Sunday, December 25, 2011

நற்குணங்களை மலையாளிகளிடம் கற்றுக் கொள்ளுங்கள் தமிழர்களே…

“தமிழன் ஒன்றொரு இனமுண்டு. தனியே அவனுக்கொர் குணமுண்டு” என்ற வரிகளை இப்போதுதான் சரியாக புரிந்து கொண்டிருக்கிறேன். அப்படி என்ன குணம் இவனுக்கு இருக்கிறது?
சக தமிழன் யாராவது முன்னேறினால் அவனது காலைப் பிடித்து இழுத்து கீழே விடுவது, சக தமிழன் மீது பொறாமையில் பொங்குவது, இன உணர்வும், மொழி உணர்வும் இருப்பதாக மார் தட்டிக் கொண்டு மேற்படி உணர்வுகளை சொந்த நலனுக்காக விற்பது? இதெல்லாம் தான் தமிழனின் குணங்களாக இருக்கிறது. அறிவை வளர்த்துக் கொள்ளாமல் எல்லாம் தெரிந்தது போல், வெற்று வார்த்தைகளால் பீற்றிக் கொள்வது தமிழனின் கூடுதல் பெருமை!
தமிழர்களின் வசைகளுக்கு இன்று ஆளாகியிருக்கும் மலையாளிகளுக்கு மேற்படி குணங்களில் ஒன்றாவது இருக்கிறதா என்று, என் அனுபவ அறிவைக் கொண்டு யோசிக்கிறேன். ‘ம்ம்ஹும்’. மலையாளிகளிடம் தமிழனிடம் இருக்கும் மேற்படி குணங்களில் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சும்மா, ஏதோ விரக்தியில் இப்படி எழுதுகிறேன் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். எதையும் ஆதாரத்துடன் பேசுவதுதான் எனக்குப் பிடிக்கும்.
அந்த ஆதாரங்களை பட்டியல் போட்டு விளக்கியிருக்கிறேன். இதைப் படித்து விட்டாவது தமிழன்-மலையாளி இவர்களில் உயர்த்தவர் யார் என்பதை புரிந்து நடந்து கொள்ளுங்கள். இந்த வித்தியாசத்தை தஞ்சாவூர் கல் வெட்டு அருகில் வைத்து உட்கார்ந்து கொண்டால் நமக்குப் பின்னாடி வரும் சந்ததியினரும் பார்த்துப் புரிந்து நடந்து கொள்வார்கள்!



(க்ளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கவும்)

இந்தப் பட்டியலில் சேர்க்க மறந்த இன்னொரு விஷயம். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவில் உள்ள தமிழகத் தொழிலாளர்களை அந்த மாநில காவல்துறையினரும் சேர்ந்து தாக்குகிறார்கள். தமிழ்நாட்டில் மலையாள பெரு நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தும் தமிழர்களை தமிழ்நாட்டு காவல்துறையினர் தாக்குகிறார்கள். மொழிப் பற்றில் கேரளா காவல்துறையினருடன் தமிழகக் காவல் துறையினரை ஒப்பிட்டுப் பாருங்கள்.

இப்போதைக்கு இந்தப் பட்டியல் போதும் என்று நினைக்கிறேன். இனிமேலாவது மலையாளிகளைப் பற்றி தவறாகப் பேசுவதை நிறுத்தி விட்டு, நம்மிடம் உள்ள குறைகளை களைவோம்.

-வே.வெற்றிவேல் சந்திரசேகர்

Wednesday, December 21, 2011

அணை போட முடியாத தமிழர் விரோதம்!!


“அணையை உடைப்போம்” என்கிறார்கள். தடுத்தால், “தமிழனின் மண்டையை உடைப்போம்” என்கிறார்கள். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அணை உடையப் போகிறது என்கிற கேரள அரசின் பொய்யை மலையாள ஊடகங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதே நேரத்தில் உண்மையை உரத்துச் சொல்ல வேண்டிய இடத்தில் உள்ள தமிழ்நாட்டு ஊடகங்களின் நிலை என்ன? (வேறொரு காலகட்டத்தில் எழுதி ஓர் இதழில் பிரசுரமான இக்கட்டுரையை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஏற்பட்ட அனுபவத்தை சேர்த்து மீண்டும் மறுபதிப்பு செய்கிறேன்)
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று சொல்லிக் கொள்வதில் நமக்குத்தான் எத்தனை பெருமை! நகை வியபாரம், துணி வியபாரம், வங்கித்துறை என அயலார்கள் ஆதிக்கம் பெருகி வருவது கண்கூடு. ஆனால் யாருக்கும் தெரியாமல் கொல்லைப் புறத்து வழியாக தமிழகத்தில் ஊடகத் துறையில் வெளியார்கள் வேகமாக படையெடுத்துக் கொண்டிருப்பது பரவலாக அறியப்படவே இல்லை.
ஈழத்தில் நான்காம் கட்ட இறுதிப் போர் நடந்த போது அங்கே அரங்கேறிய மனித குல அவலங்களையும் அதைக் கண்டித்து தமிழகத்தில் எழுந்த எழுச்சியையும் இங்குள்ள ஊடகங்கள் சரியாகப் பதிவு செய்யவில்லை என்றொரு மனக்குறை நம்மெல்லோருக்கும் உண்டு. ஆனால் அப்படி தமிழர்கள் நலன் இருட்டடிப்பு செய்யப்பட்டதன் பின்னணியில் இங்குள்ள தேசிய மற்றும் பிராந்திய ஊடகங்களில் முக்கியப் பொறுப்புகளில் தமிழர்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டிருப்பதும், இங்கெல்லாம் அயலார்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதுமே காரணங்கள். இதே காரணங்களின் பின்னணியில் தான் இன்றைக்கு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஆங்கில தேசிய ஊடங்கள் கேரள அரசுக்கு ஆதரவான பொய்யான செய்திகளை பரப்பி வருகிறது. (ஆதாரம்: http://keetru.com/index.php?option=com_content&view=article&id=17719).
தமிழ்நாட்டில் உள்ள தினமலர் வெளிப்படையாகவே தமிழர் விரோத போக்கைக் கடைப்பிடிப்பது எல்லோரும் அறிந்ததே. பெரியாரை இன்றுவரையிலும் ஈவெரா என்றும் அறிஞர் அண்ணாவை அண்ணாதுரை என்றும் எழுதுவதன் மூலம் தங்களுடைய தமிழர் விரோதப் போக்கை பறை சாற்றி வருகின்றனர். (இவர்கள் இருவரும் தமிழர்களுக்கு அப்படி என்ன நியாயம் செய்து விட்டார்கள் என்று கேட்டால், “அது வேற டிபார்ட்மெண்ட்’’ என்று வடிவேலு பாணியில் தான் பதில் சொல்ல முடியும்!)
தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் திரைப்பட இயக்குநர்களை சினிமாக்காரர்கள் என்று குறிப்பிடுவதும் (எ.கா: சினிமாக்காரர் மணிவண்ணன், சினிமாக்காரர் பாரதிராஜா என்று குறிப்பிடுகிறார்கள். “சினிமாக்காரர் பாலச்சந்தர் சினிமாக்காரர் மணிரத்னம் என்று எழுதுவீர்களா” என்று தினமலர் செய்தியாளர் ஒருவரிடம் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலில்லை)
தினமலரின் சென்னைப் பதிப்பில் முக்கிய பொறுப்பில் பிகாரைச் சேர்ந்தவர் உள்ளார். (“ ‘தமிழ்நாடு என்று எழுதாதே. இவனுகளுக்கு என்ன நாடு வேண்டிக் கிடக்கு? தமிழகம் என்று எழுது’ என்று சக ஊழியர்களிடம் அவர் ஆவேசப்படுவதை அவ்வப்போது பார்க்க முடியும்” என்கிறார்கள் அங்குள்ளவர்கள்)
அதேபோல் தினமலரின் முக்கிய பொறுப்புகளில் மலையாளிகளை நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். உதகை தினமலரில் செய்தியாளராக இருந்த ஒரு மலையாளியை மலையிறக்கி தினமலர் பதிப்புகளில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. அவரது முற்றும் முதலுமாக தமிழர்களுக்கு எதிரானவர். சக ஊழியர்களில் யாருக்காவது தமிழுணர்வு உண்டு என்பது தெரிந்தால் அவர்களுக்கு தொடர்ந்து மனரீதியான தொந்தரவுகள் அளித்து ஓரம் கட்டுவார்.
அதுமட்டுமின்றி தினமலருக்கு புதிதாக செய்தியாளர் பணிக்கு வரும் தமிழ் இளைஞர்களில் யாருக்காவது தப்பித் தவறியும் தமிழுணர்வு இருந்துவிட்டால் அதை லாவகமாகக் கையாண்டு அந்த உணர்வை அவர்களுக்குள்ளேயே குழி தோண்டிப் புதைக்கும் வேலைகளை செவ்வனே செய்து முடித்து விடுவார்கள்.
இன்றைக்கு தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியினால் என்டிடிவி, டைம்ஸ் நவ், ஹெட்லைன்ஸ் டூடே, என்டிடிவி இந்து என சுமார் பத்துக்கும் மேற்பட்ட தேசிய ஊடகங்களான (தொலைக்காட்சிகள்) ஆங்கில ஊடகங்கள் தமிழ் நாட்டிற்குள் நுழைந்துவிட்டன. இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் செயல்படும் இந்தச் செய்தி தொலைக்காட்சிகளில் செய்திப் பிரிவுகளிலும், செய்தியாளர் பணிகளிலும் அந்தந்த மாநிலத்தவர் களுக்கு முன்னுரிமை கொடுத்து பணியமர்த்தி உள்ளது.
ஆனால் தமிழகத்தில் மட்டும் நிலை தலைகீழ். எந்தச் செய்தியைப் போடுவது, எதை விடுவது என்கிற முக்கிய முடிவுகள் எடுக்கும் பதவிகளில் பெரும்பாலும் அயலாரையே (குறிப்பாக மலையாளிகளையே) பணியமர்த்துகின்றனர். இது தற்செயலாக நடப்பதில்லை. திட்டமிட்டே ஊடகங்களில் இப்படியொரு நிலை உருவாக்கப்படுகிறது. உதாரணமாக சேலம், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேசிய ஆங்கில செய்தித் தாள்கள், செய்தித் தொலைக்காட்சிகளின் முக்கியப் பொறுப்புகளில் மட்டுமின்றி செய்தியாளர்களாகவும் மலையாளிகளே நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
அந்த ஊர்களில் பணியாற்ற தமிழ்த் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ஆனால், அவருக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. ஆங்கிலமும் மலையாளமும் மட்டுமே அவருக்குத் தெரியும். சென்னையைத் தவிர்த்து பிற நகரங்களில் பெரும்பாலான அரசு அதிகாரிகள் தமிழில்தான் பேட்டி அளிப்பார்கள். ஆங்கிலத்தில் கேள்வி கேட்கப்பட்டாலும் தமிழில்தான் பதிலளிப்பார்கள். இது தெரிந்தும் தமிழ்த் தெரியாதவர்களை தேசிய ஆங்கில ஊடகங்கள் அங்கே பணியமர்த்துவதன் நோக்கம் என்ன?
அதே செய்தி தொலைக்காட்சியின் கேரளாவின் அனைத்து நகரிலும் மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள்.
அதுமட்டுமல்ல கேரளாவில் எந்த தேசிய ஊடகத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் முக்கியப் பொறுப்புகளிலோ செய்தியாளராகவோ பணியமர்த்தப்படுவதில்லை. ஆனால் தமிழகத்தில் உள்ள இந்தச் செய்தி தொலைக்காட்சிகளில் முக்கியப் பொறுப்புகளில் மட்டுமின்றி செய்தியாளர்கள் பணிகளிலும் பெரும்பாலும் அயலாரையே நியமித்திருக்கிறார்கள். இதை வீட்டில் அமர்ந்தபடி தேசிய செய்தி சேனல்களில் வரும் தமிழ்நாட்டுச் செய்திகளை கவனித்தாலே தெரிந்து கொள்ள முடியும்.
ஆங்கிலம் தெரிந்த (இத்தனைக்கும் மலையாளிகளை விட தமிழர்கள் மிகச்சரியாக ஆங்கிலம் பேசக்கூடியவர்கள்) தகுதியான தமிழர்கள் பத்திரிகைத் துறையில் எத்தனையோ பேர் இருக்கும் போது தேசிய ஆங்கில ஊடகங்கள் அவர்களுக்கு வாய்ப்பளிப்பது கிடையாது. அப்படி வாய்ப்பளிக்கப்பட்டு அங்கே பணிபுரியும் ஊழியர்களும் அங்கே நடக்கும் தமிழர் விரோத போக்கால் நொந்து கொண்டிருக்கிறார்கள். (ஆதாரம்: கீற்று இணையதளத்தில் வெளியாகியிருக்கும் ராதிகா கிரி கட்டுரை)
செய்தி தொலைக்காட்சிகள் என்றில்லை தமிழில் ஒளிப்பரப்பாகும் பொழுது போக்கு தொலைக்காட்சிகளிலும் இதே நிலைதான். அயலாளர்கள் அங்கே கூடி கும்மி அடிப்பதால் தான், நடனப் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென்றாலும் கூட பரதநாட்டியம் தெரிந்திருக்க வேண்டும் என்றும் பாட்டுப் போட்டிகளிலும் பங்கற்க கர்நாடக இசை தெரிந்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்படுகிறது. நடனப் போட்டி அவர்கள் ஆடப்போவது ஆபாச அசைகளுடன் சினிமாப் பாடல்களுக்குத்தான். பாட்டுப் போட்டிகளில் பாடப் போவதும் சினிமாப்பாடல்கள் தான். அதற்கு எதற்கு பரதமும், கர்நாடக சங்கீதமும்? தமிழ்நாட்டில் சொற்ப மக்களால் புரிந்து கொள்ளப்படும் இந்தக் கலையை பொதுவானதாக உருவாக்க முயல்வது, தமிழ்த் தொலைக்காட்சிகளில் உள்ள அயலார்களின் வேலையே!
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு எதிரான போக்கை உருவாக்குவது என பல தளங்களில் மறைமுகமான வேலைகள் தொடர்ந்து நடக்கின்றன. இதில் ஒன்றுதான் ஊடகங்களில் அயலார்களின் ஆதிக்கம்.
பெருகி வரும் தேசிய ஊடங்களும் ஊடங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு அயலார்கள் ஆக்கிரப்பதும் தமிழர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை உணர்த்தி வருகின்றது. ஈழப் போரிலும், முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் இது அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. இதை சரிசெய்ய கடமை தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு இருக்கிறது. (தமிழ்த் தேசியர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதற்கே நேரம் போததில்லை என்பது வேறு விஷயம்).
ஆங்கில பத்திரிகைகள் மற்றும் ஊடங்களுக்குள் தமிழுணர்வு மிக்க தகுதியான தமிழர்களை நுழைய வைப்பதன் மூலம் தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள ஆபத்தைத் தடுத்து நிறுத்த முடியும். அதற்கான பணிகளில் தமிழுணர்வாளர்கள் கமுக்கமாக ஈடுபட வேண்டும்.


-வே.வெற்றிவேல் சந்திரசேகர்

Wednesday, November 30, 2011

பாலையில் மழை பெய்யட்டும்!!




முகநூல் மற்றும் வலைப்பூவில் எழுதி நிறைய நாட்கள் ஆகிறது. எழுதுவதற்கான அவசியங்கள் இருந்தும் அவகாசம் இல்லாமல் போனதுதான் இதற்குக் காரணம். சினிமா ஆர்வத்தில் சென்னை வந்து வாய்ப்புகள் அமையாததால், செய்தியாளர் ஆனேன். பத்து ஆண்டுகளுக்குப் பின் துணை இயக்குநராக பாலை படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நண்பரும் இயக்குநருமான ம.செந்தமிழன் இயக்கத்தில் பணியாற்றிய அனுபவத்தால் சினிமா மீதான என் காதலும் அறிவும் மேம்பட்டிருக்கிறது. படப்பிடிப்புக்கு முன்பும் பின்பும் அவ்வப்போது வாய்க்கப் பெற்ற எங்கள் வாத்தியார் பாலுமகேந்திராவுடான உரையாடல்களின் போது சினிமாவை பார்க்கவே இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்கிற உண்மை உரைத்தது.
செம்மை வெளியீட்டகம் என்ற நிறுவனத்தின் பெயரில் பாலை தயாரிக்கப்பட்டது. பல்வேறு நண்பர்களின் பண உதவியுடன் ஏறத்தாழ ஓர் ஆண்டு படப்பிடிப்பு மற்றும் பின் தயாரிப்பு வேலைகள் முடிந்து திரைக்கு வந்திருக்கிறது பாலை. (ரூபாய் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கூட நண்பர்கள் அவசர அவசிய நேரங்களில் கொடுத்துதவியதால்தான் எங்களால் பாலையை உருவாக்க முடிந்தது) பாலை உருவாக்கத்தில் என்னுடைய பங்கு ராமருக்கு உதவிய அணில் அளவுக்கே. இதை தன்னடக்கத்திற்காக சொல்லவில்லை. உண்மை அதுவே.
பாலை படத்தைத் திரைக்குக் கொண்டு வருவதில் பெரும் தடைகள் இருந்தன. அதுபற்றி செந்தமிழன் எழுதிய கடிதம் இணைய தளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது. (இணைப்பு:http://tamil.webdunia.
com/entertainment/film/article/1111/26/1111126042_1.htm)
தடைகள் கடந்து திரைக்கு வந்த பாலைக்கு கிடைத்த முதல் கட்ட வரவேற்பு (ஓபனிங்) எங்களுக்கு ஆறுதலாகவே இருந்தது. முகமும் முகவரியும் தெரியாத எத்தனையோ பேர் பாலை படத்தைத் தூக்கிப் பிடித்ததும் பிடித்துக் கொண்டிருப்பதும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி! இயக்குநர் பாலுமகேந்திரா படத்தைப் பாராட்டி எழுதிய கடிதமும், படக்குழுவினரை அழைத்துப் பாராட்டியதும் வாழ்வில் மறக்க முடியாத நிமிடங்கள். நானும் செந்தமிழனும் பாலுமகேந்திராவின் மனம் திறந்த பாராட்டால் அழுதே விட்டோம்.
அத்துடன் இயக்குநர்கள் வெ.சேகர், தங்கர் பச்சான், சீமான், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், நண்பர்கள், கார்டூனிஸ்ட் பாலா, மே 17 திருமுருகன் காந்தி போன்றோரின் பாராட்டுகளும் பாலையை கடந்து வந்த எங்கள் பாதங்களுக்கு நிழலாக இருந்தன.
நாங்களே பார்த்து வியந்த செந்தமிழனின் தனித்துவமான சினிமா அறிவால் தரமான ஒலி ஒளி அமைப்புடன் உருவாக்கப்பட்ட பாலைக்கு அதன் தரத்திற்குரிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பதில் எங்களுக்குப் பெரிய வருத்தம். என்ன செய்ய? எங்களால் நல்ல படம் மட்டுமே எடுக்க முடிந்தது. திரையரங்குகளை பணிய வைக்கும் பண மற்றும் அதிகார பலம் எங்களிடம் இல்லை.
இந்த நிலையில் இன்றைக்கு (நவ.30) குமுதம் வாரஇதழில் வெளியாகியிருக்கும் விமர்சனம் பாலை படக்குழுவினரின் நெஞ்சில் பால் வார்த்திருக்கிறது. நல்ல படங்களை அடையாளப்படுத்தி ஆதரிக்கும் ஆனந்த விகடன் விமர்சனமும் நிச்சயம் பாலைக்கான ஆதரவை கூட்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இதையெல்லாம் தெரிந்து கொண்டு பாலை படத்தைப் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பரிந்துரைக்க பல ஊர்களில் திரையரங்குகளே கிடைக்கவில்லை என்பதோடு கிடைத்த இடங்களில் தரமான திரையரங்குகளும் இல்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.
நல்ல படத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் நம்முடைய ரசிகர்கள், பாலைக்கும் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. சென்னை தியாகராயர் நகர் கிருஷ்ணவேணியில் எழுத்தாளர் அஜயன் பாலா பாலை படத்தைப் பார்த்ததாக உதவி இயக்குநர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். நட்சத்திர ஹோட்டல்களில் செயற்கையான உபசரிப்புடன் பரிமாறப்படும் பீட்சாவை விட, தெருவோரக் கடையில் கிடைக்கும் நம்மூர் சூடான ஆரோக்கிமான இட்லி உயர்ந்ததுதானே. தரமான படங்களை ஆதரிக்கும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு இடப்பட்ட சவால்களாகவே இதை நான் பார்க்கிறேன்.
இந்தப் படத்திற்குக் கிடைக்கும் வரவேற்பு, சினிமாவில் மீண்டும் ஒரு ஆரோக்கியமான புது அத்தியாயத்தை உருவாக்கும் என்பதை தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன். இனி முடிவு உங்கள் கையில். நீங்கள் பார்த்தால் பாலையில் மழை பெய்யும்.. உங்கள் பார்வைக்காக காத்துக் கொண்டிருக்கிறது. பாலை..

-வே.வெற்றிவேல் சந்திரசேகர்

Sunday, November 21, 2010

மனம் திறக்கிறேன்...!



சரிகாஷா என்ற பெயரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். ஈவ் டீசிங்-க்கு எதிராக சட்டப்பேரவையில் தனிச்சட்டம் கொண்டுவரக் காரணமான பெண். வன்பகடிக்கு தன் உயிரையே பறிகொடுத்தவள். அந்தக் காலகட்டத்தில் எங்கு திரும்பினாலும் சரிகாஷாதான். ஒரு பெண்ணின் மரணம் தமிழகத்தில் இந்தளவுக்கு இதற்கு முன்பு பேசப்பட்டிருக்குமா என்பது சந்தேகம் தான். இதற்கு என்ன காரணம்?

அந்தச் சம்பவம் நடந்ததும் சரிகாஷாவின் முகம் பத்திரிகைகளில் வெளியானது. ஈவ் டீசிங் பற்றி அப்போது யார் பேசினாலும் அந்த முகம் ஞாபகம் வந்து போகும் அளவுக்கு அழகு வடியும் முகம் அந்தப் பெண்ணுக்கு. குமரி மாவட்டத்தில் ஈவ் டீசிங்கிற்கு சரிகாஷாவுக்கு முன்பும் பின்பும் பல இளம் பெண்கள் பலியானார்கள். பாதிக்கப்பட்டார்கள். ஆனாலும் சரிகாஷாவுக்குக் கிடைத்த அனுதாபமும் கவனிப்பும் அவர்களுக்கெல்லாம் கிடைக்கவில்லை.

அதே குமரி மாவட்டத்தில் என்று நினைக்கிறேன், காதலிக்க மறுத்த அக்காள் தங்கை மீது ஆசிட் ஊற்றப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பணஉதவி அளித்த கதையெல்லாம் கூட நடந்தது. அந்தப் பெண்களின் முகமோ, பெயரோ நமக்கு இப்போது ஞாபகமில்லையே?

‘சிகப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்‘ என்ற வடிவேலு டைலாக்கை இந்த இடத்தில் ஞாபகப்படுத்துவது சரியாக இருக்கும் . பாதிக்கப்படும் பெண்கள் அழகாக இருந்துவிட்டால் அவர்கள் எப்போதும் கூடுதல் கவனத்தைப் பெறுவார்கள் என்பதை யாராவது மறுக்க முடியுமா? பத்திரிகைகளும் அழகான பெண்கள் என்றால் அவர்களின் புகைப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பத் திரும்ப பிரசுரிக்கத் தயங்கியதில்லை. சரிகாஷா விஷயத்திலும் அதுதான் நடந்தது.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். செங்கற்பட்டில் சாலையோரம் கட்டுமானத் தொழிலாளர்கள் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு தொழிலாளியின் பெண் குழந்தையை தூங்கிச் சென்ற அவ்ர்களில் ஒரு காமுகன், அந்தக் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து அங்கிருந்த பாறையில் அடித்துக் கொண்டிருக்கிறான். பின்னர் ஒன்றும் தெரியாதவன் போல் வந்து அதே இடத்தில் படுத்துக் கொண்டான். அடுத்த நாள் அவனும் அந்தக் குழந்தைகயை தேடுவது போல் நடித்திருக்கிறான். குழந்தையின் சிதைந்த சடலம் கிடைக்க போலீஸ் விசாரணையில் அந்தக் காமுகனும் சிக்கினான்.

இப்போது அனேகமாக அவன் சிறையில் இருப்பான் என்று நினைக்கிறேன். இந்தச் செய்தி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? எத்தனை பத்திரிகைகள் அது பற்றி எழுதின. அந்தக் குழந்தையின் இறுதி ஊர்வலத்தில் செங்கற்பட்டு மக்கள் கூட்டமாக கலந்து கொள்ளவில்லையே ஏன்?

ஒரே நேரத்தில் கட்டுமானத் தொழிலாளியும் ஜவுளிக்கடை நடத்தும் பணக்கார மார்வாடியும் தங்கள் குழந்தைகளைக் காணவில்லை என்று காவல் துறையினரிடம் புகார் கொடுக்கச் சென்றால் யாருடைய புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்? மார்வாடி போலீஸ்காரர்களை தன்னுடைய சொந்தக் காரில் உட்காரவைத்து குழந்தையைத் தேடிச் செல்வான். கட்டுமானத் தொழிலாளி? இதுதானே யதார்த்தம்!

கோவை சம்பவத்திலும் இதேதான் நடந்தது. மார்வாடி, பணக்காரனும் கூட. காணாமல் போன அந்தக் குழந்தைகளின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டன. கோவை மக்களின் ஒட்டுமொத்த அனுதாபமும் கவனிப்பும் அந்தக் குழந்தைகளின் மீது விழுந்தன. அவர்களின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்களும் கலந்து கொண்டனர். அந்த அனுதாபம் கொலையாளி மீது வெறுப்பாக மாறியது.

மார்வாடிகளின் கோரிக்கை போலீசின் காதுகளில் விழும். அவர்கள் என்ன தொழிலாளிகளா இல்லை தங்கள் உரிமைக்காகப் போராடும் பாட்டாளி வர்க்கமா? பணக்கார மார்வாடிகள் ஆயிற்றே. அவர்களுக்கு உடனடியாக நீதி கிடைக்கச் செய்ய வேண்டும், என்பதற்காக நடத்தப்பட்டதுதான் அந்த என்கவுன்டர். (இதில் நடந்த ஒரு நன்மை என்னவென்றால், என்கவுன்டர்கள் எல்லாம் ஜோடிக்கப்பட்டவைதான் என்பதை அனைத்துத் தரப்பு மக்கள் உணர்ந்துவிட்டார்கள்)

போலீஸார் சொந்த லாபமின்றி இதைச் செய்திருக்க மாட்டார்கள். மார்வாடிகள் அவர்களை ‘கவனித்து’ விட்டார்கள் என்று எனக்கு வரும் செய்திகள் சொல்கின்றன. என்கவுன்டரில் கொல்லப்பட்ட வெங்கடேசப் பண்ணையாரின் மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து, மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தது, நாடார் ஓட்டு வங்கிக்காகவே. இப்போது மார்வாடிகளின் ஓட்டு வங்கியைக் குறிவைத்து இந்த என்கவுன்டர் நடத்த அரசும் அனுமதி அளித்திருக்கிறது. இல்லை என்றால் சட்டப்பேரவை கூடும் நேரத்தில் இப்படியொரு என்கவுன்டர் நடத்த அனுமதி கிடைத்திருக்காது.

ஓர் அரசின் ஓட்டு அரசியலையும் அந்த அரசுக்காக இயங்கும் காவல்துறையின் அடவாடித் தனத்தையும் புரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக கோயமுத்தூர் காரர்களும், உணர்ச்சிவயப்பட்ட பலரும் அவர்களை ஆதரிக்கிறார்கள். போலீஸ்காரர்களிடம் நியாயத்தை எதிர்பார்ப்பதும் அவர்கள் நியாயமாக நடந்திருப்பார்கள் என்று நம்புவதும் ஆபத்தானது. அவர்கள் என்றைக்குமே அரசின் அடையாட்கள்.. பணக்காரர்களின் வேலையாட்கள்... எங்காவது விதிவிலக்காக சிலர் இருக்கலாம். மேற்கு மண்டல ஐ.ஜியாக இருந்த சுப்பிரமணி உண்மையிலேயே மனிதாபிமானம் நிறைந்த ஒரு காவல் அதிகாரி. ஆனால் ஒட்டுமொத்த காவல் துறையையும் அவரை வைத்து மதிப்பிட முடியாது.

அந்தக் குழந்தைகளை கொன்ற கொடூரனுக்குத் தேவை மனநல சிகிச்சை அல்லது சிறை தண்டனை. அதைவிடுத்து இந்தத் தண்டனை சரியென்றால், டிவி ஷோக்களில் சின்னஞ்சிறிய குழந்தைகளுக்கு ஆபாசமாக ஆடை அணிவித்து ஆடவைத்து அழகு பார்க்கும் பெற்றோர்களையும் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் அதை ரசிக்கும் பார்வையாளர்களான நம்மையும் என்கவுன்டர் செய்யலாம் தப்பில்லை....

Sunday, November 14, 2010

மலையாளிகளுக்கு ஓணம்! மார்வாடிகளுக்கு என்கவுன்டர்!!-ஒரு கோணல் பார்வை

மோதல் சாவு, அதாங்க என்கவுன்டர். சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றம் கூடும் தருணத்தில் மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, இந்த முறை பயன்பட்டது கோவையில் நடந்த மோகன கிருஷ்ணனின் என்கவுன்டர் சாவு.

கடந்த மாதம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும் ஈர்த்த விவகாரம், இரண்டு பள்ளிக் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டது. சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து அந்தச் சிறுமியையும் அவளது சகோதரனையும் கொன்ற மகிழுந்து ஓட்டுநர் மோகன கிருஷ்ணன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வழக்கம் போல் அதற்கென புனையப்பட்ட கதைகளுடன் இந்த என்கவுன்டர் நடந்து முடிந்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான பொதுமக்கள், காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஏகோபித்த ஆதரவளித்துள்ளனர். இதை எதிர்பார்த்துதான் இந்த என்கவுன்டரும் நடந்திருக்கிறது. என்கவுன்டர் நடத்திய கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபுவை பூங்கொத்துடன் சென்ற பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.

இந்த என்கவுன்டர் பற்றி நாளிதழ்களில் செய்திகள் வெளியான அதே நாளில் டென்னீஸ் வீராங்கனையும் பள்ளி மாணவியுமான ருசிகா மானபங்க வழக்கில் ஹரியாணா முன்னாள் டிஜிபி ரத்தோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட செய்தியும் வெளியாகியிருந்தது. ரத்தோரின் பாலியல் கொடுமையால் அந்த மாணவி 1990-ல் தற்கொலை செய்து கொண்டார். ருசிகா வழக்கில் கீழ் நீதிமன்றத்தால் ரத்தோருக்கு ஆறு மாதம் (!) தண்டனை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து ருசிகாவின் பெற்றோர் உயர்நீதிமன்றம் சென்றனர். அங்கே தண்டனைக் காலம் 18 மாதங்களாக அதிகரிக்கப்பட்டது. கோவை மாணவிக்கு இருந்த நியாயங்கள் அனைத்தும் ருசிகாவுக்கும் உண்டு என்றால் ரத்தோர் இன்னும் உயிருடன் நடமாட என்ன காரணம்?

காவல்துறையினரால் மோதல் சாவில் கொல்லப்படுபவர்கள் எல்லாம் கொடுங்குற்றவாளிகள் என்றே வைத்துக் கொண்டாலும், அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறையினரால் என்கவுன்டரில் கொல்லப்பட்ட வெங்கடேசப் பண்ணையாரின் மனைவிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும், இந்திய அரசின் உள்துறை இணை அமைச்சர் பதவியை தி.மு.க. பெற்று தந்ததை எந்த வகையில் சேர்ப்பது? என்கவுன்டர் செய்யப்பட்ட வீரப்பன் விவகாரத்திலும் அ.தி.மு.க.வின் நிலைப்பாடும், தி.மு.க. நிலைப்பாடும் நேர் எதிராக இருந்ததை இங்கே கவனிக்க வேண்டும்.

குற்றவாளிகளில் தங்களுக்குப் பிடிக்காதவர்களையும், தங்களுக்கு எதிரானவர்களையும் மட்டுமே என்கவுன்டர் செய்வதை இந்த அரசுகள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. என்கவுன்டர் என்பதே குற்றத்தை குறைக்கும் அரசின் எண்ணமாக அதை ஆதரிப்பவர்களால் பார்க்கப்படுகிறது. உண்மையில் அரசுக்கு அப்படியொரு எண்ணம் இல்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை.

கோவை நிகழ்வைப் பொறுத்தவரையில், கடத்திக் கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மார்வாடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கோவையில் மார்வாடி உள்ளிட்ட வட இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், துணி-நகை உள்ளிட்ட பணம் கொழிக்கும் முக்கிய வர்த்தகங்களில் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதையும் மறுக்க முடியாது.

பணத்துக்காக அந்தக் குழந்தைகளை கடத்திக் கொலை செய்த நிகழ்வு கொடூரமானதும், தண்டிக்கத்தக்கதும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் யாருக்கும் இல்லை. நேரடியாகப் பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பமும் அவர்களின் உறவினர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மக்களுமே அந்தக் குழந்தைகளுக்காக கண்ணீர் வடித்தனர். அதுதான் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்தியிருக்கிறது. எதையும் ஓட்டுகளாக்கி விட வேண்டும் என்று நாக்கைத் தொங்க விட்டு அலையும் கருணாநிதி அரசு, அந்தக் குழந்தைகளுக்காக எழுந்த அனுதாபத்தையும் நாசுக்காக பயன்படுத்திக் கொண்டது.

அதாவது, மார்வாடிகளின் வாக்குகளைக் குறிவைத்தே இந்த என்கவுன்டர் நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்கு கோவைக்கு வந்த கருணாநிதி, அங்கே பெரும்பான்மையாக வாழும் கேரள மக்களின் வாக்குகளை குறிவைத்து ஓணம் பண்டிகைக்கு அரசு விடுமுறை அளிப்பேன் என்று வாக்குறுதியளித்து அதை நிறைவேற்றினார். மலையாளிகளுக்கு ஓணம் என்றால் இந்திக்காரர்களுக்கு என்கவுன்டர்!

சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற அவை கூடும் போது இப்படியொரு என்கவுன்டர் நடத்தியிருப்பதையும் கவனிக்க வேண்டும். விலைவாசி, ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற விவகாரங்களில் இருந்து மக்களை திசை திருப்பவும் இந்த என்கவுன்டர் உதவும் என்று கங்காணி கருணாநிதி அரசு நினைத்திருக்கலாம். என்கவுன்டர் என்பது மனித உரிமை மீறல் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்க, என்கவுன்ட்ர் என்பதே வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆயுதம் என்று கருணாநிதி சிரித்துக் கொண்டிருக்கிறார். தமிழன் கொத்துக் கொத்தாக செத்தாலும் பதவி போதும் என்று பக்குவமாக நடந்து கொண்ட கருணாநிதியிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

Wednesday, November 10, 2010

அருந்ததி ராய் சீமான் :- ஓர் ஒப்பீடு




அருந்ததிராயின் கருத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் விவாதங்கள் ஊடகங்களால் முன்வைக்கப்படுகின்றன. அப்படி என்ன சொல்லிவிட்டார் அருந்ததி ராய்? “காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி அல்ல என்பதுதான் வரலாற்று உண்மை” என்று சொல்லியிருக்கிறார். ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “இந்த வரலாறு எல்லோரும் அறிந்ததே. நான் ஒன்றும் மக்களுக்கு ஆரம்பக்கல்வி நிலையில் சரித்திரப் பாடம் புகட்டவில்லை ஆனால் சிக்கலான காஷ்மீர் வரலாறு இன்றைய காஷ்மீர் சிக்கலுக்கும் காரணமில்லை என்றால், இந்திய அரசு 7 இலட்சம் ராணுவ வீரர்களை காஷ்மீரில் ஏன் நிறுத்தி வைத்திருக்கிறது? காஷ்மீர் தெருக்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்த நிஜங்களைக் கண்டு கொள்ளாமல் எப்போது நாம் ஏன் நம் கண்களை மூடிக் கொள்கிறோம்?” என்று பதிலளித்திருக்கிறார், அ.ராய்.

இந்தக் கருத்துக்குத்தான் டைம்ஸ் நவ் செய்தித் தொலைக்காட்சி அருந்ததிராயை தேசத் துரோகி என்று வர்ணிக்கிறது. காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் அருந்ததி ராயின் அக்கருத்துகள் மிகவும் சரியானதே.

அருந்ததி ராயின் அந்தப் பேச்சை அடுத்து, பா.ஜ.க. போன்ற இந்துத்துவக் கட்சிகளும், இந்திய தேசியத்தைத் தூக்கிப்பிடிக்கும் சில ஆங்கில இந்தி ஊடகங்களும் அருந்ததிராயைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. அருந்ததிராயின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிரானதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம் என்று இந்திய அரசும் அறிவித்தது. இதற்கிடையே, பா.ஜ.க. உள்ளிட்ட சில இந்துத்துவ அமைப்புகள் அருந்ததிராயின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்தளவுக்கு எதிர்ப்பு இருந்தும் அருந்ததிராயைக் கைது செய்யப் போவதில்லை என்று இந்திய அரசு அறிவித்துவிட்டது. இந்திய அரசு அருந்ததி ராயை ஏன் கைது செய்ய வில்லை என்பது ஆராய வேண்டிய கேள்வி. அருந்ததிராயைக் கைது செய்யாமல் தவிர்ப்பதற்கு பா.ஜ.க. கோரிக்கை விடுக்கிறது; அதற்கு அடிபணியக் கூடாது என்ற அரசியல் காரணம் மட்டுமே காரணம் அல்ல. அருந்ததிராய் இந்திய அளவில் அறியப்பட்ட சமூகப் போராளி. அதற்கு மேலும் அருந்ததி ராய் கேரளத் தாய்க்கும் வங்காள தந்தைக்கும் பிறந்தவர். ஆங்கிலத்தில் எழுதக் கூடியவர். (தில்லியில் படித்ததால் இந்தி பேசக் கூடியவர்). இன்னும் பச்சையாக சொல்ல வேண்டும் என்றால் அருந்ததி ராய் தமிழர் அல்ல.இவைதான் அவரைக் கைது செய்யாமல் இருப்பதற்கான காரணங்கள்.

சரி, நேராக விஷயத்துக்கு வருகிறேன். சீமான் ராமேஸ்வரத்தில் பேசுகிறார். ஈரோட்டில் பேசுகிறார். புதுவையில் பேசுகிறார். சென்னையில் பேசுகிறார். அந்தப் பேச்சுகளுக்கு எல்லாம் அவர் கைது செய்யப்படுகிறார். சீமானை ஏன் கைது செய்யவில்லை என்று (பரம) எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா அறிவிக்கை விடுகிறார். உடனே தி.மு.க. அரசு அவரைக் கைது செய்கிறது. சீமானை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கேட்கிறது, உடனே கலைஞர் கைது செய்ய உத்தரவிடுகிறார்.

இத்தனைக்கும் அருந்ததிராய் பேசியது, இந்தியத் தேசியத்துக்கு எதிராக. சீமான் பேசியது இலங்கை அரசுக்கு எதிராக. அருந்ததிராயை கைது செய்ய மத்திய அரசு ஆலோசனை செய்கிறது. ஆனால் சீமானைக் கைது செய்வதற்கு முன்பு இதுபோன்ற எந்த ஆலோசனையும் நடக்கவில்லையே ஏன்? நான் அருந்ததிராய்க்கு எதிரானவனல்ல. சீமானுக்கு ஆதரவாளனும் அல்ல. (தேவர் சிலைக்கு மாலை அணிவித்தது, தேர்தலில் போட்டியிடும் அவரது முடிவு உள்ளிட்ட விவகாரங்களில் அவருடன் வேறுபடுகிறேன்)

வடஇந்திய ஊடகங்கள் அருந்ததிராய்க்கு எதிராக செயல்படுகின்றன என்றும் அருந்ததி ராய் வீடு தாக்கப்பட்டது என்றும் சொல்லி தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் போராட்டத்துக்குத் தயாராகி வருகிறார்கள். இந்தப் போராட்டடும் அவசியமே. அதை நான் வரவேற்கிறேன். ஆனால் தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் எல்லாம் தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்கு குரல் கொடுக்கிறதா என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும். சினிமாக்காரர் மணிவண்ணன், சினிமாக்காரர் பாரதிராஜா என்று இன்றுவரை எழுதும் தினமலரை எதிர்த்து இவர்கள் போராடவில்லையே ஏன்? (சினிமாக்காரர் பாலச்சந்தர், சினிமாக்காரர் மணிரத்னம் என்று எழுதுவார்களா?)

கடந்த 2009 மே மாதம் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து தமிழகக் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று, யாராவது கேட்டுச் சொல்வார்களா? தமிழ் மொழி சமஸ்கிருத்ததையும், இந்தியையும் எதிர்த்து நிற்கிறது. இதனாலேயே தமிழனை இன்னும் எதிரியாகவே பார்க்கிறது, இந்தி(ய) அரசு. அப்படிப்பட்ட இந்திய அரசுக்கு கேடுகெட்ட திராவிட கட்சிகள் துணை போய் அவர்கள் கைகாட்டும் நபர்களை எல்லாம் கைது செய்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் வைகோ கைதும், தி.மு.க. ஆட்சியில் சீமான் கைதும் இதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன. (தற்போது வைகோ அ.தி.மு.க.வை ஆதரிப்பது போல், நாளை சீமான் தி.மு.க.வை ஆதரித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.)

இந்தியாவுக்கு எதிராக கருத்து சொன்ன அருந்ததிராயைக் கைது செய்ய இந்திய அரசு யோசிக்கும் வேளையில் இலங்கை அரசுக்கு எதிராக கருத்து சொன்ன சீமானை கைது செய்தது ஏன் என்று இந்தப் போராட்டக்காரர்கள் கேட்க வேண்டும். டைம்ஸ் நவ்வை எதிர்க்கும் அதே வேளையில் இங்கே தமிழர்களுக்கு விரோதமாக செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
இந்திய அரசால் புறக்கணிக்குள்ளாகும் ஆறு கோடி தமிழர்களின் பிரதிநிதியாகவே இதைக் கேட்கிறேன். மற்றபடி, நானும் தோழர் அருந்ததி ராய் போல் காஷ்மீர் மக்களின் விடுதலையை ஆதரிக்கிறேன்.

Thursday, October 28, 2010

கன்னடர்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம்...

கடந்த சனிக்கிழமை பெங்களூரு சென்றிருந்தேன். அதற்கு முன்பு 2000ம் ஆண்டில் கல்லூரியிலிருந்து internship க்காக (அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்?) பெங்களூருவில் 50 நாள்களுக்கு மேல் தங்கியிருந்தேன். அதன்பிறகு ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பின் அங்கே சென்றேன். ஒரே ஒரு நாள் தங்கியிருந்தேன். அந்த ஒரு நாள் முழுக்க பெங்களூரு நகரை சுற்றி வந்தேன்.

ஆட்டோ ஓட்டுநர் முதல் ஹோட்டல் ஊழியர்கள் வரை அந்த ஊர் அரசியல் சமூக நிலவரம் குறித்து என் ஐயப்பாடுகளை கேட்டுத்தெரிந்து கொண்டேன்.

எல்லோருமே எடியூரப்பா நன்றாகவே ஆட்சி செய்வதாக கூறினார்கள். சில குறைகளும் அவரிடம் உண்டு என்பதை அதில் பாதிப் பேர் ஒப்புக் கொண்டனர். ஆனால் இதற்கு முன்பு இருந்தவர்களை விட, எடியூரப்பா நல்லவராகவே இருக்கிறார் என்று நற்சான்றிதழ் வாசித்தனர்.

அப்புறம் ஏன் அவரை ஆட்சியிலிருந்து அகற்ற உள்கட்சியிலும், வெளியிலும் பலர் முனைகிறார்கள் என்று கேள்வி எழுவது இயல்பு. இந்தக் கேள்விக்கு பதிலை பின்னர் பார்க்கலாம்.

பெங்களூரு புறநகர்ப் பகுதிக்குப் போயிருந்த போது அங்கிருந்த தொழிற்பேட்டையில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லாத தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தன. மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொழிற்சாலை மேம்பாட்டுப் பணிகள் நடக்கக் கூடாது என்று முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளதாகச் சொன்னார்கள். பெரிய பெரிய தொழிற்சாலைகள் இருக்கும் இடங்களுக்கு மிக அருகிலேயே விவசாயமும் செய்கிறார்கள். சுற்றுச்சூழலைப் பாதிக்காத அளவுக்கே அங்கே தொழில் வளர்ச்சியை எடியூரப்பா அனுமதிக்கிறார் என்றால் அவரை பதவியில் தொடர எப்படி அனுமதிப்பார்கள்? இங்கேதான் முன்னாள் பொருளாதார அடியாள் ஜார் பெர்கின்ஸை பொருத்திப் பார்க்க வேண்டும்.

பெரு முதலாளிகளை இயற்கை வளங்களை சுரண்டுவதற்கு அனுமதிக்கவில்லை என்றால், லத்தீன் அமெரிக்க நாடுகளில் அந்நாட்டு அதிபர்களை கொன்று விடுவார்கள். இங்கே ஆட்சியிலிருந்து மட்டும் அகற்ற முயல்கிறார்கள். எடியூரப்பாவை ஆட்சியிலிருந்து அகற்ற நினைக்கும் சக்திகளுக்குப் பின்னால் பெரு முதலாளிகளின் சதி இருக்கலாம் என்பதை சாதாரணமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆந்திராவில் சுரங்கத் தொழில் மூலம் இயற்கையை சுரண்டும் ரெட்டி சகோதரர்கள் எடியூரப்பாவுக்கு எதிராக உள்ளதையும் கவனிக்க.

அடுத்து பெங்களூரு நகர்ப் பகுதிகளில் வலம் வந்த போது, அங்குள்ள சுவர்களில் பெங்களூரு மாநகராட்சியினர் கன்னட மக்களின் கலாசாரத்தை விளக்கும் அழகான ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன. இவை சில ஆண்டுகளுக்கு முன்பே வரையப்பட்டதாம். இதையே சென்னையிலும் நம் மாநகராட்சி பின்பற்றுகிறது. (காப்பி அடித்தால் என்ன, நல்லது நடந்தால் சரி) அதுபோலவே பெங்களூரு நகரில் ஓடும் தாழ்தளப் பேருந்து, சொகுசுப் பேருந்து, குளுகுளு பேருந்து ஆகியவற்றையும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தினர் இங்கே பின்பற்றியிருக்கிறார்கள். அந்தப் பேருந்துகளைப் பார்த்தால் சென்னைக்கே வந்துவிட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது

அந்த ஊரின் மிகப்பெரிய பேருந்து நிலையமான மெஜஸ்டிக்கில் போக்குவரத்து அதிகாரிகள் (சீருடை அணிந்து) எந்நேரமும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை நேரில் தந்துகொண்டேயிருக்கிறார்கள். இதனால் தேவையற்ற குழப்பங்கள் நடப்பதில்லை. புதிதாக வரும் மொழி தெரியாத பயணிகளும் தயக்கமின்றி பயணம் செய்ய ஏதுவாக இருக்கிறது. பயணிகளும் நம்மூரைப் போல முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறுவது கிடையாது. ரெஸ்டாரன்ட் ஒன்றில் மதிய உணவு சாப்பிட்டோம். சொகுசான அந்த ஹோட்டலில் மீல்ஸ் வெறும் 30 ரூபாய். அந்தளவுக்கே அநத் ஊரில் விலைவாசி. இங்கே புரசைவாக்கத்தில் சாதாரண ஹோட்டலில் கூட சாப்பாடு 40 ரூபாய். விலைவாசியும் அங்கே பரவாயில்லை.

தமிழனுக்கு காவிரி நீரை தராத அந்த ஊரு மக்களுக்கு இவ்வளவு இந்தளவுக்கு வக்காலத்து வாங்குவது சரியா என்று நீங்கள் கேட்கலாம். காவிரி நீர் நம்முடைய உரிமைதான். அந்த உரிமையைப் போராடிப் பெற்றே ஆக வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் நம்முடைய சொந்த மண்ணில் நீராதாரத்தை அழிக்கும் மணல் கொள்ளையை தடுக்க நாம் என்ன செய்திருக்கிறோம். நம்முடைய அரசியல் வாதிகள் என்ன செய்திருக்கிறார்கள். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மணல் கொள்ளையை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்களே ஏன்? சொந்த மண்ணிலிருக்கும் நீராதாரத்தைப் பாதுகாக்க முடியாத நாம், நம்முடைய வறட்சிக்கு கன்னடர்களை மட்டும் காரணமாகச் சொல்வது சரியா?

நெஞ்சில் கையை வச்சு சொல்லுங்க, கன்னடர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள நெறைய விஷயங்கள் நமக்கிருகிறதா, இல்லையா?