Saturday, March 3, 2012

மோதலா? கொலையா?


மோதலா? கொலையா?

இன்னுமொரு மோதல் சாவு. இந்த முறை ஐந்து பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். வங்கியில் கொள்ளை அடித்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டு. ‘காவல்துறையினர் வெளியிட்ட சந்தேக நபரின் புகைப்படத்தைப் பார்த்து பொதுமக்களில் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் தங்கியிருந்த வீட்டை நள்ளிரவில் காவலர்கள் முற்றுகையிட்டனர். அப்போது அந்த வீட்டிற்குள் பதுங்கியிருந்தவர்கள் காவலர்களை நோக்கி சுட்டதில் இரு காவலர்களுக்கு காயம். உடனே காவலர்கள் திருப்பிச் சுட்டதில் ஐந்து பேரும் இறந்துள்ளனர்’ என்பது செய்தி.
சென்னை பெருங்குடி பேங்க் ஆப் பரோடா மற்றும் சென்னை கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் முறையே 18 மற்றும் 14 லட்சத்தைக் கொள்ளையடித்த ஐந்து பேரும் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் உடனடியாக அறிவித்தனர். இறந்தவர்களை அடையாளம் காட்டிய இரு வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும் இதே ஐந்து பேர்தான் தங்களிடம் கொள்ளை அடித்ததாக தெரிவித்தார்களாம்.
ஐந்து பேரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் பெயர் மற்றும் முகவரியை காவல்துறையினர் வெளியிட்டனர். தங்களை தாக்க வருபவர்களிடம் இருந்து காவலர்கள் என்றில்லை சாதாரண பொதுமக்கள் கூட எதிர்த் தாக்குதல் நடத்தி தங்களை காத்துக் கொள்ள சட்டத்தில் இடமிருக்கிறது. அப்படி தாக்குதல் நடத்தும் போது உயிரிழப்புகள் நடத்தால் கூட தற்காப்புக்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்பது உறுதியானால் குற்றச் செயலாக அது கருதப்பட மாட்டாது. அதுவும் பணியில் இருக்கும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தும் போது உரிய தற்காப்பு நடவடிக்கையில் இறங்க அவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. ஆனால் நடைமுறையில் மோதல் சாவுகள் நடைபெறும் போதெல்லாம் எழும் சர்ச்சை காவல்துறையினர் மீது ஐயத்தை ஏற்படுத்துகிறது.
காஷ்மீரிலும், மும்பையிலும் பதவி உயர்வுக்காக துணை ராணுவப்படையினரும் காவல்துறையினரும் என்கவுன்டர் என்ற பெயரில் நடத்திய திட்டமிட்ட படுகொலைகள் இதற்கு உதாரணம். தமிழ்நாட்டிலும் வீரப்பன் முதல் உள்ளூர் போக்கிலிகள் வரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுவிட்டு சொல்லும் மோதல்சாவு கதைகளில் உள்ள நாடகத்தை சாதாரண பொதுமக்கள் வரை அறிந்திருக்கின்றனர்.
வங்கிக் கொள்ளையர்களை சுட்டுக் கொன்றதில் எழும் பல்வேறு ஐயங்கள் இது ஏதேச்சையாக நடந்த மோதல் சாவு அல்ல என்பதை பறைசாற்றுகின்றன.
எழும் ஐயப்பாடுகள்:
1.கொள்ளையர்களின் தலைவன் என்று காவல்துறையினர் மோதல் சாவு நிகழ்வுக்கு முதல் நாள் வெளியிட்ட காணொளி காட்சிகளில் தொடங்குகிறது முதல் ஐயம். பல்வேறு வங்கிகளில் எடுத்ததாக கூறப்படும் அந்தக் காட்சி எங்க எப்போது பதிவானது என்ற தகவல்களை காவல்துறையினர் வெளியிடாதது அது சித்தரிக்கப்பட்டதோ என்கிற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
2.சந்தேக நபர்கள் தங்கியிருந்ததாக சொல்லப்படும் குடியிருப்புப் பகுதிக்கு காவல்துறையினர் இரவு 12.30 மணிக்குச் சென்றதாகவும், அந்த இடத்தைச் சுற்றி வளைத்ததும் கொள்ளையர்கள் காவல்துறையினரை நோக்கி சுட்டதாகவும் சொல்கிறார்கள். உண்மையில் அன்றைக்கு இரவு 10 மணிக்கெல்லாம் அந்தப் பகுதியை காவல்துறையினர் சுற்றி வளைத்து விட்டனர் என்று அந்தப் பகுதி மக்கள் சொல்கிறார்கள்.
3.நள்ளிரவு ஒருமணிக்கு மேல் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் அரைமணி நேரத்தில் கொள்ளையர்களை கொன்றுவிட்டதாகவும் காவல்துறையினர் சொல்கிறார்கள். ஆனால் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சுடும் சத்தம் எதுவும் எங்களுக்கு கேட்கவில்லை என்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்.
4.அப்படியே காவல்துறையினர் கூறியபடி, நள்ளிரவே அந்தச் சம்பவம் நடந்து முடிந்திருந்தால் அதிகாலை 5.30 மணிவரை பத்திரிகையாளர்களை அந்தப் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்தது ஏன்?
5.இரு தரப்பிலும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக காவல்துறையினர் சொல்கிற நிலையில் கொல்லப்பட்ட நபர்கள் தங்கியிருந்த வீட்டுச் சுவரில் மருந்துக்குக்கூட துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்த சுவடுகள் இல்லையே ஏப்படி?
6.கொள்ளையர்களுக்கும், காவல்துறையினருக்கும் சன்னல் வழியாகவே துப்பாக்கிச் சண்டை தொடங்கியதாகவும், பின்னர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து கொள்ளையர்களை சுட்டதாகவும் காவல்துறையினர் சொல்கிறார்கள். அப்படியானால் கொல்லப்பட்ட ஐந்து பேரும் சரியாக தலையில் (அதுவும் நெற்றிப் பொட்டில்) குண்டடிப் பட்டு இறந்திருப்பது எப்படி?
7.கதவை உடைத்துச் சென்றதாக காவல்துறையினர் கூறுகின்ற நிலையில் துப்பாக்கிச்சூடு நடந்த வீட்டின் கதவு துளி சேதம் கூட இல்லாமல் இருப்பது எப்படி?
8.கொள்ளையர்கள் காவல்துறையினரை நோக்கி சுட்டிருக்கிறார்கள். அவர்கள் அறையில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் வங்கிக் கொள்ளையின் போது கொள்ளையர்கள் பொம்மைத் துப்பாக்கி வைத்திருந்ததாக காவல்துறையினர் சொன்னது பொய்யா? உண்மையான துப்பாக்கி வைத்திருந்தவர்கள் பொம்மைத் துப்பாக்கியை நம்பிக் கொண்டு கொள்ளையில் ஈடுபடுவார்களா?
9.இத்தனை களேபரங்களுக்குப் பின் கொல்லப்பட்டதாக இவர்கள் குறிப்பிடும் பீகார் வாரிசகளில் ஒருவர் சொந்த ஊரில் உயிருடன் தனியார் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்திருப்பது எப்படி? கொள்ளையர்கள் போலி முகவரி வைத்திருந்திருக்கலாம் என்ற காவல்துறையினரின் வாதத்தை ஏற்றுக் கொண்டாலும், அதுபோலவே அந்த அறையில் கொள்ளை கும்பலுடன் தொடர்பில்லாத நபர்களும் இருக்க வாய்ப்பிருந்திருக்கலாம் அல்லவா?
10.எல்லா மோதல் சாவுகளைப் போல மயிரிழையில் உயிர் தப்பிய காவல்துறையினர் மருத்துவமனை படுக்கையில் தலையணையில் சாய்ந்து கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
11.சந்தேக நபர் என்று காவல்துறையினர் தொடக்கத்தில் வெளியிட்ட காணொளி காட்சியின் போது அவர் சென்னையில் எந்தக் கல்லூரியிலும் படித்த படிக்கும் மாணவர் இல்லை என்பதை வெளிமாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் இன்னாள் மாணவர்கள் ஒரு லட்சம் பேரின் புகைப்படங்களுடன் ஒப்பீடு செய்து உறுதி செய்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கொல்லப்பட்ட பின்பு அவர் சென்னை கல்லூரியில் படித்தாக சொல்கிறார்கள். எந்தக் கல்லூரி எப்போது படித்தார், என்ன படித்தார் என்பதை வெளியிடாதது ஏன்?
இப்படி நீ….ண்டு கொண்டே போகிற ஐயப்பாடுகள் ஒருபுறம்.
உண்மையில் குற்றவாளிகளை உயிருடன் பிடித்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்துவதுதான் காவல்துறையினரின் வேலை. எந்தவிதமான வலுவான ஆதாரங்களும் இன்றி ஐந்து பேரை சுட்டுக் கொன்றதை அங்கீகரிப்பது அபாயகரமானது. அந்த அறையில் தவறேதும் செய்யாத, குற்றவாளிகள் என்று தெரியாமல் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யாராவது இருந்து, அவர்களும் கொல்லப்பட்டடிருந்தால், அது நியாயமா?
சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், கொலை கொள்ளைகளைத் தடுக்கவும் குற்றவாளிகளுக்குப் பயத்தை ஏற்படுத்தவும் இப்படி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல் துறையினர் சப்பை கட்டுக் கட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த நிகழ்வுக்கு மறுநாளே சென்னை புறநகர்ப் பகுதியில் ஒரு வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து விட்டு அவரிடம் இருந்து 25 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றிருக்கின்றனர். திருட்டைத் தடுக்க துப்பாக்கிச்சூடு பயன்படாதது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா?
ராணுவத்தினரைப் போல் காவல் துறையினரும் ஆயுதத்தை தூக்கத் தொடங்கினால் சாதாரண திருடர்களும் துப்பாக்கியுடன் தான் அலைவார்கள். அது சமூகத்தில் எவ்வளவு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை சிந்திக்க வேண்டும்.
நீதிமன்றத்துக்குப் போனால், குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பித்து விடுவார்கள் என்கிற வாதமும் இங்கே முன்வைக்கப்படுகிறது. உண்மையில் குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவது மட்டும் காவல்துறையின் வேலை அல்ல. அவர்களின் குற்றத்தை நிரூபிக்க வேண்டிய கடமையும் அவர்களுக்கு உண்டு. அதை சரிவர நிறைவேற்ற தவறும் ‘கடமைக்காக’ கடமை ஆற்றுவதைத்தான் பல நேரங்களில் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தப்பிவிடுகின்றனர்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறையினருக்கு இதுபோன்ற உரிமையை வழங்குவோமேயானால், நாளைக்கே நமது வீட்டுக்குள்ளும் காவல்துறையினர் துப்பாக்கியுடன் நுழைவார்கள். அண்மையில் இருளர் இனப்பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரத்தில் தொடர்புடைய காவல்துறையினரை கைது செய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அந்தப் பெண்களுக்கு இழப்பீடு மட்டும் வழங்கப்பட்டது. பலாத்காரம் நடந்ததற்கான ஆதாரம் கிடைத்ததும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று நீதிமன்றத்தில் அரசு வழக்காடி வருகிறது.
கொல்லப்பட்ட ஐவரும் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள்தான் என்பதை எந்த அடிப்படையில் உறுதி செய்த பின்பு அவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்?
கொலை கொள்ளைகளைத் தடுக்க துப்பாக்கிச்சூடு நிரந்தரத் தீர்வாகாது. சென்னையிலும், திருப்பூர் போன்ற வெளிமாநிலத் தொழிலாளர்கள் குவியும் இடங்களிலும் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. குறைந்த ஊதியம் வழங்கினால் போதும் என்பதற்காக இடைத்தரகர்கள் மூலம் நாள் தோறும் தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்கள் குவிக்கப்படுகின்றனர். இவர்களில் சமூக விரோதிகளும் சேர்ந்து விடும் அபாயம் சாதாரணமாகவே உள்ளது.
இதைப்பற்றி தற்போதைய அ.தி.மு.க. அரசும் சரி, இதற்கு முன்னாள் இருந்த தி.மு.க. அரசும் சரி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. (புதிய தலைமைச் செயலகக் கட்டடுமானப் பணிக்கே தி.மு.க. அரசு வெளிமாநிலத்தவர்களைத் தான் பயன்படுத்தியது) வெளிமாநிலத்தவர்களை முறைப்படுத்த இங்கே நமது அரசிடம் திட்டங்கள் எதுவும் இல்லை என்பதுதான் உண்மை.
வங்கிக் கொள்ளை சம்பவம் இதைத்தான் உணர்த்துகிறது.

(வே.வெற்றிவேல்சந்திரசேகர்)

Tuesday, February 21, 2012

இயக்குநர் ‘ஷ’ங்கருக்கு மனம் திறந்த மடல்

அன்பு ‘நண்பன்’ இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு வணக்கம்.

நீங்கள் நலமா? முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு, அணுஉலை எதிர்ப்பு, மூவர் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு என போராட்டக் களங்களில் நாங்களும் நலமாக இருக்கிறோம்.



ஐயா, ஷங்கர் அவர்களே, நீங்கள் தமிழர்கள் மீதும், தமிழ் மொழி மீதும் இந்தளவுக்கு வன்மம் கொள்ள என்ன காரணம்? யாரோ வாங்கும் பட்டத்தை தன் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்ளும் கதாபாத்திரத்துக்கு ‘பாரி வேந்தர்’ என்று தமிழ்ப் பெயர் வைத்திருக்கிறீர்கள். இது உங்கள் கருத்து சுதந்திரமாகவே இருந்து விட்டுப் போகட்டும். ‘சிவாஜி’ படத்தின் பாரியின் மகள்கள் அங்கவை, சங்கவை பெயர்களை முகத்தில் கரி அப்பியப் பெண்களுக்கு வைத்தும் அதன் மூலம் தமிழர்களை கிச்சுமுச்சு மூட்டி சிரிக்க வைக்க முயன்றதையும் உங்கள் கருத்து சுதந்திரம் என்று எடுத்துக் கொள்ளலாமா?


‘நண்பன்’ படத்தில் ஏழ்மை நிலையால் திருமணம் ஆகாத பெண் கருப்பாக இருப்பதை வைத்து நீங்கள் சிரிக்க வைப்பதை எல்லாம் நகைச்சுவை என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அதே ‘நண்பன்’ படத்தில் பாரிவேந்தர் என்ற பெயரை குடிபோதையில் இருக்கும் கதாநாயகி(!) “பாரிவேந்தராவது பூரிவேந்தராவது” என்று பேசியும், மற்றொரு காட்சியில், “பாரி, பூரி, கக்கூஸ் லாரி” என்றும் களங்கப்படுத்துவார். தமிழ்ப் பெயரின் மீதும் கருப்பு நிறத்தின் மீதும் உங்களுக்கு அப்படியென்ன வெறுப்பு?

அப்படியே நீங்கள் தமிழர்களையும் அவனது நிறத்தையும் வெறுத்தால் அது உங்கள் சொந்த விசயம்தான். ஆனால், அதை வன்மத்துடன் திரைப்படங்களில் புகுத்தி, தமிழர்களின் பொதுப் புத்தியில் உங்கள் கருத்தை திணிக்க முயல்வதை இனியும் நாங்கள் கைகட்டி வாய் மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். இது உங்களுக்கு விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை!!

தமிழ்ப் படங்கள் எடுத்து (நீங்கள் எடுத்த ஒரு இந்திப் படம் ஊற்றிக் கொண்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன்) நீங்கள் சம்பாதித்த ஒவ்வொரு காசும் தமிழர்களுடையது. நீங்கள் கட்டிய வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் தமிழர்கள் கொடுத்த காசில் வாங்கியது. நன்றி மறப்பது நன்றன்று.

வெறும் பெயரில் என்ன இருக்கிறது? என்று, நீங்கள் சமாளிக்கலாம். அல்லது சமாதானம் பேசலாம். உண்மையில் பெயரில் ஒன்றும் இல்லை என்பது உண்மையானால், சங்கர் என்று பெற்றோர், உங்களுக்கு வைத்த பெயரை, ஷங்கர் என்று நீங்கள் மாற்றியது எதற்காக? உங்கள் படங்களில் உள்ள தமிழர் விரோதப் போக்கை அறியாமல் கைதட்டி, ரசிக்கும் அப்பாவி தமிழனுக்கு வேண்டுமானால் ‘ச’-வுக்கும், ‘ஷ’-வுக்கும் உள்ள வித்தியாசம் புரியாமல் இருக்கலாம். உங்கள் பெயரில் மாறிய ஒன்றை எழுத்தில் இருக்கும் அரசியலை புரிந்து கொண்டாலே, தமிழ் மொழி மீதான உங்களின் ஒட்டுமொத்த வன்மத்தை கண்டுகொள்ளலாம்.

உங்களது ‘எந்திரன்’ படத்தில் பிரித்தானிய நூலகத்துக்குள் செல்லும் எந்திர மனிதன் அங்குள்ள ஆங்கில புத்தகங்களை படிக்கும். அந்த எந்திர மனிதன் படிக்கும் ஒரே ஒரு தமிழ்ப் புத்தகம் ஆச்சாரக் கோவை! பார்ப்பனர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கையை முறையை (தீண்டாமையை) வலியுறுத்தும் அந்த நூலை கொடுத்து எந்திர மனிதனையும் பார்ப்பனனாக்கும் உங்கள் சாமர்த்தியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதுவும் உங்கள் கருத்து சுதந்திரமா?

உங்கள் முதல் படம் ‘ஜென்டில்மேன்’ தான் தமிழில் முதல் முதலில் வெளியான இடஒதுக்கீட்டுக்கு எதிரான படம் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். நேர்மை, ஊழல் எதிர்ப்பு, கருப்புப் பணம் ஒழிப்பு என படங்களில் நீங்கள் வலியுறுத்தும் கருத்துகளுக்காக எல்லோரும் உங்களை பாராட்டுகிறார்கள். ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹாசரேவுக்கு ஆனந்த விகடன் இதழ், இந்தியன் தாத்தா என்று உங்கள் படத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயரை சூட்டி பாராட்டியது. அதற்காக மகிழ்ச்சியில் திளைத்தீர்கள். ஐயா, ஷங்கர் அவர்களே, இந்தியாவில் திரைப்படத் துறையில் தான் அதிகளவில் கருப்புப் பணம் கல்லா கட்டுகிறது என்பது அரசியல் அரிச்சுவடி கூட தெரியாதவர்களுக்கும் புரியும். நேர்மையைக் கொண்டாடும் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் அவர்களே, உங்கள் படங்களின் பிரமாண்டத்துக்குப் பின்னால் ஒளிந்திருப்பது கருப்புப் பணம் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? நீங்கள் சம்பளமாக வாங்கும் ஒவ்வொரு காசுக்கும் அரசிடம் நேர்மையாகக் கணக்கு காட்டுகிறீர்களா? உங்கள் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வழக்கு போட்டார்கள் என்பதை தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்…

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் தமிழைப் பழித்தும், தமிழர்களை இழித்தும் நீங்கள் தமிழ்ப் படங்களைத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்படி உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் உங்கள் பாவத்துக்கு கருட புராணத்தில் நிச்சயம் தண்டனை உண்டு!!

வணக்கங்களுடன்,

பொன்னுசாமி.

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி (16-29) இதழில வெளியான எனது கட்டுரை) -வே.வெற்றிவேல் சந்திரசேர்

Thursday, February 16, 2012

சீமான் செய்த தவறு என்ன?



நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ததாக வெளியாகியிருக்கும் செய்தியை பெரிய விவாதப் பொருளாக்கி இருக்கிறார்கள். அதில் ஒருசிலர் அடிப்படை நாகரீகம் இன்றி அவதூறாக அவரைப் பற்றி எழுதுகிறார்கள். என் நண்பன் ஜெ.பி. அடிக்கடி என்னிடம் இப்படி சொல்வது உண்டு: Perfection is enemy of good.

சீமானை விமர்சிப்பவர்களும் இதே தவறைத்தான் செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் சீமானுக்குப் பயங்கரவாத இயக்க ஆதரவு முகமூடியை அணிவித்திருக்கிறார்கள். இவர்களுக்கு தமிழ், தமிழ் உணர்வு என்றாலே அலர்ஜி. தினமலர் வாசகர்களாக இருக்கலாம்.

இரண்டாவது பிரிவினர், மீளா துயரத்தில் இருந்து தமிழர்களையும் தமிழ்நாட்டையும் மீட்க வந்த மீட்பராக சீமானைப் பார்க்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் நாம் தமிழர் கட்சியினராகவோ சீமானின் பேச்சால் கவரப்பட்ட ஈழ ஆதரவாளராகவோ இருப்பார்கள்.
மூன்றாவது பிரிவினர் கவனிக்கத்தக்கவர்கள். தமிழ் உணர்வுடன் சமூக உணர்வுடன் இருப்பார்கள். அல்லது அப்படி இருப்பதாகக் காட்டிக் கொள்வார்கள். இவர்கள்தான் இன்றைக்கு சீமானின் பா.ஜ.க ஆதரவு பரப்புரையை விமர்சிக்கிறார்கள்.

சீமான் பா.ஜ.க.வுக்கு பிரசாரம் செய்ததில் தமிழ் நாட்டுக்கே கேடு நடந்து விட்டதாக குதிக்கிறார்கள். இவர்கள் சீமானை மட்டுமல்ல, வைகோவை, பெ.மணியரசனை, தியாகுவை, நெடுமாறனை யாரையும் விட்டு வைக்க மாட்டார்கள். எல்லோரையும் விமர்சிப்பார்கள்.

அப்படியென்றால் சீமானை விமர்சிக்கவே கூடாதா? சீமான் பா.ஜ.க.வை ஆதரித்து பிரசாரம் செய்ததை வக்காலத்து வாங்குகிறீர்களா? என்று நீங்கள் கேட்கலாம். சீமான் உள்பட யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் நீங்கள் செய்ய விரும்பும் ஒரு பணியை அல்லது நீங்கள் செய்ய முடியாத ஒரு பணியை களத்தில் இருந்து செய்கிறவர் தான் சீமான்.

முன்பு செய்தியாளராக இருந்த போது பேட்டிக்காக பல முறை சீமானை நேரில் சந்தித்திருக்கிறேன். அந்த நேரங்களில் எந்நேரமும் அவரது அலை பேசி ஒலித்துக் கொண்டே இருக்கும். “உடுத்த மாத்துத் துணி கூட இல்லாமல் முள் வேலிக்குள் நிக்கிறோம் அண்ணே. என்ட உறவுகள் லண்டனில் இருக்கிறாங்கள். அவங்களுக்குத் தகவல் சொல்லி எங்களை இங்கிருந்து கூட்டிப் போகச் சொல்லுங்கோ” என்று தமிழ்ப் பெண்கள் கண்ணீர் மல்க பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர்களுக்கு சீமான் இவரது உத்தரவால் தேவையான உதவிகள் போய் சேருவதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள கைவிடப்பட்ட தமிழர்கள் குறிப்பாக ஈழத் தமிழர்கள், திக்கற்று நிற்கும் இந்த சூழலிலும் “தலைக்கு மேலே ஆபத்து என்றால் அண்ணன் இருக்கிறார். அவரிடம் முறையிடுவோம்“ என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். குமுதம் ரிப்போர்ட்டரில் நான் பணியாற்றிய போது வெளிநாடுகளில் இருந்துழ என்னிடம் பேசி சீமானின் அலைப் பேசி எண்ணை வாங்குவார்கள். பிறகு சீமானிடம் தங்கள் துயரங்களை இறக்கி வைத்துவிட்ட நிம்மதியில், எனக்கு நன்றி சொல்லும் போது அவர்களது தழுதழுக்கும் குரல்களில் ஒட்டுமொத்த தமிழினத்தில் சோகமும் வெளிப்படும்.

அங்கே முள்வேலி முகாம், இங்கே அகதிகள் முகாம் என தவிப்போரையும், வெளிநாடுகளில் உள்ள அவர்களின் ரத்த உறவுகளான புலம்பெயர் தமிழர்களையும் இணைக்கும் பாலமாக சீமான் இருந்து வருகிறார். தமிழ்நாட்டிலும் தமிழ் உணர்வோடு நிற்கும் எத்தனையோ இளைஞர்களின் முயற்சிகளுக்கும் முன்னேற்றத்துக்கும் சீமான் பக்கபலமாக நிற்பதை கண்டிருக்கிறேன்.

சிவசேனாக் கட்சித் தலைவர் பால் தாக்ரே மீது நீங்கள் எத்தனையோ விமர்சனங்களை வைக்கலாம். வெளியிலிருந்து பார்த்தால், அவர் ஓர் இந்து அடிப்படை வாதி. ஆனால் மகாராஷ்டிரா மாநில மண்ணின் மைந்தர்களின் பாதுகாவலர் அவர். தமிழ்நாட்டில் இன்றைய சூழலுக்கு மண்ணின் மைந்தர்களின் உரிமையை மீட்க ஒரு பால் தாக்ரே தேவை. சீமான் தமிழ்நாட்டில் பால்தாக்ரேவாக வளர்ந்தால் அதை நான் வரவேற்பேன் என்பதை பகிரங்கமாக அறிவிக்கிறேன்.

இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல… அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திலும் சீமான் பங்கெடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். முல்லைப் பெரியாறு போராட்டத்திலும் முன் நிற்கிறார். இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் கூட ஏதாவது ஒரு போராட்டத்தில் அவர் கலந்து கொண்டிருப்பார் அல்லது அதற்கான ஆயத்தங்களில் இருப்பார் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.


காஞ்சி ஜெயேந்திரர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டது. கைதும் செய்யப்பட்டார். முதல்வர் ஜெயலலிதா அந்த வழக்கில் ஜெயேந்திரர் மீது கடுமையாக நடந்து கொண்டார். ஜெயலலிதாவை ஆதரிக்கும் பார்ப்பனர்கள் யாரும் ஜெயேந்திரரை கைவிட்டு விடவும் இல்லை. ஜெயேந்திரர் காலில் விழும் பார்ப்பனர்கள் யாரும் ஜெயலலிதாவுக்கு எதிராக கருணாநிதிக்கு ஒட்டுப் போட்டு விடவும் இல்லை. உதாரணம் எஸ்.வி. சேகர். அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து கொண்டே ஜெயேந்திரர் புகழ் பாடிக் கொண்டிருந்தார்.


பார்ப்பனர்களுக்கு ஜெயலலிதா மீதோ, ஜெயேந்திரர் மீதோ வருத்தம், கோபம், அதிருப்தி எல்லாம் வரலாம். ஆனால் அதை அவர்கள் பொதுத் தளத்தில் விவாதிக்க மாட்டார்கள். “என்ன இருந்தாலும் அவ… நம்ம ஆளுடா” என்று தோளில் கைபோட்டுக் கொள்வார்கள். இந்த ஒற்றுமை ஏன் தமிழர்களிடம் இல்லை என்பதுதான் என் வருத்தம்.

சீமானைப்பற்றி தினமலரில் அவதூறு வந்தால் அதைப் பற்றி கவலைப்பட்டிருக்க மாட்டேன். களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கும் என் அருமை நண்பர்களே சீமானை விமர்சிப்பது வேதனையாக இருக்கிறது. அவரை விமர்சிக்கும் நண்பர்களில் பலர் இந்த இனத்துக்காக சொந்த வாழ்க்கையில் என்ன இழந்தார்கள் என்பதை நான் அறிவேன். அதே போலவே பல இழப்புகளை சந்தித்தவர் தான் சீமானும். சீமான் எத்தனை முறை சிறை சென்றார்? யாருக்காக சென்றார்? எதற்காக சென்றார்? என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

சீமானை களங்கப்படுத்தி காயப்படுத்தி களத்தில் இருந்து வெளியேற்றி விட்டால் அந்த இடத்தில் யார் வருவார்கள் என்று சிந்தியுங்கள். இன்றைக்கு ஆரியப் பெண்மணி ஜெயலலிதாவும், தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்களும் தமிழ்நாட்டில் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு தமிழர்களைப் பற்றிய அக்கறை என்ன இருக்கிறது? பா.ஜ.க.வை ஆதரித்தால் ஒன்றும் குடிமூழ்கி போவது கிடையாது. தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்கிறார், சீமான். ஆமாம் நமக்கான உரிமைக்காக ஜெயலலிதா, விஜயகாந்திகளிடம் போராடுவதை விட ஒரு தமிழனிடம் போராடிப் பெறுவதே மேல் என்பது என் கருத்து.

அமெரிக்காவுக்கே சென்று அந்நாட்டு அரசை நேருக்கு நேர் எதிர்க்கும் அருந்ததி ராய்தான் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பற்றி கருத்து சொல்ல மறுத்தார் என்பதை மறந்து விடாதீர்கள். நமக்கு நாமேதான் இங்கே துணை. எனவே நம் கைகளால் நம் கண்களை குத்திக் கொள்ள வேண்டாமே.. ப்ளீஸ்!!


சீமான் என்றில்லை தமிழினத்துக்காக களத்தில் நிற்கும் எந்தத் தமிழனையும் விமர்சனம் என்ற பெயரில் களங்கப்படுத்தாதீர்கள்.. ஏனெனில், Perfection is enemy of good.

-வே.வெற்றிவேல்சந்திரசேகர்

Saturday, February 11, 2012

நார்வே விருது அறிவிப்பு நிகழ்ச்சியில் நான் பேசியது...




கடந்த இரண்டு வருடமாக நடைபெற்று வரும் ‘நோர்வே தமிழ்த் திரைப்பட விழா’ மூன்றாவது முறையாக 2012, ஏப்ரல் 25ஆம் தேதி துவங்கி 29ஆம் தேதி வரை நோர்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற இருக்கிறது.

அழகர்சாமியின் குதிரை, வெங்காயம், வாகைசூட வா, கோ, ஆரண்ய காண்டம், எங்கேயும் எப்போதும், போராளி, மயக்கம் என்ன, பாலை, உச்சிதனை முகர்ந்தால், வர்ணம், மகான் கணக்கு, நர்த்தகி ஆகிய தமிழகத்தில் உருவான படங்களும், பிரான்சில் உருவான் தீரா நதி மற்றும் கனடாவில் உருவான ஸ்டார் 67 ஆகியப் படங்களும் விழாவில் திரையிடப்பட இருக்கின்றன.

இந்த அறிவிப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. திரைப்பட விழாவிற்கு தேர்வான படங்களின் நடிகர், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் இயக்குநர் பாலுமகேந்திரா. பாலை படத்தின் சார்பில் அதன் துணை இயக்குனரான நானும் பங்கேற்றேன். அதில் இயக்குநர் பாலுகேந்திரா பேசுகையில், “எது நல்ல படம்? என்று கேட்பது எது நல்ல உணவு? என்று கேட்பது போலவே. எவ்வளவோ சிறந்த உணவுகளை நாம் சாப்பிட்டு இருந்தாலும் அம்மா கையால் சாப்பிடும் உணவுதான் நமக்கு மிகவும் பிடிக்கும். ஏனேன்றால் அம்மா சமையலில் அவரது கரிசனமும் இருக்கும். அந்த உணவு நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் ஏற்றதாகவும் ஆரோக்யமாகவும் இருக்கும். அந்த வகையில் நமது கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவும் பார்ப்பவர்கள் மனதில் நச்சினை விதைக்காமலும் அவர்களுக்குள் ஒரு மிருகத்தை தட்டியெழுப்பாமலும் இருக்கும் அனைத்துப் படங்களுமே நல்ல படங்கள்தான்” என்றார். அது சரி அந்த நிகழ்ச்சியில் நான் என்ன பேசினேன் என்பதை சொல்லிவிடுகிறேன். “பாலை திரைப்படத்தைத் தேர்வு செய்த நார்வே திரைப்பட விருது குழுவினருக்கு பாலை குழுவினரின் சார்பில் நன்றிகள்” சொன்னேன்.

-வே.வெற்றிவேல்சந்திரசேகர்.

Saturday, January 28, 2012

முத்துக்குமார் சாதித்தது என்ன?




என் கைப்பேசிக்கு அந்த அழைப்பு வரும் போது நேரம் நண்பகல் 12 மணிக்கு மேல் (2009, சன.29) இருக்கும். அன்று வியாழக்கிழமை. அப்போது நான் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ செய்தியாளர். வார இருமுறை வரும் அந்தப் பத்திரிகையின் அந்த இதழுக்கான இறுதிக் கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.

என்னிடம் பேசிய ஒரு செய்தியாளர், ‘பெண்ணே நீ’ பத்திரிகையில் நிருபராகப் பணியாற்றும் செய்தியாளர் ஒருவர் இலங்கைப் பிரச்னைக்காக நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவன் வளாகத்தில் தீக்குளித்துவிட்டார் என்ற தகவலை சொன்னார். அந்த இதழுக்கான ‘வம்பானந்தா’வை (அரசியல் கிசுகிசு) மும்முரமாக எழுதிக் கொண்டிருந்த இணையாசிரிடம் போய் சொன்னேன். “சரியான பைத்தியகாரனா இருப்பான் போல,.. சரி.. எதுக்கும் எடிட்டரிடம் சொல்லிப் பாருங்கள். தீக்குளிப்பைப் பற்றி எழுத இடம் நிச்சயம் இருக்காது” என்றார். ஆசிரியரிடம் போனேன். பிழை திருத்திக் கொண்டிருந்தார். குனிந்த தலை நிமிராமல் சொன்னார்: “இந்த இஸ்யூல சேக்க முடியாது. வம்பானந்தாவில் முடிஞ்சா சேக்கலாம். எதுக்கும் போட்டோகிராபரை மட்டும் அனுப்பி வைங்க”.

திரும்பவும் இணையாசிரியரிடம் வந்தேன். “சரி, அப்போ போட்டோகிராபரை அனுப்புங்க.” என்றவரிடம், “நானும் போகட்டுமா சார்” என்றேன். “எதுக்கு வேஸ்ட்டா? செய்தி போட மாட்டாங்க. சரி சும்மா போயிட்டு வாங்க”.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நான் அடைந்த போது பகல் ஒரு மணி இருக்கும் என்று நினைக்கிறேன். மருத்துவக் கல்லூரி முதல்வர் அறை முன்பு பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சி நிருபர்கள், காமிராமேன்கள் குவிந்திருந்தார்கள். முதல்வர் “அந்தப் பையன் பேரு முத்துக்குமாராம். சிக்ஸ்டி பர்சேன்ட் பர்னிங். இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. எங்க ஸ்டாஃப் கிட்ட சொல்லிவிட்டேன். நீங்கள் போய் அந்தப் பையனை விஷ்வல் எடுத்துக்கலாம்” என்று அனுமதித்தார். அடுத்த சில வினாடிகளில் குறுகலான அந்த மாடிப்படிகளைக் கடந்து முதல் மாடியில் இரும்புக் கேட்டுக்கு முன் நின்றோம்.

அங்கிருந்த சில போலீஸ்காரர்களும், மருத்துவமனை ஊழியர்களும் “டீன் சொன்னாரு.. ஒவ்வொருத்தரா அனுப்பறோம். எடுத்திட்டு வந்திடுங்க” என்று ஒவ்வொருவராக அனுப்பிக் கொண்டிருந்தார். பத்து நிமிடங்கள் கடந்திருக்கும் திபுதிபு என போலீஸ் உயரதிகாரிகள் காவலர்கள் படை சூழ அங்கு வந்தார்கள்.

உள்ளே முத்துக்குமாரின் கருகிய தேகத்தை படம் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். இனி யாரும் படம் எடுக்க முடியாது என்பது எங்களுக்குப் புரிந்து போனது. அதற்கான காரணமும் வந்து சேர்ந்தது.

முத்துக்குமார் தீக்குளித்த இடத்தில் இருந்து அவன் எழுதிய கடிதம் கிடைத்திருக்கிறது. இனி கெடுபிடிகள் அதிகரிக்கும் என்பது புரிந்தது. அடுத்த சில நிமிடங்களில் முத்துக்குமார் இறந்து விட்டான்.

வெள்ளை துணி போர்த்தப்பட்ட முத்துக்குமார் உடல் மார்ச்சுவரியில் கொண்டு செல்லப்பட்டது.

(அப்போது எனக்குத் தெரியாது, அடுத்தாண்டு (2010) இதே நாளில் ‘துருப்புச் சீட்டு-முத்துக்குமாரின் வாழ்க்கை’ என்று இவனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக நான் எழுதியிருப்பேன் என்று. குமுதத்தில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், பொன்னுசாமி என்ற புனைப் பெயரில் அந்தப் புத்தகத்தை எழுதி முடித்தேன். இயக்குநர் ஜெனநாதன் முன்னுரை எழுதியிருந்தார். அந்தப் புத்தகம் இன்னும் முறையாக வாசகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படவில்லை என்ற வருத்தம் எனக்குண்டு. தஞ்சையில் நடந்து வரும் புத்தகக் கண்காட்சியில் சனவரி 29 முதல் துருப்புச் சீட்டு விற்பனைக்கு வைக்கப்படும்)

இனி, முத்துக்குமாரின் இறுதி நாளுக்கு வருவோம். நான் வைகோவின் உதவியாளர் பாலனைத் தொடர்பு கொண்டு விவரத்தைச் சொன்னேன். அதிர்ச்சி அடைந்த அவர், தலைவரிடம் சொல்கிறேன் என்றார். மார்ச்சுவரியில் வைக்கப்பட்ட முத்துக்குமாரின் சடலம் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. தலைவர்கள் வைகோ, ராமதாஸ், திருமாவளவன், பழ.நெடுமாறன் ஆகியோர் வந்திருந்தனர்.

அதே நேரத்தில், வழக்கறிஞர்கள் சிலர் பூவிருந்தவல்லி சாலையில் உள்ள பேங்க் ஆஃப் சிலோனை அடித்து நொறுக்கிவிட்டு நேராக மார்ச்சுவரி முன் வந்து கூடினர். முத்துக்குமாரின் மரணசாசனத்தின் நகல்கள் எனக்குக் கிடைத்தன. அதைப் படிக்கத் தொடங்கியதும், வாழ்வில் அதற்கு முன்பு எப்போதும் ஏற்பட்டிராத உணர்ச்சி! கைகள் நடுநடுங்க படித்துக் கொண்டிருந்தேன்.

அது வெறும் கடிதம் அல்ல, ஆயுதம், நகலாயுதம் என்பதை அறிந்த போது நான் சிலிர்த்துப் போனேன். ‘என்னுடைய உடலை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துங்கள்‘ என்று அறைகூவல் விடுத்த முத்துக்குமாரை நினைக்க நினைக்க அழுகையும் நம் இனத்தை இப்படியொரு நிலைக்குத் தள்ளியவர்களை நினைக்க ஆவேசமும் வந்தது.
கண்களில் முட்டிக் கொண்டு வந்த கண்ணீரும், படபடத்த மனதும் கடிதத்தைத் தொடர்ந்து படிக்க விடாமல் செய்தன.

மார்ச்சுவரி வாசலில் காத்திருந்த இயக்குநர் கற்றது தமிழ் ராமிடம் கடிதத்தின் இன்னொரு நகலைக் கொடுத்தேன்.

அலுவலகத்தில் இருந்து ஆசிரியர் பேசினார். முத்துக்குமார் எழுதியிருப்பதை சுருக்கமாகச் சொன்னேன். உடனே வந்து நியூஸை ஃபைல் பண்ணும்படி கேட்டார். அலுவலகத்துக்குப் போய் என் மடிக் கணினியில் மளமளவென செய்தியை தட்டச்சு செய்தேன். அப்போதுதான் கடிதத்தை முழுவதும் படிக்க முடிந்தது. அப்படியொரு உணர்ச்சி வயப்பட்ட நிலையில் எப்படி அந்தச் செய்தியை எழுதி முடித்தேன் என்பது இன்னொருவரை பெரிய ஆச்சர்யம் தான்.
குமுதம் கார்டூனிஸ்ட் பாலா கடித நகலை வாங்கிப் படித்தவர். அதிர்ச்சி விலகாமல், “என்ன வெற்றி, இப்படியொரு பையன் வாழ்ந்திருக்கான்” என்றார்.

இரவு எட்டு மணிக்கு கொளத்தூரில் இருந்தேன். இயக்குநர் ராமின் நண்பர் (மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்) திருமுருகன்காந்தி, முத்துக்குமாரின் மரண சாசனத்தை நகல் எடுத்து வினியோகித்துக் கொண்டிருந்தார். கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்த முத்துக்குமாரின் முகத்தைப் பார்த்தேன்.

அதற்குப் பின் நடந்ததை எல்லோரும் அறிவோம். முத்துக்குமார் தன்னுடைய உடலை துருப்புச் சீட்டாக்கி விட்டுப் போனான். அவன் எதிர்பார்த்த போர் நிறுத்தம் என்பது நிறைவேறா கனவாகி, முள்ளிவாய்க்காலுக்கும் முள்வேலிக் கம்பிகளுக்கும் நம் சொந்தங்களை கொடுத்துவிட்டு கையறு நிலையில் நிற்கிறோம்.

முடிவல்ல இது. முத்துக்குமார், நமது போராட்டத்தின் தொடக்கம். அவன் ஏற்படுத்திய தாக்கம் தமிழ்ச் சமூகம் உள்ளளவும் நிலைக்கும். அவனது இறுதி ஊர்வலத்தில் கூடிய கூட்டமே அதற்கு சாட்சி! முல்லைப்பெரியாறு உரிமை மீட்புப் போரில் தமிழக எல்லையில் தன்னெழுச்சியாக ஒன்று திரண்ட லட்சக்கணக்கான தமிழ் மக்கள் முகங்களில் முத்துக்குமாரும் தெரிந்தான். அணுஉலை எதிர்ப்பு போராட்டங்களில் முன்னின்ற இளைஞர்கள் மனதில் ஏந்தியிருந்தது, முத்துக்குமாரின் அறிவாயுதத்தையும் தான்.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் அநியாயமாக சிறையில் இருக்கும் மூன்று தமிழர்களின் தூக்குத் தண்டனைக்கு எதிராக இத்தனை ஆண்டுகளாக இல்லாத கூட்டம் இப்போது கூடுவதற்கும் இந்தத் ‘துருப்புச் சீட்டு’தான் காரணம்.

ஆம்!! ஆங்காங்கே சிதறிக் கிடந்த உணர்வாளர்களை ஒன்று சேர்த்தவன், முத்துக்குமார். மொழி உணர்வு என்பது குறுகிய மனப்பாக்கு என்பதை உடைந்தெறிந்து இன்றை இளைய தலைமுறையினர் இடையேயும் தாய்த் தமிழ்ப் பற்றை விதைத்தவன், முத்துக்குமார். இப்போதெல்லாம் இளைஞர்கள் குறிப்பாக திரைப்பட உதவி இயக்குநர்கள் தமிழ் உணர்வோடு பேசுவதும், இயங்குவதும் முத்துக்குமார் போட்டுத் தந்த பாதையில் தான்.

வெறும் உணர்வில் மட்டுமல்ல அறிவுத் தளத்தில் அவன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப்பெரியது. தமிழ்நாட்டில், தமிழ் இளைஞர்கள் இடையே ஏற்பட்டிருக்கும் பரந்த வாசிப்புப் பழக்கத்திற்கு முத்துக்குமார் ஓர் உந்து சக்தி. அவன் எழுதிய கடிதத்தில் தெறிந்த விஷய ஞானம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் அறிவுத் தேடலை தொடங்கி வைத்திருக்கிறது. முத்துக்குமார் மரணத்துக்கு முன்னும் பின்னும் தமிழகத்தில் பதிப்பான விற்பனையான புத்தகங்களின் எண்ணிக்கையை முறையாக ஆய்வு செய்தால் இந்த உண்மை நிரூபணம் ஆகும்.

முத்துக்குமார் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் நான் வாழும் வரை என்னோடும் எனக்குப் பின்னால் என் மூலம் என் ரத்த உறவுகளோடும் தொடரும். இப்படி ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திலும் முத்துக்குமார் வாழ்ந்து கொண்டுதான் இருப்பான். அவன் ஏற்றிய விளக்கு அணையாது. இந்த விளக்கு பெரும் தீயாய் மாறும். அந்த நெருப்பில் தமிழினத்தின் மீது படர்ந்திருக்கும் இருள் உடையும்!!

‘துருப்புச் சீட்டு-முத்துக்குமார் வாழ்க்கை’ புத்தகம் வேண்டுவோர்
தொடர்புக்கு-மு.நியாஸ் அகமது, 098945 61336

Sunday, December 25, 2011

நற்குணங்களை மலையாளிகளிடம் கற்றுக் கொள்ளுங்கள் தமிழர்களே…

“தமிழன் ஒன்றொரு இனமுண்டு. தனியே அவனுக்கொர் குணமுண்டு” என்ற வரிகளை இப்போதுதான் சரியாக புரிந்து கொண்டிருக்கிறேன். அப்படி என்ன குணம் இவனுக்கு இருக்கிறது?
சக தமிழன் யாராவது முன்னேறினால் அவனது காலைப் பிடித்து இழுத்து கீழே விடுவது, சக தமிழன் மீது பொறாமையில் பொங்குவது, இன உணர்வும், மொழி உணர்வும் இருப்பதாக மார் தட்டிக் கொண்டு மேற்படி உணர்வுகளை சொந்த நலனுக்காக விற்பது? இதெல்லாம் தான் தமிழனின் குணங்களாக இருக்கிறது. அறிவை வளர்த்துக் கொள்ளாமல் எல்லாம் தெரிந்தது போல், வெற்று வார்த்தைகளால் பீற்றிக் கொள்வது தமிழனின் கூடுதல் பெருமை!
தமிழர்களின் வசைகளுக்கு இன்று ஆளாகியிருக்கும் மலையாளிகளுக்கு மேற்படி குணங்களில் ஒன்றாவது இருக்கிறதா என்று, என் அனுபவ அறிவைக் கொண்டு யோசிக்கிறேன். ‘ம்ம்ஹும்’. மலையாளிகளிடம் தமிழனிடம் இருக்கும் மேற்படி குணங்களில் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சும்மா, ஏதோ விரக்தியில் இப்படி எழுதுகிறேன் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். எதையும் ஆதாரத்துடன் பேசுவதுதான் எனக்குப் பிடிக்கும்.
அந்த ஆதாரங்களை பட்டியல் போட்டு விளக்கியிருக்கிறேன். இதைப் படித்து விட்டாவது தமிழன்-மலையாளி இவர்களில் உயர்த்தவர் யார் என்பதை புரிந்து நடந்து கொள்ளுங்கள். இந்த வித்தியாசத்தை தஞ்சாவூர் கல் வெட்டு அருகில் வைத்து உட்கார்ந்து கொண்டால் நமக்குப் பின்னாடி வரும் சந்ததியினரும் பார்த்துப் புரிந்து நடந்து கொள்வார்கள்!



(க்ளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கவும்)

இந்தப் பட்டியலில் சேர்க்க மறந்த இன்னொரு விஷயம். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவில் உள்ள தமிழகத் தொழிலாளர்களை அந்த மாநில காவல்துறையினரும் சேர்ந்து தாக்குகிறார்கள். தமிழ்நாட்டில் மலையாள பெரு நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தும் தமிழர்களை தமிழ்நாட்டு காவல்துறையினர் தாக்குகிறார்கள். மொழிப் பற்றில் கேரளா காவல்துறையினருடன் தமிழகக் காவல் துறையினரை ஒப்பிட்டுப் பாருங்கள்.

இப்போதைக்கு இந்தப் பட்டியல் போதும் என்று நினைக்கிறேன். இனிமேலாவது மலையாளிகளைப் பற்றி தவறாகப் பேசுவதை நிறுத்தி விட்டு, நம்மிடம் உள்ள குறைகளை களைவோம்.

-வே.வெற்றிவேல் சந்திரசேகர்

Wednesday, December 21, 2011

அணை போட முடியாத தமிழர் விரோதம்!!


“அணையை உடைப்போம்” என்கிறார்கள். தடுத்தால், “தமிழனின் மண்டையை உடைப்போம்” என்கிறார்கள். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அணை உடையப் போகிறது என்கிற கேரள அரசின் பொய்யை மலையாள ஊடகங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதே நேரத்தில் உண்மையை உரத்துச் சொல்ல வேண்டிய இடத்தில் உள்ள தமிழ்நாட்டு ஊடகங்களின் நிலை என்ன? (வேறொரு காலகட்டத்தில் எழுதி ஓர் இதழில் பிரசுரமான இக்கட்டுரையை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஏற்பட்ட அனுபவத்தை சேர்த்து மீண்டும் மறுபதிப்பு செய்கிறேன்)
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று சொல்லிக் கொள்வதில் நமக்குத்தான் எத்தனை பெருமை! நகை வியபாரம், துணி வியபாரம், வங்கித்துறை என அயலார்கள் ஆதிக்கம் பெருகி வருவது கண்கூடு. ஆனால் யாருக்கும் தெரியாமல் கொல்லைப் புறத்து வழியாக தமிழகத்தில் ஊடகத் துறையில் வெளியார்கள் வேகமாக படையெடுத்துக் கொண்டிருப்பது பரவலாக அறியப்படவே இல்லை.
ஈழத்தில் நான்காம் கட்ட இறுதிப் போர் நடந்த போது அங்கே அரங்கேறிய மனித குல அவலங்களையும் அதைக் கண்டித்து தமிழகத்தில் எழுந்த எழுச்சியையும் இங்குள்ள ஊடகங்கள் சரியாகப் பதிவு செய்யவில்லை என்றொரு மனக்குறை நம்மெல்லோருக்கும் உண்டு. ஆனால் அப்படி தமிழர்கள் நலன் இருட்டடிப்பு செய்யப்பட்டதன் பின்னணியில் இங்குள்ள தேசிய மற்றும் பிராந்திய ஊடகங்களில் முக்கியப் பொறுப்புகளில் தமிழர்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டிருப்பதும், இங்கெல்லாம் அயலார்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதுமே காரணங்கள். இதே காரணங்களின் பின்னணியில் தான் இன்றைக்கு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஆங்கில தேசிய ஊடங்கள் கேரள அரசுக்கு ஆதரவான பொய்யான செய்திகளை பரப்பி வருகிறது. (ஆதாரம்: http://keetru.com/index.php?option=com_content&view=article&id=17719).
தமிழ்நாட்டில் உள்ள தினமலர் வெளிப்படையாகவே தமிழர் விரோத போக்கைக் கடைப்பிடிப்பது எல்லோரும் அறிந்ததே. பெரியாரை இன்றுவரையிலும் ஈவெரா என்றும் அறிஞர் அண்ணாவை அண்ணாதுரை என்றும் எழுதுவதன் மூலம் தங்களுடைய தமிழர் விரோதப் போக்கை பறை சாற்றி வருகின்றனர். (இவர்கள் இருவரும் தமிழர்களுக்கு அப்படி என்ன நியாயம் செய்து விட்டார்கள் என்று கேட்டால், “அது வேற டிபார்ட்மெண்ட்’’ என்று வடிவேலு பாணியில் தான் பதில் சொல்ல முடியும்!)
தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் திரைப்பட இயக்குநர்களை சினிமாக்காரர்கள் என்று குறிப்பிடுவதும் (எ.கா: சினிமாக்காரர் மணிவண்ணன், சினிமாக்காரர் பாரதிராஜா என்று குறிப்பிடுகிறார்கள். “சினிமாக்காரர் பாலச்சந்தர் சினிமாக்காரர் மணிரத்னம் என்று எழுதுவீர்களா” என்று தினமலர் செய்தியாளர் ஒருவரிடம் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலில்லை)
தினமலரின் சென்னைப் பதிப்பில் முக்கிய பொறுப்பில் பிகாரைச் சேர்ந்தவர் உள்ளார். (“ ‘தமிழ்நாடு என்று எழுதாதே. இவனுகளுக்கு என்ன நாடு வேண்டிக் கிடக்கு? தமிழகம் என்று எழுது’ என்று சக ஊழியர்களிடம் அவர் ஆவேசப்படுவதை அவ்வப்போது பார்க்க முடியும்” என்கிறார்கள் அங்குள்ளவர்கள்)
அதேபோல் தினமலரின் முக்கிய பொறுப்புகளில் மலையாளிகளை நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். உதகை தினமலரில் செய்தியாளராக இருந்த ஒரு மலையாளியை மலையிறக்கி தினமலர் பதிப்புகளில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. அவரது முற்றும் முதலுமாக தமிழர்களுக்கு எதிரானவர். சக ஊழியர்களில் யாருக்காவது தமிழுணர்வு உண்டு என்பது தெரிந்தால் அவர்களுக்கு தொடர்ந்து மனரீதியான தொந்தரவுகள் அளித்து ஓரம் கட்டுவார்.
அதுமட்டுமின்றி தினமலருக்கு புதிதாக செய்தியாளர் பணிக்கு வரும் தமிழ் இளைஞர்களில் யாருக்காவது தப்பித் தவறியும் தமிழுணர்வு இருந்துவிட்டால் அதை லாவகமாகக் கையாண்டு அந்த உணர்வை அவர்களுக்குள்ளேயே குழி தோண்டிப் புதைக்கும் வேலைகளை செவ்வனே செய்து முடித்து விடுவார்கள்.
இன்றைக்கு தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியினால் என்டிடிவி, டைம்ஸ் நவ், ஹெட்லைன்ஸ் டூடே, என்டிடிவி இந்து என சுமார் பத்துக்கும் மேற்பட்ட தேசிய ஊடகங்களான (தொலைக்காட்சிகள்) ஆங்கில ஊடகங்கள் தமிழ் நாட்டிற்குள் நுழைந்துவிட்டன. இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் செயல்படும் இந்தச் செய்தி தொலைக்காட்சிகளில் செய்திப் பிரிவுகளிலும், செய்தியாளர் பணிகளிலும் அந்தந்த மாநிலத்தவர் களுக்கு முன்னுரிமை கொடுத்து பணியமர்த்தி உள்ளது.
ஆனால் தமிழகத்தில் மட்டும் நிலை தலைகீழ். எந்தச் செய்தியைப் போடுவது, எதை விடுவது என்கிற முக்கிய முடிவுகள் எடுக்கும் பதவிகளில் பெரும்பாலும் அயலாரையே (குறிப்பாக மலையாளிகளையே) பணியமர்த்துகின்றனர். இது தற்செயலாக நடப்பதில்லை. திட்டமிட்டே ஊடகங்களில் இப்படியொரு நிலை உருவாக்கப்படுகிறது. உதாரணமாக சேலம், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேசிய ஆங்கில செய்தித் தாள்கள், செய்தித் தொலைக்காட்சிகளின் முக்கியப் பொறுப்புகளில் மட்டுமின்றி செய்தியாளர்களாகவும் மலையாளிகளே நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
அந்த ஊர்களில் பணியாற்ற தமிழ்த் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ஆனால், அவருக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. ஆங்கிலமும் மலையாளமும் மட்டுமே அவருக்குத் தெரியும். சென்னையைத் தவிர்த்து பிற நகரங்களில் பெரும்பாலான அரசு அதிகாரிகள் தமிழில்தான் பேட்டி அளிப்பார்கள். ஆங்கிலத்தில் கேள்வி கேட்கப்பட்டாலும் தமிழில்தான் பதிலளிப்பார்கள். இது தெரிந்தும் தமிழ்த் தெரியாதவர்களை தேசிய ஆங்கில ஊடகங்கள் அங்கே பணியமர்த்துவதன் நோக்கம் என்ன?
அதே செய்தி தொலைக்காட்சியின் கேரளாவின் அனைத்து நகரிலும் மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள்.
அதுமட்டுமல்ல கேரளாவில் எந்த தேசிய ஊடகத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் முக்கியப் பொறுப்புகளிலோ செய்தியாளராகவோ பணியமர்த்தப்படுவதில்லை. ஆனால் தமிழகத்தில் உள்ள இந்தச் செய்தி தொலைக்காட்சிகளில் முக்கியப் பொறுப்புகளில் மட்டுமின்றி செய்தியாளர்கள் பணிகளிலும் பெரும்பாலும் அயலாரையே நியமித்திருக்கிறார்கள். இதை வீட்டில் அமர்ந்தபடி தேசிய செய்தி சேனல்களில் வரும் தமிழ்நாட்டுச் செய்திகளை கவனித்தாலே தெரிந்து கொள்ள முடியும்.
ஆங்கிலம் தெரிந்த (இத்தனைக்கும் மலையாளிகளை விட தமிழர்கள் மிகச்சரியாக ஆங்கிலம் பேசக்கூடியவர்கள்) தகுதியான தமிழர்கள் பத்திரிகைத் துறையில் எத்தனையோ பேர் இருக்கும் போது தேசிய ஆங்கில ஊடகங்கள் அவர்களுக்கு வாய்ப்பளிப்பது கிடையாது. அப்படி வாய்ப்பளிக்கப்பட்டு அங்கே பணிபுரியும் ஊழியர்களும் அங்கே நடக்கும் தமிழர் விரோத போக்கால் நொந்து கொண்டிருக்கிறார்கள். (ஆதாரம்: கீற்று இணையதளத்தில் வெளியாகியிருக்கும் ராதிகா கிரி கட்டுரை)
செய்தி தொலைக்காட்சிகள் என்றில்லை தமிழில் ஒளிப்பரப்பாகும் பொழுது போக்கு தொலைக்காட்சிகளிலும் இதே நிலைதான். அயலாளர்கள் அங்கே கூடி கும்மி அடிப்பதால் தான், நடனப் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென்றாலும் கூட பரதநாட்டியம் தெரிந்திருக்க வேண்டும் என்றும் பாட்டுப் போட்டிகளிலும் பங்கற்க கர்நாடக இசை தெரிந்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்படுகிறது. நடனப் போட்டி அவர்கள் ஆடப்போவது ஆபாச அசைகளுடன் சினிமாப் பாடல்களுக்குத்தான். பாட்டுப் போட்டிகளில் பாடப் போவதும் சினிமாப்பாடல்கள் தான். அதற்கு எதற்கு பரதமும், கர்நாடக சங்கீதமும்? தமிழ்நாட்டில் சொற்ப மக்களால் புரிந்து கொள்ளப்படும் இந்தக் கலையை பொதுவானதாக உருவாக்க முயல்வது, தமிழ்த் தொலைக்காட்சிகளில் உள்ள அயலார்களின் வேலையே!
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு எதிரான போக்கை உருவாக்குவது என பல தளங்களில் மறைமுகமான வேலைகள் தொடர்ந்து நடக்கின்றன. இதில் ஒன்றுதான் ஊடகங்களில் அயலார்களின் ஆதிக்கம்.
பெருகி வரும் தேசிய ஊடங்களும் ஊடங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு அயலார்கள் ஆக்கிரப்பதும் தமிழர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை உணர்த்தி வருகின்றது. ஈழப் போரிலும், முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் இது அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. இதை சரிசெய்ய கடமை தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு இருக்கிறது. (தமிழ்த் தேசியர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதற்கே நேரம் போததில்லை என்பது வேறு விஷயம்).
ஆங்கில பத்திரிகைகள் மற்றும் ஊடங்களுக்குள் தமிழுணர்வு மிக்க தகுதியான தமிழர்களை நுழைய வைப்பதன் மூலம் தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள ஆபத்தைத் தடுத்து நிறுத்த முடியும். அதற்கான பணிகளில் தமிழுணர்வாளர்கள் கமுக்கமாக ஈடுபட வேண்டும்.


-வே.வெற்றிவேல் சந்திரசேகர்