Tuesday, June 15, 2010

“என்ன கொடுமை இது ஞாநி?“ -தாமரை




9-6-2010 குமுதம் ஓ... பக்கங்களில் சீரழிவு என்று தலைப்பிட்டு ஞாநி எழுதியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சர்வதேச இந்திய திரைப்படக் கழகத்தின் (ஐஃபா) விருது வழங்கும் விழாவை வலியப் போய் கொழும்பில் நடத்துவதன் அரசியல் ஞாநிக்குப் புலப்படவில்லை போலும். தென் கொரியாவின் சியோலுக்கு உறுதியளிக்கப்பட்ட நிகழ்வை அவசர அவசரமாகக் கொழும்புக்கு மாற்றியது இனப்படுகொலையின் கரையை மறைத்து வெள்ளையடிக்கத்தான் (அல்லது மூவர்ணம் பூசத்தான்) என்பதே உண்மை!

கொழும்பு விழா வெறும் கலைவிழா அல்ல. காசேதான் கடவுளடா என்று கொலைக்களத்தில் சந்தை தேடிப் புறப்பட்டுள்ள இந்தியப் பெரு வணிகர்களின், பெரு முதலாளிகளின் (FICCI) ஆதாய வேட்டை விழா. பண்பாட்டுச் சீரழிவின் இருமுனைகள் (வணிகத் திரையும், வணிகக் கிரிக்கெட்டும்) இணைந்து பட்டுத் திரையிட்டுப் படுகொலைகளை மறைக்கும் விழா என்பதெல்லாம் ஞாநிக்குத் தெரியாததா?
‘சிலருடைய மிரட்டல் அரசியல்‘ என்கிறார் ஞாநி. ‘குருதி பிசுபிசுக்கும் கொலைக்களத்தில் கூத்துக் கும்மாளமா? தடுக்க வேண்டும் தமிழ்த் திரையுலகம்‘ என்று தமிழ்த் திரைத்துறையினருக்கு வேண்டுகோள் வைத்து முன்கை எடுத்த என் போன்றோருக்கு அரசியல் ஏதுமில்லை. மனிதஉரிமை, மக்கள் பிரச்னை, தமிழர்நலம் தவிர வேறெந்த அரசியலும் நான் செய்கிறேனோ என்று ஞாநி சொல்லட்டும்! நாங்கள் எப்போது யாரை மிரட்டினோம் என்று விளக்கட்டும்! அறப்போராட்டங்களுக்கு மிரட்டல் என்று பெயர் சூட்டலாமா?

ஓராண்டு முன்னால் ஏராளமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு ராஜபக்சேயின் இனவெறி அரசியலை காரணம் என்பதை மறைத்து பழியில் பாதியைப் புலிகள் மீது சுமத்துகிறார், ஞாநி. என்ன கொடுமை இது? தாக்குகிறவனையும், தாக்கப்படுகிறவனையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுகிற மகா அறிவாளிகளின் பட்டியலில் ஞாநியும் சேர்ந்துவிட்டாரா?
ஒரு லட்சம் மக்களைக் கொன்று இனப்பேரழிப்பை நடத்தியவர், ராஜபக்சே என்று உலகமே அறியும். விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் தமிழ்மக்களை இனஅழிப்பிலிருந்து காப்பாற்ற இயன்ற வரை போராடித் தோற்றார்கள். அவர்கள் தங்கள் ஆயுதங்களை மவுனித்தப் பின்புதான். முள்ளிவாய்க்காலில் முழுப் பேரழிவு நடந்தது என்பதை ஞாநியின் மனசாட்சி அறியாமலிருக்காது.
‘கொடூரங்கள் முடிந்து ஓராண்டு கழிந்தது‘ என்கிறார் ஞாநி. ஓராண்டு என்ன நூறாண்டு ஆனாலும் இந்தக் காயம் ஆறாது. இனக்கொலை புரிந்தவர்களைக் கூண்டில் ஏற்றி தண்டிக்கும் வரை, தமிழ்மக்களுக்கு அவர்கள் விரும்பும்படியான அரசியல் தீர்வுகிட்டும் வரை பன்னாட்டுச் சமூகம் எல்லா வகையிலும் கொழும்பு அரசைத் தனிமைப்படுத்தக் கோருவோம். இந்த நோக்கங்களை அடைவதற்கு சிங்கள மக்களும் ஆதரவு தர வேண்டுவோம்.
இந்த ஐஃபா விழாவைக் கராச்சியிலோ இஸ்லாமாபாத்திலோ இந்திய நட்சத்திரங்கள் நடத்துவார்களா என்று ஞாநி கேட்டுச் சொல்லட்டும்!
சிங்களவர்கள் கண்தானம் செய்வதைப் பாராட்டுகிறார், ஞாநி. வெலிக்கடை சிறையில் குட்டிமணி, தங்கதுரையின் கண்களைப் பிடுங்கிப் போட்டு காலில் மிதித்த சிங்களக் காடையர்களின் இனவெறிக்கு முன்னால் எத்தகைய தானமும் எடுபடாது என்பதைப் புரிந்து கொள்ளட்டும்!

ஞாநி போகிற போக்கைப் பார்த்தால், ‘மிரட்டலுக்கு அஞ்சாமல் கொழும்பு கொலை விழாவில் கலந்து கொண்ட ‘விவேக் ஓபராய்‘வுக்கு இந்த வாரப் பூச்செண்டும், இராஜபக்சேயின் அன்பான அழைப்பை நிராகரித்த நமீதாவுக்கு இந்த வாரத் திட்டும் தருவார் என எதிர்பார்க்கலாம். எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலையோடு பேசுவது போல் பாசாங்கு செய்யும் ‘போலிநீதிபதி‘களுக்குரிய ‘நரிநாட்டாமை‘ ஞாநிகளுக்கு அழகில்லை.

Thursday, June 3, 2010

மணிமேகலையும் கிரண்பேடியும்




புழல் சிறை டூ திகார் சிறை

'சிறைக்கோட்டமெல்லாம் அறக்கோட்டமாகட்டும்' என்று அட்சயப் பாத்திரத்தோடு புறப்பட்ட காப்பிய நாயகி மணிமேகலை பற்றி நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிட்டால், குற்றவாளிகள் ஏன் உருவாகப்போகிறார்கள்? என்பதுதான் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை உணர்த்தும் உண்மையோ?

குற்றவாளிகளை சமூகத்திலிருந்து பிரித்து அவர்களை நல்வழிப்படுத்தி நல்லவர்களாக உருவாக்கி மீண்டும் சமூகத்தில் உலவவிடுவதுதான் சிறைச்சாலைகள் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் என்று ஏட்டளவில் உண்டு. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் திரும்பத் திரும்ப சிறைக்கு வரும் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்று பயமுறுத்துகிறது, ஒரு புள்ளி விவரம். திருந்த வேண்டியவர்கள், மீண்டும் சிறைக்குத் திரும்ப வேண்டிய அவசியம் என்ன? சிறை பற்றி நியாயமாக இருக்க வேண்டிய அச்சம் அவர்களுக்கு இல்லாமல் போனதற்கு என்ன காரணம்? யார் காரணம்?

களி உருண்டையும், அச்சுச் சோறும் கிடைத்துக் கொண்டிருந்த சிறைகளில், வாரந்தோறும் கறிக்குழம்பு, தினமும் காலை பொங்கல், மதியம் அன் லிமிட்டேட் மீல்ஸும் கிடைத்தால் கைதிகள் திருந்துவது எப்படி என்றொரு ஆதங்கத்தை பல இடங்களிலும் கேட்க முடிகிறது. "சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மின்விசிறி வசதி செய்து தரப்படும்" என்ற தமிழக முதல்வர் கருணாநிதி அறிவிப்புக்கு பரவலாக அதற்குக் கிடைத்த எதிர்ப்பே இதற்குச் சாட்சி.

உண்மையில் சிறை சுகவாசிகளின் கூடாரமாகிவிடட்தா? சிறைகளில் அடிக்கடி பிடிபடும் பல கிலோ கஞ்சாக்களும், செல்போன்களும் 'சிறையில் எல்லா வசதிகளும் கிடைக்கும் போல' என்றொரு சந்தேகம் பாமரனுக்குள் விதைத்திருக்கிறது. இதை எல்லாத்தையும் விட, பல கோடிகளை சுருட்டிய நிதிநிறுவன அதிபர் கைதாகி சிறைக்குச் செல்லும்போதும், ஊழல் வழக்கில் சிக்கும் முன்னாள் அமைச்சர்களும் ஃபோட்டோகளுக்கு போஸ் கொடுத்துக் கொண்டே காவல்துறை வாகனத்தில் ஏறும் காட்சிகள், இவர்கள் என்ன சிறைக்கு பிக்னிக் போகிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. திரைப்படங்கள், ஊடகங்கள் மூலம் சிறையைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் உண்மையில் யதார்த்தத்திற்கு வெகு தொலைவிலிருக்கிறது.

தமிழகத்தைப் பொருத்தவரையில் புழல் (சென்னை), கடலூர், சேலம், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, கோவை என ஏழு மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. பெண்கள் மையச் சிறைகள் புழல், வேலூர், சேலம், திருச்சி என மொத்தம் நான்கு உள்ளன. இதுதவிர மாவட்டச் சிறைகள் ஆறு, கிளைச் சிறைகள் (ஆண்கள்) 98, பெண்கள் கிளைச்சிறைகள் 9, சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஒன்று, திறந்தவெளி சிறைச்சாலைகள் இரண்டு என பல்கலைக்கழகங்களுக்கு இணையான எண்ணிக்கையில் சிறைச்சாலைகளும் உள்ளன. இங்கெல்லாம் தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள் என பல லட்சம் பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அண்டைமாநிலமான கர்நாடகச் சிறையில் கைதிகள் தங்கள் குடும்பத்தாருடன் தினமும் பேசுவதற்காக சிறை வளாகத்தில் தொலைப்பேசி வசதிகூட செய்யப்பட்டுள்ளன!

24 மணிநேரமும் கண்காணிப்பும், அதிகாரிகளின் கண்டிப்பும், வெளியுலகத் தொடர்பின்மையும் சிறையின் அடிப்படை விதிகள். இந்த விதிகள் கடுமையாகும் போதுதான் சிறைச்சாலைகளில் மனநோய்க் கைதிகளுக்கான வார்டுகள் தனியாக உருவாக்கப்படுகின்றன. இன்றைக்கும் சென்னை புழல் சிறைச்சாலை வாசலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில் அந்தச் சிறையிலுள்ள மன நோயாளிகளின் எண்ணிக்கை சிறை வாழ்வின் கொடூரமுகத்தைப் பறைசாட்டுகிறது.

அவர்கள் எல்லாம் மனநோயாளிகளாக உள்ளே போனவர்கள் அல்ல. கைதி மனநோயாளிகளாக இருந்தால், அவர்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை மனநோயாளிகள் வார்டில் சேர்க்கப்படுவார்கள். கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் கைதிகளுக்கென்று பிரத்யேகமான வார்டு உண்டு என்பதை அறிக.

செய்த தவறுக்கு அல்லது செய்யாத தவறுக்குக் கிடைத்த சிறைவாசத்தை எண்ணி வருந்தும் கைதிகள் மற்றும் தனிமையில் தவிக்கும் கைதிகள் ஆகியோர் மனநோயால் பாதிப்புக்குள்ளாகிவிடுகின்றனர். இவர்களைக் குறிவைத்து ஒருசில ஆன்மிக அமைப்புகள் சிறைக்குள் யோகா, தியானம் மற்றும் அற்புத எழுப்புதல் கூட்டங்களை நடத்துகின்றன. அவற்றின் பலனாக திருந்துவோரின் எண்ணிக்கை எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பதற்கான எந்தவொரு புள்ளிவிவரமும் இதுவரை கிடைக்கவில்லை. (இந்த வகுப்புகளை நடத்தியவர்களே பின்னொரு நாள் கைதாகி நிரந்தர சிறை வாசிகளாகிவிடுவதை பார்த்துக் கொண்டுதானிருகிறோம்.)

சிறைச்சாலைகளுக்குள் இயங்கும் திறந்த வெளிப் பல்கலைக்கழகங்கள் விருப்பமும், தகுதியுமுள்ள கைதிகளுக்கு வகுப்பெடுத்து, தேர்வுகள் நடத்தி பட்டதாரிகளாக்கி வருகிறார்கள். இதெல்லாம் சரி, அடிக்கடி சிறைச்சாலைக்குள் அதிகாரிகளின் சோதனைகளில் சிக்கும் செல்போன்களும், கஞ்சா உள்ளிட்ட பொருட்களும் உள்ளே போனது யாருக்காக? எதற்காக? எப்படி? என்று சாக்ரடீஸ் பாணியில் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களில் (பிஸ்கட், பழம், பவுடர், சோப் உள்ளிட்ட பொருட்களை கைதிகளுக்கு அவர்களின் உறவினர்கள்,நண்பர்கள் மூலம் கொடுக்கலாம்) மறைத்து வைத்து சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருகிறார்கள் என்று சிறை அதிகாரிகள் சொல்லலாம். ஆனால் சிறைக்குள் சென்று வருவது என்றாலே சோதனை என்ற பெயரில் சல்லடையாக துளைத்து எடுத்து விடுகிற நிலையில் சிறைக் காவலர்களுக்குத் தெரியாமல் அந்தப் பொருட்கள் உள்ளே கொண்டு செல்லப்படுகிறது என்பதை ஒப்புக் கொள்ளவே முடியாது. தவறு செய்ததாக அவ்வப்போது சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவங்களே இதற்கு சாட்சி. ஆனால் பெரும்பாலும் தவறிழைக்கும் காவலர்கள், அதிகாரிகள் தவிர்த்து கைதிகள் மட்டுமே சிக்குகிறார்கள்.

உலகம் முழுவதும் மனித உரிமைகள் மீதான பார்வை மாறிவரும் சூழலில் சிறை வாசிகளுக்கு சில வசதிகள் கிடைக்கத்தான் செய்கின்றன. ஆனால் வெளியே நடக்கும் கோஷ்டி மோதல்களுக்கு சற்றும் குறைவில்லாத வகையில் சிறைக்குள் நடக்கும் கலவரங்களும் கொலைகளும் தவறு செய்தவர்களை திருந்தக் கூடிய இடம் சிறைச்சாலை என்கிற மாயையை சுக்கு நூறாக்கிவிடுகின்றன. பணமும், ஆள்பலமும் கொண்ட கைதிகள் சிறைக்குள்ளும் கோலோட்சி வரும் செய்திகளை முற்றிலும் வதந்தி என்று ஒதுக்கிவிடமுடியாது. சிறையிலிருந்து பகத்சிங் (எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன்?), சி.என்.அண்ணாதுரை, கருணாநிதி வைகோ ஆகியோர் படைத்த இலக்கியங்களுக்கு இணையாக சிறைக்குள் மிகப் பெரிய கொலை, கொள்ளைத் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கினற்ன. ஆபாசப் படங்கள் எடுத்து இணைய தளங்களில் உலவவிட்ட டாக்டர் பிரகாஷ் (தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் கைதான முதல் நபர்) கூட நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதிவிட்டாராம்.

வசதிகள் பெருகிக் கொண்டே போனாலும் வானமே எல்லை என சுதந்திரமாக வாழும் உலக வாழ்க்கையோடு சிறை வாழ்க்கையை ஒப்பிட முடியாது. சிறைக்கோட்டங்கள் அறக்கோட்டங்கள் ஆகட்டும் என்ற காப்பிய நாயகி மணிமேகலையின் கனவை ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பேடி திகார் சிறையில் நடைமுறைப்படுத்தினார் என்பதை காலம் பதிவு செய்திருக்கிறது. மணிமேகலைகளும், கிரண்பேடிகளும் உருவானால் சிறைச்சாலைகள் இல்லாத கைதிகள் இல்லாத ஒரு சமூகம் நிச்சயம் உருவாகும்.

-பொன்னுசாமி (நன்றி:www.earangam.com)

Tuesday, May 11, 2010

பார்வதியம்மாள் மீது தினமலர் அவதூறு... கண்டனத்தைப் பதிவு செய்யுங்கள்..




காலையில் தினமலர் செய்தித் தாளைப் பிரித்ததும் எனக்கேற்பட்ட உணர்வுகளை என்னவென்று சொல்வது! தினமலரின் வக்கிரத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பார்வதியம்மாள் வருகைக்கு நிபந்தனைகள் விதிக்கவில்லை (அடப்பாவிகளா?) என்ற ரீதியில் முதல்வர் கருணாநிதி பேரவையில் பேசிய செய்தி வெளியாகியிருந்தது. அந்தச் செய்தியில் தலைப்பு முதற்கொண்டு செய்தியில் எல்லா இடத்திலும் ‘பார்வதி‘ என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதுவும் கருணாநிதி பேச்சிலும் பேவை உறுப்பிளர்களின் பேசியதாக வெளியான கருத்துகளிலும் ‘பார்வதி’ என்றே குறிப்பிட்டிருந்தார்கள். உண்மையில் அவர்கள் அப்படி சொல்லவில்லை. பார்வதியம்மாள் என்றுதான் குறிப்பிட்டார்கள்.

‘பார்வதி என்ற குறிப்பிட்டால் போதும் அம்மாள் என்று குறிப்பிட அவறொன்றும் நமக்கெல்லாம் அம்மா இல்லை’ என்ற ரீதியில் தினமலர் நிர்வாகம் நிருபர்களுக்கு உத்தரவிட்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. (எல்லாம் அங்கிருப்பவர்கள் சொல்லும் தகவர்கள்தான்) ஒருவருடைய பெயரை மாற்றி குறிப்பிடும் அளவுக்கு அவர் மீது வெறுப்பு இருக்கும் பட்சத்தில் அவரைப் பற்றிய செய்தியை வெளியிட வேண்டிய அவசியம் என்ன வந்தது?

இன்றைக்கும் தினமலரில் பெரியார் என்று எழுத மாட்டார்கள். ஈ.வே.ரா. என்றுதான் எழுதுவார்கள்.தினமலர் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கருணாநிதி, தினமலர் நிறுவனர் டி.வி.ஆரும், ஈ.வே.ரா.வும் ஒத்தக் கருத்துடையவர்கள் என்று பேசி நம்மையெல்லாம் புல்லரிக்க வைத்ததை மறந்துவிட வேண்டாம்.

தினமலரின் இந்த வக்கிரமான எண்ணத்திற்கு அங்குள்ள ஊழியர்கள் (அதாங்க நிருபர்கள்) கொஞ்சமாவது சூடு சொரணையோடு நம்மிடம் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ளாமல், தினமலர் நிர்வாகம் செய்வதை நியாயம் போல் பேசுகிறார்கள். (அவர்கள் எப்பவுமே அப்படித்தான் பாஸு) நடிகைகள் விவகாரத்தில் தான் எழுதியதே சரி என்று வாதிடும் தினமலர், அந்தச் செய்தியை ஆதாரம் இல்லாமல் எழுதிய நிருபரை வேறு ஊருக்கு மாற்றி டார்ச்சர் செய்து வருவதை தினமலர் ஊழியர்கள் வசதியாக மறந்தும், மறுத்தும் விடுவார்கள்.

‘தந்தை பெரியார் என்று சொல்லி நம் தாயை அசிங்கப்படுத்துகிறார்கள்’ என்று பி.ஜே.பி.யின் எச். ராஜா ஒரு கூட்டத்தில் பேசியதை நான் கேட்க நேர்ந்தது. அப்படியென்றால், நேரு மாமா என்றால் நம் அத்தைகளை அசிங்கப்படுத்துகிறோமா, காந்தி தாத்தா என்றால் நம் பாட்டியை அசிங்கப்படுத்துகிறோமா? அந்த வக்கிரத்தின் அடுத்த படிதான் பார்வதியம்மாள் பெயரை ‘பார்வதி’ என்றாக்கியிருக்கிறாள்.

தினமணியில் பெயர்களைக் குறிப்பிடும் போது முடிந்தவரை இன்ஷியலோடுதான் எழுத வேண்டும் என்ற மரபு இன்றும் பின்பற்றப்படுகிறது. அது தினமணி கடைபிடிக்கும் பத்திரிகை தர்மம். தினமலருக்கு அப்படியொன்றும் இல்லை என்பது நமக்கும் தெரியும். புலிகளையோ பிரபாகரனையோ ஆதரிப்பது அவரவர் சொந்த அபிப்ராயம். ஆனால் ஒரு பெயரை மாற்றி எழுதுவது எப்படி சரியாகும்? அதுவும் பார்வதி அம்மாள் ஒன்றும் பயங்கரவாதி இல்லையே. அந்த அம்மாளை வைத்து அரசியல் பண்ணத் துடிக்கும் கருணாநிதி, வைகோ, பழ.நெடுமாறன், திருமாவளவன் ஆகியோரைவிட கேவலமான காரியத்தை செய்திருக்கும் தினமலருக்கு ஒரு ஃபோன் போட்டு அவர்களின் இந்த வக்கிர செயலை கண்டியுங்கள் என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். செய்வீர்களா?

நீங்கள் உங்கள் கண்டனத்தை கீழ்கண்ட எண்களில் பதிவு செய்யலாம்.


சென்னை 044 2841 3553, 2855 5783, பேக்ஸ் 044 2852 3695

பாண்டிச்சேரி Ph: 0413 224 9301/03

மதுரை Ph: 0452 238 0903-04,435 2901 Fax: 0452 238 0907

கோவை Ph: 0422 267 6021-23

பெங்களூரு h: 080 2228 3635 மும்பை Ph: 022 3258 9958 / 3266 3394
Fax: 080 2220 0693 Fax: 022 2421 2149

நியூ டெல்லி h: 011 2371 7263, 2373 9407
Fax: 011 2371 9732

நன்றி...

Thursday, May 6, 2010

உண்மை கண்டறியும் சோதனையும், சில உண்மைகளும்!!



குற்றம் சாட்டப்பட்டவரின் ஒப்புதல் இல்லாமல் உண்மை கண்டறியும் நார்கோ அனாலிசிஸ் சோதனை நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு நவநாகரீக தேசியப் பற்றாளர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். அப்படியென்றால், குற்றவாளிகளை விசாரிப்பது எப்படி என்று கொதிக்கிறார்கள். முத்திரைத்தாள் மோசடி வழக்கில் தெல்கியிடம் நடத்திய விசாரணையில் நார்கோ சோதனை மூலம் பல உண்மைகளைக் கண்டறிந்ததாக சொல்கிறார்கள். இதை அவர்கள் உதாரணமாகக் கூறுவதற்கு தெல்கி மீதான குற்றச்சாட்டை நிரூபித்து தண்டனை வாங்கிக் கொடுத்ததுவிட்டார்கள் என்பதுதான் காரணம்.

போலீஸாரால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகளா என்பது குறித்து போலீஸாரிடம் இதே சோதனையை நடத்த அனுமதி வழங்கப்படுமா என்பது என்னுடைய சந்தேகம். தாங்கள் கைது செய்யும் சாமானியர்களுக்கு எப்பாடு பட்டாவது சிறை தண்டனை வாங்கித் தந்துவிடும் போலீஸார், அரசியல் செல்வாக்குள்ள பெரிய மனிதர்கள் எத்தனை பேருக்கு தண்டனை வாங்கித் தந்திருக்கிறார்கள் என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது.

பத்து பதினைந்து பெண்களைக் கற்பழித்துக் கொன்றதாக அண்மையில் தென் மாவட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் கொன்றதாகக் கூறும் ஒரு பெண்ணை கொலை செய்ததாக ஏற்கெனவே சிலரை போலீஸார் கைது செய்திருந்தது தான் அதிர்ச்சி! இதில் யார் உண்மையான குற்றவாளி. கணக்குக் கர்ட்டுவதற்காக யாரை வேண்டுமானாலும் கைது செய்வதை இப்போதும் எப்போதும் வழக்கதில் வைத்திருப்பவர்கள் நம் போலீஸார். இவர்களுக்கு எதற்கு இந்த உண்மையறியும் சோதனைகள் எல்லாம்.

உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நொய்டா சிறுமிகள் பாலியல் கொலைகளில் கைது செய்யப்பட்ட மொனீந்தர் சிங் பின்னாளில் விடுதலை செய்யப்பட்டார். உண்மையில் அவர் குற்றவாளி இல்லை என்றால் அவரை சிறையில் தள்ளித் துன்புறுத்தியது ஏன்? உண்மையான குற்றவாளி அவர்தான் என்றால் அவருக்குத் தண்டனை வாங்கித் தராமல் தப்பிக்க வைத்தது ஏன்?

ராஜிவ் கொலையில் காட்டும் அக்கறையில் பாதிக் காட்டியிருந்தால் கூட டென்னிஸ் விளையாடச் சென்ற சிறுமியை பலாத்காரம் செய்து அவரது சாவுக்குக் காரணமாக இருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி ரத்தோருக்குத் தண்டனை வாங்கித் தந்திருக்க முடியும். ஆக, போலீஸாருக்குத் தேவை தொழில்நுட்பங்கள் அல்ல, அரசியல் தலையீடு இல்லாத
சுதந்தரமான செயல்பாடுதான். அதற்கு இந்த அரசு வழிவகை செய்யுமா? அல்லது இதற்கு முன்பு இருந்த அரசுகள் செய்திருக்கிறதா?

குற்றப்பத்திரிகை தயாரிக்கும் போதே குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தப்பிக்க வகைச் செய்யும் அளவில், அதில் ஓட்டைகளுடன் தயாரிப்பதுதானே நம்முடைய காவல்துறையின் வழக்கமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தவறுதலாக கைது செய்யப்பட்ட இஸ்லாமிய டாக்டரை உடனடியாக விடுதலை செய்ததோடு அதற்கு மன்னிப்பும் கோரினார்கள். இந்தியாவில் அப்படியொரு சம்பவம் நடக்குமா? தினகரன் எரிப்பு, நாவரசு கொலை போன்றவற்றில் குற்றவாளிகள் யார்?

தன் உறவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று காவல்துறை அதிகாரியிடம் பேசிய
தமிழக அமைச்சர் பூங்கோதையின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதும், அவர் திரும்பவும் அமைச்சரானதும் நாம் அறிந்ததே. சாதாரண போலீஸாரை விடுங்கள், மெத்தப் படித்த காவல்
துறை அதிகாரிகளும் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கால்பிடிக்கத்தானே விரும்புகிறார்கள்.
ஆகவேதான் சொல்கிறேன், உண்மையறியும் சோதனை நிச்சயம் வேண்டும் என்று இந்த அரசு கருதுமேயானால் யார் கோரினாலும் காவல்துறை உயரதிகாரிகள், அரசியல்வாதிகள்,அரசியல் தலைவர்களிடம் உண்மையறியும் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும். அதற்குத் தயாரா?

Sunday, April 18, 2010

பிரபாகரனுக்கு மனம் திறந்த மடல்...


தமிழீழத்தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு,

நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா, இல்லையா என்று எனக்குத் தெரியாது.

இந்த நேரத்தில் அவசரமாக உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டிய சூழல் வந்துவிட்டதற்காக வருந்துகிறேன். உங்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவா எனக்குள் ஏற்பட்ட போது நீங்கள் போர்க்களத்தில் போரிட்டுக் கொண்டிருந்தீர்கள்.அதற்குப் பிறகு இப்போதுதான் உங்களுடன் பேசவேண்டிய அவசர அவசியம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 16-ம் தேதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட உங்கள் தாயார் உரிய அனுமதியின் பேரில், மருத்துவச் சிகிச்சைக்காக சென்னைக்கு விமானம் ஏற்றப்பட்டார். ஆனால், விமானத்திலிருந்து அவரை தரையிறங்கவிடாமல் அதே விமானத்தில் மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். இதில்,கொதித்துப் போன தாயத்தமிழகத்தில் உள்ள உங்கள் நண்பர்கள் விடுத்த பேட்டிகள், அறிக்கைகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.


# “பார்வதியம்மாள் மருத்துவச் சிகிச்சைக்காக சென்னை வந்தே எனக்குத் தெரியாது.
மறுநாள் பத்திரிகை படித்துத்தான் இதை நான் தெரிந்துகொண்டேன். இப்போதும் ஒன்றும் மோசமில்லை. அவர் தரப்பில் என்னிடம் பேசினால் மத்தியஅரசிடம் பேசி அவருக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன்.“

-பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் தமிழினத் தலைவர் முதல்வர் கருணாநிதி கொடுத்த விளக்கம். (அடத்தூ...)

# “பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்குக் காரணமே ஜெயலலிதானதான். 2003-ல்
பிரபாகரன் குடும்பத்தார் இந்தியாவுக்கு வரஅனுமதிக்கப்படக்கூடாது என்று ஜெயலலிதா எழுதிய விண்ணப்பக்கடிதத்தின் அடிப்படையிலேயே இப்போது பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்.”

-இது எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவனின் விளக்கம்.

# “மத்திய அரசுக்கு விசுவாசமாக இருக்கும் அதிகாரிகளே பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.”

- இது திராவிட கழகத்தலைவர் வீரமணி அறிக்கை.

# “பார்வதியம்மாள் அனுப்பப்பட்டதற்கு தமிழக முதல்வர் கலைஞர் காரணமே இல்ல. மத்திய அரசுதான் காரணம்.”

-இது பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை.

# “எல்லாத்துக்கும் காரணம் கருணாநிதிதான் என்று குற்றம் சாட்டுகிறேன்.”

-ம.தி.மு.க. வைகோ மற்றும் (தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்) பழ.நெடுமாறன்...


பிரபாகரன் அவர்களே உங்கள் தாயாருக்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பதில் எத்தனை அரசியல் பாருங்கள். உணர்வாளர்களுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக அவரை வரவேற்கச் சென்ற உங்கள் நீண்ட நாளைய நண்பர் நெடுமாறன் அன்ட் கோவினர் உங்கள் தாயாரைத் திருப்பி அனுப்பிய சோனியா அரசை குறை சொல்லத் தயாராக இல்லை. காரணம் ஜெ., காங்கிரஸ் கூட்டணிக்குக் காத்திருக்கிறார். ஜெவுக்கு சமூக நீதித்தாய் என்று பட்டம் கொடுத்த நெடுமாறன், அதிமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.


இந்திய அரசு விசா கொடுக்கிறது. ஆனால் உள்ளே நுழைய அனுமதி மறுக்கிறது. தமிழகத்தில் நடந்த இந்த மனிதநேயமற்ற செயலுக்கு கருணாநிதியின் மேல் அவதூறு வந்துவிடக்கூடாது என்று உங்கள் நண்பர்கள் திருமா, ராமதாஸ், வீரமணி போன்றோர் குதிக்கிறார்கள்.

இவர்களில் பலரும் நீங்கள் விசிறிய எச்சில் சோற்றைத் தின்றவர்கள் என்று எனக்குத் தெரியும். அதுவும் கொஞ்சம் நஞ்மல்ல கோடிக் கோடியாய் நீங்களும் புலம்பெயர் தமிழர்களும் அவர்களுக்குக் கொட்டிக் கொடுத்தார்கள். இன்றைக்கு சொந்த அரசியல் லாபத்திற்காக உங்கள் தாயாருக்கே தயவு காட்டத் தயங்கிறார்கள். ஆயுதம் தாங்கிய நீங்கள் ஓட்டுப் பொறுக்கிகளை நம்பியதன் விளைவைப் பார்த்தீர்களா?

இப்படிக்கு

உங்களைப் போல் தமிழனின் இழிநிலையைப் பார்க்கப்
பொறுக்க முடியாமல் ஆயுதம் (பேனா) தாங்கிய
பத்திரிகையாளன்....

Tuesday, April 13, 2010

கடலோரக் காவல் வடை! -தாமரை



என்னருமை தோழர் கவிஞர் தாமரை எழுதிய
கவிதை இது....

வாரயிருமுறை வரும் இதழ் ஒன்றில் வெளியான
இவரது இந்தக் கவிதையை பலநாட்களாக வலைப்பதிவிட
நினைத்து முடியாமல் போனது...

இன்றைக்குத்தான் சாத்தியமானது...

இந்த நையாண்டிக் கவிதையில்
கவிஞரின் ஆவேசம் அடங்காமல் அதிர்கிறது...


இனி கவிதை வாசியுங்கள்...


‘தம் எல்லைகளையும், தம் மக்களையும்
காத்தலே முதல் கடமை‘ என்ற வரி
கடலோரக் காவல் படையின்
பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை
அல்லது
அது வகுப்பில் சொல்லப்பட்ட போது
க.கா.வீரர்கள் கேன்ட்டீனில்
வடை தின்று கொண்டிருந்திருக்க வேண்டும்...

மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து
வாங்கிய பிரமாண்டக் கப்பல்களில்
உல்லாசப் பயணம் போகிறார்கள்

தேன்நிலவு கொண்டாடுகிறார்கள்
ஒழிந்த நேரங்களில்
தரையோரக் காவல் படையினருக்கு
விருந்து கொடுக்கிறார்கள்...
வடையே முதன்மை பண்டம்!

சிங்களப் படை வந்து தமிழ் மீனவனை
கொத்தாக அள்ளித் தூக்கும்போது
க.கா.வீரர்கள் தங்கள் கப்பல் படையில்
வடைக்கு மாவுத் தட்டிக் கொண்டிருக்கும்படி
பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள்...

முகமெல்லாம் மாவு...
பாவம் தும்மலுக்கு நடுவே
நல்ல வடைக்கு சாத்தியம் நலிவு!

எண்ணெய் குடிக்காத வடையைத் தட்ட
அவர்கள் போராடும் போது
வகையாக வந்து சிக்குகிறான் தமிழ் மீனவன்!
படகு நிறைய அவன் மீன் அள்ளிப்போவதை
எப்படிப் பொறுப்பது?

வலைகளை அறுத்துத் தள்ளுகிறார்கள்
(ஒருவேளை அதில்தான் எண்ணெய் வடிக்கிறார்களே
என்னவோ...!)
மீனவர்களை நிர்வாணப்படுத்துகிறார்கள்
(ஒருவேளை அவர்கள் லுங்கிகள் மாவு
உலர்த்தத்தேவையோ...?)

கண்மூடித்தனமாகத் தாக்குகிறார்கள்
(வடையை சரியாகத்
தட்ட முடியாத வயிற்றெரிச்சல்?)

உச்சகட்டமும் ஒன்றிருக்கிறது...

பொறுக்கிகள் சுடும் வடையும்
பொறுப்பற்றதாகத்தான் இருக்கிறது...

அப்பாவிகள் மீது விழுந்து வெடிக்கிறது...
எண்ணெய் குடிக்காத வடை ரத்தம் குடிக்கிறது!

வகைவகையான வடைகளை கப்பலில்
பார்வைக்கு வைக்கின்றனர்...
அட்மிரல்களும் தளபதிகளும்
உளவுத்துறைகளும் பார்வையிடுகின்றன...

சிறந்த வடை சுட்டவனைத் தேர்ந்தெடுத்து
(கடாய்) பரிசளிக்கின்றனர்...
சிறந்த இந்திய வடை சுட்டவனை அதிசயித்து
சிங்கள மீனவர்கள் படையெடுத்து வந்து
பணயக் கைதியாகக் கொண்டு போகிறார்கள்..

வடை சுடுவதன் தொழில்நுட்ப ரகசியத்தை
அவன் சொல்லும் வரை
‘தட்டி‘ எடுக்கிறார்கள்...

என்னவோ போங்கள்...

வடை சுடவும் வக்கற்ற எனக்கு
வயிற்றெரிச்சலாக இருக்கிறது...

யாரப்பா அங்கே...
கடலோரக் காவல் கடை...?
எனக்கு ரெண்டு வடை .... பார்சல்...!

Monday, April 12, 2010

தண்டகாரண்யம்: இந்திய தேசியம் பேசினால் செருப்பால் அடிப்பேன்டா...,




உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அளப்பறிய சேவைகளை செய்து வருகிறார். அதுவும் தண்டகாரண்யத்தில் அவர் ஆற்றி வரும் சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது. அதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா, போன்றவர்கள் துணையாக நிற்கிறார். மீடியாகளும் ப.சி.க்கு பக்கபலமாக இருந்து வருகிறது.

எதற்கு இந்தப் பாராட்டு என்கிறீர்களா?

மேலே படியுங்கள்...

இந்தியாவின் மையப்பகுதியில் இருக்கும் தண்டகாரண்யம் என்கிற அடர்ந்த வனப்பகுதி ஆந்திரம்,​​ மகாராஷ்டிரம்,​​ சத்தீஸ்கர்,​​ மத்தியப் பிரதேசம்,​​ ஜார்க்கண்ட் மற்றும் ஒரிசா ஆகிய ஆறு மாநிலங்களின் எல்லைகளை உள்ளடக்கியது.​ இதன் மொத்த நிலப்பரப்பு ஏறத்தாழ 40,000 சதுர கிலோ மீட்டர். ​ இந்த வனப்பகுதியில் வாழும் ஆதிவாசிகள் எதற்காகவும் வெளியுலகையோ அரசையோ சார்ந்து வாழ வேண்டிய அவசியமில்லாதவர்கள்.​ இவர்களுக்கு ரேஷன் தேவையில்லை.​ மின்சாரம்,​​ குடிநீர் வசதி,​​ சாலைகள்,​​ பள்ளிக்கூடங்கள்,​​ மருத்துவமனைகள் எதுவுமே வேண்டாம்.​ இயற்கையோடு ஒட்டி வாழும் பழங்குடி மக்கள்.


உலகமயமாக்கல் கொள்கையால் பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை அங்கே குவிந்து கிடக்கும் கனிம வளத்தின் மீது விழுந்தது. அதை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்தால் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கலாம் என பன்னாட்டு நிறுவனங்கள் கணக்குப் போட்டன.

ஓட்டுப் பொறுக்கிகள் அந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் வருகையையும் அவர்களது வளர்ச்சியையும் ஆதரித்து பழங்குடி மக்களை விரட்டி அடிக்கத் தீர்மானித்தனர். தங்களது வாழ்வாதாரம் பறிபோனால் நகரத் தெருக்களில் பிளாட்பாரங்களில் அல்லாட வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அவர்களை வெளியேற்றி கனிம வளங்களைச் சுரண்டி ஏற்றுமதி செய்வதிலிருந்து பின்வாங்க பன்னாட்டு நிறுவனங்களும் தயாராக இல்லை.​ ​இங்கே தான் ஏற்கெனவே தங்களின் அடிப்படை வசதிகளுக்காக போராடிக் கொண்டிருந்த ஆயுதக் குழுக்களின் உதவியை நாடினர், பழங்குடி மக்கள்.


தண்டகாரண்யப் பகுதிகளிலிருந்து கனிம வளங்களை வெட்டி எடுக்கும் முடிவை கைவிட்டால்தான் அந்த மக்களும் அந்த மக்களுக்காக களம் காணும் மாவோயிஸ்ட்களும் ஆயுதங்களை கீழே போடுவார்கள். ஆனால் அந்தக் கனிம நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் ப.சிதம்பரம் (அந்த நிறுவனங்களின் சட்ட ஆலோசகர் நளினி சிதம்பரம்) ​​ விமானத் தாக்குதல் மூலம் மாவோயிஸ்டுகளை அழிக்கும் சாக்கில் ஆதிவாசிகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார். இது காடுகளை அழித்து பன்னாட்டு கனிம நிறுவனங்களுக்கு தாரை வார்த்துவிட்டு இயற்கையோடு இணைந்து வாழும் பழங்குடி மக்களை நகரங்களில் பிச்சை எடுக்க வைப்பதுதான் ப.சிதம்பரத்தின் லட்சியம். இதை மன்மோகன் சிங் வேடிக்கை பார்க்கிறார். சோனியா காந்தி வேடிக்கை பார்க்கிறார். விளிம்பு நிலை மனிதர்களுக்காகப் போராடும் கனிமொழி, திருமா போன்றவர்களும் வேடிக்கைப் பார்க்கிறார்கள். இதைத் தட்டிக் கேட்க வக்கில்லாத மீடியாகள் இதைவிட கூட்டிக் கொடுக்கும் வேலையை செய்யலாம். (அதைத்தானே இப்போதும் செய்து வருகிறது)

எங்கோ காட்டில் நிம்மதியாக வாழும் அந்த மண்ணின் மைந்தர்களை அழிக்கும் உங்கள் இந்திய தேசியம் வாழ்க... இதற்கு மேலும் எவனாவது தேசப்பற்று பத்தி பேசினால் செருப்பால அடிப்பேன்.... ப.சி.யை செருப்பால் அடித்து புண்ணியம் கட்டிக் கொண்ட சீக்கிய பத்திரிகையாளனுக்கு என் வீரவணக்கங்கள்...