Sunday, November 21, 2010

மனம் திறக்கிறேன்...!



சரிகாஷா என்ற பெயரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். ஈவ் டீசிங்-க்கு எதிராக சட்டப்பேரவையில் தனிச்சட்டம் கொண்டுவரக் காரணமான பெண். வன்பகடிக்கு தன் உயிரையே பறிகொடுத்தவள். அந்தக் காலகட்டத்தில் எங்கு திரும்பினாலும் சரிகாஷாதான். ஒரு பெண்ணின் மரணம் தமிழகத்தில் இந்தளவுக்கு இதற்கு முன்பு பேசப்பட்டிருக்குமா என்பது சந்தேகம் தான். இதற்கு என்ன காரணம்?

அந்தச் சம்பவம் நடந்ததும் சரிகாஷாவின் முகம் பத்திரிகைகளில் வெளியானது. ஈவ் டீசிங் பற்றி அப்போது யார் பேசினாலும் அந்த முகம் ஞாபகம் வந்து போகும் அளவுக்கு அழகு வடியும் முகம் அந்தப் பெண்ணுக்கு. குமரி மாவட்டத்தில் ஈவ் டீசிங்கிற்கு சரிகாஷாவுக்கு முன்பும் பின்பும் பல இளம் பெண்கள் பலியானார்கள். பாதிக்கப்பட்டார்கள். ஆனாலும் சரிகாஷாவுக்குக் கிடைத்த அனுதாபமும் கவனிப்பும் அவர்களுக்கெல்லாம் கிடைக்கவில்லை.

அதே குமரி மாவட்டத்தில் என்று நினைக்கிறேன், காதலிக்க மறுத்த அக்காள் தங்கை மீது ஆசிட் ஊற்றப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பணஉதவி அளித்த கதையெல்லாம் கூட நடந்தது. அந்தப் பெண்களின் முகமோ, பெயரோ நமக்கு இப்போது ஞாபகமில்லையே?

‘சிகப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்‘ என்ற வடிவேலு டைலாக்கை இந்த இடத்தில் ஞாபகப்படுத்துவது சரியாக இருக்கும் . பாதிக்கப்படும் பெண்கள் அழகாக இருந்துவிட்டால் அவர்கள் எப்போதும் கூடுதல் கவனத்தைப் பெறுவார்கள் என்பதை யாராவது மறுக்க முடியுமா? பத்திரிகைகளும் அழகான பெண்கள் என்றால் அவர்களின் புகைப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பத் திரும்ப பிரசுரிக்கத் தயங்கியதில்லை. சரிகாஷா விஷயத்திலும் அதுதான் நடந்தது.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். செங்கற்பட்டில் சாலையோரம் கட்டுமானத் தொழிலாளர்கள் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு தொழிலாளியின் பெண் குழந்தையை தூங்கிச் சென்ற அவ்ர்களில் ஒரு காமுகன், அந்தக் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து அங்கிருந்த பாறையில் அடித்துக் கொண்டிருக்கிறான். பின்னர் ஒன்றும் தெரியாதவன் போல் வந்து அதே இடத்தில் படுத்துக் கொண்டான். அடுத்த நாள் அவனும் அந்தக் குழந்தைகயை தேடுவது போல் நடித்திருக்கிறான். குழந்தையின் சிதைந்த சடலம் கிடைக்க போலீஸ் விசாரணையில் அந்தக் காமுகனும் சிக்கினான்.

இப்போது அனேகமாக அவன் சிறையில் இருப்பான் என்று நினைக்கிறேன். இந்தச் செய்தி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? எத்தனை பத்திரிகைகள் அது பற்றி எழுதின. அந்தக் குழந்தையின் இறுதி ஊர்வலத்தில் செங்கற்பட்டு மக்கள் கூட்டமாக கலந்து கொள்ளவில்லையே ஏன்?

ஒரே நேரத்தில் கட்டுமானத் தொழிலாளியும் ஜவுளிக்கடை நடத்தும் பணக்கார மார்வாடியும் தங்கள் குழந்தைகளைக் காணவில்லை என்று காவல் துறையினரிடம் புகார் கொடுக்கச் சென்றால் யாருடைய புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்? மார்வாடி போலீஸ்காரர்களை தன்னுடைய சொந்தக் காரில் உட்காரவைத்து குழந்தையைத் தேடிச் செல்வான். கட்டுமானத் தொழிலாளி? இதுதானே யதார்த்தம்!

கோவை சம்பவத்திலும் இதேதான் நடந்தது. மார்வாடி, பணக்காரனும் கூட. காணாமல் போன அந்தக் குழந்தைகளின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டன. கோவை மக்களின் ஒட்டுமொத்த அனுதாபமும் கவனிப்பும் அந்தக் குழந்தைகளின் மீது விழுந்தன. அவர்களின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்களும் கலந்து கொண்டனர். அந்த அனுதாபம் கொலையாளி மீது வெறுப்பாக மாறியது.

மார்வாடிகளின் கோரிக்கை போலீசின் காதுகளில் விழும். அவர்கள் என்ன தொழிலாளிகளா இல்லை தங்கள் உரிமைக்காகப் போராடும் பாட்டாளி வர்க்கமா? பணக்கார மார்வாடிகள் ஆயிற்றே. அவர்களுக்கு உடனடியாக நீதி கிடைக்கச் செய்ய வேண்டும், என்பதற்காக நடத்தப்பட்டதுதான் அந்த என்கவுன்டர். (இதில் நடந்த ஒரு நன்மை என்னவென்றால், என்கவுன்டர்கள் எல்லாம் ஜோடிக்கப்பட்டவைதான் என்பதை அனைத்துத் தரப்பு மக்கள் உணர்ந்துவிட்டார்கள்)

போலீஸார் சொந்த லாபமின்றி இதைச் செய்திருக்க மாட்டார்கள். மார்வாடிகள் அவர்களை ‘கவனித்து’ விட்டார்கள் என்று எனக்கு வரும் செய்திகள் சொல்கின்றன. என்கவுன்டரில் கொல்லப்பட்ட வெங்கடேசப் பண்ணையாரின் மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து, மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தது, நாடார் ஓட்டு வங்கிக்காகவே. இப்போது மார்வாடிகளின் ஓட்டு வங்கியைக் குறிவைத்து இந்த என்கவுன்டர் நடத்த அரசும் அனுமதி அளித்திருக்கிறது. இல்லை என்றால் சட்டப்பேரவை கூடும் நேரத்தில் இப்படியொரு என்கவுன்டர் நடத்த அனுமதி கிடைத்திருக்காது.

ஓர் அரசின் ஓட்டு அரசியலையும் அந்த அரசுக்காக இயங்கும் காவல்துறையின் அடவாடித் தனத்தையும் புரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக கோயமுத்தூர் காரர்களும், உணர்ச்சிவயப்பட்ட பலரும் அவர்களை ஆதரிக்கிறார்கள். போலீஸ்காரர்களிடம் நியாயத்தை எதிர்பார்ப்பதும் அவர்கள் நியாயமாக நடந்திருப்பார்கள் என்று நம்புவதும் ஆபத்தானது. அவர்கள் என்றைக்குமே அரசின் அடையாட்கள்.. பணக்காரர்களின் வேலையாட்கள்... எங்காவது விதிவிலக்காக சிலர் இருக்கலாம். மேற்கு மண்டல ஐ.ஜியாக இருந்த சுப்பிரமணி உண்மையிலேயே மனிதாபிமானம் நிறைந்த ஒரு காவல் அதிகாரி. ஆனால் ஒட்டுமொத்த காவல் துறையையும் அவரை வைத்து மதிப்பிட முடியாது.

அந்தக் குழந்தைகளை கொன்ற கொடூரனுக்குத் தேவை மனநல சிகிச்சை அல்லது சிறை தண்டனை. அதைவிடுத்து இந்தத் தண்டனை சரியென்றால், டிவி ஷோக்களில் சின்னஞ்சிறிய குழந்தைகளுக்கு ஆபாசமாக ஆடை அணிவித்து ஆடவைத்து அழகு பார்க்கும் பெற்றோர்களையும் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் அதை ரசிக்கும் பார்வையாளர்களான நம்மையும் என்கவுன்டர் செய்யலாம் தப்பில்லை....

1 comment: