Showing posts with label ஜூனியர்விகடன். Show all posts
Showing posts with label ஜூனியர்விகடன். Show all posts

Saturday, August 28, 2010

ஜூனியர் விகடனிடம் அடைக்கலமாகும் தினமலர்!



ஜூனியர் விகடன் விவகாரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் ஒன்றாக இணைந்து அழகிரி ஆதரவாளர்களுக்கு எதிராக களம் இறங்கியிருப்பது ஆக்கப் பூர்வமான ஆரம்பம். தினகரன் ஊழியர்கள் மூன்று பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தினகரன் நிர்வாகம் அடித்த அல்தர் பல்டிக்கு இது ஒரு பாடம்.

ஜூனியர் விகடன் விவகாரத்தில், அண்மையில் முதல்வரை சந்தித்த பத்திரிகையாளர்கள் குழு, தினமலர் செய்தி ஆசிரியர் (உண்மையில் அப்படியொரு பதவி தினமலரில் யாருக்கும் தரப்படுவதில்லை) லெனின் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று கோரியிருந்தார்கள்.தினமலர் மீது ஏன் வழக்குத் தொடரப்பட்டது, எதற்காக லெனின் கைது செய்யப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

நடிகை புவனேஸ்வரி கைது விவகாரத்தைத் தொடர்ந்து பாலியல் தொழில் செய்யும் நடிகைகளின் பட்டியலை தினமலர் வெளியிட்டது. ரஜினி உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையுலகமும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க அதிர்ந்து போன தினமலர் மறுநாள் வருத்தம் தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட நடிகைகள் சார்பில் ஒட்டுமொத்த நடிகர்களும் இணைந்து தினமலருக்கு எதிராகப் புகார் கொடுக்க தினமலர் உரிமையாளர்கள் பதுங்கிக் கொண்டு, லெனினை போலீசில் காட்டிக் கொடுத்தார்கள். லெனினும் கைது செய்யப்பட்டார்.

இதில் பலருக்கும் தெரியாத ஓர் உண்மை மறைக்கப்பட்டது. அப்படியொரு செய்தியை ஆதாரமின்றி வழங்கியதற்காக செய்தியாளர் விஜய் என்பவர், உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இப்போது திருச்சி காலைக்கதிரில் அவர் வேலை பார்க்கிறார். இதை மறைத்துவிட்டு, அந்தச் செய்தியில் என்ன தவறு இருக்கிறது என்கிற பிரசாரத்தில் இறங்கிய தினமலர், தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்களை (நயவஞ்சகமாக) ஒன்று திரட்டி நடிகர் நடிகைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அந்த நேரத்தில் நடிகர் நடிகைகளும் ஒட்டுமொத்த பத்திரிகை உலகையே கொச்சைப்படுத்தி பேசிய பேச்சும், அனைத்து பத்திரிகையாளர்களையும் கோபம் மூட்டியது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த லெனின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இப்போது அவர் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வரிடம் கோரியிருக்கிறார்கள். முதல்வரோ, “குடும்பத்துடன் வாழும் பெண்களைப் பற்றி இஷ்டத்துக்கு அவதூறாக எழுதியது சரியா? சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரிலேயே நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அவர்களிடம் பேசித்தான் முடிவு எடுக்க முடியும்” என்று மிகச் சரியாகப் பேசியிருக்கிறார்.

தினமலர் அந்த வழக்கிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைத்தால் சம்பந்தப்பட்ட அந்த நடிகைகளிடம் போய், மன்னிப்புக் கேட்டு வழக்கை திரும்பப் பெற கோர வேண்டும். அதைவிடுத்து குறுக்கு வழியில் முதல்வரிடம் முறையிட்டு அதுவும் ஜூனியர் விகடன் விவகாரத்தை சாக்காக வைத்து ஆதாயம் தேட நினைப்பது கோழைத்தனம்.

ஜூனியர் விகடன் ஆளும் கட்சியில் அதிகாரத்தில் இருப்பவர்களின் அடாவடித் தனத்திற்கு எதிராக செய்தி வெளியிட்டு அதற்குக் கிளம்பிய எதிர்ப்பை மிக நேர்மையாக சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நடிகைகள் பாலியல் தொழில் செய்வதாக எந்த ஆதாரமும் இன்றி அந்த நடிகைகளின் புகைப்படத்துடன் (வாடிக்கையாளர்களிடம் படுப்பதற்கு அவர்கள் வாங்கும் தொகையையும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள்) செய்தி வெளியிட்டது எந்த வகையில் பத்திரிகை தர்மத்துக்கு உகந்தது?

பத்திரிகை சுதந்திரம் என்ற போர்வையில் ஜூனியர் விகடனுடன் தன்னை இணைத்துப் பார்க்கும் தகுதி தினமலருக்கில்லை. பத்திரிகை சுதந்திரத்தை தமிழர்களுக்கும், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கும், தலித்களுக்கும் எதிராக தினமலர் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. தினமலருக்கு தைரியம் இருந்தால் அந்த வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்கட்டும். அப்படி சந்தித்தால் ‘சந்தி சிரித்துவிடும்!‘