Tuesday, June 15, 2010

“என்ன கொடுமை இது ஞாநி?“ -தாமரை




9-6-2010 குமுதம் ஓ... பக்கங்களில் சீரழிவு என்று தலைப்பிட்டு ஞாநி எழுதியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சர்வதேச இந்திய திரைப்படக் கழகத்தின் (ஐஃபா) விருது வழங்கும் விழாவை வலியப் போய் கொழும்பில் நடத்துவதன் அரசியல் ஞாநிக்குப் புலப்படவில்லை போலும். தென் கொரியாவின் சியோலுக்கு உறுதியளிக்கப்பட்ட நிகழ்வை அவசர அவசரமாகக் கொழும்புக்கு மாற்றியது இனப்படுகொலையின் கரையை மறைத்து வெள்ளையடிக்கத்தான் (அல்லது மூவர்ணம் பூசத்தான்) என்பதே உண்மை!

கொழும்பு விழா வெறும் கலைவிழா அல்ல. காசேதான் கடவுளடா என்று கொலைக்களத்தில் சந்தை தேடிப் புறப்பட்டுள்ள இந்தியப் பெரு வணிகர்களின், பெரு முதலாளிகளின் (FICCI) ஆதாய வேட்டை விழா. பண்பாட்டுச் சீரழிவின் இருமுனைகள் (வணிகத் திரையும், வணிகக் கிரிக்கெட்டும்) இணைந்து பட்டுத் திரையிட்டுப் படுகொலைகளை மறைக்கும் விழா என்பதெல்லாம் ஞாநிக்குத் தெரியாததா?
‘சிலருடைய மிரட்டல் அரசியல்‘ என்கிறார் ஞாநி. ‘குருதி பிசுபிசுக்கும் கொலைக்களத்தில் கூத்துக் கும்மாளமா? தடுக்க வேண்டும் தமிழ்த் திரையுலகம்‘ என்று தமிழ்த் திரைத்துறையினருக்கு வேண்டுகோள் வைத்து முன்கை எடுத்த என் போன்றோருக்கு அரசியல் ஏதுமில்லை. மனிதஉரிமை, மக்கள் பிரச்னை, தமிழர்நலம் தவிர வேறெந்த அரசியலும் நான் செய்கிறேனோ என்று ஞாநி சொல்லட்டும்! நாங்கள் எப்போது யாரை மிரட்டினோம் என்று விளக்கட்டும்! அறப்போராட்டங்களுக்கு மிரட்டல் என்று பெயர் சூட்டலாமா?

ஓராண்டு முன்னால் ஏராளமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு ராஜபக்சேயின் இனவெறி அரசியலை காரணம் என்பதை மறைத்து பழியில் பாதியைப் புலிகள் மீது சுமத்துகிறார், ஞாநி. என்ன கொடுமை இது? தாக்குகிறவனையும், தாக்கப்படுகிறவனையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுகிற மகா அறிவாளிகளின் பட்டியலில் ஞாநியும் சேர்ந்துவிட்டாரா?
ஒரு லட்சம் மக்களைக் கொன்று இனப்பேரழிப்பை நடத்தியவர், ராஜபக்சே என்று உலகமே அறியும். விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் தமிழ்மக்களை இனஅழிப்பிலிருந்து காப்பாற்ற இயன்ற வரை போராடித் தோற்றார்கள். அவர்கள் தங்கள் ஆயுதங்களை மவுனித்தப் பின்புதான். முள்ளிவாய்க்காலில் முழுப் பேரழிவு நடந்தது என்பதை ஞாநியின் மனசாட்சி அறியாமலிருக்காது.
‘கொடூரங்கள் முடிந்து ஓராண்டு கழிந்தது‘ என்கிறார் ஞாநி. ஓராண்டு என்ன நூறாண்டு ஆனாலும் இந்தக் காயம் ஆறாது. இனக்கொலை புரிந்தவர்களைக் கூண்டில் ஏற்றி தண்டிக்கும் வரை, தமிழ்மக்களுக்கு அவர்கள் விரும்பும்படியான அரசியல் தீர்வுகிட்டும் வரை பன்னாட்டுச் சமூகம் எல்லா வகையிலும் கொழும்பு அரசைத் தனிமைப்படுத்தக் கோருவோம். இந்த நோக்கங்களை அடைவதற்கு சிங்கள மக்களும் ஆதரவு தர வேண்டுவோம்.
இந்த ஐஃபா விழாவைக் கராச்சியிலோ இஸ்லாமாபாத்திலோ இந்திய நட்சத்திரங்கள் நடத்துவார்களா என்று ஞாநி கேட்டுச் சொல்லட்டும்!
சிங்களவர்கள் கண்தானம் செய்வதைப் பாராட்டுகிறார், ஞாநி. வெலிக்கடை சிறையில் குட்டிமணி, தங்கதுரையின் கண்களைப் பிடுங்கிப் போட்டு காலில் மிதித்த சிங்களக் காடையர்களின் இனவெறிக்கு முன்னால் எத்தகைய தானமும் எடுபடாது என்பதைப் புரிந்து கொள்ளட்டும்!

ஞாநி போகிற போக்கைப் பார்த்தால், ‘மிரட்டலுக்கு அஞ்சாமல் கொழும்பு கொலை விழாவில் கலந்து கொண்ட ‘விவேக் ஓபராய்‘வுக்கு இந்த வாரப் பூச்செண்டும், இராஜபக்சேயின் அன்பான அழைப்பை நிராகரித்த நமீதாவுக்கு இந்த வாரத் திட்டும் தருவார் என எதிர்பார்க்கலாம். எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலையோடு பேசுவது போல் பாசாங்கு செய்யும் ‘போலிநீதிபதி‘களுக்குரிய ‘நரிநாட்டாமை‘ ஞாநிகளுக்கு அழகில்லை.

No comments:

Post a Comment