Friday, July 3, 2009

‘‘மேற்கு வங்கத்தில் நடப்பதும் இனப்படுகொலை!’’ -புரட்சிகர பெண்கள் விடுதலை இயக்கத்தின் மாநிலச் செயலாளர் பத்மா




மேற்கு வங்கத்தின் மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்கள் ஒரு மினி போர்க்களமாக மாறியுள்ளன. அங்குள்ள சந்தால் பழங்குடியின மக்களை ‘மாவோயிஸ்ட் தீவிரவாதிகள்’ என்று கூறி போலீஸ§ம், துணை ராணுவமும் அவர்கள் மீது போர் தொடுத்துள்ளது. பதிலுக்கு வில்அம்பு, கோடரிகளுடன் பதில்தாக்குதல் நடத்த¤ வருகிறார்கள் பழங்குடியின மக்கள். அங்கே கிராமங்கள் படிப்படியாக ‘மீட்க’ப்படும் நிலையில் பழங்குடியின பெண்கள் வன்கொடுமைக்குக்கு ஆளாவதாகவும், குழந்தைகள் கொல்லப்படுவதாகவும், ஆண்களை கைதியாகப் பிடித்து சித்ரவதை செல்வதாகவும் புகார்கள் வரத் தொடங்கியுள்ளன. இத்தனையும் மேற்குவங்க மாநில மார்க்சிஸ்ட் அரசின் ஆசியுடன் நடப்பதாகக் கூறப்படுவதுதான் கொடுமை.




மேற்குவங்கத்தில் என்னதான் நடக்கிறது என்பதை அறிய, ‘உண்மை கண்டறியும் குழு’ ஒன்று அண்மையில் அங்கு சென்று வந்துள்ளது. அந்தக் குழுவில் இடம்பெற்ற சென்னையைச் சேர்ந்த புரட்சிகர பெண்கள் விடுதலை இயக்கத்தின் மாநிலச் செயலாளர் பத்மாவிடம் நாம் பேசினோம்.




மே.வங்கத்தில் நடக்கும் மோதலுக்கு என்னதான் காரணம்?




‘‘அந்த மாநிலத்தில் உள்ள மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களில் வாழும் பழங்குடி மக்களுக்கு குடும்ப அட்டை உள்பட எந்தவிதமான அடிப்படை நலத்திட்டங்களையும் அந்த மாநில மார்க்சிஸ்ட் அரசு செய்து தரவில்லை. இதற்காகப் பழங்குடியின மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில் ஜின்டால் என்ற தனியார் நிறுவனத்தின் எஃகு ஆலைக்காக, சந்தால் பழங்குடியின மக்கள் வாழும் காட்டுப் பகுதிகளை அழித்து, ஐந்தாயிரம் ஏக்கரில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் முயற்சியில் மே. வங்க அரசு இறங்கியது. கடந்த நவம்பர் 2_ம்தேதி அவசர அவசரமாக இதன் அடிக்கல் நாட்டு விழா நடந்த போது பழங்குடியின மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தினர்.




மறுநாள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளைத் தேடுவதாகக் கூறி பழங்குடியினரின் கிராமங்களுக்குள் போலீஸார் புகுந்து பெண்களை வன்கொடுமை செய்தனர். குழந்தைகளைக் கொன்று குவித்து, ஆண்களை சட்டவிரோதமாக கைது செய்தனர். போலீஸாருடன் சேர்ந்து, சி.பி.எம். கட்சி குண்டர்கள் நடத்திய இந்த வன்முறை வெறியாட்டத்தால் பழங்குடி மக்கள் பீதியில் உறைந்து போயினர். இந்த அடக்குமுறைக்கு எதிராக 1,100 கிராமங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து, சத்ரதார் மகோதா என்பவர், ‘போலீஸ் அடக்கு முறைக்கு எதிரான மக்கள் கமிட்டி’யை (பி.சி.பி.ஏ.,) உருவாக்கினார்.




அந்தக் கமிட்டி, ‘பெண்களிடம் வன்கொடுமையில் ஈடுபட்ட போலீஸார் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்; மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்ற பொய்க் குற்றச்சாட்டில் கைதான பழங்குடி மக்களை விடுதலை செய்ய வேண்டும்; போலீஸார் நடத்திய வன்முறை வெறியாட்டத்திற்குப் பொறுப்பேற்று காவல்துறை உயரதிகாரி ராஜேஷ்சிங் தோப்புக்கரணம் போட வேண்டும்; வன்கொடுமைகளில் ஈடுபட்ட போலீஸார் தங்கள் மூக்கு தரையில்படும்படி மன்னிப்புக் கோர வேண்டும்’ என்ற தங்கள் மரபு ரீதியிலான தண்டனைகளை கோரிக்கைகளாக முன்வைத்தனர். அத்துடன், ‘கிராமங்களைவிட்டு போலீஸார் வெளியேற வேண்டும். அதுவரை போலீஸாருக்கு முடிவெட்டுதல், துணி துவைத்தல் உள்ளிட்ட வேலைகளை செய்ய மாட்டோம்’ என்று கடும் நிபந்தனைகளை விதித்தனர்.’’




இதற்காக பழங்குடி இன மக்கள் வில்அம்பு போன்ற ஆயுதங்களால் போலீஸாரை தாக்கியது நியாயமா?




‘‘பழங்குடியின மக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கும், கோரிக்கைகளுக்கும் செவி சாய்க்காத மே.வங்க கம்யூனிஸ்ட் அரசு, போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டியை ஒரு மாவோஸ்ட் தீவிரவாத குழு என்று அறிவித்து அவர்கள் மீது தனது தாக்குதல் தொடுத்து வருகிறது. சாதாரணமாகவே தங்களின் மரபுவழி ஆயுதங்களான வில்அம்பு, கோடாரி, அரிவாள் வைத்திருக்கும் பழங்குடி மக்கள், தங்கள் உயிருக்கே ஆபத்து என்றநிலையில் அதைப் பயன்படுத்தத்தானே செய்வார்கள்? அதன்படிதான், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீஸாரைச் சிறைபிடித்து அவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர்’’




இப்போது எல்லாம் சரியாகிவிட்டதா?




‘‘சிங்கூர் நந்திகிராமத்தில் ஏவிவிட்ட அடக்குமுறையைவிட இரண்டு மடங்கு அதிகமான வன்முறையை சந்தால் பழங்குடியின மக்கள் மீது அம்மாநில பாசிச முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா ஏவி விட்டிருக்கிறார். அந்த மக்கள் ஆயுதமேந்துவதற்குக் காரணமான சமூக_ பொருளாதாரக் காரணங்களை ஆய்வு செய்யாமல் போலீஸாரையும், சிபிஎம் குண்டர்களையும் மே.வங்க கம்யூனிஸ்ட் அரசு ஏவிவிட்டு வேடிக்கைப் பார்ப்பது வெட்கக் கேடான விஷயம். அமெரிக்க உதவியுடன் உளவு செயற்கை கோள் மூலம் மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களைக் கண்காணித்து ஹெலி காப்டர்கள் மூலம்கூட தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.சிறைபிடிக்கப்பட்ட பழங்குடி மக்களை நிவாரண முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்கிறார்கள். இங்கு, இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ள தமிழ் மக்களைப் போல் சந்தால் இன மக்களும் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். பாகிஸ்தான், சீனாவுடன் சேர்ந்து இலங்கையில் இனப்படுகொலையை நடத்திய இந்திய அரசு, இப்போது அமெரிக்காவின் துணையுடன் உள்நாட்டிலேயே இனப்படுகொலையை நடத்தி வருகிறது’’




இந்த பகிரங்கக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் உண்டா?




‘‘சர்ச்சைக்குரிய அந்த மாவட்டங்களில் என்னதான் நடக்கிறது என்று, உண்மை நிலைகளை அறிய மே.வங்கத்துக்குச் சென்றோம். கடந்த 27_ம் தேதி மித்னாபூர் ரயில் நிலையத்தில் நாங்கள் இறங்கிய எங்களை, பயங்கர ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதி களைப் போல போலீஸார் பிடித்துச் சென்றனர். காரணம் கேட்டதற்கு, ‘லால்கரில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அங்கு செல்லக் கூடாது’ என்றனர். ‘இப்படியே ஊருக்குச் சென்று விடுங்கள்; மீடியாவில் பேசக்கூடாது’ என்று நிபந்தனை போட்டனர். ‘முடியாது. எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடையுங்கள்’ என்றோம். பின்னர் வழக்கு எதுவும் போடாமல், போலீஸ் வேனில் ஏற்றி, கொல்கத்தாவில் விட்டுவிட்டனர்.பழங்குடி மக்கள் வசிக்கும¢ பகுதியில் ஏதோ விரும்பத்தகாதவைகள் நடப்பதால்தான் எங்களை அங்கு செல்லவிடாமல் அரசு தடுக்கிறது. கம்யூனிஸ்ட் ஆட்சியில் மனித உரிமை ஆர்வலர்களுக்குத் தடை விதிப்பது வெட்கக் கேடானது. எங்களை மட்டுமல்ல அபர்ணாசென் உள்ளிட்ட முக்கியமான மனித உரிமை ஆர்வலர்களையும் அந்தக் கிராமங்களுக்குள் நுழையவிடாமல் தடுத்துவிட்டனர். நடந்து வரும் இனப் படுகொலைகளை மூடிமறைக்கவே யாரையும் உள்ளே விடாமல் தடுத்து வருகின்றனர். காடுகளுக்கு ஊடுருவிவிட்ட துணை ராணுவத்தினர், பழங்குடி மக்களுடன் யுத்தம் நடத்தத் தயாராகி விட்டனர். அமெரிக்க உளவு செயற்கைக் கோள் மூலம் அப்பகுதி கண்காணிக்கப்படுகிறது என்று, அம்மாநில காவல்துறையில் உள்ள ஒருசிலரே எங்களிடம் தெரிவித்தனர். சிங்கூர்நந்திகிராமத்தில் காட்டிய தனது பாசிச முகத்தை மித்னாபூரிலும் காட்டத் தொடங்கிவிட்டார், புத்ததேவ் பட்டாச்சார்யா’’


நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

No comments:

Post a Comment