Tuesday, January 19, 2010

இளைஞர்களுக்கு தமிழுணர்வு இல்லையாம் சொல்கிறார், தேர்தல் காலத் தமிழினத் தலைவர் கலைஞர்

இன்றைய இளைய தலைமுறையினர் தமிழில் பெயர் வைக்கத் தயங்குவதாக தேர்தல் காலத் தமிழினத் தலைவர் (முத்துக்குமார் தனது அரசியல் அறிக்கையில் இப்படித்தான் கூறிப்பிட்டிருந்தார்) கலைஞர் வருத்தப்பட்டிருக்கிறார். அதோடு, நிற்காமல் மணமகனின் பிரதீப் என்ற பெயரை மதிவாணன் என்று மாற்றியிருக்கிறார்.

பிரதீப் என்கிற மதிவாணன் இன்றைய தலைமுறைதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் ஒன்றும் தனக்குத் தானே அந்தப் பெயரை வைத்துக் கொள்ளவில்லை. பிரதீபின் தாத்தா, அப்பா ஆகியோர் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். அவர்கள்தான் இவருக்கு இந்தப் பெயரை வைத்திருப்பார்கள். ஆக, தமிழினத் தலைவரின் கட்சியில் இருந்து கொண்டே மேடையில் பிழைப்புக்காக தமிழைப் பேசிக் கொண்டே தன்னுடைய வாரிசுக்கு இப்படியொரு பெயரை அவர்கள் வைத்திருப்பார்கள்.

உண்மை அப்படியிருக்கையில், ஏதோ பிரதீப் என்ற இளைஞர் தனக்குத் தானே பெயர் வைத்துக் கொண்டது மாதிரி கொதித்துப் போய் பேசியிருக்கிறார். அதே மேடையில் கருணாநிதி என்கிற தனது பெயர் வேற்று மொழியில் இருந்தாலும், கடவுளைக் குறிப்பதால் அதை அப்படியே விட்டுவிட்டதாகவும் கலைஞர் கூறினார்.

இன்றைக்கு அவருடைய பேரன், பேத்திகள் திவ்யா, ஆதித்யா, இதயநிதி ஆகியோரின் பெயர்கள் எல்லாம் தூயத் தமிழ்ச் சொல் என்று கருணாநிதி நினைத்துக் கொண்டிருக்கிறாரோ என்று தெரியவில்லை. ஊரான் பெயரை எல்லாம் மாற்றுவார், இவருடைய பேரனின் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ரெட்ஜெயன்ட் இது என்ன தமிழ்ப் பெயரா? ‘தமிழ் படம்’ என்ற பெயரில் அழகிரியின் மகன் எடுக்கும் அந்தப் படத் தலைப்பில் ‘ப்’ என்ற ஒன்று இல்லையே, இது தமிழுக்குச் செய்யும் சேவையா? தமிழுணர்வு மிக்க இன்றைய தலைமுறையினர் (முத்துக்குமார் உள்பட) ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்ததால் அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியது இதே கலைஞர்தான்.

இதையெல்லாம் எழுத இங்கே எந்தப் பத்திரிகையும் கிடையாது. அது சரி, தி.மு.க. மத்திய அமைச்சரின் லட்சம் கோடி ரூபாய் ஊழலையே கண்டுகொள்ளாத தமிழக ஊடகங்கள் இதையா கண்டுகொள்ளப் போகிறது?

1 comment:

  1. இவனுங்க எப்பவுமே இப்படி தான். குத்துங்க எஜமான் குத்துங்க

    ReplyDelete