
திரையரங்குக்குள் தின்பண்டம் கொண்டுசெல்வதை திரையரங்கு நிர்வாகம் தடுப்பது முறையல்ல என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. யாரோ ஒரு புண்ணியவான் தொடர்ந்த பொதுநல வழக்கால் மக்கள் தங்களுடைய உரிமையை உணர்ந்திருக்கிறார்கள். சினிமாவில் அநியாயத்துக்கு எதிராகப் பொங்கும் ஹீரோக்கள், திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்காதீர்கள் என்று பொதுமக்களிடம் கெஞ்சுவார்கள். ஆனால் திரையரங்கு நிர்வாகத்தின் கொள்ளை லாபம் பற்றி எல்லாம் வாய் திறக்கவே மாட்டார்கள். உண்மையில் அவர்களால் அது பற்றி பேசவே முடியாது. திரையரங்கு உரிமையாளர்களுக்கும் படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இடையே கமுக்கமான உடன்பாடு உண்டு.
அது பற்றி பார்ப்போம். சுறா படத்துக்கு 5 கோடி சம்பளம் வாங்கிய விஜய் அடுத்த படமான காவலனுக்கு 7 கோடி வரை சம்பளம் வாங்கியதாக சொல்கிறார்கள். இத்தனைக்கு சுறா படம் படுதோல்வி. பிறகு எப்படி இது சாத்தியமானது என்கிறீர்களா? இதற்கு மினிமம் கியாரண்டி என்ற வியபார உத்திதான் காரணம். அதாவது தயாரிப்பாளர்கள் தங்களுடைய படத்தை திரையரங்குகளுக்கு குறிப்பிட்ட விலை வைத்து கொடுத்துவிடுவார்கள். அதில் நட்டம் ஏற்பட்டால், அதுபற்றி தயாரிப்பாளர்களுக்குக் கவலை இல்லை. லாபம் கிடைத்தால் அதில் தயாரிப்பாளர்களுக்கு பங்கு தரவேண்டும் என்பதுதான் இந்த மினிமம் கியாரண்டியில் உள்ள சூட்சமம்.
ரஜினி, கமல், அஜித், விஜய், (இப்போது சூர்யாவும்) போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் மினிமம் கியாரண்டியில் வியாபாரம் செய்யப்படுகிறது. வேட்டைக்காரனை விட அதிக விலைக்கு சுறாவையும் சுறாவை விட அதிக விலைக்கு காவலனையும் திரையரங்கு உரிமையாளர்கள் வாங்கியாக வேண்டும். எனவேதான் நடிகர்கள் படத்துக்குப் படம் தங்கள் சம்பளத்தை உயர்த்திக் கொள்ள முடிகிறது.
திரையரங்கு உரிமையாளர்களும் டிக்கெட் விலையை உயர்த்தியும், ப்ளாக்கில் விற்பது மூலம் கிடைக்கும் கமிஷன், கேண்டீன், பார்க்கிங் வசூல் ஆகியவை மூலமும் லாபம் பார்த்து விடுகின்றனர். நடிகர்கள், தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறது. அதன்படி, திரையரங்குகளில் டிக்கெட் விலையை எவ்வளவு உயர்த்தி விற்றாலும் அது பற்றி யாரும் கேள்வி கேட்கக் கூடாது. திரையரங்கு உரிமையாளர்கள் ஆட்சியில் இருப்பவர்களையும் கவனித்து விடுவதால் அவர்களின் அத்துமீறல்கள் கவனிக்கப்பட மாட்டாது. அண்மையில் அபிராமி மால் (மல்டி ஃபிளக்ஸ்) திரையரங்கு தரம் உயர்த்தப்பட்ட போது அதை திறந்து வைத்தவர், நமது முதல்வர்! அங்கு குறைந்த பட்ச டிக்கெட் விலை 100.
அரசும் ஹீரோக்களும் திரையரங்குகளின் அத்துமீறல்களுக்கு எதிராக நிச்சயம் எதுவும் செய்யப் போவதில்லை. எனவேதான் சொல்கிறேன் எல்லோரும் திருட்டு வி.சி.டி.யில் மட்டும் படத்தைப் பார்த்து ரசியுங்கள். திரையரங்கு பக்கம் வரவே வராதீர்கள்.அதுதான் சரி.. என்று எனக்குப் படுகிறது!