Friday, February 26, 2010

விண்ணைத் தாண்டி வரவேண்டாம் ப்ளீஸ் கௌதம் மேனன்!


விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை நேற்று பார்க்க நேர்ந்தது. படம் ஆரம்பித்த போதே தெரிந்து விட்டது, இது வழக்கமான வழவழப்பான கௌதம் மேனன் படம் என்று. படத்தில் உதவி இயக்குநர் வாய்ப்புத் தேடுகிறார் கார்த்திக் (சிம்பு). மலையாள கிறிஸ்துவ குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டில் சிம்பு தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேல் போர்ஷனில் வீட்டு உரிமையாளர் வசிக்கிறார். அவரது மகள் தான் ஜெஸ்சி (த்ரிஷா) . இந்தப் படத்துக்கும் வாரணம் ஆயிரம் படத்துக்குமான ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்க முடிந்தவர்கள் படத்தின் டிக்கெட்டுடன் உடனடியாக விண்ணப்பித்தால் த்ரிஷாவுடன் ஒருநாள் தங்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று விளம்பரம் செய்யலாம்.

கௌதம் மேனன் நிறைய காதலித்திருக்கலாம். தன் காதல் அனுபவங்களை அவர் படமும் எடுக்கலாம். ஆனால் அதற்காக அடுத்தடுத்து எத்தனை படங்களில் ஒரே கதையைப் பார்ப்பது? சிம்புவை அழகாகக் காட்டியிருக்கிறார். த்ரிஷாவையும்தான். சென்னையில் இப்படியொரு தெரு இப்படியான மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள்? எதார்த்தத்தை விட்டு விலகியே நிற்கிறது இந்தப் படம். நான் ஏன் உன்னைக் காதலித்தேன் என்று சிம்புவும், நான் ஏன் உன்னுடன் ஓடி வரமாட்டேன் என்று த்ரிஷாவும் படம் முழுவதும் விளக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

இதெல்லாம் படத்தில் வெளிப்படையாகத் தெரியும் எரிச்சல்கள். ஆனால் கமுக்கமாக சில வேலைகளை தெரிந்தே செய்திருக்கிறார், கௌதம் மேனன். காக்க காக்க ஒளிப்பதிவாளர் என்ற கதாப்பாத்திரத்தில் கௌதம் மேனனின் படங்களில் வழக்கமாக வரும் ஒரு நடிகர் நடித்திருக்கிறார். என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே என்று நிஜ ஒளிப்பதிபாளர் ஆர்.டி.ராஜசேகர் கேட்காமல் விட்டால் ஆச்சரியம் தான். அந்தளவுக்கு அவரைப் போட்டுத் தாக்கியிருக்கிறார்கள். சிம்புவின் காதலுக்கு அவர் உதவுகிறார், உதவுகிறார், உதவுகிறார் உதவிக் கொண்டே இருக்கிறார். விளக்குப் பிடிக்காதது தான் பாக்கி என்று நினைத்தால் கடைசியில் தன் ஆடம்பரமான வீட்டை அவர்கள் தங்குவதற்குக் கொடுத்து அதையும் செய்துவிடுகிறார். உங்களுக்கு வேறு வேலையே இல்லையா ராஜசேகர்? இத்துடன், மலையாளிகளைத் தூக்கோ தூக்கென்று தூக்குகிறார், இந்த மேனன். கே.எஸ்.ரவிக்குமார் மூலம் தமிழ் இயக்குநர்களை திறமையற்றவர்கள் என்று காட்ட முயற்சிக்கிறார். (கே.எஸ்.ரவிக்குமார் ஆகச்சிறந்த படங்களை செய்துவிட்டார் என்று நான் சொல்லவில்லை) அமீர் உலகப் படமொன்றினை சுட்டுப் (யோகி) படம் எடுத்ததற்காக கோபித்துக் கொண்ட இதே கௌதம், டிரயில்டு என்ற ஆங்கிலப் படத்தில் இருந்து பச்சைக்கிளி முத்துச்சரத்தை அப்படியே சுட்டதை ஒப்புக் கொள்ளவே மறுக்கிறாரே ஏன்? மலையாளிகள் உசத்தி, தமிழர்கள் என்றால் கேவலமா? ஏதோ கேரளாவில் இருப்பவர்கள் எல்லாம் கையில் அரிவாளோடு சுற்றும் வீரர்கள் போலும் காக்க காக்க படத்தின் காமிரா மேன் அவர்களிடம் அடிவாங்கிக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வருவது போன்றும் காட்டியிருக்கிறார்.

இந்தக் கருத்துக்குள் எல்லாம் போகாமல் படத்தைப் பார்த்தாலும், ஒரே காமெடிதான். படத்திற்கு மூன்று கிளைமாக்ஸ். முடிந்து விடும், முடிந்து விடும் என்று எழ முயற்சி செய்தால் திடீரென பாட்டைப் போட்டு கொல்கிறார்கள். அடியே கொல்லுதே பாடல் போலவே இந்தப் படத்தில் மூன்று நான்கு பாடல்கள் வருகிறது. சென்னையில் காதலி சிரித்தால் அமெரிக்காவில் வெள்ளைக்காரிகளுடன் நடனம் ஆடுகிறார்.பாடுகிறார். கடவுளே.. கடைசியில் தன் காதல் தோல்வி வரலாற்றை ஜெஸ்சி என்ற பெயரில் படம் எடுக்கிறார்கள். வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொண்ட த்ரிஷா இயக்குநர் சிம்வுடன் அமர்ந்து அந்தப் படததைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறார். மொத்ததில் இயக்குநர் விக்ரமனுக்கும், கௌதம் மேனனனுக்கும் என்ன வித்தியாசம் என்றே புரியவில்லை. விக்ரமனுக்கு ஏற்பட்ட நிலைமை கௌதமனுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. திறமையான இந்தத் தமிழ் இயக்குநரிடம் நாம் நிறைய வித்தியாசமான படங்களை எதிர்பார்க்கிறோம்.

Wednesday, February 17, 2010

சீக்கியப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த காங்கிரஸ்காரர்கள்தான் பயங்கரவாதிகள்!



‘‘இந்திராகாந்தியைக் கொன்ற சீக்கியரை பஞ்சாபில் தியாகியாகக் கொண்டாடுகிறார்கள். அதை எதிர்க்கத் துப்பில்லாத தமிழக காங்கிரஸார், ராஜிவ் கொலை வழக்கில் கு ற்றம்சாட்டப்பட்டு, 19 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் நளினி போன்றோரை விடுதலை செய்யக் கூடாது என்று சொல்கிறார்கள்.இப்படிச் சொல்ல அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை’ என்று புதிய சூட்டைக் கிளப்பியிருக்கிறார்கள் இளந்தமிழர் இயக்கத்தினர்.

இதுகுறித்து இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருணபாரதியிடம் பேசினோம். முதலில் நளினி விவகாரம் பற்றிப் பேசினார் அவர்.

‘‘ஆயுள் தண்டனை என்பதை 14 ஆண்டுகள் என்று கிரிமினல் நடைமுறைச் சட்டம் வரையறை செய்துள்ளது. இந்த வரையறையை மீறி, தமிழக அரசு பத்தாண்டுக் காலம் தண்டனை அனுபவித்த எத்தனையோ ஆயுள் தண்டனைக் கைதிகளை தலைவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்துள்ளது. ஆனால், 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தும் கூட, ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி உள்ளிட்டோருக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. இதற்கு அரசியலைத் தவிர வேறு முறையான சட்டக் காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

நளினியின் மனமாற்றம், தாயின்றி வளரும் அவரது குழந்தை உள்ளிட்ட மனிதநேயக் காரணிகளை முன்வைத்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்.அவரை மட்டு மின்றி பத்தாண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். சிறை, மனிதர்களை மன மாற்றத்திற்கு உள்ளாக்கி திருத்த வே ண்டுமே தவிர, தண்டிப்பதற்கான சித்திரவதைக் கூடமாகிவிடக் கூடாது என்பதே எங்கள் இயக்கம் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளின் வேண்டுகோள்.

நளினியை விடுதலை செய்யக் கூடாது என்று சொல்ல தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாருக்குமே அருகதை கிடையாது. சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று சொல்ல இவர்கள் என்ன நீதிபதிகளா? நளினி விடுதலை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், நளினியை விடு விக்கக்கூடாது என்று
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றவர்கள் கூறுவது, நீதிமன்ற அவமதிப்பாகும்.

‘ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடையவராகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நளினிக்கு, அந்தக் கொலை நிகழ்த்தப்பட இருப்பது குறித்து பின்புதான் தெரியும்; தெரிந்த நிலையிலும் கூட அவரால் அதிலிருந்து விடுபட முடியாத சூழ்நிலை இருந்தது’ என்று நீதிபதி தாமஸ் அவ்வழக்கின் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரஸ் புத்திசாலிகள் யாராவது ஒருமுறையாவது படித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால், நீதிபதியின் தீர்ப்பை அப்படியே புறம்தள்ளிவிட்டு, அந்தத் தீர்ப்பை அவமதிக்கும் விதமாக, நளினிதான் ராஜிவ் காந்தியைக் கொலை செய்தார் என்பதுபோல் ஈ.வி.கே.எஸ். இள ங்கோவன் போன்ற தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சித்திரிக்கிறார்கள்.

நளினியை ‘தீவிரவாதி’ என்று, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து பேசி வருகிறார். நளினியா தீவிரவாதி? இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டபோது சீக்கியர்களைப் படுகொலை செய்து, சீக்கியப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த காங்கிரஸ்காரர்கள்தான் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்! அந்தச் சம்பவத்தை ஒருமுறை முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நியாயப்படுத்திக் கூட பேசியிருக்கிறார். கட்சிக்குள்ளேயே ஒற்றுமையைக் கடைப்பிடிக்கத் தெரியாமல் பதவி, பணத்திற்காக கோஷ்டிகள் அமைத்துச் சண்டையிடும் காங்கிரஸ்காரர்கள், தேச ஒற்றுமையைப் பற்றிப் பேசுவது கேலிக்கூத்து!

பல்கலை மாணவிகள் மூவரை உயிருடன் எரித்துக் கொன்றவர்கள், ரிமோட் குண்டு மூலம் சிவகங்கை தி.மு.க. நகராட்சித் தலைவர் முருகனைக் கொன்றவர்கள், முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, தா.கிருட்டிணன் போன்றவர்களைப் படுகொலை செய்தவர்கள், மதுரை தினகரன் அலுவலகத்தை எரித்து அங்கிருந்த மூன்று ஊழியர்களைக் கொன்றவர்கள் எல்லாம் இன்று கட்சி மற்றும் அரசுப் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள். சிலர் சமூக அந்தஸ்துடன் உலா வருகிறார்கள். அப்படியிருக்க யாரைப் பார்த்து தீவிரவாதி என்கிறார், இளங்கோவன்?

காங்கிரஸ்காரர்கள் ‘அன்னை’ என்று தங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை, அவரது பாதுகாவலர் பியாந்த் சிங் சுட்டுக் கொன்றார். அந்த பியாந்த் சிங்கை ‘வீரத்தியாகி’ என்று போற்றி எழுதி, பஞ்சாப்பில் உள்ள சீக்கிய மதப்பீடமான பொற்கோயிலில் அவரது உருவப்படம் வைக்கப்பட்டு ள்ளது. ‘1984-ம் ஆண்டு பொற்கோயில் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்கும் விதமாக, இந்திராகாந்தியைக் கொல்லும்போது உயிரிழந்த சீக்கிய வீரத்தியாகி, பியாந்த் சிங்’ என்று அந்தப் புகைப்படத்தின் கீழ் எழுதி வைத்திருக்கிறார்கள். பியாந்த் சிங் புகைப்படம் இந்த வாசகங்களுடன் பொற்கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் தகவல் எங்களுக்குக் கிடைத்ததும், எங்கள் இயக்கத் தோழர் ஒருவர் நேரில் சென்று பல தடைகளைத் தாண்டி அதைப் புகைப்படம் எடுத்து வந்திருக்கிறார். (அந்தப் புகைப்படத்தைக் காட்டுகிறார்)

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில் தொடர்புடையவர் என்கிற குற்றச்சாட்டுக்காக நளினியை வாழ்நாள் முழுவதும் சிறையில் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் துணிவிருந்தால், சீக்கிய மதப் பீடத்தின் இந்தச் செயலைக் கண்டித்து பியாந்த் சிங்கின் புகைப்படத்தை நீக்கக் கோரி ஓர் அறிக்கையாவது விட முடியுமா? அதற்கான துணிச்சல் அவர்களுக்கு இருக்கிறதா? சீக்கியர்களிடம் ஷூவால் அடிவாங்கியும் கூட, அவர்களுக்கு எதிராகப் பொங்காத இவர்கள், தமிழர்களுக்கு எதிராக மட்டும் குமுறுவது ஏன்? தமிழர்கள் என்றால் இளிச்சவாயர்களா? தமிழர்களின் தந்தை பெரியாரையே அவமதித்துப் பேசிவிட்டு இவர்கள் தமிழகத்தில் நடமாட முடியும் என்கிற நிலை இருக்கும் போது வேறு என்ன சொல்ல?

பொற்கோயிலில் வைக்கப்பட்டுள்ள பியாந்த் சிங்கின் புகைப்படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வாசகத்தையும் தமிழகம் முழுக்க எங்கள் இளந்தமிழர் இயக்கம் பரப்புரை செய்ய உள்ளது. நளினி விடுதலையை எதிர்க்கும் காங்கிரஸ்காரர்கள் முடிந்தால், அதைத் தடுத்துப் பார்க்கட்டும்!’’ என்று முடித்துக் கொண்டார் அருணபாரதி.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் பேசினோம். ‘‘நளினி ஒன்றும் சின்னப் பிள்ளை இல்லை. முருகன் உடனிருந்த தொடர்பில் பயங்கரவாத அமைப்புடன் ஐக்கியமாகி இளந்தலைவர் ராஜிவ்காந்தியை அவர் கொன்றிருக்கிறார். பஞ்சாப் பொற்கோயிலில் என்ன வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது.

தமிழக காங்கிரஸ்காரர்கள் தமிழகப் பிரச்னையில் மட்டும்தான் தலையிட முடியும். உலகில்(!) நடக்கும் பிரச்னைகளில் எங்களால் தலையிட முடியாது. இவர்கள் கேட்பது நளினியை எதிர்க்கும் நீங்கள், பின்லேடனை எதிர்ப்பீர்களா என்பது போல உள்ளது. பங்களாதேஷில் முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் தூக்கிலிடப்பட்டனர். அதனடிப்படையிலேயே நளினி விடுதலையை நாங்கள் எதிர்க்கிறோம்’’ என்றார் இளங்கோவன்.
- நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

Friday, January 29, 2010

திருப்பூர் புத்தகக்கண்காட்சியில் ‘இனப்படுகொலையில் கருணாநிதி‘ நூல் வெளியீடு





இளந்தமிழர் இயக்க வெளியீடான இனப்படுகொலையில் கருணாநிதி ஆதாரங்களுடன் ஒரு குற்றப்பத்திரிகை நூல் திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வந்துள்ளது.

நான்காம் கட்ட இறுதிப் போர் தொடங்கியதும், மாங்கொல்லை கூட்டத்தில் பொங்கியெழுந்த கருணாநிதி, சிறிது சிறிதாக சுருதி குறைத்து, பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி, நானே ஒரு அடிமை, காலை டிபனுக்கும், மதிய உணவுக்கு இடையே நான்கு மணி நேர சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தம் கொண்டு வந்தேன், எம்.பி., குழுவை அனுப்பி முப்பதாண்டு இலங்கைப் பிரச்னையை நான்கே நாளில் தீர்த்து வைத்தேன் என்றெல்லாம் சுயபுராணம் பாடிய கலைஞரின் சுயரூபத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது, இந்நூல்.

‘கருணாநிதியின் பக்தர்களால் கூட இதில் உள்ள ஆதாரங்களை மறுத்துப் பேசமுடியாது என்று மணியரசன் அவர்கள் தன் அணிந்துரையில் எழுதியிருக்கிறார். அந்தளவுக்கு நாள், இடம் வாரியாக கலைஞர் ஈழத்திற்கு எதிராக பேசிய எழுதிய கருத்துகளை இந்நூல் பட்டியலிடுகிறது. நான்காம் கட்ட இறுதிப் போரில் தி.மு.க. மற்றும் கருணாநிதியின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடுகள் இவ்வாறு இருந்தது என்பதை அறிய இது ஒரு வரலாற்று ஆவணம். தி.மு.க அடிவருடிகள் யாராவது இதற்கு மறுப்புப் பேச முடிந்தால் பேசிப் பார்க்கட்டும்!

புத்தகம் வேண்டுவோர், தொடர்புக்கு
இளந்தமிழர் இயக்கம்,
44/1 பஜனை கோயில் தெரு,
முத்துரங்கன் சாலை, தி.நகர்,
சென்னை. கைபேசி: 90950 13809 ,

Thursday, January 28, 2010

உணர்ச்சி வேகத்தில் முத்துக்குமார் இப்படி செய்து விட்டான்’ -இயக்குநர் ஜனநாதன்




திருப்பூர் கண்காட்சியில் இன்று விற்பனைக்கு வரும் முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாற்று நூல், ‘துருப்புச்சீட்டு’க்கு பேராண்மை இயக்குநர் ஜனநாதன் எழுதிய அணிந்துரை


முத்துக்குமார் பற்றிய ஆவணத்தொகுப்புகள் எந்த வடிவத்திலும் வெளிவருவது இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது. உலக முழுவதும் உள்ள தமிழர்கள் நம் தொப்புள் கொடி உறவுகள் என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் கருத்து, முத்துக்குமாரின் தியாகத்தால் யாரும் மறுக்க முடியாத உண்மையாக்கிவிட்டது.

உலகத் தமிழர்கள் அனைவரும் ஓர் இனம் என்கிற உணர்வுடன் இருக்கிறோம் என்பதற்கு அடையாளம் - ஆதாரம், முத்துக்குமாரின் மரணம். இந்த இளைஞனின் உயிர்கொடை உலகத் தமிழர்களை ஒன்றிணைத்துவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை. உலகில் எத்தனையோ பேர் அரசியல் தீக்குளிப்புப் போராட்டங்களை முன்னெடுத்து உயிர்க்கொடை செய்திருக்கிறார்கள். ஆனால், தன் உடலையே துருப்புச்சீட்டாக்கி எதிர்கால அரசியலை திட்டமிட்டு உயிர்த்தியாகம் செய்தது அனேகமாக முத்துக்குமார் மட்டும்தான்.

முத்துக்குமார் மரணமடைவதற்கு முன்பே உதவி இயக்குநராக எனக்கு அவர் அறிமுகமாகியிருந்தார். ‘ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் இந்த இளைஞன் இப்படி செய்து விட்டான்’ என்று என்னிடம் சிலர் கூறியிருக்கிறார்கள். பொன்னுசாமி எழுதியிருக்கும் இந்தத் ‘துருப்புச்சீட்டு‘ என்கிற முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாற்று நூலில் வெளிப்பட்டிருக்கும் முத்துக்குமாரின் அறிவுத்திறன் மற்றும் அவர் வளர்த்துக்கொண்ட தகுதிகள் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவர் வெறும் உணர்ச்சிவயப்பட்டு எதிலும் இறங்குபவர் அல்ல என்பதும் இந்தத் புத்தகம் ஊடாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர். ஆங்கில மொழியறிவு கொண்டவர். மலையாளமும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. வெறும் ஆர்வத்தினால் மட்டுமே சினிமாவுக்குள் நுழைபவர்களுக்கு மத்தியில், சினிமாவை ஒரு தொழிற்கல்வியாகப் பயிலும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். நல்ல புத்தகங்களைத் தேடி வாசித்திருக்கிறார். மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் கட்டணம் வரும் வரைக்கும் இணையத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். உலகப்படங்களைப் பார்த்து தன்னுடைய சினிமா அறிவை மேம்படுத்திக்கொண்டார். உதவி இயக்குநர்களாக முயற்சி செய்யும் பெரும்பாலானவர்களிடம் இவ்வளவு திறமைகளையும், தகுதிகளையும் நான் கண்டதில்லை. ஆக, அவர் வெறும் உணர்ச்சிவயப்படுபவர் என்ற வாதம் பொய்யானது.

முத்துக்குமார் தன் மரணத்துக்கு முன்பு எழுதிய அந்த அரசியல் அறிக்கையில், பல இடங்களில் நையாண்டி கலந்திருந்தது. மன உளைச்சல் மற்றும் உளவியல் ரீதியாக தீக்குளிப்புப் போராட்டத்துக்கு அவர் தூண்டப்பட்டிருந்தால், நிச்சயம் இந்த நையாண்டித்தனங்கள் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை. சாகும் தறுவாயில்கூட அவரால் இப்படி எழுத முடிந்திருக்கிறது என்றால், உண்மையிலேயே அவர் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார்.

‘நிழல்‘ திருநாவுக்கரசு நடத்தும் திரைப்படப் பயிற்சிப் பட்டறைகளில் முத்துக்குமாரை நான் அடிக்கடி பார்த்திருந்தாலும், என் வீட்டில் அவரை இரண்டு மூன்று முறை சந்தித்திருக்கிறேன். முதல்முறையாக நான் அவரைப் பார்த்தபோது ‘படபடப்புடன் சேர்ந்த துறுதுறு இளைஞன்‘ என்று அவரைப் பற்றி நினைத்துக் கொண்டேன். இந்த நூலில் உள்ளது போலவே எப்போதும் புத்தகமும் கையுமாகவே முத்துக்குமாரைப் பார்த்திருக்கிறேன். வீட்டிற்குள் நுழைந்ததும் என் புத்தக அலமாரியை ஆய்வு செய்யத் தொடங்கிவிடுவார்.

புத்தகம் மீதான அவரது ஆர்வத்தைப் புரிந்து கொண்ட நான், சின்ன வயதில் நான் படித்த மாக்ஸிம் கார்க்கியின் ‘ஒரு பிரம்மச்சாரியின் டைரி‘ புத்தகம் அவரிடம் இருக்கிறதா என்று கேட்டேன். அதை எப்படியாவது தேடி வாங்கி வருவதாக என்னிடம் முத்துக்குமார் உறுதியளித்தார். ஆந்திர மாநிலம் தலக்கோனம் என்ற இடத்தில் ‘பேராண்மை‘ படப்பிடிப்பில் இருந்தபோது, எனது துணை இயக்குநரும் அவரது நண்பருமான ஆலயமணியைத் தொடர்புகொண்ட முத்துக்குமார், ‘அண்ணன்கிட்ட சொல்லிடுங்க, ஒரு பிரம்மச்சாரியின் டைரி புத்தகம் கிடைத்துவிட்டது‘ என்று சொல்லியிருக்கிறார். ‘சென்னை வந்ததும் சந்திப்போம்‘ என்று ஆலயமணி கூறியிருக்கிறார். நாங்கள் திரும்பிய சில நாட்களில் முத்துக்குமார் தீக்குளித்து இறந்துபோன செய்தி எங்களுக்கு வந்து சேர்ந்தது. உடனே கொளத்தூர் சென்ற என்னால் அங்கு வைக்கப்பட்டிருந்த முத்துக்குமாரின் கருகிய உடலைத் தான் பார்க்க முடிந்தது. எனக்காக முத்துக்குமார் வாங்கிய ‘ஒரு பிரம்மசாரியின் டைரி‘ புத்தகம், அவரது புத்தக அலமாரியில் இன்னும் இருப்பதாக கேள்விப்பட்டேன். இந்தச் சம்பவம் முத்துக்குமாருக்கும், எனக்குமான ஓர் உணர்வுப்பூர்வமான நெருக்கத்தை உருவாக்கிவிட்டது.

என்னிடம் உதவி இயக்குநராக சேர வேண்டும் என்கிற தனது ஆசையை முத்துக்குமார் என்னிடம் வெளிப்படுத்தவே இல்லை. என் துணை இயக்குநர் ஆலயமணியிடம் கூறியிருக்கிறார். ‘பேராண்மை‘ பட ஸ்கிரிப்டை தட்டச்சு செய்ய முத்துக்குமாரை வரசொல்லிருந்தோம். அப்போது வேறொரு வேலையில் மும்முரமாக இருந்ததால் தன்னால் வரமுடியவில்லை என்று என் உதவி இயக்குநர் ரோகாந்திடம் முத்துக்குமார் கூறியிருக்கிறார்.

சமூக-அரசியல் அறிவோடு, சினிமா கலையையும் முறையாகக் கற்றுத் தேர்ந்திருந்த முத்துக்குமார் உயிரோடு இருந்திருந்தால் அவர் மூலம் மிகச்சிறந்த படைப்புகள் தமிழ்ச் சினிமா உலகிற்குக் கிடைத்திருக்கும்.

முத்துக்குமாரின் அரசியல் அறிக்கையில் உள்ள சில கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு. ஒருசில கருத்துகளில் முரண்படுகிறேன். அதை எல்லாம் மீறி, முத்துக்குமார் எனும் அந்தத் துருப்புச்சீட்டை நாம் சரியாக பயன்படுத்தவில்லையோ என்கிற குற்றஉணர்வு என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது.
இப்படிக்கு

எஸ்.பி.ஜனநாதன்.

Wednesday, January 27, 2010

திருப்பூர் புத்தகக்கண்காட்சியில் செம்மை பதிப்பகத்தின் முத்துக்குமார் வரலாற்று நூல், ‘துருப்புச்சீட்டு‘!




பொழுதுபோக்கு, வெறுங்கூத்து என இன்றைய தலைமுறை இளைஞர்கள் திசை மாறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்கிற விமர்சனத்தை முத்துக்குமாரின் தீக்குளிப்பு மறுஆய்வு செய்யத் தூண்டியிருக்கிறது. தன்னுடைய தலைவனுக்காக உணர்ச்சிவயப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொள்ளும் செயல்பாட்டோடு முத்துக்குமாரின் தீக்குளிப்பைப் பொறுத்திப் பார்ப்பது அபத்தம். சாவதற்கு முன் அவர் விநியோகித்த துண்டறிக்கையில் இருந்த அவரது அரசியல் அறிவின் வீச்சை 26 வயது இளைஞரிடமிருந்து யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இன்றைய தமிழ் இளைஞர்களை சமூகப் போராளியாக மாற்றவன் முத்துக்குமார். அவரது இறுதி ஊர்வலத்தில் கொளத்தூரில் இருந்து மூலக்கொத்தளம் வரை திரண்ட உணர்வாளர்களின் எழுச்சி, தமிழகம் இதுவரை கண்டிராதது. பேரழிவு ஆயுதங்களால் தமிழினத்தை அழித்த ஏகாதிபத்திய நாடுகளை உலுக்கியது இவரது அரசியல் அறிக்கை. தமிழகத்தையே பதற வைத்த இந்த முத்துக்குமார் யார்? தமிழ் இனத்தின் நலன்களுக்காக வேரோடு தன்னைக் கொடுத்த இந்த விருட்சம் எங்கிருந்து வந்தது? பெருமரமென ஓங்கி வளர்வதற்கு முன் விதையாய் இருந்த நாளில் அது கடந்து வந்த பாதை என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடையாய் வெளிவந்திருக்கிறது, முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாற்று நூல், ‘துருப்புச் சீட்டு‘

‘என் உடலையே துருப்புச்சீட்டாக்கிப் போராடுங்கள்’ என்று உலகில் வேறு எவரும் இதற்கு முன்பு அறிவித்ததாக வரலாறு இல்லை. எனவே, இதைவிட வேறொரு தலைப்பு, இந்தப் புத்தகத்திற்குப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றவில்லை. செம்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகம், ஜனவரி 29-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கும் திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.

கடந்தாண்டு இதே நாளில்தான் (ஜனவரி 29–ம் தேதி) தமிழின அழிப்பை எதிர்த்து உயிர்க்கொடை செய்தார், முத்துக்குமார்.

தொடர்புக்கு

செம்மை பதிப்பகம்,
451, அரசம்மை இல்லம்,
விக்டோரியா காலனி – நான்காம் தெரு,
மருத்துவக் கல்லூரி சாலை,
தஞ்சாவூர் -613004.
கைபேசி: 90950 13809 , 0436 2246774

Tuesday, January 19, 2010

இளைஞர்களுக்கு தமிழுணர்வு இல்லையாம் சொல்கிறார், தேர்தல் காலத் தமிழினத் தலைவர் கலைஞர்

இன்றைய இளைய தலைமுறையினர் தமிழில் பெயர் வைக்கத் தயங்குவதாக தேர்தல் காலத் தமிழினத் தலைவர் (முத்துக்குமார் தனது அரசியல் அறிக்கையில் இப்படித்தான் கூறிப்பிட்டிருந்தார்) கலைஞர் வருத்தப்பட்டிருக்கிறார். அதோடு, நிற்காமல் மணமகனின் பிரதீப் என்ற பெயரை மதிவாணன் என்று மாற்றியிருக்கிறார்.

பிரதீப் என்கிற மதிவாணன் இன்றைய தலைமுறைதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் ஒன்றும் தனக்குத் தானே அந்தப் பெயரை வைத்துக் கொள்ளவில்லை. பிரதீபின் தாத்தா, அப்பா ஆகியோர் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். அவர்கள்தான் இவருக்கு இந்தப் பெயரை வைத்திருப்பார்கள். ஆக, தமிழினத் தலைவரின் கட்சியில் இருந்து கொண்டே மேடையில் பிழைப்புக்காக தமிழைப் பேசிக் கொண்டே தன்னுடைய வாரிசுக்கு இப்படியொரு பெயரை அவர்கள் வைத்திருப்பார்கள்.

உண்மை அப்படியிருக்கையில், ஏதோ பிரதீப் என்ற இளைஞர் தனக்குத் தானே பெயர் வைத்துக் கொண்டது மாதிரி கொதித்துப் போய் பேசியிருக்கிறார். அதே மேடையில் கருணாநிதி என்கிற தனது பெயர் வேற்று மொழியில் இருந்தாலும், கடவுளைக் குறிப்பதால் அதை அப்படியே விட்டுவிட்டதாகவும் கலைஞர் கூறினார்.

இன்றைக்கு அவருடைய பேரன், பேத்திகள் திவ்யா, ஆதித்யா, இதயநிதி ஆகியோரின் பெயர்கள் எல்லாம் தூயத் தமிழ்ச் சொல் என்று கருணாநிதி நினைத்துக் கொண்டிருக்கிறாரோ என்று தெரியவில்லை. ஊரான் பெயரை எல்லாம் மாற்றுவார், இவருடைய பேரனின் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ரெட்ஜெயன்ட் இது என்ன தமிழ்ப் பெயரா? ‘தமிழ் படம்’ என்ற பெயரில் அழகிரியின் மகன் எடுக்கும் அந்தப் படத் தலைப்பில் ‘ப்’ என்ற ஒன்று இல்லையே, இது தமிழுக்குச் செய்யும் சேவையா? தமிழுணர்வு மிக்க இன்றைய தலைமுறையினர் (முத்துக்குமார் உள்பட) ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்ததால் அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியது இதே கலைஞர்தான்.

இதையெல்லாம் எழுத இங்கே எந்தப் பத்திரிகையும் கிடையாது. அது சரி, தி.மு.க. மத்திய அமைச்சரின் லட்சம் கோடி ரூபாய் ஊழலையே கண்டுகொள்ளாத தமிழக ஊடகங்கள் இதையா கண்டுகொள்ளப் போகிறது?

Monday, January 18, 2010

தமிழ்மணம் விருது! நன்றிகள்!!




தமிழ்மணம் வழங்கும் 2009-ம் ஆண்டுக்கான முதல் பரிசு பதக்கம் எனக்குக் கிடைத்திருக்கிறது. தலித் மக்கள் பிரச்சினை, மனித உரிமை, நிறவெறி தொடர்பான கட்டுரைகளுக்கான பிரிவில் முதல் பரிசு வழங்கியிருக்கிறார்கள். ‘ஷாருக்கானுக்கு ஒரு நியாயம், தமிழனுக்கு ஒரு நியாயமா?‘ என்ற கட்டுரைக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

நான் எந்தக் கட்டுரையையும் திட்டமிட்டு எழுதியது கிடையாது. கோபமும், ஆவேசமும் உந்தித் தள்ளும்போது எழுதத் தொடங்குவேன். உண்மையிலேயே பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்த்து போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை.

இப்போதும் ஒரு வார்த்தையை பலமுறை அடித்து திருத்தி எழுதும் அளவுக்கே என்னுடைய மொழி அறிவு இருக்கிறது. அதிலும் முக்கியமான ஒரு புத்தகத்தை விரைவில் எழுதி வெளியிட உள்ள நிலையில் எனக்குக் கிடைத்துள்ள இந்த விருது உண்மையில் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

விருது கிடைத்த செய்தியை என் மனைவியிடம் தெரிவித்ததும் மகிழ்ச்சி அடைந்தாள். நண்பர்களிடம் இன்னும் சொல்லவில்லை (கூச்சமாக இருக்கிறது). நான் எழுதிக் கொண்டிருக்கும் அந்தப் புத்தகம் பற்றிய அறிவிப்பு மிக விரையில் வரும். தமிழ்மணம் எழுத்தாளர்களும், வாசகர்களும் அந்தப் புத்தகத்தை நிச்சயம் படிப்பார்கள். இப்போதைக்கு ரகசியம்!

மறந்தே விட்டேன், என் கட்டுரைக்கு வாக்களித்த முகம் தெரியாத நண்பர்களுக்கு நன்றி.

மீண்டும் சந்திப்போம்.