Sunday, November 14, 2010

மலையாளிகளுக்கு ஓணம்! மார்வாடிகளுக்கு என்கவுன்டர்!!-ஒரு கோணல் பார்வை

மோதல் சாவு, அதாங்க என்கவுன்டர். சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றம் கூடும் தருணத்தில் மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, இந்த முறை பயன்பட்டது கோவையில் நடந்த மோகன கிருஷ்ணனின் என்கவுன்டர் சாவு.

கடந்த மாதம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும் ஈர்த்த விவகாரம், இரண்டு பள்ளிக் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டது. சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து அந்தச் சிறுமியையும் அவளது சகோதரனையும் கொன்ற மகிழுந்து ஓட்டுநர் மோகன கிருஷ்ணன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வழக்கம் போல் அதற்கென புனையப்பட்ட கதைகளுடன் இந்த என்கவுன்டர் நடந்து முடிந்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான பொதுமக்கள், காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஏகோபித்த ஆதரவளித்துள்ளனர். இதை எதிர்பார்த்துதான் இந்த என்கவுன்டரும் நடந்திருக்கிறது. என்கவுன்டர் நடத்திய கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபுவை பூங்கொத்துடன் சென்ற பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.

இந்த என்கவுன்டர் பற்றி நாளிதழ்களில் செய்திகள் வெளியான அதே நாளில் டென்னீஸ் வீராங்கனையும் பள்ளி மாணவியுமான ருசிகா மானபங்க வழக்கில் ஹரியாணா முன்னாள் டிஜிபி ரத்தோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட செய்தியும் வெளியாகியிருந்தது. ரத்தோரின் பாலியல் கொடுமையால் அந்த மாணவி 1990-ல் தற்கொலை செய்து கொண்டார். ருசிகா வழக்கில் கீழ் நீதிமன்றத்தால் ரத்தோருக்கு ஆறு மாதம் (!) தண்டனை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து ருசிகாவின் பெற்றோர் உயர்நீதிமன்றம் சென்றனர். அங்கே தண்டனைக் காலம் 18 மாதங்களாக அதிகரிக்கப்பட்டது. கோவை மாணவிக்கு இருந்த நியாயங்கள் அனைத்தும் ருசிகாவுக்கும் உண்டு என்றால் ரத்தோர் இன்னும் உயிருடன் நடமாட என்ன காரணம்?

காவல்துறையினரால் மோதல் சாவில் கொல்லப்படுபவர்கள் எல்லாம் கொடுங்குற்றவாளிகள் என்றே வைத்துக் கொண்டாலும், அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறையினரால் என்கவுன்டரில் கொல்லப்பட்ட வெங்கடேசப் பண்ணையாரின் மனைவிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும், இந்திய அரசின் உள்துறை இணை அமைச்சர் பதவியை தி.மு.க. பெற்று தந்ததை எந்த வகையில் சேர்ப்பது? என்கவுன்டர் செய்யப்பட்ட வீரப்பன் விவகாரத்திலும் அ.தி.மு.க.வின் நிலைப்பாடும், தி.மு.க. நிலைப்பாடும் நேர் எதிராக இருந்ததை இங்கே கவனிக்க வேண்டும்.

குற்றவாளிகளில் தங்களுக்குப் பிடிக்காதவர்களையும், தங்களுக்கு எதிரானவர்களையும் மட்டுமே என்கவுன்டர் செய்வதை இந்த அரசுகள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. என்கவுன்டர் என்பதே குற்றத்தை குறைக்கும் அரசின் எண்ணமாக அதை ஆதரிப்பவர்களால் பார்க்கப்படுகிறது. உண்மையில் அரசுக்கு அப்படியொரு எண்ணம் இல்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை.

கோவை நிகழ்வைப் பொறுத்தவரையில், கடத்திக் கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மார்வாடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கோவையில் மார்வாடி உள்ளிட்ட வட இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், துணி-நகை உள்ளிட்ட பணம் கொழிக்கும் முக்கிய வர்த்தகங்களில் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதையும் மறுக்க முடியாது.

பணத்துக்காக அந்தக் குழந்தைகளை கடத்திக் கொலை செய்த நிகழ்வு கொடூரமானதும், தண்டிக்கத்தக்கதும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் யாருக்கும் இல்லை. நேரடியாகப் பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பமும் அவர்களின் உறவினர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மக்களுமே அந்தக் குழந்தைகளுக்காக கண்ணீர் வடித்தனர். அதுதான் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்தியிருக்கிறது. எதையும் ஓட்டுகளாக்கி விட வேண்டும் என்று நாக்கைத் தொங்க விட்டு அலையும் கருணாநிதி அரசு, அந்தக் குழந்தைகளுக்காக எழுந்த அனுதாபத்தையும் நாசுக்காக பயன்படுத்திக் கொண்டது.

அதாவது, மார்வாடிகளின் வாக்குகளைக் குறிவைத்தே இந்த என்கவுன்டர் நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்கு கோவைக்கு வந்த கருணாநிதி, அங்கே பெரும்பான்மையாக வாழும் கேரள மக்களின் வாக்குகளை குறிவைத்து ஓணம் பண்டிகைக்கு அரசு விடுமுறை அளிப்பேன் என்று வாக்குறுதியளித்து அதை நிறைவேற்றினார். மலையாளிகளுக்கு ஓணம் என்றால் இந்திக்காரர்களுக்கு என்கவுன்டர்!

சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற அவை கூடும் போது இப்படியொரு என்கவுன்டர் நடத்தியிருப்பதையும் கவனிக்க வேண்டும். விலைவாசி, ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற விவகாரங்களில் இருந்து மக்களை திசை திருப்பவும் இந்த என்கவுன்டர் உதவும் என்று கங்காணி கருணாநிதி அரசு நினைத்திருக்கலாம். என்கவுன்டர் என்பது மனித உரிமை மீறல் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்க, என்கவுன்ட்ர் என்பதே வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆயுதம் என்று கருணாநிதி சிரித்துக் கொண்டிருக்கிறார். தமிழன் கொத்துக் கொத்தாக செத்தாலும் பதவி போதும் என்று பக்குவமாக நடந்து கொண்ட கருணாநிதியிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

No comments:

Post a Comment