு கருதுமேயானால் யார் கோரினாலும் காவல்துறை உயரதிகாரிகள், அரசியல்வாதிகள்,அரசியல் தலைவர்களிடம் உண்மையறியும் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும். அதற்குத் தயாரா?

Sunday, April 18, 2010

பிரபாகரனுக்கு மனம் திறந்த மடல்...


தமிழீழத்தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு,

நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா, இல்லையா என்று எனக்குத் தெரியாது.

இந்த நேரத்தில் அவசரமாக உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டிய சூழல் வந்துவிட்டதற்காக வருந்துகிறேன். உங்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவா எனக்குள் ஏற்பட்ட போது நீங்கள் போர்க்களத்தில் போரிட்டுக் கொண்டிருந்தீர்கள்.அதற்குப் பிறகு இப்போதுதான் உங்களுடன் பேசவேண்டிய அவசர அவசியம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 16-ம் தேதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட உங்கள் தாயார் உரிய அனுமதியின் பேரில், மருத்துவச் சிகிச்சைக்காக சென்னைக்கு விமானம் ஏற்றப்பட்டார். ஆனால், விமானத்திலிருந்து அவரை தரையிறங்கவிடாமல் அதே விமானத்தில் மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். இதில்,கொதித்துப் போன தாயத்தமிழகத்தில் உள்ள உங்கள் நண்பர்கள் விடுத்த பேட்டிகள், அறிக்கைகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.


# “பார்வதியம்மாள் மருத்துவச் சிகிச்சைக்காக சென்னை வந்தே எனக்குத் தெரியாது.
மறுநாள் பத்திரிகை படித்துத்தான் இதை நான் தெரிந்துகொண்டேன். இப்போதும் ஒன்றும் மோசமில்லை. அவர் தரப்பில் என்னிடம் பேசினால் மத்தியஅரசிடம் பேசி அவருக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன்.“

-பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் தமிழினத் தலைவர் முதல்வர் கருணாநிதி கொடுத்த விளக்கம். (அடத்தூ...)

# “பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்குக் காரணமே ஜெயலலிதானதான். 2003-ல்
பிரபாகரன் குடும்பத்தார் இந்தியாவுக்கு வரஅனுமதிக்கப்படக்கூடாது என்று ஜெயலலிதா எழுதிய விண்ணப்பக்கடிதத்தின் அடிப்படையிலேயே இப்போது பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்.”

-இது எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவனின் விளக்கம்.

# “மத்திய அரசுக்கு விசுவாசமாக இருக்கும் அதிகாரிகளே பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.”

- இது திராவிட கழகத்தலைவர் வீரமணி அறிக்கை.

# “பார்வதியம்மாள் அனுப்பப்பட்டதற்கு தமிழக முதல்வர் கலைஞர் காரணமே இல்ல. மத்திய அரசுதான் காரணம்.”

-இது பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை.

# “எல்லாத்துக்கும் காரணம் கருணாநிதிதான் என்று குற்றம் சாட்டுகிறேன்.”

-ம.தி.மு.க. வைகோ மற்றும் (தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்) பழ.நெடுமாறன்...


பிரபாகரன் அவர்களே உங்கள் தாயாருக்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பதில் எத்தனை அரசியல் பாருங்கள். உணர்வாளர்களுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக அவரை வரவேற்கச் சென்ற உங்கள் நீண்ட நாளைய நண்பர் நெடுமாறன் அன்ட் கோவினர் உங்கள் தாயாரைத் திருப்பி அனுப்பிய சோனியா அரசை குறை சொல்லத் தயாராக இல்லை. காரணம் ஜெ., காங்கிரஸ் கூட்டணிக்குக் காத்திருக்கிறார். ஜெவுக்கு சமூக நீதித்தாய் என்று பட்டம் கொடுத்த நெடுமாறன், அதிமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.


இந்திய அரசு விசா கொடுக்கிறது. ஆனால் உள்ளே நுழைய அனுமதி மறுக்கிறது. தமிழகத்தில் நடந்த இந்த மனிதநேயமற்ற செயலுக்கு கருணாநிதியின் மேல் அவதூறு வந்துவிடக்கூடாது என்று உங்கள் நண்பர்கள் திருமா, ராமதாஸ், வீரமணி போன்றோர் குதிக்கிறார்கள்.

இவர்களில் பலரும் நீங்கள் விசிறிய எச்சில் சோற்றைத் தின்றவர்கள் என்று எனக்குத் தெரியும். அதுவும் கொஞ்சம் நஞ்மல்ல கோடிக் கோடியாய் நீங்களும் புலம்பெயர் தமிழர்களும் அவர்களுக்குக் கொட்டிக் கொடுத்தார்கள். இன்றைக்கு சொந்த அரசியல் லாபத்திற்காக உங்கள் தாயாருக்கே தயவு காட்டத் தயங்கிறார்கள். ஆயுதம் தாங்கிய நீங்கள் ஓட்டுப் பொறுக்கிகளை நம்பியதன் விளைவைப் பார்த்தீர்களா?

இப்படிக்கு

உங்களைப் போல் தமிழனின் இழிநிலையைப் பார்க்கப்
பொறுக்க முடியாமல் ஆயுதம் (பேனா) தாங்கிய
பத்திரிகையாளன்....

Tuesday, April 13, 2010

கடலோரக் காவல் வடை! -தாமரை



என்னருமை தோழர் கவிஞர் தாமரை எழுதிய
கவிதை இது....

வாரயிருமுறை வரும் இதழ் ஒன்றில் வெளியான
இவரது இந்தக் கவிதையை பலநாட்களாக வலைப்பதிவிட
நினைத்து முடியாமல் போனது...

இன்றைக்குத்தான் சாத்தியமானது...

இந்த நையாண்டிக் கவிதையில்
கவிஞரின் ஆவேசம் அடங்காமல் அதிர்கிறது...


இனி கவிதை வாசியுங்கள்...


‘தம் எல்லைகளையும், தம் மக்களையும்
காத்தலே முதல் கடமை‘ என்ற வரி
கடலோரக் காவல் படையின்
பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை
அல்லது
அது வகுப்பில் சொல்லப்பட்ட போது
க.கா.வீரர்கள் கேன்ட்டீனில்
வடை தின்று கொண்டிருந்திருக்க வேண்டும்...

மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து
வாங்கிய பிரமாண்டக் கப்பல்களில்
உல்லாசப் பயணம் போகிறார்கள்

தேன்நிலவு கொண்டாடுகிறார்கள்
ஒழிந்த நேரங்களில்
தரையோரக் காவல் படையினருக்கு
விருந்து கொடுக்கிறார்கள்...
வடையே முதன்மை பண்டம்!

சிங்களப் படை வந்து தமிழ் மீனவனை
கொத்தாக அள்ளித் தூக்கும்போது
க.கா.வீரர்கள் தங்கள் கப்பல் படையில்
வடைக்கு மாவுத் தட்டிக் கொண்டிருக்கும்படி
பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள்...

முகமெல்லாம் மாவு...
பாவம் தும்மலுக்கு நடுவே
நல்ல வடைக்கு சாத்தியம் நலிவு!

எண்ணெய் குடிக்காத வடையைத் தட்ட
அவர்கள் போராடும் போது
வகையாக வந்து சிக்குகிறான் தமிழ் மீனவன்!
படகு நிறைய அவன் மீன் அள்ளிப்போவதை
எப்படிப் பொறுப்பது?

வலைகளை அறுத்துத் தள்ளுகிறார்கள்
(ஒருவேளை அதில்தான் எண்ணெய் வடிக்கிறார்களே
என்னவோ...!)
மீனவர்களை நிர்வாணப்படுத்துகிறார்கள்
(ஒருவேளை அவர்கள் லுங்கிகள் மாவு
உலர்த்தத்தேவையோ...?)

கண்மூடித்தனமாகத் தாக்குகிறார்கள்
(வடையை சரியாகத்
தட்ட முடியாத வயிற்றெரிச்சல்?)

உச்சகட்டமும் ஒன்றிருக்கிறது...

பொறுக்கிகள் சுடும் வடையும்
பொறுப்பற்றதாகத்தான் இருக்கிறது...

அப்பாவிகள் மீது விழுந்து வெடிக்கிறது...
எண்ணெய் குடிக்காத வடை ரத்தம் குடிக்கிறது!

வகைவகையான வடைகளை கப்பலில்
பார்வைக்கு வைக்கின்றனர்...
அட்மிரல்களும் தளபதிகளும்
உளவுத்துறைகளும் பார்வையிடுகின்றன...

சிறந்த வடை சுட்டவனைத் தேர்ந்தெடுத்து
(கடாய்) பரிசளிக்கின்றனர்...
சிறந்த இந்திய வடை சுட்டவனை அதிசயித்து
சிங்கள மீனவர்கள் படையெடுத்து வந்து
பணயக் கைதியாகக் கொண்டு போகிறார்கள்..

வடை சுடுவதன் தொழில்நுட்ப ரகசியத்தை
அவன் சொல்லும் வரை
‘தட்டி‘ எடுக்கிறார்கள்...

என்னவோ போங்கள்...

வடை சுடவும் வக்கற்ற எனக்கு
வயிற்றெரிச்சலாக இருக்கிறது...

யாரப்பா அங்கே...
கடலோரக் காவல் கடை...?
எனக்கு ரெண்டு வடை .... பார்சல்...!

Monday, April 12, 2010

தண்டகாரண்யம்: இந்திய தேசியம் பேசினால் செருப்பால் அடிப்பேன்டா...,




உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அளப்பறிய சேவைகளை செய்து வருகிறார். அதுவும் தண்டகாரண்யத்தில் அவர் ஆற்றி வரும் சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது. அதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா, போன்றவர்கள் துணையாக நிற்கிறார். மீடியாகளும் ப.சி.க்கு பக்கபலமாக இருந்து வருகிறது.

எதற்கு இந்தப் பாராட்டு என்கிறீர்களா?

மேலே படியுங்கள்...

இந்தியாவின் மையப்பகுதியில் இருக்கும் தண்டகாரண்யம் என்கிற அடர்ந்த வனப்பகுதி ஆந்திரம்,​​ மகாராஷ்டிரம்,​​ சத்தீஸ்கர்,​​ மத்தியப் பிரதேசம்,​​ ஜார்க்கண்ட் மற்றும் ஒரிசா ஆகிய ஆறு மாநிலங்களின் எல்லைகளை உள்ளடக்கியது.​ இதன் மொத்த நிலப்பரப்பு ஏறத்தாழ 40,000 சதுர கிலோ மீட்டர். ​ இந்த வனப்பகுதியில் வாழும் ஆதிவாசிகள் எதற்காகவும் வெளியுலகையோ அரசையோ சார்ந்து வாழ வேண்டிய அவசியமில்லாதவர்கள்.​ இவர்களுக்கு ரேஷன் தேவையில்லை.​ மின்சாரம்,​​ குடிநீர் வசதி,​​ சாலைகள்,​​ பள்ளிக்கூடங்கள்,​​ மருத்துவமனைகள் எதுவுமே வேண்டாம்.​ இயற்கையோடு ஒட்டி வாழும் பழங்குடி மக்கள்.


உலகமயமாக்கல் கொள்கையால் பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை அங்கே குவிந்து கிடக்கும் கனிம வளத்தின் மீது விழுந்தது. அதை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்தால் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கலாம் என பன்னாட்டு நிறுவனங்கள் கணக்குப் போட்டன.

ஓட்டுப் பொறுக்கிகள் அந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் வருகையையும் அவர்களது வளர்ச்சியையும் ஆதரித்து பழங்குடி மக்களை விரட்டி அடிக்கத் தீர்மானித்தனர். தங்களது வாழ்வாதாரம் பறிபோனால் நகரத் தெருக்களில் பிளாட்பாரங்களில் அல்லாட வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அவர்களை வெளியேற்றி கனிம வளங்களைச் சுரண்டி ஏற்றுமதி செய்வதிலிருந்து பின்வாங்க பன்னாட்டு நிறுவனங்களும் தயாராக இல்லை.​ ​இங்கே தான் ஏற்கெனவே தங்களின் அடிப்படை வசதிகளுக்காக போராடிக் கொண்டிருந்த ஆயுதக் குழுக்களின் உதவியை நாடினர், பழங்குடி மக்கள்.


தண்டகாரண்யப் பகுதிகளிலிருந்து கனிம வளங்களை வெட்டி எடுக்கும் முடிவை கைவிட்டால்தான் அந்த மக்களும் அந்த மக்களுக்காக களம் காணும் மாவோயிஸ்ட்களும் ஆயுதங்களை கீழே போடுவார்கள். ஆனால் அந்தக் கனிம நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் ப.சிதம்பரம் (அந்த நிறுவனங்களின் சட்ட ஆலோசகர் நளினி சிதம்பரம்) ​​ விமானத் தாக்குதல் மூலம் மாவோயிஸ்டுகளை அழிக்கும் சாக்கில் ஆதிவாசிகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார். இது காடுகளை அழித்து பன்னாட்டு கனிம நிறுவனங்களுக்கு தாரை வார்த்துவிட்டு இயற்கையோடு இணைந்து வாழும் பழங்குடி மக்களை நகரங்களில் பிச்சை எடுக்க வைப்பதுதான் ப.சிதம்பரத்தின் லட்சியம். இதை மன்மோகன் சிங் வேடிக்கை பார்க்கிறார். சோனியா காந்தி வேடிக்கை பார்க்கிறார். விளிம்பு நிலை மனிதர்களுக்காகப் போராடும் கனிமொழி, திருமா போன்றவர்களும் வேடிக்கைப் பார்க்கிறார்கள். இதைத் தட்டிக் கேட்க வக்கில்லாத மீடியாகள் இதைவிட கூட்டிக் கொடுக்கும் வேலையை செய்யலாம். (அதைத்தானே இப்போதும் செய்து வருகிறது)

எங்கோ காட்டில் நிம்மதியாக வாழும் அந்த மண்ணின் மைந்தர்களை அழிக்கும் உங்கள் இந்திய தேசியம் வாழ்க... இதற்கு மேலும் எவனாவது தேசப்பற்று பத்தி பேசினால் செருப்பால அடிப்பேன்.... ப.சி.யை செருப்பால் அடித்து புண்ணியம் கட்டிக் கொண்ட சீக்கிய பத்திரிகையாளனுக்கு என் வீரவணக்கங்கள்...

Tuesday, April 6, 2010

சென்னைப் பல்கலைக் கழக துணை வேந்தர் திருவாசகத்துக்கு செருப்படி!


திண்ணைப் பள்ளிகளாகும் பல்கலைக்கழகங்கள்!

பழ.​ கருப்பையா (தினமணி கட்டுரை)


ஒரு காலத்தில் ஒரே ஒரு பல்கலைக்கழகம்தான் தமிழனுக்கு உயர்கல்வி வழங்கும் பல்கலைக்கழகமாக இருந்தது.​ கங்காரு தன்னுடைய குட்டியைத் தன் உடற்பையில் பொத்தி வைத்துப் பாதுகாப்பதுபோல் ஏ.எல்.​ முதலியார் போன்றவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தைத் தங்களின் நெஞ்சோடு சேர்த்துப் பொத்தி வைத்துக் காத்தார்கள்.
நீதியும் நிர்வாகமும் அரசியல் சாசனப்படி பிரிக்கப்பட்டிருந்தன.​ அவைபோல் இல்லையென்றாலும் கல்வி அரசியலிலிருந்து தனித்தொதுங்கி,​​ அறிவை நோக்கமாகக் கொண்டு தன்போக்கில் வளர அன்றைய பெருந்தன்மையான அரசியல் இடமளித்தது.
இடைநிலைப் பள்ளி ஆசிரியரிலிருந்து துணைவேந்தர் வரை "தட்சிணை' வைக்காமல் இன்றைய அரசு அமைப்பில் எதுவும் நடக்காது என்பதால் கல்வியாளர்கள் சத்துணவு ஆயாக்கள் நிலைக்குத் தாழ்ந்து விடுவது தவிர்க்க இயலாததாகி விட்டது.​


சின்னத்தனமான அரசியல்,​​ எல்லா உயர்பதவிகளிலும் சின்னத்தனமானவர்கள் ஏறக் காரணமாகி விட்டது. கடந்த மாதம் "அப்பாவுக்குத் தப்பாது பிறந்த பிள்ளை' என்னும் நூல் வெளியீட்டு விழாவுக்கு மதுரை சென்ற சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம்,​​ அழகிரியைப் பார்த்து மிகவும் பரவசநிலை அடைந்து,​​ தன்னை மறந்து பேசியிருக்கிறார்.
''முன்பெல்லாம் கோயிலுக்குச் சென்று திருவாசகம் பாடுவேன்!​ ஆனால் அழகிரியைச் சந்தித்த பிறகு இப்போது அழகிரிவாசகம்தான் பாடுகிறேன்.​ அண்ணனின் "காலைப் பிடித்துக் கொண்டிருப்பதுதான்' எனக்கு எப்போதும் சந்தோஷம்!''
என்னுடைய நாக்கால் மனிதனைப் பாட மாட்டேன் என்றார் நம்மாழ்வார்.​ என்னுடைய நாக்கால் கடவுளைப் பாடிய மடைமையை விட்டொழித்துவிட்டு அண்ணன் அழகிரியைப் பாடுகிறேன்;​ வீடு பேறு அளிக்க வல்லதாகச் சொல்லப்படும் தில்லைக் கூத்தனின் ''தூக்கிய திருவடியை''ப் பற்றிக் கொள்வதைவிட,​​ துணைவேந்தர் பதவியை அளிக்க வல்ல அண்ணன் அழகிரியின் திருவடியைப் பற்றிக் கொள்வதுதானே,​​ நடைமுறை வாழ்க்கைக்கு நம்பகமானது என்று அண்ணன் அழகிரியின் திருவடிப் புகழ்ச்சி பாடுகிறேன் என்கிறார் துணைவேந்தர் திருவாசகம்.


இந்தத் தரத்தில் உள்ள துணைவேந்தர்,​​ தான் பதவி வகிக்கும் பல்கலைக்கழகத்தில் "கருணாநிதியின் சிந்தனைகளை' முதுகலைப் படிப்புக்குப் பாடமாக்கப் போவதாகச் சொல்வது வியப்பல்லவே!​ "பேய் அரசு செய்தால் பிணந் தின்னும் சாத்திரங்கள்!'
கணிதம்,​​ அறிவியல்,​​ பொருளாதாரம்,​​ பொறியியல்,​​ மருத்துவம்,​​ மெய்யியல் என்பனவற்றிலெல்லாம் உயர் கல்வி என்பது போய் கருணாநிதியின் சிந்தனைகள்தாம் தமிழ்நாட்டில் உயர்கல்வி என்னும் நிலையில் திருவாசகமாவது தன் பிள்ளைகளை அந்த வகுப்பில் சேர்த்து விடுவாரா?​ கனிமொழியின் மகனாவது அதைப் படிக்க முன்வருவானா?
சங்க காலத்தில் தமிழ்நாட்டுக்கும் கிரேக்கத்துக்கும் நேரடித் தொடர்பு இருந்தது.​ அதே காலகட்டத்தில் சாக்ரடீஸ்,​​ பிளேட்டோ,​​ அரிஸ்டாட்டில் போன்ற எண்ணற்ற அறிஞர்கள் கிரேக்கத்தில் வாழ்ந்தனர்.
பதினான்கு-பதினாறாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா மறுமலர்ச்சி அடையக் காரணம் முன்னாளைய கிரேக்கச் சிந்தனைகள்தாம்.​ கிரேக்கத்தை ரோமாபுரி அடிமை கொண்ட பிறகும் கிரேக்கர்களை அடிமை கொள்ள முடியாமைக்குக் காரணம் அவர்களுடைய அறிவு வலிமைதான்.


​ அவ்வளவு சிறந்த கிரேக்கம் தமிழ்நாட்டோடு உறவு நிலையில் இருந்தது.​ யவனப் பெண்கள் இறக்குமதியானார்கள்;​ யவன மது இறக்குமதியானது;​ யவன வீரர்கள் இறக்குமதியாகி பாண்டியர்களின் அரண்மனைகளில் மெய்க்காப்பாளர்களாக விளங்கினார்கள்.​ ஆனால் யவன அறிவு மட்டும் இறக்குமதியாகவில்லை.
வள்ளுவன் போன்ற நிகரற்ற பேரறிஞர்கள் தமிழ்நாட்டை உலகின் அறிவுத் தரத்துக்கு உயர்த்தி நிறுத்தினார்கள் என்றாலும்,​​ இன்னொரு வகையான சிந்தனைப் போக்குக்கு வாய்ப்பு வந்தும் தமிழர்களால் தேடப் பெறாமல் கடல் பரப்புக்கு அந்தப் பக்கமே நின்றுவிட்டது.
நாம் சங்க காலத்தில் இழந்தது எவ்வளவு பெரிய சிந்தனைகளை என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளைக்காரன் கொண்டு வந்த அறிவு மூட்டையை அவிழ்த்தபோதுதான் தெரிந்தது.


வெள்ளைக்காரன் நமக்குச் செய்த தீமைகள் எண்ணிலடங்காதவை.​ அவனால் ஏற்பட்ட சில நன்மைகளில் ஒன்று திண்ணைப் பள்ளிக்கூடத்திலிருந்த நம்மைப் பெயர்த்தெடுத்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் கொண்டு சேர்த்ததுதான்.​ ஆத்திசூடி மட்டும் படித்த நம்மை அரிஸ்டாட்டிலின் அரசியலையும் படிக்க வைத்ததுதான்.​ ஆனால் துணைவேந்தர் திருவாசகம் பல்கலைக்கழகத்தை மீண்டும் திண்ணைப் பள்ளிக்கூடம் ஆக்கி விடுவார் போலிருக்கிறதே!
​ கருணாநிதியின் ஒரு புகழ்பெற்ற சிந்தனை ''ஸ்ரீரங்கனாதனையும் தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளந்திடும் நாள் எந்நாளோ?''இவர்களுக்கு வடிவங்களின் மீது சினமா அல்லது கடவுளின் மீதே சினமா?​ வடிவங்களின் மீதுதான் சினம் என்றால் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தக் கருணாநிதி ஏன் எழுந்து நிற்கிறார்?​ தேசியக் கொடி தேசம் அல்லவே!​ அதன் அடையாளம்தானே!


நீங்கள் ஒரு கந்தையை உயரத்தில் பறக்கவிட்டுத் தேசத்தை அடையாளப்படுத்திக் கொள்வதுபோல,​​ தேவைப்பட்டவன் எங்கும் பரந்து விரிந்து ஊடுருவி நின்று எல்லோரையும் எல்லாவற்றையும் தோற்றுவித்து அழிக்கும் இறையாற்றலை ஸ்ரீரங்கத்தில் "கிடந்த கோலத்தில்' ஒருவன் அடையாளப்படுத்திக் கொண்டால் என்ன குற்றம்?​ சீன எல்லையில் நிறுத்த வேண்டிய பீரங்கியை அவனிடம் கோட்டை விட்டுவிட்டு திருச்சி எல்லையில் நிறுத்துவதாகச் சொல்வதுதான் நவீன சிந்தனையா?


"ஒருவனே தேவன்' என்று திருமந்திரக் கோட்பாட்டைத் தி.மு.க.​ கடன் வாங்கிக் கொண்டதே!​ இவர்கள் தேவன் இருப்பதை அறிந்தது எவ்வாறு?​ இறை மறுப்புவாதிகள் ​ இன்று வரை விளக்கவில்லையே! காணப்படாத ஒன்றை இருப்பதாகச் சொல்வது " உய்த்தறிந்து' சொல்லும் கருதல் அளவை என்னும் தர்க்க வழிப் பட்டதுதானே.
பானை இருப்பதால் அதைச் செய்த குயவன் ஒருவன் இருக்க வேண்டும்;​ அதுபோல் உலகு இருப்பதால் அதைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்க வேண்டும் என்பவை எல்லாம் உய்த்தறிந்து சொல்லப்படுபவைதானே.​ "ஒருவனே தேவன்' என்னும் கோட்பாட்டைத் தி.மு.க.​ கைக்கொண்டது "கருதல் அளவை' என்னும் தர்க்கப்படிதான் என்றால் அண்ணாவுக்கு முந்தைய வரிசையில் பெரியார் படத்தைத் தூக்கி விட்டுத் திருமூலர் படத்தைப் போட்டுக் கொள்ள வேண்டியதுதானே?


கருணாநிதி சிந்தனைகளை முதுகலை வகுப்புக்கு முதன்மைப் பாடமாக வைத்தால்,​​ எவராவது தப்பித் தவறிச் சேர்ந்து விட்டவர் மேற்கண்ட வினாக்களுக்கு நிகரான வினாக்களை எழுப்பினால்,​​ திருவாசகம் என்ன விடை சொல்வார்?​ எவ்வளவோ அறிவான ஆசிரியர்களும் பேராசிரியர்களும் இதே பல்கலைக்கழகத்தில் தரைமட்டத்தில் கிடக்க,​​ ஆங்கில மொழித் தடுமாற்றம் உள்ள என்னை விண்ணளவு தூக்கி நான் வசதியில் மிதக்கக் காரணமான கருணாநிதி என்று திருவாசகம் வெட்கமில்லாமல்கூட விடையிருப்பார்!​ அறிவுலகம் ஏற்குமா?
பாடம் கற்பிப்பவர் குறைபாடுடையவராக இருக்கலாம்;​ பாடமே குறைபாடுடையதாக இருக்கலாமா?​ எது அறிவு?​ நல்லதன் நலனையும்,​​ தீயதன் தீமையையும் உள்ளவாறு உணர்த்துவது அறிவு என்று தமிழ்மொழி கூறும்.



காந்தியின் சிந்தனைகளை முதுகலை வகுப்புக்கு முதன்மைப் பாடமாக வைக்கும்போது,​​ கருணாநிதி சிந்தனைகளை வைக்கக் கூடாதா என்று கேட்கிறார் திருவாசகம்.
சில ஆயிரம் வெள்ளைக்காரர்கள் பல கோடி இந்தியர்களை ஆள முடிவதற்குக் காரணம் தீமையோடு மக்கள் ஒத்துழைப்பதுதான் என்று அவர்களுக்கு உணர்த்தி,​​ ஆயுதங்களைத் திரட்டாமல் மக்களைத் திரட்டியது,​​ உலகு அதுவரை கண்டறியாத போர்முறை அல்லவா!​ ​
காந்தி ஒரு யுகத்தை வடிவமைக்க வந்த சிந்தனையாளர்;​ காந்தியும் கருணாநிதியும் ஒன்றா?
தமிழ்நாட்டில் மாம்பழக் கவிராயர் சீட்டுக்கவி எழுதிக் கொண்டிருந்த காலகட்டத்தில்,​​ ஜெர்மானியச் சிந்தனையாளர் இமானுவேல் காண்ட் தூய அறிவு குறித்த ஆய்வினை மேற்கொண்டிருந்தார்.​ காலமும் வெளியும் நம்முடைய மனத்தின் படைப்புகளே!​ அவை புறப்பொருள்களை ஒழுங்குபட அடுக்கி உணர்வதற்கான மனத்தின் கருவிகள் மட்டுமே என்றார் காண்ட்.


காண்ட்டைப் படிப்பதற்குப் பல்கலைக்கழகம் வேண்டுமா,​​ இல்லை,​​ கருணாநிதியின் பராசக்தி வசனத்தைப் படிப்பதற்குப் பல்கலைக்கழகம் வேண்டுமா?​ திருவாசகம் சொல்லட்டுமே!
வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறுதான் -​ அடித்துச் சொன்னார் ​ காரல் மார்க்ஸ். உற்பத்திச் சாதனங்களைப் பொதுவுடைமை ஆக்காத சமூகத்தில் பணமே எல்லாமாக விளங்கும்.​ ஆட்சி,​​ சமூக மதிப்பு,​​ தலைமைப் பொறுப்பு அனைத்துமே பணத்தால் தீர்மானிக்கப்படும்.​ பணம் இல்லாத உண்மைகள் உறங்கும்;​ பணமுடைய பொய்மைகள் கோலோச்சும்.​ பணமுடைய முட்டாள் மதிக்கப்படுவார்;​ பணமில்லாத அறிஞர் இழிவுபடுத்தப்படுவார்!


​ திருவாசகங்கள் துணைவேந்தர்களாவார்கள்;​ கருணாநிதிகள் நாடாள்வார்கள் என்று மார்க்ஸ் பெயர் குறிப்பிடாமல் அனைத்தையும் பேசுவது போலில்லையா மேற்கண்ட வாதங்கள்.

​ வர்க்க வேறுபாடற்ற சமூக உருவாக்கத்தைப் பற்றிப் படிக்க பல்கலைக்கழகம் வேண்டுமா?​ கருணாநிதியின் "இல்லற ஜோதி' வசனத்தைப் படிக்கப் பல்கலைக்கழகம் வேண்டுமா?​ திருவாசகம் சொல்லட்டுமே! தாவோயியம்,​​ புத்தர்,​​ வள்ளுவர்,​​ ஏசு,​​ நபிகள் நாயகம்(ஸல்),​​ சங்க இலக்கியம்,​​ எபிகூரியன் கொள்கை,​​ ஸ்டோயிசிசம்,​​ மாக்கிவெல்லி,​​ சாணக்கியன்,​​ உபநிடதங்கள்,​​ ஹாப்சின் லெவியதான்,​​ ஜான் லாக்கின் அரசியல் தத்துவம்,​​ ரூசோ,​​ நீட்சே,​​ ஹியூம் இவர்களோடு நம்முடைய ஊர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களைப் படித்து முன்னேறிச் செல்வதற்குப் பல்கலைக்கழகம் வேண்டுமா?​ "திரும்பிப் பார்' வசனத்தைப் படித்துவிட்டுத் திரும்பி நடப்பதற்குப் பல்கலைக்கழகம் வேண்டுமா?
பல்கலைக்கழகங்களில் முதுநிலை வகுப்பில் கருணாநிதியின் சிந்தனைகளைப் "பணம் வேறு கட்டி'ப் படிப்பதற்குப் பதிலாக அந்தப் பணத்தில் பத்து மாடுகளை வாங்கி வைத்துக் கொண்டு மேய்க்கலாமே!​ பால் வளமாவது பெருகுமே!


மீனாட்சி அம்மன் கோயிலில் செருப்புக் குத்தகையை ஏலம் எடுப்பவர் ஒரு முதுநிலைப் பட்டதாரியாகவும் இருந்தால் அடுத்த துணைவேந்தராகி விடலாம்.​ கூடுதல் தொகைக்கு ஏலம் கேட்பதுதான் முக்கியமானது. திண்ணைப் பள்ளிகளாகின்றன பல்கலைக்கழகங்கள்!

Saturday, April 3, 2010

ஐந்து நாளில் கட்டிமுடிக்கப்பட்ட சட்டப்பேரவை




எதையாவது எழுத வேண்டும் என்பதற்காக நான் பதிவெழுதுவதில்லை.அதே நேரத்தில்
எழுதத்தூண்டும் நேரங்களில் எல்லாம் எழுதிவிடுவதும் இல்லை. எழுதியே ஆக வேண்டும்
என்ற தாக்கமும், அதற்குரிய நேரமும் கிடைக்கும் போது மட்டுமே எழுதுகிறேன்.
ரொம்ப நாட்களாக புதிய தலைமைச் செயலகம் பற்றிய என்னுடைய எண்ணங்களைப்
பகிர்ந்துகொள்ள விரும்பினேன்.

புதிய சட்டப் பேரவை கட்டடம் பற்றிய நிறைய விடங்கள் உண்டு. ஆனால், நான் பேசப் போவது அதில் உள்ள சட்டம் தொடர்பான ஒரு பிரச்னையைப் பற்றி. அதாவது ஒரு கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டவுடன், அந்த இடத்தில் இப்படித்தான் அந்தக் கட்டடம் இருக்கும் என்ற ப்ளானைக் காட்டி (அப்ரூவல்) அங்கீகாரம் பெற்று கட்டடத்தைக் கட்ட வேண்டும். பெரும்பாலும் அங்கீகாரம் பெறுவதற்கு கொடுக்கப்படும் ப்ளான்படி யாரும் கட்டடம் கட்டுவது கிடையாது. அப்படி கட்டவும் முடியாது. ஒரு கட்டடம் எப்படி இருக்க வேண்டும் என்று சட்டம் நிர்ணயித்துள்ள ஒழுங்குமுறைப்படி கட்டடம் கட்டுவதில் நிறைய பிரச்னைகள் உண்டு. (ஒரு கட்டடத்திற்குள் வந்து போகும் மக்களின் நலனுக்காகவே இதுபோன்ற சட்ட கெடுபிடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் கவனிக்கவேண்டும்)

சென்னைத் தலைமைச் செயலகக் கட்டடத்திற்கும் இதேபோல் ப்ளான் அப்ரூவல் வழங்கப்பட்டிருக்கிறது. அது வழங்கப்பட்ட நாள் 8.3.2010 (அரசாணை எண் MS. NO: 54) ஹவுசிங் அண்ட் அர்பன் டெவலப்பிங் டிபார்ட்மென்ட் சார்பில் அரசாணை வெளியிட்டு தலைமைச் செயலகக் கட்டடத்திற்கான ப்ளானை அப்ரூவல் செய்திருக்கிறார்கள்.

எல்லாம் சரி. ஆனால் இந்த அரசாணை வழங்கப்பட்டு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது, 13.3.2010. அதாவது ஐந்து நாட்களில் அந்த ஏழு மாடி கட்டடத்தைக் கட்டி முடித்திருக்கிறார்களாம். நடந்தது என்னவென்றால், ப்ளான் அப்ரூவலுக்கு முன்பே அந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இது சட்டமீறல்.

இன்னும் கட்டுமானப்பணி நடக்கிறதென்றால், கட்டி முடிக்காத கட்டடத்தில் ஒரு மாநிலத்தின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஏற்கெனவே செயல்பட்டு வந்த கோட்டையிலிருந்து இவ்வளவு அவசரமாக காலி செய்து இங்கே பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த வேண்டிய காரணங்கள் என்ன? ப்ளானிங் அப்ரூவல் இன்றியே ஏழு மாடிக் கட்டடத்தை கட்டி முடிக்க இந்த அரசு சட்ட மீறலை செய்திருக்கிறது. அதுவும் சட்டங்களை இயற்றும் சட்டப் பேரவைக் கட்டடத்தைக் கட்டவே சட்டமீறல் என்றால், அவர்களுக்கு சட்டமியற்ற என்ன அருகதை இருக்கிறது. சட்டத்தை மீறும் இவர்கள் எப்படி சட்டப்படியான நியாயப்படியான அரசை நடத்த அருகதை பெற்றவர்கள் ஆவார்.

பழைய வாடகை கட்டடத்தில் இருந்து சொந்தமான கட்டடத்திற்கு சட்டப் பேரவையைக் கொண்டு வர வேண்டும் என்றால் முறைப்படி, சட்டப்படி உரிய அனுமதி பெற்று ப்ளான் அப்ரூவல் வாங்கி கட்டடம் கட்ட வேண்டியதுதானே. அதற்குள் அவசரம் வேண்டியிருக்கிறது. நாளைக்கே தீவிரவாதிகள் உள்ளே புகுந்து (மும்பை தாஜ் ஹோட்டல் போல்) தாக்குதல் நடத்தினால் இந்தக் கட்டடத்திற்கான உரிய வரைப்படம் (ப்ளான்) இல்லாமல் பாதுகாப்பு அதிகாரிகள் கையைப் பிசைந்து கொண்டு நிற்கத்தான் முடியும்.

(பி.கு) நள்ளிரவில் தன்னைக் கைது செய்து கொண்டுவரப்பட்ட சி.பி.சி.ஐ.டி அலுவலக
வளாகத்தை இடித்துத்தான் புதிய சட்டப் பேரவையைக் கட்டியிருக்கிறார், கலைஞர்.

அதேபோல் தன்னை அடைத்து வைத்திருந்த மத்திய சிறைச்சாலை புழலுக்குக் கொண்டு சென்று விட்டு, மத்திய சிறைச்சாலை கட்டடத்தை இடித்துத் தள்ளிவிட்டுத்தான் அந்த இடத்தில் அரசு மருத்துவமனைக் கட்டிக் கொண்டிருக்கிறார் என்பதையும் கவனிக்கவும்.

Tuesday, March 30, 2010

மர்மயோகி உங்கள் மூளையை சலவைக்குப் போடுங்கள்!

நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் என்றோ, பிரபாகரன் என் தலைவன்
என்றோ ஒருபோதும் சொல்லவில்லையே. ஏர்போர்ட்டில் குண்டு வைத்தது, சூளைமேட்டில் துப்பாக்கியால் சுட்டு கலவரம் ஏற்படுத்தியது, பாண்டிபஜாரில் துப்பாக்கி சண்டை நடந்தது என்னாமே உண்மைதான். ஆனால் அவற்றை தட்டிக் கேட்க வேண்டிய, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய (அதீத அதிகாரிம் படைத்திருந்த) இந்திரா (காந்தி) என்ன செய்து கொண்டிருந்தார்? அப்போதே ஏன் அவர்கள் மீது
நடவடிக்கை எடுக்கவில்லை? அப்படியென்ன அவருக்கு புலிகள் மீது அக்கறை. இந்திரா நடவடிக்கை எடுக்காததற்கு வைகோவும், ராமதாஸும், பழநெடுமாறனுமா காரணம்? (இந்த மூன்று பேரையும் கடுமையா எதிர்ப்பவன் நான்) இந்தியா என்ற ஏகாதிபத்திய நாடு, இலங்கை என்ற சிறிய நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த ஆயுதக் குழுக்களை உருவாக்கியது.


அதனால்தான் நம்முடைய சொந்த நாட்டில் அவர்கள் செய்த நீங்கள் குறிப்பிடும் சம்பவங்களை கண்டுகொள்ளவில்லை, இந்திரா. அதாவது சொந்த மக்கள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை, இலங்கையை மிரட்ட ஆயுதக்குழுக்கள் வேண்டும் என்று இந்தி(ரா)யா நினைத்தது தான் இதற்கெல்லாம் காரணம். இந்திரா விதைத்தார். ராஜிவ் தண்ணீர் ஊற்றி வளர்த்தார். அதன் அறுவடையை யார் செய்வார்கள்?

அடுத்து, ராஜிவின் அமைதிப்படை கொன்றுகுவித்தது, புலிகளையா? உண்மையில் அமைதிப்படை புலிகளால் விரட்டி அடைக்கப்பட்டனர். அமைதிப்படையினர் கொன்றொழித்தது, அப்பாவி மக்களைத்தான். குஜராத்தில் இருப்பவர்களும் மனிதர்கள், சீக்கியர்களும் மனிதர்கள்தான்.நான் மறுக்கவில்லையே. ராஜிவ் மற்றும் அவரோடு இறந்தவர்கள் மீது
பரிதாபப்படும் நீங்கள் ஏன் சீக்கியர்களுக்கு நியாயம் பேசமறுக்கிறீர்கள். நான் கேட்கிறேன், சிதம்பரத்தை செருப்பால் அடித்தானே ஒரு சீக்கியன். அப்படியொரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறதா? அந்த சம்பவத்துக்கு ஏன் எந்தக் காங்கிரஸ்காரனும் கொதித்தெழவில்லை. காரணம், சீக்கியன் என்ன செய்தாலும் சும்மா இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

ராஜிவ் படுகொலை பற்றி சுப்பிரமணிசுவாமி எழுதிய புத்தகத்தின் நகல் படிவம் என்னிடம் உண்டு. அதில் சோனியாவும், அவரது அம்மாவும் தான் ராஜிவை கொன்றவர்கள் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு இதுவரை எந்தக் காங்கிரஸ்காரனும் ஏன் கொதிக்கவில்லை. ஜெயின் கமிஷன் ராஜிவ் படுகொலை தொடர்பாக சுப்பிரமணியசுவாமி, காங்கிரஸ்தலைவர்கள் அர்ஜின்சிங், மார்க்ரெட் ஆல்வா உள்ளிட்டோரிடம் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் இன்னும் விசாரிக்கப்படவில்லையே ஏன்?

ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள். கொலையாளியாக இருந்தாலும், கொலை செய்யப்பட்டவன் குடும்பமாக இருந்தாலும் காதல், காமம் எல்லாம் வரும் போகும். அது பசி போன்ற ஓர் உணர்வு.


அடுத்து, ஏற்கெனவே உங்கள் பதிவுகளைப் படித்தேன். குஷ்புவை விபசாரி என்கிறீர்கள். (http://marmayogie.blogspot.com/2010/03/blog-post_27.html) கனிமொழியை அப்படி சொல்ல முடியுமா உங்களால்? அவரும் இதுபோல் பல கருத்துகளை தன் கவிதை மூலம் சொன்னவர்தான். அவரது தோழி சல்மா கவிதைகளைப் படித்திருக்கிறீர்களா? குஷ்பு சொன்னது தவறாக இருந்தால் அதற்கு அவர் மீது வழக்குப் போட இது என்ன தலிபான்கள் தேசமா? ஆக, நளினி குஷ்பு விஷயத்தில் நீங்கள் காட்டும் வெறுப்பு பற்றி கொஞ்சம் சுயபரிசோதனை செய்யுங்கள். (அதுசரி, குஷ்வுவைப் பற்றிய பதிவில் அவரது கவர்ச்சிப் படத்தை போட்டிருக்கிறீர்களே, குறைந்தது அரைமணி நேரமாவது செலவிட்டு அதை தேடி எடுத்திருப்பீர்கள், இல்லையா? அல்லது உங்கள் கணினியிலேயே வைத்திருந்த படமா?)


அசினுடைய கவர்ச்சிப்படத்தை உங்கள் பதிவில் போட்டுக் காட்டும் நீங்கள், (http://marmayogie.blogspot.com/2010/03/blog-post_24.html) மார்பகங்களை மோதவிடும் பாணியை கண்டுபிடித்தது குஷ்பு என்று எழுதியதைப் படித்து சிரித்தேன். அது ஒன்றும் குஷ்புவே இயக்கிய காட்சியா என்ன? நம்மைப் போன்ற ஆண் வர்க்கத்தின் வக்கிரம்தானே அது. பெரியார் மனைவியாக நடிக்கும் போதும் கூட குஷ்புவின் மார்பையே பார்த்துக் கொண்டிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் சிந்தனைகளை மறுஆய்வு செய்யுங்கள். ஏனென்றால் நளினி சிறையில் குழந்தை பெற்றதையே சமூகக் குற்றமாக்கும் உங்கள் மூளை சலவை செய்யப்பட வேண்டியது. நன்றி ....

Monday, March 29, 2010

நளினி விடுதலையை எதிர்க்கும் கருணாநிதி, கனிமொழிக்கு வணக்கம்...




நளினியை விடுதலை செய்ய முடியாது என்று தமிழக சென்னை, உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளது. கருணாநிதியிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? சோனியாவின் கோபத்துக்கு மட்டுமல்ல சோ, சுப்பிரமணிய சுவாமி போன்றவர்களின் கோபத்துக்கு ஆளாகி விடக் கூடாது என்பதும் கருணாநிதியின் இந்த முடிவுக்குக் காரணம். இந்தக் கருணாநிதியைத்தான் (பெயரிலேயே கருணை வேறு இருக்கிறது இந்த ஆளுக்கு) தமிழினத் தலைவர் என்று சிறப்புப் பெயரிட்டு அழைக்கிறார்கள்.

ராஜீவ் கொலையில் தொடர்பிருப்பதாக நளினி மீது சுமத்தப்பட்ட குற்றம். அது உண்மையாகவே இருக்கும் பட்சத்தில் நளினி இதற்காக அனுபவித்த சிறை தண்டனை அதிகம் இல்லையா? மிஷாவில் கஷ்டப்பட்டவன் என் மகன் என்று சொல்லி அவனை முதல்வராக்கும் கருணாநிதிக்கு சிறையின் கொடுமைகள் தெரியாதா?

மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் மூன்று ஊழியர்கள் கொலை செய்யப்பட்டார்களே அதற்குக் காரணமான குற்றவாளிகளை தண்டிக்காத அரசுதானே இந்த தமிழக அரசு. ஊழியர்களுக்கு ஒரு நியாயம்? ராஜீவுக்கு ஒரு நியாயமா? தங்கள் கட்சியைச் சேர்ந்த தா.கி. கொலையில் தொடர்புடையவர்கள் யாரென்று நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத தமிழக அரசு , ராஜீவ் கொலையில் சட்டப்படியே நடந்து கொள்கிறதாம்.

கருணாநிதி தனது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவர். தன் கண்முன்னால் ஓர் அபலைப் பெண் சிறையில் வாடுகிறாள். பெற்ற மகளைப் பிரிந்திருக்கிறாள். நளினியைப் போல் எத்தனை எத்தனை பேர் இதுபோல் மரண வேதனையோடு சிறையில் இருப்பார்கள். அவர்களுக்காக ஒரு துரும்பைக் கூட நகர்த்தி வைக்க இந்தக் கருணாவுக்கு மனசில்லை.

தனக்குப் பின் எல்லாமே ஸ்டாலின்தான் என்று தன் மகனை முன்னிலைப்படுத்த முடிகிற கலைஞரால் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வைக் காணமுடியவில்லையாம். அவர் மகள் கனிமொழி, ஜெயலலிதா ஆட்சி என்றால் இலக்கியவாதிகளுடன் இணைந்து மனித உரிமை பேசுவார். இப்போதோ உலக மயமாக்கலை யாராவது எதிர்த்துப் பேசினால் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் வள்வள் என்று விழுகிறாள். நளினி தன் மகளைப் பிரிந்து வாடுகிறாள். கருணாநிதி தனது வைப்பாட்டியுடன் சண்டை போட்டுக்கொண்டு, அந்த வீட்டுக்கு இரண்டு நாட்கள் போகவில்லை என்றதும் வரிந்து கட்டிக்கொண்டு செய்தி வெளியிட்ட (அதுவும் கருணாநிதிக்கு வலிக்காமல்) ஊடகங்கள் நளினி விடயத்தில் எங்கே போயின? நளினிக்காக பேச இங்கே யாருமே இல்லையா?

நளினி விடுதலையை ஆதரிக்கிறேன் என்று சொல்ல தி.மு.க.வில் ஒருவர் கூட இல்லை என்பதில் இருந்தே, அந்தக் கட்சியில் ஜனநாயகமும் இல்லை, ஜனநாயகவாதிகளும் இல்லை என்பது நிரூபணமாகிறது. நளினியை அவரது மகளோடு சேர்த்து வைக்க அப்படி ஒன்றும் சட்டம் ஒரு தடையாக இல்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் சட்டமே தமிழக அரசிடம் முடிவை கொடுத்துவிட்டு காத்திருந்தது. ஆனால் தமிழக அரசை வழிநடத்தும் இந்தக் கருணாநிதி எடுத்த முடிவு... அடத்தூ...

Friday, March 5, 2010

ஊடக அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்!




டெல்லியில் திரிவேதி சாமியார் இன்டர்நெட் மூலம் விபசார புரோக்கராக செயல்பட்டார் என்று வெளியான தகவல் வடஇந்தியா முழுவதும் பரவிக் கிடக்கிறது. ஆந்திரா, தமிழகத்தில் மற்றும் உலகம் முழுவதும் பிரபலமான சாமியார் கல்கி பகவான் ஆசிரமத்தில் அவருடைய பக்தர்கள் போதை மயக்கத்தில் ஒருவருக்கு ஒருவர் முத்தம் இட்டுக் கொண்டிருக்க அதை கண்கள் சொருகிய போதையோடு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருககிறார், கல்கி பகவான்.

இந்தக் காட்சி தெலுங்கு சேனலில் ஒளிப்பரப்பாக அவரது ஆசிரமம் அடித்து நொறுக்கப்பட்டு பரபரப்பாகிக்கிடக்கிறது. இந்நிலையில்தான் கர்நாடகம், தமிழகத்தில் மற்றும் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற பரமஹம்ச நித்யானந்த சுவாமி நடிகை ரஞ்சிதாவுடன் இருக்கும் அந்தரங்க வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை இங்கே ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையே உத்தரபிரதேச மாநிலத்தில் மஹராஜ் ஆசிரமத்தில் ஏற்பட்ட (அன்னதான) கூட்ட நெரசலில் சிக்கி 70 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கிறார்கள். மேற்கண்ட சம்பவங்கள் அனைத்துமே கடந்த ஒரு வாரத்துக்குள் நடந்தவை. இவைகளை எல்லாம் பொருத்திப் பார்த்தால் சந்தேகம் எழுகிறது.

அதுவும் பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் புத்தகத்தை அண்மையில் படித்து முடித்தில் இருந்து பன்னாட்டு நிறுவனங்கள் நம் கற்பனைக்கு எட்டாத அளவில் சதி வலைகள் பின்னுவதில் தேர்ந்திருக்கின்றன. அமெரிக்காவின் உளவு நிறுவனம் உலகம் முழுவதும் செய்த கொலைகள் எத்தனையோ மறைக்கப்பட்டிருக்கினறன என்று அந்த நூலின் ஆசிரியர் ஜான் பெர்கின்ஸ் கூறுவதை மேற்கண்ட சம்பவங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஏதோ சதி வேலை இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது அம்பலமாகிறது. நான் ஏதோ மேற்கண்ட சாமியார்களுக்கு வாக்காலத்து வாங்கவில்லை. ஆனால் இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் அம்பலமாகி ஊடகங்களின் பார்வையை குவிக்கச் செய்திருப்பதைத்தான் நான் சந்தேகத்தோடு நோக்குகிறேன். நடப்பு நாடாளுமன்றத்தில் இந்திய விவசாயத்தையே வேரோடு அழிக்கும் உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தை நிறைவேற்றப் போகிறார்கள். மக்களை விடுங்கள் இங்குள்ள எத்தனை ஆட்சியாளர்களுக்கு இதுபற்றி தெரியும்? (பார்க்க .இந்த இதழ் குமுதம் ரிப்போர்ட்டர்)
இந்தச் சட்டம் நிறைவேறினால் மரபணு மாற்றப்பட்ட விதைகளை எதிர்த்தால் ஓராண்டு சிறை, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்திய நிலங்களில் அமெரிக்க நிறுவனங்கள் விவசாயம் செய்யும். பணப்பயிர்களை விளைவித்து அவற்றை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும். இதன்மூலம் செயற்கையாக ஒரு பஞ்சத்தை உருவாக்கப் போகிறார்கள். இதுமட்டுமின்றி இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்திய அரசு அளித்துள்ள உறுதியின்படி 2011 ம் ஆண்டுக்குள் அமெரிக்க நிறுவனங்களுக்கு சாதகமான பல்வேறு சட்டங்களை நிறைவேற்றித் தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆம் நாம் எல்லாம் அமெரிக்க அடிமைகளாகிவிட்டோம்.

விடயத்துக்கு வருகிறேன். ஆகவே இப்படி வரப்போகிற நிறைவேற்றப்போகிற மக்கள் விரோத சட்டங்களையும், உர விலையை ஏற்ற மாட்டோம் ஆனால் உர நிறுவனங்கள் இஷ்டப்பட்ட படி விலைகளை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்கிற படு தேவடியாத்தனமான பட்ஜெட் அறிவிப்புகளையும் பெட்ரோல் டீசல் விலை உயர்வையும் கண்டு கொள்ளாமல் மக்களும், பத்திரிகைகளும் இருக்க வேண்டும். அதற்காக மேற்கண்ட சம்பவங்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என்பதே என்னுடைய அனுமானம். இதில் அமெரிக்காவின் விருப்பப்படி இந்து மதத் துவேசமும் அடங்கியிருக்கிறது (எனக்கு எந்த மதமும் கிடையாது). நான் இப்படி எழுதுவது இப்படியான ஒரு விவாதத்தைத் தொடங்கி வைக்கத்தான். யோசியுங்கள். விவாதியுங்கள். அமெரிக்கா போன்ற ஒரு நாடு தன்னுடைய நலனுக்காக உலகில் எத்தனையோ உயிர்களை பலியாக்கியிருக்கிறது என்பதை மனதில் நிறுத்தி என் சந்தேகத்தை ஆராயுங்கள்.

Thursday, March 4, 2010

குஷ்பு, நமீதா வரிசையில் கலைஞருக்குக் கோயில்! சிறுத்தைகளின் ஆசை...


திருச்சியில் நேற்று நடந்த கலைஞர் குடிசைமாற்று வாரிய தொடக்க விழாவில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ரவிகுமார், “கலைஞருக்கு கோயில் கட்ட வேண்டும். நாத்திகரான அவர் இதை விரும்பமாட்டார். அவருக்கு இதை செய்ய வேண்டும்” என்ற ரீதியில் பேசியிருக்கிறார் (ஆதாரம் நம்தினமதி நாளிதழ்)

இதைப் படித்து அழுவதா சிரிப்பதா என்றே எனக்குத் தெரியவில்லை.
வி.சி.கட்சியின் அறிவாளி, எழுத்தாளர் என்றெல்லாம் கூறப்படும் ரவிகுமார், அண்மையில்
எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான அருந்ததிராயைப் பற்றி வியந்து வியந்து ஆனந்தவிகடனில் கட்டுரை எழுதியிருந்தார். எளிமையான அருந்திராய் பற்றி அவர் எழுதியதைப் படிக்கும் போது ரவிகுமாரின எளிமையைப் பற்றி என்னால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. இருந்தபோதிலும் இப்போது அதுபற்றி நான் பேச வரவில்லை. அருந்ததிராயைப் புகழும் நீங்கள் பத்திரிகைகளில் ஆய்ந்து ஆய்ந்து கட்டுரைகள் எழுதும் நீங்கள் சமூக சீர்திருத்தத்தை எதிர்பார்க்கும் ரவிகுமார், கருணாநிதிக்குக்கோயில் கட்டுவதால் இந்த சமூகத்தில் என்ன மாறுதல் புரட்சி ஏற்பட்டு விடும் என்று கருதுகிறார்.

தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியை முன்னேற்றத்தை எதிர்நோக்கி சட்டப் பேரவைக்குள் நுழைந்த இவர் கருணாநிதிக்கு கோயில் கட்டச் சொல்வதில் அந்த மக்களின் முன்னேற்றத்தில் என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது. ரவிகுமார் அவர்களே, நீங்கள் ஒரு பேச்சுக்கு இதை சொல்வதாக இருந்தால் கருணாநிதியை இப்படி நக்கி (மன்னிக்கவும்) புகழ்வது எதற்காக? அதில் உங்களுக்குக் கிடைக்கும் லாபம் என்ன? குஷ்பு, நமீதாவுக்குக் கோயில் கட்டும் இந்தத் தமிழ்ச் சமூகத்தில் கருணாநிதிக்குக் கோயில் கட்டுவதில் என்ன தப்பு இருக்கிறது என்று நீங்கள் கேட்டால் அதற்கு என்னிடத்தில் பதில் இல்லை.
ஆனால், புத்தரைப் பற்றி, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் முன்னேற்றத்தைப் பற்றி சதா காலமும் சந்திக்கும் நீங்கள் கருணாநிதிக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று சொன்னபோது எனக்கேற்பட்ட உணர்ச்சியை அப்படியே சொல்வதென்றால், அடச்சீ....

Friday, February 26, 2010

விண்ணைத் தாண்டி வரவேண்டாம் ப்ளீஸ் கௌதம் மேனன்!


விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை நேற்று பார்க்க நேர்ந்தது. படம் ஆரம்பித்த போதே தெரிந்து விட்டது, இது வழக்கமான வழவழப்பான கௌதம் மேனன் படம் என்று. படத்தில் உதவி இயக்குநர் வாய்ப்புத் தேடுகிறார் கார்த்திக் (சிம்பு). மலையாள கிறிஸ்துவ குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டில் சிம்பு தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேல் போர்ஷனில் வீட்டு உரிமையாளர் வசிக்கிறார். அவரது மகள் தான் ஜெஸ்சி (த்ரிஷா) . இந்தப் படத்துக்கும் வாரணம் ஆயிரம் படத்துக்குமான ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்க முடிந்தவர்கள் படத்தின் டிக்கெட்டுடன் உடனடியாக விண்ணப்பித்தால் த்ரிஷாவுடன் ஒருநாள் தங்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று விளம்பரம் செய்யலாம்.

கௌதம் மேனன் நிறைய காதலித்திருக்கலாம். தன் காதல் அனுபவங்களை அவர் படமும் எடுக்கலாம். ஆனால் அதற்காக அடுத்தடுத்து எத்தனை படங்களில் ஒரே கதையைப் பார்ப்பது? சிம்புவை அழகாகக் காட்டியிருக்கிறார். த்ரிஷாவையும்தான். சென்னையில் இப்படியொரு தெரு இப்படியான மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள்? எதார்த்தத்தை விட்டு விலகியே நிற்கிறது இந்தப் படம். நான் ஏன் உன்னைக் காதலித்தேன் என்று சிம்புவும், நான் ஏன் உன்னுடன் ஓடி வரமாட்டேன் என்று த்ரிஷாவும் படம் முழுவதும் விளக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

இதெல்லாம் படத்தில் வெளிப்படையாகத் தெரியும் எரிச்சல்கள். ஆனால் கமுக்கமாக சில வேலைகளை தெரிந்தே செய்திருக்கிறார், கௌதம் மேனன். காக்க காக்க ஒளிப்பதிவாளர் என்ற கதாப்பாத்திரத்தில் கௌதம் மேனனின் படங்களில் வழக்கமாக வரும் ஒரு நடிகர் நடித்திருக்கிறார். என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே என்று நிஜ ஒளிப்பதிபாளர் ஆர்.டி.ராஜசேகர் கேட்காமல் விட்டால் ஆச்சரியம் தான். அந்தளவுக்கு அவரைப் போட்டுத் தாக்கியிருக்கிறார்கள். சிம்புவின் காதலுக்கு அவர் உதவுகிறார், உதவுகிறார், உதவுகிறார் உதவிக் கொண்டே இருக்கிறார். விளக்குப் பிடிக்காதது தான் பாக்கி என்று நினைத்தால் கடைசியில் தன் ஆடம்பரமான வீட்டை அவர்கள் தங்குவதற்குக் கொடுத்து அதையும் செய்துவிடுகிறார். உங்களுக்கு வேறு வேலையே இல்லையா ராஜசேகர்? இத்துடன், மலையாளிகளைத் தூக்கோ தூக்கென்று தூக்குகிறார், இந்த மேனன். கே.எஸ்.ரவிக்குமார் மூலம் தமிழ் இயக்குநர்களை திறமையற்றவர்கள் என்று காட்ட முயற்சிக்கிறார். (கே.எஸ்.ரவிக்குமார் ஆகச்சிறந்த படங்களை செய்துவிட்டார் என்று நான் சொல்லவில்லை) அமீர் உலகப் படமொன்றினை சுட்டுப் (யோகி) படம் எடுத்ததற்காக கோபித்துக் கொண்ட இதே கௌதம், டிரயில்டு என்ற ஆங்கிலப் படத்தில் இருந்து பச்சைக்கிளி முத்துச்சரத்தை அப்படியே சுட்டதை ஒப்புக் கொள்ளவே மறுக்கிறாரே ஏன்? மலையாளிகள் உசத்தி, தமிழர்கள் என்றால் கேவலமா? ஏதோ கேரளாவில் இருப்பவர்கள் எல்லாம் கையில் அரிவாளோடு சுற்றும் வீரர்கள் போலும் காக்க காக்க படத்தின் காமிரா மேன் அவர்களிடம் அடிவாங்கிக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வருவது போன்றும் காட்டியிருக்கிறார்.

இந்தக் கருத்துக்குள் எல்லாம் போகாமல் படத்தைப் பார்த்தாலும், ஒரே காமெடிதான். படத்திற்கு மூன்று கிளைமாக்ஸ். முடிந்து விடும், முடிந்து விடும் என்று எழ முயற்சி செய்தால் திடீரென பாட்டைப் போட்டு கொல்கிறார்கள். அடியே கொல்லுதே பாடல் போலவே இந்தப் படத்தில் மூன்று நான்கு பாடல்கள் வருகிறது. சென்னையில் காதலி சிரித்தால் அமெரிக்காவில் வெள்ளைக்காரிகளுடன் நடனம் ஆடுகிறார்.பாடுகிறார். கடவுளே.. கடைசியில் தன் காதல் தோல்வி வரலாற்றை ஜெஸ்சி என்ற பெயரில் படம் எடுக்கிறார்கள். வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொண்ட த்ரிஷா இயக்குநர் சிம்வுடன் அமர்ந்து அந்தப் படததைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறார். மொத்ததில் இயக்குநர் விக்ரமனுக்கும், கௌதம் மேனனனுக்கும் என்ன வித்தியாசம் என்றே புரியவில்லை. விக்ரமனுக்கு ஏற்பட்ட நிலைமை கௌதமனுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. திறமையான இந்தத் தமிழ் இயக்குநரிடம் நாம் நிறைய வித்தியாசமான படங்களை எதிர்பார்க்கிறோம்.

Wednesday, February 17, 2010

சீக்கியப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த காங்கிரஸ்காரர்கள்தான் பயங்கரவாதிகள்!



‘‘இந்திராகாந்தியைக் கொன்ற சீக்கியரை பஞ்சாபில் தியாகியாகக் கொண்டாடுகிறார்கள். அதை எதிர்க்கத் துப்பில்லாத தமிழக காங்கிரஸார், ராஜிவ் கொலை வழக்கில் கு ற்றம்சாட்டப்பட்டு, 19 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் நளினி போன்றோரை விடுதலை செய்யக் கூடாது என்று சொல்கிறார்கள்.இப்படிச் சொல்ல அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை’ என்று புதிய சூட்டைக் கிளப்பியிருக்கிறார்கள் இளந்தமிழர் இயக்கத்தினர்.

இதுகுறித்து இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருணபாரதியிடம் பேசினோம். முதலில் நளினி விவகாரம் பற்றிப் பேசினார் அவர்.

‘‘ஆயுள் தண்டனை என்பதை 14 ஆண்டுகள் என்று கிரிமினல் நடைமுறைச் சட்டம் வரையறை செய்துள்ளது. இந்த வரையறையை மீறி, தமிழக அரசு பத்தாண்டுக் காலம் தண்டனை அனுபவித்த எத்தனையோ ஆயுள் தண்டனைக் கைதிகளை தலைவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்துள்ளது. ஆனால், 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தும் கூட, ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி உள்ளிட்டோருக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. இதற்கு அரசியலைத் தவிர வேறு முறையான சட்டக் காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

நளினியின் மனமாற்றம், தாயின்றி வளரும் அவரது குழந்தை உள்ளிட்ட மனிதநேயக் காரணிகளை முன்வைத்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்.அவரை மட்டு மின்றி பத்தாண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். சிறை, மனிதர்களை மன மாற்றத்திற்கு உள்ளாக்கி திருத்த வே ண்டுமே தவிர, தண்டிப்பதற்கான சித்திரவதைக் கூடமாகிவிடக் கூடாது என்பதே எங்கள் இயக்கம் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளின் வேண்டுகோள்.

நளினியை விடுதலை செய்யக் கூடாது என்று சொல்ல தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாருக்குமே அருகதை கிடையாது. சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று சொல்ல இவர்கள் என்ன நீதிபதிகளா? நளினி விடுதலை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், நளினியை விடு விக்கக்கூடாது என்று
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றவர்கள் கூறுவது, நீதிமன்ற அவமதிப்பாகும்.

‘ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடையவராகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நளினிக்கு, அந்தக் கொலை நிகழ்த்தப்பட இருப்பது குறித்து பின்புதான் தெரியும்; தெரிந்த நிலையிலும் கூட அவரால் அதிலிருந்து விடுபட முடியாத சூழ்நிலை இருந்தது’ என்று நீதிபதி தாமஸ் அவ்வழக்கின் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரஸ் புத்திசாலிகள் யாராவது ஒருமுறையாவது படித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால், நீதிபதியின் தீர்ப்பை அப்படியே புறம்தள்ளிவிட்டு, அந்தத் தீர்ப்பை அவமதிக்கும் விதமாக, நளினிதான் ராஜிவ் காந்தியைக் கொலை செய்தார் என்பதுபோல் ஈ.வி.கே.எஸ். இள ங்கோவன் போன்ற தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சித்திரிக்கிறார்கள்.

நளினியை ‘தீவிரவாதி’ என்று, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து பேசி வருகிறார். நளினியா தீவிரவாதி? இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டபோது சீக்கியர்களைப் படுகொலை செய்து, சீக்கியப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த காங்கிரஸ்காரர்கள்தான் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்! அந்தச் சம்பவத்தை ஒருமுறை முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நியாயப்படுத்திக் கூட பேசியிருக்கிறார். கட்சிக்குள்ளேயே ஒற்றுமையைக் கடைப்பிடிக்கத் தெரியாமல் பதவி, பணத்திற்காக கோஷ்டிகள் அமைத்துச் சண்டையிடும் காங்கிரஸ்காரர்கள், தேச ஒற்றுமையைப் பற்றிப் பேசுவது கேலிக்கூத்து!

பல்கலை மாணவிகள் மூவரை உயிருடன் எரித்துக் கொன்றவர்கள், ரிமோட் குண்டு மூலம் சிவகங்கை தி.மு.க. நகராட்சித் தலைவர் முருகனைக் கொன்றவர்கள், முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, தா.கிருட்டிணன் போன்றவர்களைப் படுகொலை செய்தவர்கள், மதுரை தினகரன் அலுவலகத்தை எரித்து அங்கிருந்த மூன்று ஊழியர்களைக் கொன்றவர்கள் எல்லாம் இன்று கட்சி மற்றும் அரசுப் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள். சிலர் சமூக அந்தஸ்துடன் உலா வருகிறார்கள். அப்படியிருக்க யாரைப் பார்த்து தீவிரவாதி என்கிறார், இளங்கோவன்?

காங்கிரஸ்காரர்கள் ‘அன்னை’ என்று தங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை, அவரது பாதுகாவலர் பியாந்த் சிங் சுட்டுக் கொன்றார். அந்த பியாந்த் சிங்கை ‘வீரத்தியாகி’ என்று போற்றி எழுதி, பஞ்சாப்பில் உள்ள சீக்கிய மதப்பீடமான பொற்கோயிலில் அவரது உருவப்படம் வைக்கப்பட்டு ள்ளது. ‘1984-ம் ஆண்டு பொற்கோயில் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்கும் விதமாக, இந்திராகாந்தியைக் கொல்லும்போது உயிரிழந்த சீக்கிய வீரத்தியாகி, பியாந்த் சிங்’ என்று அந்தப் புகைப்படத்தின் கீழ் எழுதி வைத்திருக்கிறார்கள். பியாந்த் சிங் புகைப்படம் இந்த வாசகங்களுடன் பொற்கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் தகவல் எங்களுக்குக் கிடைத்ததும், எங்கள் இயக்கத் தோழர் ஒருவர் நேரில் சென்று பல தடைகளைத் தாண்டி அதைப் புகைப்படம் எடுத்து வந்திருக்கிறார். (அந்தப் புகைப்படத்தைக் காட்டுகிறார்)

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில் தொடர்புடையவர் என்கிற குற்றச்சாட்டுக்காக நளினியை வாழ்நாள் முழுவதும் சிறையில் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் துணிவிருந்தால், சீக்கிய மதப் பீடத்தின் இந்தச் செயலைக் கண்டித்து பியாந்த் சிங்கின் புகைப்படத்தை நீக்கக் கோரி ஓர் அறிக்கையாவது விட முடியுமா? அதற்கான துணிச்சல் அவர்களுக்கு இருக்கிறதா? சீக்கியர்களிடம் ஷூவால் அடிவாங்கியும் கூட, அவர்களுக்கு எதிராகப் பொங்காத இவர்கள், தமிழர்களுக்கு எதிராக மட்டும் குமுறுவது ஏன்? தமிழர்கள் என்றால் இளிச்சவாயர்களா? தமிழர்களின் தந்தை பெரியாரையே அவமதித்துப் பேசிவிட்டு இவர்கள் தமிழகத்தில் நடமாட முடியும் என்கிற நிலை இருக்கும் போது வேறு என்ன சொல்ல?

பொற்கோயிலில் வைக்கப்பட்டுள்ள பியாந்த் சிங்கின் புகைப்படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வாசகத்தையும் தமிழகம் முழுக்க எங்கள் இளந்தமிழர் இயக்கம் பரப்புரை செய்ய உள்ளது. நளினி விடுதலையை எதிர்க்கும் காங்கிரஸ்காரர்கள் முடிந்தால், அதைத் தடுத்துப் பார்க்கட்டும்!’’ என்று முடித்துக் கொண்டார் அருணபாரதி.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் பேசினோம். ‘‘நளினி ஒன்றும் சின்னப் பிள்ளை இல்லை. முருகன் உடனிருந்த தொடர்பில் பயங்கரவாத அமைப்புடன் ஐக்கியமாகி இளந்தலைவர் ராஜிவ்காந்தியை அவர் கொன்றிருக்கிறார். பஞ்சாப் பொற்கோயிலில் என்ன வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது.

தமிழக காங்கிரஸ்காரர்கள் தமிழகப் பிரச்னையில் மட்டும்தான் தலையிட முடியும். உலகில்(!) நடக்கும் பிரச்னைகளில் எங்களால் தலையிட முடியாது. இவர்கள் கேட்பது நளினியை எதிர்க்கும் நீங்கள், பின்லேடனை எதிர்ப்பீர்களா என்பது போல உள்ளது. பங்களாதேஷில் முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் தூக்கிலிடப்பட்டனர். அதனடிப்படையிலேயே நளினி விடுதலையை நாங்கள் எதிர்க்கிறோம்’’ என்றார் இளங்கோவன்.
- நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்