Thursday, January 28, 2010

உணர்ச்சி வேகத்தில் முத்துக்குமார் இப்படி செய்து விட்டான்’ -இயக்குநர் ஜனநாதன்




திருப்பூர் கண்காட்சியில் இன்று விற்பனைக்கு வரும் முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாற்று நூல், ‘துருப்புச்சீட்டு’க்கு பேராண்மை இயக்குநர் ஜனநாதன் எழுதிய அணிந்துரை


முத்துக்குமார் பற்றிய ஆவணத்தொகுப்புகள் எந்த வடிவத்திலும் வெளிவருவது இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது. உலக முழுவதும் உள்ள தமிழர்கள் நம் தொப்புள் கொடி உறவுகள் என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் கருத்து, முத்துக்குமாரின் தியாகத்தால் யாரும் மறுக்க முடியாத உண்மையாக்கிவிட்டது.

உலகத் தமிழர்கள் அனைவரும் ஓர் இனம் என்கிற உணர்வுடன் இருக்கிறோம் என்பதற்கு அடையாளம் - ஆதாரம், முத்துக்குமாரின் மரணம். இந்த இளைஞனின் உயிர்கொடை உலகத் தமிழர்களை ஒன்றிணைத்துவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை. உலகில் எத்தனையோ பேர் அரசியல் தீக்குளிப்புப் போராட்டங்களை முன்னெடுத்து உயிர்க்கொடை செய்திருக்கிறார்கள். ஆனால், தன் உடலையே துருப்புச்சீட்டாக்கி எதிர்கால அரசியலை திட்டமிட்டு உயிர்த்தியாகம் செய்தது அனேகமாக முத்துக்குமார் மட்டும்தான்.

முத்துக்குமார் மரணமடைவதற்கு முன்பே உதவி இயக்குநராக எனக்கு அவர் அறிமுகமாகியிருந்தார். ‘ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் இந்த இளைஞன் இப்படி செய்து விட்டான்’ என்று என்னிடம் சிலர் கூறியிருக்கிறார்கள். பொன்னுசாமி எழுதியிருக்கும் இந்தத் ‘துருப்புச்சீட்டு‘ என்கிற முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாற்று நூலில் வெளிப்பட்டிருக்கும் முத்துக்குமாரின் அறிவுத்திறன் மற்றும் அவர் வளர்த்துக்கொண்ட தகுதிகள் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவர் வெறும் உணர்ச்சிவயப்பட்டு எதிலும் இறங்குபவர் அல்ல என்பதும் இந்தத் புத்தகம் ஊடாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர். ஆங்கில மொழியறிவு கொண்டவர். மலையாளமும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. வெறும் ஆர்வத்தினால் மட்டுமே சினிமாவுக்குள் நுழைபவர்களுக்கு மத்தியில், சினிமாவை ஒரு தொழிற்கல்வியாகப் பயிலும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். நல்ல புத்தகங்களைத் தேடி வாசித்திருக்கிறார். மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் கட்டணம் வரும் வரைக்கும் இணையத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். உலகப்படங்களைப் பார்த்து தன்னுடைய சினிமா அறிவை மேம்படுத்திக்கொண்டார். உதவி இயக்குநர்களாக முயற்சி செய்யும் பெரும்பாலானவர்களிடம் இவ்வளவு திறமைகளையும், தகுதிகளையும் நான் கண்டதில்லை. ஆக, அவர் வெறும் உணர்ச்சிவயப்படுபவர் என்ற வாதம் பொய்யானது.

முத்துக்குமார் தன் மரணத்துக்கு முன்பு எழுதிய அந்த அரசியல் அறிக்கையில், பல இடங்களில் நையாண்டி கலந்திருந்தது. மன உளைச்சல் மற்றும் உளவியல் ரீதியாக தீக்குளிப்புப் போராட்டத்துக்கு அவர் தூண்டப்பட்டிருந்தால், நிச்சயம் இந்த நையாண்டித்தனங்கள் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை. சாகும் தறுவாயில்கூட அவரால் இப்படி எழுத முடிந்திருக்கிறது என்றால், உண்மையிலேயே அவர் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார்.

‘நிழல்‘ திருநாவுக்கரசு நடத்தும் திரைப்படப் பயிற்சிப் பட்டறைகளில் முத்துக்குமாரை நான் அடிக்கடி பார்த்திருந்தாலும், என் வீட்டில் அவரை இரண்டு மூன்று முறை சந்தித்திருக்கிறேன். முதல்முறையாக நான் அவரைப் பார்த்தபோது ‘படபடப்புடன் சேர்ந்த துறுதுறு இளைஞன்‘ என்று அவரைப் பற்றி நினைத்துக் கொண்டேன். இந்த நூலில் உள்ளது போலவே எப்போதும் புத்தகமும் கையுமாகவே முத்துக்குமாரைப் பார்த்திருக்கிறேன். வீட்டிற்குள் நுழைந்ததும் என் புத்தக அலமாரியை ஆய்வு செய்யத் தொடங்கிவிடுவார்.

புத்தகம் மீதான அவரது ஆர்வத்தைப் புரிந்து கொண்ட நான், சின்ன வயதில் நான் படித்த மாக்ஸிம் கார்க்கியின் ‘ஒரு பிரம்மச்சாரியின் டைரி‘ புத்தகம் அவரிடம் இருக்கிறதா என்று கேட்டேன். அதை எப்படியாவது தேடி வாங்கி வருவதாக என்னிடம் முத்துக்குமார் உறுதியளித்தார். ஆந்திர மாநிலம் தலக்கோனம் என்ற இடத்தில் ‘பேராண்மை‘ படப்பிடிப்பில் இருந்தபோது, எனது துணை இயக்குநரும் அவரது நண்பருமான ஆலயமணியைத் தொடர்புகொண்ட முத்துக்குமார், ‘அண்ணன்கிட்ட சொல்லிடுங்க, ஒரு பிரம்மச்சாரியின் டைரி புத்தகம் கிடைத்துவிட்டது‘ என்று சொல்லியிருக்கிறார். ‘சென்னை வந்ததும் சந்திப்போம்‘ என்று ஆலயமணி கூறியிருக்கிறார். நாங்கள் திரும்பிய சில நாட்களில் முத்துக்குமார் தீக்குளித்து இறந்துபோன செய்தி எங்களுக்கு வந்து சேர்ந்தது. உடனே கொளத்தூர் சென்ற என்னால் அங்கு வைக்கப்பட்டிருந்த முத்துக்குமாரின் கருகிய உடலைத் தான் பார்க்க முடிந்தது. எனக்காக முத்துக்குமார் வாங்கிய ‘ஒரு பிரம்மசாரியின் டைரி‘ புத்தகம், அவரது புத்தக அலமாரியில் இன்னும் இருப்பதாக கேள்விப்பட்டேன். இந்தச் சம்பவம் முத்துக்குமாருக்கும், எனக்குமான ஓர் உணர்வுப்பூர்வமான நெருக்கத்தை உருவாக்கிவிட்டது.

என்னிடம் உதவி இயக்குநராக சேர வேண்டும் என்கிற தனது ஆசையை முத்துக்குமார் என்னிடம் வெளிப்படுத்தவே இல்லை. என் துணை இயக்குநர் ஆலயமணியிடம் கூறியிருக்கிறார். ‘பேராண்மை‘ பட ஸ்கிரிப்டை தட்டச்சு செய்ய முத்துக்குமாரை வரசொல்லிருந்தோம். அப்போது வேறொரு வேலையில் மும்முரமாக இருந்ததால் தன்னால் வரமுடியவில்லை என்று என் உதவி இயக்குநர் ரோகாந்திடம் முத்துக்குமார் கூறியிருக்கிறார்.

சமூக-அரசியல் அறிவோடு, சினிமா கலையையும் முறையாகக் கற்றுத் தேர்ந்திருந்த முத்துக்குமார் உயிரோடு இருந்திருந்தால் அவர் மூலம் மிகச்சிறந்த படைப்புகள் தமிழ்ச் சினிமா உலகிற்குக் கிடைத்திருக்கும்.

முத்துக்குமாரின் அரசியல் அறிக்கையில் உள்ள சில கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு. ஒருசில கருத்துகளில் முரண்படுகிறேன். அதை எல்லாம் மீறி, முத்துக்குமார் எனும் அந்தத் துருப்புச்சீட்டை நாம் சரியாக பயன்படுத்தவில்லையோ என்கிற குற்றஉணர்வு என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது.
இப்படிக்கு

எஸ்.பி.ஜனநாதன்.

Wednesday, January 27, 2010

திருப்பூர் புத்தகக்கண்காட்சியில் செம்மை பதிப்பகத்தின் முத்துக்குமார் வரலாற்று நூல், ‘துருப்புச்சீட்டு‘!




பொழுதுபோக்கு, வெறுங்கூத்து என இன்றைய தலைமுறை இளைஞர்கள் திசை மாறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்கிற விமர்சனத்தை முத்துக்குமாரின் தீக்குளிப்பு மறுஆய்வு செய்யத் தூண்டியிருக்கிறது. தன்னுடைய தலைவனுக்காக உணர்ச்சிவயப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொள்ளும் செயல்பாட்டோடு முத்துக்குமாரின் தீக்குளிப்பைப் பொறுத்திப் பார்ப்பது அபத்தம். சாவதற்கு முன் அவர் விநியோகித்த துண்டறிக்கையில் இருந்த அவரது அரசியல் அறிவின் வீச்சை 26 வயது இளைஞரிடமிருந்து யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இன்றைய தமிழ் இளைஞர்களை சமூகப் போராளியாக மாற்றவன் முத்துக்குமார். அவரது இறுதி ஊர்வலத்தில் கொளத்தூரில் இருந்து மூலக்கொத்தளம் வரை திரண்ட உணர்வாளர்களின் எழுச்சி, தமிழகம் இதுவரை கண்டிராதது. பேரழிவு ஆயுதங்களால் தமிழினத்தை அழித்த ஏகாதிபத்திய நாடுகளை உலுக்கியது இவரது அரசியல் அறிக்கை. தமிழகத்தையே பதற வைத்த இந்த முத்துக்குமார் யார்? தமிழ் இனத்தின் நலன்களுக்காக வேரோடு தன்னைக் கொடுத்த இந்த விருட்சம் எங்கிருந்து வந்தது? பெருமரமென ஓங்கி வளர்வதற்கு முன் விதையாய் இருந்த நாளில் அது கடந்து வந்த பாதை என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடையாய் வெளிவந்திருக்கிறது, முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாற்று நூல், ‘துருப்புச் சீட்டு‘

‘என் உடலையே துருப்புச்சீட்டாக்கிப் போராடுங்கள்’ என்று உலகில் வேறு எவரும் இதற்கு முன்பு அறிவித்ததாக வரலாறு இல்லை. எனவே, இதைவிட வேறொரு தலைப்பு, இந்தப் புத்தகத்திற்குப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றவில்லை. செம்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகம், ஜனவரி 29-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கும் திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.

கடந்தாண்டு இதே நாளில்தான் (ஜனவரி 29–ம் தேதி) தமிழின அழிப்பை எதிர்த்து உயிர்க்கொடை செய்தார், முத்துக்குமார்.

தொடர்புக்கு

செம்மை பதிப்பகம்,
451, அரசம்மை இல்லம்,
விக்டோரியா காலனி – நான்காம் தெரு,
மருத்துவக் கல்லூரி சாலை,
தஞ்சாவூர் -613004.
கைபேசி: 90950 13809 , 0436 2246774

Tuesday, January 19, 2010

இளைஞர்களுக்கு தமிழுணர்வு இல்லையாம் சொல்கிறார், தேர்தல் காலத் தமிழினத் தலைவர் கலைஞர்

இன்றைய இளைய தலைமுறையினர் தமிழில் பெயர் வைக்கத் தயங்குவதாக தேர்தல் காலத் தமிழினத் தலைவர் (முத்துக்குமார் தனது அரசியல் அறிக்கையில் இப்படித்தான் கூறிப்பிட்டிருந்தார்) கலைஞர் வருத்தப்பட்டிருக்கிறார். அதோடு, நிற்காமல் மணமகனின் பிரதீப் என்ற பெயரை மதிவாணன் என்று மாற்றியிருக்கிறார்.

பிரதீப் என்கிற மதிவாணன் இன்றைய தலைமுறைதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் ஒன்றும் தனக்குத் தானே அந்தப் பெயரை வைத்துக் கொள்ளவில்லை. பிரதீபின் தாத்தா, அப்பா ஆகியோர் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். அவர்கள்தான் இவருக்கு இந்தப் பெயரை வைத்திருப்பார்கள். ஆக, தமிழினத் தலைவரின் கட்சியில் இருந்து கொண்டே மேடையில் பிழைப்புக்காக தமிழைப் பேசிக் கொண்டே தன்னுடைய வாரிசுக்கு இப்படியொரு பெயரை அவர்கள் வைத்திருப்பார்கள்.

உண்மை அப்படியிருக்கையில், ஏதோ பிரதீப் என்ற இளைஞர் தனக்குத் தானே பெயர் வைத்துக் கொண்டது மாதிரி கொதித்துப் போய் பேசியிருக்கிறார். அதே மேடையில் கருணாநிதி என்கிற தனது பெயர் வேற்று மொழியில் இருந்தாலும், கடவுளைக் குறிப்பதால் அதை அப்படியே விட்டுவிட்டதாகவும் கலைஞர் கூறினார்.

இன்றைக்கு அவருடைய பேரன், பேத்திகள் திவ்யா, ஆதித்யா, இதயநிதி ஆகியோரின் பெயர்கள் எல்லாம் தூயத் தமிழ்ச் சொல் என்று கருணாநிதி நினைத்துக் கொண்டிருக்கிறாரோ என்று தெரியவில்லை. ஊரான் பெயரை எல்லாம் மாற்றுவார், இவருடைய பேரனின் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ரெட்ஜெயன்ட் இது என்ன தமிழ்ப் பெயரா? ‘தமிழ் படம்’ என்ற பெயரில் அழகிரியின் மகன் எடுக்கும் அந்தப் படத் தலைப்பில் ‘ப்’ என்ற ஒன்று இல்லையே, இது தமிழுக்குச் செய்யும் சேவையா? தமிழுணர்வு மிக்க இன்றைய தலைமுறையினர் (முத்துக்குமார் உள்பட) ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்ததால் அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியது இதே கலைஞர்தான்.

இதையெல்லாம் எழுத இங்கே எந்தப் பத்திரிகையும் கிடையாது. அது சரி, தி.மு.க. மத்திய அமைச்சரின் லட்சம் கோடி ரூபாய் ஊழலையே கண்டுகொள்ளாத தமிழக ஊடகங்கள் இதையா கண்டுகொள்ளப் போகிறது?

Monday, January 18, 2010

தமிழ்மணம் விருது! நன்றிகள்!!




தமிழ்மணம் வழங்கும் 2009-ம் ஆண்டுக்கான முதல் பரிசு பதக்கம் எனக்குக் கிடைத்திருக்கிறது. தலித் மக்கள் பிரச்சினை, மனித உரிமை, நிறவெறி தொடர்பான கட்டுரைகளுக்கான பிரிவில் முதல் பரிசு வழங்கியிருக்கிறார்கள். ‘ஷாருக்கானுக்கு ஒரு நியாயம், தமிழனுக்கு ஒரு நியாயமா?‘ என்ற கட்டுரைக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

நான் எந்தக் கட்டுரையையும் திட்டமிட்டு எழுதியது கிடையாது. கோபமும், ஆவேசமும் உந்தித் தள்ளும்போது எழுதத் தொடங்குவேன். உண்மையிலேயே பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்த்து போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை.

இப்போதும் ஒரு வார்த்தையை பலமுறை அடித்து திருத்தி எழுதும் அளவுக்கே என்னுடைய மொழி அறிவு இருக்கிறது. அதிலும் முக்கியமான ஒரு புத்தகத்தை விரைவில் எழுதி வெளியிட உள்ள நிலையில் எனக்குக் கிடைத்துள்ள இந்த விருது உண்மையில் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

விருது கிடைத்த செய்தியை என் மனைவியிடம் தெரிவித்ததும் மகிழ்ச்சி அடைந்தாள். நண்பர்களிடம் இன்னும் சொல்லவில்லை (கூச்சமாக இருக்கிறது). நான் எழுதிக் கொண்டிருக்கும் அந்தப் புத்தகம் பற்றிய அறிவிப்பு மிக விரையில் வரும். தமிழ்மணம் எழுத்தாளர்களும், வாசகர்களும் அந்தப் புத்தகத்தை நிச்சயம் படிப்பார்கள். இப்போதைக்கு ரகசியம்!

மறந்தே விட்டேன், என் கட்டுரைக்கு வாக்களித்த முகம் தெரியாத நண்பர்களுக்கு நன்றி.

மீண்டும் சந்திப்போம்.

Wednesday, December 30, 2009

புத்தகக் கண்காட்சியில் எனது புத்தகம்!


அண்மையில் நான் எழுதிய ‘மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம்-இந்திய அரசின் கொள்ளைத் திட்டம்’ என்ற சிறு நூல், புத்தகக் கண்காட்சி அரங்கு (பூவுலகின் நண்பர்கள்) எண் இருநூற்றி முப்பத்தி மூன்றில் கிடைக்கிறது. (விலை ரூ.எட்டு மட்டுமே)


அதே அரங்கில், ‘நெய்தல்- கண்ணீரும் கண்ணீரும் சார்ந்த இடமும்’ என்ற ஆவணப் படமும் கிடைக்கும். மீன்பிடி சட்டத்தின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், உள்ளாட்டு மீனவர்களை மீன்பிடித் தொழிலில் இருந்து வெளியேற்றும் போக்கையும் கடைபிடிக்கும் இந்திய அரசின் முகத்தைக் கிழிக்கிறது, இந்த ஆவணப் படம். விலை ரூ.ஐம்பது.

Tuesday, December 8, 2009

“குஷ்பு சொன்னா சரி…” ஜொள்விட்ட கலைஞர் - துடைத்துவிட்ட ரஜினியும் கமலும்...


காலையில் தினத்தந்தியைப் பார்க்க நேரிட்டது. திரைப்படத் துறையினருக்கான தமிழ்நாடு அரசு விருது வழங்கும் விழா நேற்று நடந்திருக்கிறது. ரஜினிக்கு சிறந்த நடிகர் விருது, கலைஞர் தனக்குத்தானே தந்துகொண்ட சிறந்த உரையாடல் ஆசிரியர் (உளியின் ஓசைக்காம்) விருது போன்ற அபத்தங்களைப் பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? (வெட்கம் கெட்ட ஜென்மங்கள்)

விருது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் குஷ்பு! பெரியாரின் கொள்கைகள் என்பதை “பெரியாரின் கொள்ளைகள்” என்றும், உளியின் ஓசை என்பதை “ஒலியின் ஓசை” என்றும், குத்தகைதாரர் என்பதை “குத்துகைதாரர்” என்றும் பேச பார்வையாளர்கள் தரப்பில் இருந்து ஒரே கூச்சலாம். சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதுக்கு கலைஞர் பெயர் அறிவிக்கப்படும்போது, கலைஞர் பற்றிய புகழுரையை வாசிக்க முயன்ற குஷ்புவைத் தடுத்த அமைச்சர் பரிதி இளம்பழுதி (எங்கே சொதப்பிவிடுவாரோ என்ற பயத்தில்) தானே கலைஞரைப் புகழ்ந்து பேசி விருதை வழங்க ரஜினி, கமலை அழைத்திருக்கிறார். யாராக இருந்தாலும் பெரியாரைப் பற்றி தவறுதலாகப் பேசலாம். கலைஞரைப் பற்றி தவறாகப் பேச அனுமதிக்க முடியுமா, என்ன?
அதன்பின்பு குஷ்புவுக்குப் பதில் அவரே நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாறிவிட்டாராம். (அந்த ஆளு அமைச்சராக இருப்பதற்கு இது எவ்வளவோ தேவலை) நிகழ்ச்சியில் பேசிய கமல், “குஷ்பு சிறப்பாகத் தமிழ்ப் பேசுவதை கலைஞர் என்னிடம் குறிப்பிட்டார். குஷ்புவுக்கு வாழ்த்துகள்” என்று சொல்லி யிருக்கிறார். பெரியாரைக் கொள்ளையன் என்று சொன்னால் கலைஞருக்கு நிச்சயம் பிடிக்கும். அதுவும் குஷ்பு வாயால் என்ன சொன்னாலும் பெரியவர் கலைஞருக்கு பிடிக்காமல் போகாது. முத்தமிழ் அறிஞர், முத்தமிழ் வித்தகர், தமிழினத் தலைவரே சொல்லிவிட்டார், குஷ்புவின் தமிழ் சிறப்பானது என்று. எனவே, குஷ்வின் தமிழை ஏற்றுக்கொள்ள முடியாமல் கூச்சலிட்ட பார்வையாளர்கள் எல்லாம் அ.தி.மு.க.வினராகத்தான் இருக்க வேண்டும்.

விழாவில் பேசிய ரஜினி, “கலைஞர் யாரை சேர்த்துக் கொண்டாலும் அவர்கள் பெரிய ஆளாகிவிடுவார்கள். இல்லையென்றால் சாய்பாபா அவரை வீட்டிற்கே வந்து சந்தித்திருப்பாரா?” என்று பேசியிருக்கிறார். வெறும் கைகளில் விபூதி கொண்டு வரும் மாயாஜாலக்காரர், கடவுளின் அவதாரம் சாய்பாபாவைப் பெரிய ஆளாக நினைக்கும் ரஜினியின் பகுத்தறிவை நினைக்கும் போது புல்லரிக்கிறது. வெறும் கைகளில் தங்க சங்கிலி கொண்டு வரும் சாய்பாபாவிடம் சொல்லி, தன் மகள் வாங்கிய கோடிக்கணக்கான கடனையும் அவர் மீது நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கையும் ஒன்றும் இல்லாமல் செய்ய ரஜினி முயன்று கொண்டிருப்பாரோ?
உலகத் தரத்துக்கு தமிழ் சினிமாவை உயர்த்தத் துடிக்கும் கமலும் – மூவாயிரம் ஆண்டுகள் உயிர்வாழும் பாபா தரிசனம் கிடைத்த ஆன்மீனகவாதி ரஜினியும் உளியின் ஓசை படத்துக்கு சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதுக்கு கலைஞர் தகுதியானவர் என்று சொன்னால் மிகச் சரியாகத்தான் இருக்கும். பாபாவை வணங்குபவர்கள், யோகா, தியானம் செய்பவர்கள் பொய்யே பேசமாட்டார்கள். (ஆனால் தான் வாங்கும் சம்பளத்தை மட்டும் வெளியே சொல்லவே மாட்டார்)
கலைஞர், குஷ்பு, ரஜினி, கமல், அவர்கள் எல்லாம் தமிழனையும், தமிழ்நாட்டையும் உயர்த்தாமல் உறங்க மாட்டார்கள். வாழ்க தமிழினம், வளர்க தமிழ்.

Saturday, November 14, 2009

ஜெகத் கஸ்பரின் ‘நாம்’ அமைப்பும், போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பும் விபசாரம் செய்யலாம்!





அந்தப் (கவிதை) புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு நான் போயிருக்கவே கூடாது. போனதோடு நிறுத்தியிருக்கலாம்.
அந்தப் புத்தகத்தை வாங்கியிருக்கக் கூடாது. அதோடு அந்தப் புத்தகத்தைப் புரட்டிய போதே எனக்கு வந்த ஆத்திரம், அதைப் படித்தும் ஆயிரம் மடங்கு அதிகரித்துவிட்டது.

போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் அமைப்பும், ஜெகத் கஸ்பரின் ‘நாம்’ அமைப்பும் இணைந்து, ‘ஈழம் மௌனத்தின் வலி‘ என்ற புத்தகத்தை அந்த நிகழ்வில் வெளியிட்டனர். தமிழ் மக்கள் ஈழத்தில் துடிதுடித்து செத்துப் போனதை படம் போட்டுக் காட்டி அந்தப் படங்களுக்குப் பொருத்தமான கவிதைகளை பிரபலங்களிடம் வாங்கித் தொகுத்திருக்கிறார்கள். கமல் முதல் ரஜினி வரை கவிதை எழுதியிருக்கிறார்கள். (இன்னும் நீங்கள் எதிர்பாராத பலரும் இதில் எழுதித் தள்ளியிருக்கிறார்கள்)

சனிக்கிழமை மாலை நடந்த அந்த நிகழ்ச்சியில் நக்கீரன் கோபால், நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சிவக்குமார், சூர்யா, இயக்குநர்கள், வசந்த், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருடன் சிறப்பு அழைப்பாளராக ஜகிவாசுதேவ் கலந்து கொண்டார். அக்டோபரில் ஆரம்பித்து படிப்படியாக உக்கிரம் அடைந்த போரில் அப்பாவி மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் இவர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள் என்று தெரியவில்லை. திடீரென இவர்களுக்கெல்லாம் எங்கிருந்து இந்த மனிதநேயம் முளைத்தது?

தமிழீழ விடுதலைப் புலிகளை சிலாகித்து நக்கீரன் பத்திரிகையில் எழுதிக் கொண்டே, ‘புலிகள் தவறே செய்யாதவர்கள் அல்ல. அவர்களுக்கு சர்வதேச அரசியல் தெரியவில்லை’ என்று பேசிவரும் ஜெகத் கஸ்பர் இந்த நிகழ்ச்சியின் நாயகன்! ஈழம் பற்றி பேசுபவர்கள் புலிகளை விமர்சிக்கக் கூடாது என்பது அல்ல என் வாதம். கஸ்பர் எதற்காக இந்த இரட்டை வேடம் போடுகிறார் என்பதே என் கேள்வி.

புலம் பெயர்ந்தவர்கள், சிறிதேனும் இயக்கத் தொடர்பு உள்ளவர்களுக்கு இந்த கஸ்பர் யாரென்று பல ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்ததுதான். ஆனால், தமிழ்நாட்டில் ஈழஅவலத்தை முதல் முறையாகக் கண்டு கொதித்துப் போன (என்னைப் போன்ற) இந்தத் தலைமுறையினரை இந்திய அரசுக்கு ஆதரவான ஆட்களாக ஆக்குவதுதான் கஸ்பருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணி. நக்கீரன் இதழ் மூலம் அதை நன்றாகவே செய்கிறார், கஸ்பர்.

நக்கீரனில் தொடரும் பணியை அடுத்தத் தளத்துக்கு விரைவுப்படுத்தவே இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி. மருத்துவர் எழிலன் தன் நன்றியுரையில், ‘கழிவு நீரும் குடிநீரும் கலந்து வரும் தண்ணீரைப் பருகிக் கொண்டிருக்கும் மக்களுக்காக மழைநீரைப் (வெளியே மழை பெய்து கொண்டிருந்தது) பொருட்படுத்தாமல் வந்த உங்களுக்கு நன்றி’ என்றார். முள்வேலி முகாமில் பாலாறும், தேனாறும் ஓடுகிறது என்று தன் நெருங்கிய தோழி கனிமொழி சொன்னதை மறந்துவிட்டாரா? ‘இலங்கைத் தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலைப் பெற்றுத் தந்த கலைஞருக்குப் பாராட்டு! வாழ்க தலைவர் கலைஞர்’ என்று திமுகவினர் போஸ்டர் அடித்தது, பாவம் எழிலனுக்குத் தெரியாது போலும். (பிரபாகரனுக்கு முட்டாள். கலைஞரைப் பாருங்கள், வெறும் நான்கே நாட்களில் அந்த மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்து விட்டார்) எழிலன் அவர்களே, குறைந்தபட்சம், மருத்துவத் தொழிலையாவது மனச்சாட்சியோடு செய்யுங்கள்.

போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் அமைப்பைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். சினிமாவில், போலீஸ் கிளைமாக்ஸில் வருவது போல, போர் முடிந்து இனஅழிப்பு முடிந்து முனங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென வந்திருக்கிறார்கள் இந்த போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள். இந்த அமைப்பின் அமைப்பாளர் த.செ.ஞானவேல் இத்தனை நாள் எங்கே இருந்தார்? பிரகாஷ்ராஜின் விவகாரத்து வழக்கைக் கவனித்துக் கொண்டிருந்தாரா?

‘ஜெகத் கஸ்பரின் ‘நாம்’ அமைப்பும் சேர்ந்துதான் புத்தகம் வெளியிடுகிறது என்பதை மறைத்து என்னிடம் கவிதை வாங்கி பிரசுரித்திருக்கிறார்கள்’ என்று இயக்குநர் சீமான் சீறியதாகவும் பேசிக் கொள்கிறார்கள். இத்தனையும் செய்துவிட்டு இப்போது புத்தகம் வெளியிட்டு அதற்கு நூறு ரூபாய் விலை வேறு. அதில், ‘மனித நேயர் எவரும் மறுபதிப்பு செய்யலாம்‘ என்று பெருந்தன்மையான விளக்கம் வேறு. (அடுத்தவர்களிடம் ஓசியில் எழுதி வாங்கிக் கொண்டு அதற்கு காப்பி ரைட் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பார்கள், போலும்!)

இப்படியொரு புத்தகம் வெளியிட்டதன் நோக்கம் என்ன? எதற்காக செய்தார்கள்? எதை மறைக்க இப்படி செய்கிறார்கள்? கலைஞரைத் திட்டக் கூடாது, இந்திய அரசை திட்டக் கூடாது, போராடக் கூடாது, ஆனால் ஈழ மக்களை நினைத்து கண்ணீர் சிந்திக் கொண்டே இருக்க வேண்டும். இதுதானே கஸ்பர் அன்கோவின் விருப்பம். இந்திய அரசு அவருக்கு இட்டிருக்கும் பணி.
ஈழ மக்களின் துயரம் குறித்து பேச முயன்ற மனித உரிமை ஆர்வலரான அமெரிக்கப் பெண் எல்லின் ஷேண்டருக்கு தமிழ்நாட்டில் நுழையவே தடை விதித்தார்கள். அந்தப் பெண்ணின் பேச்சை வீடியோவில் கூட ஒளிபரப்பக் கூடாது என்றது, கலைஞர் அரசு. ஆனால் கஸ்பர் விழாவுக்கு மட்டும் பலத்த போலீஸ் பாதுகாப்போடு ராஜமரியாதை. இதில் இருந்தே தெரிய வேண்டாமா? யார் உண்மையை பேசுகிறார்கள்? யார் பொய் பேசுகிறார்கள் என்று.

‘நம் தொப்புள் கொடி உறவுகள் மீது இனஅழிப்பைப் போரை இந்தியாதான் முன்னின்று நடத்துகிறது’ என்று தொடக்கத்தில் இருந்து கடுமையாக பேசிவரும் கவிஞர் தாமரை போன்ற ஒரு சிலரின் பங்களிப்பும் இந்தப் புத்தகத்தில் உண்டு. அவர்கள் யாரும் என்னுடைய இந்த விமர்சனத்தைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. (உன்னை போல் ஒருவன் படத்தில், ‘தமிழ்நாட்டு மக்கள் ராஜீவ் காந்தி படுகொலையையும், மீனம்பாக்கம் குண்டு வெடிப்பையும் மறந்து விட்டார்கள்’ என்று வாய் கிழிய பேசிய கமலின் கவிதை இந்தப் புத்தகத்தில் முதல் பக்கத்தில் வந்திருப்பதுதான் வேதனையிலும் வேதனையான ஒன்று) கஸ்பர் அய்யா, எழிலன் அய்யா, போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பைச் சேர்ந்தவர்களே.. மனதில் கொஞ்சமேனும் மனிதமும், ஆண்மையும், தைரியமும் இருந்தால் நடந்து முடிந்த இனப்படுகொலைக்குக் காரணமான இந்திய அரசை கண்டித்து ஒரே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்.. உங்களால் முடியவே முடியாது. குமுதம் இணையதளத்தில் அண்மையில் ஜெகத் கஸ்பர் சொன்னதை உங்களை எல்லாம் பார்த்துச் சொல்கிறேன்.. இந்தப் பிழைப்புப் பிழைப்பதைவிட விபசாரம் செய்யலாம்..அடத்தூ..