Thursday, October 28, 2010

கன்னடர்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம்...

கடந்த சனிக்கிழமை பெங்களூரு சென்றிருந்தேன். அதற்கு முன்பு 2000ம் ஆண்டில் கல்லூரியிலிருந்து internship க்காக (அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்?) பெங்களூருவில் 50 நாள்களுக்கு மேல் தங்கியிருந்தேன். அதன்பிறகு ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பின் அங்கே சென்றேன். ஒரே ஒரு நாள் தங்கியிருந்தேன். அந்த ஒரு நாள் முழுக்க பெங்களூரு நகரை சுற்றி வந்தேன்.

ஆட்டோ ஓட்டுநர் முதல் ஹோட்டல் ஊழியர்கள் வரை அந்த ஊர் அரசியல் சமூக நிலவரம் குறித்து என் ஐயப்பாடுகளை கேட்டுத்தெரிந்து கொண்டேன்.

எல்லோருமே எடியூரப்பா நன்றாகவே ஆட்சி செய்வதாக கூறினார்கள். சில குறைகளும் அவரிடம் உண்டு என்பதை அதில் பாதிப் பேர் ஒப்புக் கொண்டனர். ஆனால் இதற்கு முன்பு இருந்தவர்களை விட, எடியூரப்பா நல்லவராகவே இருக்கிறார் என்று நற்சான்றிதழ் வாசித்தனர்.

அப்புறம் ஏன் அவரை ஆட்சியிலிருந்து அகற்ற உள்கட்சியிலும், வெளியிலும் பலர் முனைகிறார்கள் என்று கேள்வி எழுவது இயல்பு. இந்தக் கேள்விக்கு பதிலை பின்னர் பார்க்கலாம்.

பெங்களூரு புறநகர்ப் பகுதிக்குப் போயிருந்த போது அங்கிருந்த தொழிற்பேட்டையில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லாத தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தன. மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொழிற்சாலை மேம்பாட்டுப் பணிகள் நடக்கக் கூடாது என்று முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளதாகச் சொன்னார்கள். பெரிய பெரிய தொழிற்சாலைகள் இருக்கும் இடங்களுக்கு மிக அருகிலேயே விவசாயமும் செய்கிறார்கள். சுற்றுச்சூழலைப் பாதிக்காத அளவுக்கே அங்கே தொழில் வளர்ச்சியை எடியூரப்பா அனுமதிக்கிறார் என்றால் அவரை பதவியில் தொடர எப்படி அனுமதிப்பார்கள்? இங்கேதான் முன்னாள் பொருளாதார அடியாள் ஜார் பெர்கின்ஸை பொருத்திப் பார்க்க வேண்டும்.

பெரு முதலாளிகளை இயற்கை வளங்களை சுரண்டுவதற்கு அனுமதிக்கவில்லை என்றால், லத்தீன் அமெரிக்க நாடுகளில் அந்நாட்டு அதிபர்களை கொன்று விடுவார்கள். இங்கே ஆட்சியிலிருந்து மட்டும் அகற்ற முயல்கிறார்கள். எடியூரப்பாவை ஆட்சியிலிருந்து அகற்ற நினைக்கும் சக்திகளுக்குப் பின்னால் பெரு முதலாளிகளின் சதி இருக்கலாம் என்பதை சாதாரணமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆந்திராவில் சுரங்கத் தொழில் மூலம் இயற்கையை சுரண்டும் ரெட்டி சகோதரர்கள் எடியூரப்பாவுக்கு எதிராக உள்ளதையும் கவனிக்க.

அடுத்து பெங்களூரு நகர்ப் பகுதிகளில் வலம் வந்த போது, அங்குள்ள சுவர்களில் பெங்களூரு மாநகராட்சியினர் கன்னட மக்களின் கலாசாரத்தை விளக்கும் அழகான ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன. இவை சில ஆண்டுகளுக்கு முன்பே வரையப்பட்டதாம். இதையே சென்னையிலும் நம் மாநகராட்சி பின்பற்றுகிறது. (காப்பி அடித்தால் என்ன, நல்லது நடந்தால் சரி) அதுபோலவே பெங்களூரு நகரில் ஓடும் தாழ்தளப் பேருந்து, சொகுசுப் பேருந்து, குளுகுளு பேருந்து ஆகியவற்றையும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தினர் இங்கே பின்பற்றியிருக்கிறார்கள். அந்தப் பேருந்துகளைப் பார்த்தால் சென்னைக்கே வந்துவிட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது

அந்த ஊரின் மிகப்பெரிய பேருந்து நிலையமான மெஜஸ்டிக்கில் போக்குவரத்து அதிகாரிகள் (சீருடை அணிந்து) எந்நேரமும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை நேரில் தந்துகொண்டேயிருக்கிறார்கள். இதனால் தேவையற்ற குழப்பங்கள் நடப்பதில்லை. புதிதாக வரும் மொழி தெரியாத பயணிகளும் தயக்கமின்றி பயணம் செய்ய ஏதுவாக இருக்கிறது. பயணிகளும் நம்மூரைப் போல முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறுவது கிடையாது. ரெஸ்டாரன்ட் ஒன்றில் மதிய உணவு சாப்பிட்டோம். சொகுசான அந்த ஹோட்டலில் மீல்ஸ் வெறும் 30 ரூபாய். அந்தளவுக்கே அநத் ஊரில் விலைவாசி. இங்கே புரசைவாக்கத்தில் சாதாரண ஹோட்டலில் கூட சாப்பாடு 40 ரூபாய். விலைவாசியும் அங்கே பரவாயில்லை.

தமிழனுக்கு காவிரி நீரை தராத அந்த ஊரு மக்களுக்கு இவ்வளவு இந்தளவுக்கு வக்காலத்து வாங்குவது சரியா என்று நீங்கள் கேட்கலாம். காவிரி நீர் நம்முடைய உரிமைதான். அந்த உரிமையைப் போராடிப் பெற்றே ஆக வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் நம்முடைய சொந்த மண்ணில் நீராதாரத்தை அழிக்கும் மணல் கொள்ளையை தடுக்க நாம் என்ன செய்திருக்கிறோம். நம்முடைய அரசியல் வாதிகள் என்ன செய்திருக்கிறார்கள். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மணல் கொள்ளையை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்களே ஏன்? சொந்த மண்ணிலிருக்கும் நீராதாரத்தைப் பாதுகாக்க முடியாத நாம், நம்முடைய வறட்சிக்கு கன்னடர்களை மட்டும் காரணமாகச் சொல்வது சரியா?

நெஞ்சில் கையை வச்சு சொல்லுங்க, கன்னடர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள நெறைய விஷயங்கள் நமக்கிருகிறதா, இல்லையா?

Friday, October 22, 2010

ஆச்சார கோவையும் எந்திரனும்!



அக்டோபர் முதல் வாரம். தேனீர் கடை, பேருந்து நிறுத்தம் என பொது இடங்களில் நண்பர்கள், உறவினர்கள் சந்தித்துக் கொண்டால் மறக்காமல் கேட்டுக் கொண்ட கேள்வி, “எந்திரன் பாத்தாச்சா?“ தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்களால் பார்க்கப்படும் சன் தொலைக்காட்சியிலும், அதிக வாசகர்களைக் கொண்டதாகச் சொல்லப்டும் தினகரன் நாளிதழும் சேர்ந்து எந்திரன் படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்கிற உளவியல் அழுத்தத்தை ஒவ்வொருவரின் மனதிலும் விதைத்துக் கொண்டிருந்தன/ கொண்டிருக்கின்றன. (கொஞ்சம் அசந்தால் நம்முடைய சட்டைப் பையில் கையைவிட்டு பணத்தை எடுத்து அவர்களே படத்தின் அனுமதிச் சீட்டையும் கொடுத்துவிடுவார்கள் போல!)

ஆசியாவிலேயே அதிக சம்பளம் பெரும் நடிகர்களில் சாக்கிசானுக்கு அடுத்த இடத்திலிருக்கும் ரஜினியும், பிரமாண்ட இயக்குநர் ஷங்கரும் இணைந்த இந்தப் படத்தைத் தயாரித்தது, கருணாநிதி பேரன் கலாநிதி மாறனின் சன் குழுமம். படத்தின் தயாரிப்புச் செலவு 150 கோடியாம்! உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் அக்.முதல் தேதியன்று திரையிடப்பட்டன. அரசு நிர்ணயித்த தொகைதான் வசூலிக்க வேண்டும் என்ற விதியை மீறி குறைந்தபட்சம் (!) 300 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை அனுமதிச் (டிக்கெட்கள்) சீட்டுகள் விற்கப்பட்டன.

சிறிய ஊரான புதுக்கோட்டையிலும் கூட ஆறு திரையுரங்குகளில் இந்தப் படம் திரையிடப்பட்டன. அங்கேயும் 200 ரூபாய் அனுமதிக் கட்டணம். இதெல்லாம் எப்படி சாத்தியம்? பணபலத்தாலும், அரசியல் செல்வாக்கினாலும் பெருவாரியான திரையரங்குகளில் எந்திரன் படத்தை திரையிட்டார்கள். திரையிட்ட எல்லா திரையுரங்குகளிலும் கூடுதல் விலை. இதனால் நியாயமான விலையில் அந்தப் படத்தை பார்க்கவே முடியாத நிலை! ஏகபோக மனோபாவத்தால் பாவம், தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்துவிட்டார்கள்.
நடைமுறையில் உள்ள நான்கு காட்சிகளுக்குக் கூடுதலான காட்சிகள் திரையிட தமிழக ஆளுநரே சிறப்பு அனுமதி அளித்தார். தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆளுநர் இப்படியொரு அனுமதியை அவசர அவசரமாக அளித்து, நம் மக்களின் மீதான அதீத அக்கறையைக் காட்டிவிட்டார்.

இந்தப் படத்தை வரவேற்கும் ரஜினி ரசிகர்கள் அவரது ஆளுயரப் படங்களுக்கு பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்கிறார்கள். அந்தப் படம் வெற்றி அடைய வேண்டி கன்னியாகுமாரி முதல் சென்னை வரை பாத யாத்திரை நடத்துகிறார்கள். கோயில் படிக்கட்டுகளில் மண்டியிட்டு முழங்கால்களில் நடந்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள். மண்சோறு தின்கிறார்கள். சன் தொலைக்காட்சி ஒட்டுமொத்த தமிழக இளைஞர் கூட்டமே எந்திரனுக்காக ஏக்கித் தவிப்பதாக சித்தரித்தன. ரசிகர்கள் மனம் மற்றும் ஆர்வக் கோளாறில் செய்யும் இதுபோன்ற செய்கைகள் பாகவதர் காலத்திலிருந்து நடப்பதுதான். ரசிகர்களின் பொறுப்பற்ற இச்செய்கைகளை இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக திரும்பத் திரும்ப காட்டியதன் மூலம் அவர்களின் மனப் பிறழ்வுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்திருக்கிறது. சன் குழுமம்.

இந்தப் படத்திற்கான பாடல் வெளியீட்டு விழா சில கோடி ரூபாய் செலவில் கோலாலம்பூரில் கோலாகலமாக நடக்கிறது. தமிழில் பெயர் வைத்த்தற்காக கேளிக்கை வரி விதிப்பிலிருந்து (கிடைத்த வரைக்கும் லாபம்) வரிவிலக்கும் பெற்றிருக்கிறான், எந்திரன். திரையறங்குகளில் விநியோகிக்கப்பட்ட அனுமதிச் சீட்டில் கட்டணம் எதுவும் அச்சிடப்படவில்லை. அனுமதிச் சீட்டின் பின்புறம் இருக்க வேண்டிய மாவட்ட நிர்வாகத்தின் முத்திரையும் இல்லை. இதுக்குப் பேருதான் பகல் கொள்ளை!

ரஜினி, கமல், அஜித், சூர்யா, விஜய் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாள்களில்தான் திரையிடப்பட வேண்டும் என்ற திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் விதியை இந்தப் படத்தின் மூலம் காற்றில் பறக்கவிட்டிருக்கிறார்கள். பிற நாள்களில் குறைந்த செலவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் திரையிடப்பட்டு, சில நாள்களாவது ஓடினால் குறைந்தபட்ச லாபமாவது கிடைக்கும். திரையில் ஊர் நியாயம், உலக நியாயம் பேசும் நடிகர்கள், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியோர் இந்த விதிமீறல் குறித்து வாய் திறக்கவே இல்லையே, ஏன்?

எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கோலாலம்பூருக்கு காணொளி மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பிய முதல்வர், காவல்துறை இப்போது எந்திரன் திருட்டு விசிடியை ஒழிக்க முடுக்கி விட்டுள்ளார். 150 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் மூலம் தமிழகத்துக்கு கிடைத்த வரி வருமானம், எவ்வளவு தெரியும்? 0-தான்!

ஒவ்வொரு தமிழனும் பார்த்தே ஆக வேண்டும் என்று சிந்தனையில் புகுந்து சித்திரவதை செய்த எந்திரன் படத்தில் அப்படி என்ன புரட்சி செய்து விட்டார்கள்?

1. படத்தில் கார்கில் போரில் கணவன், தந்தையை இழந்த பெண்கள் தங்கியிருக்கும் விடுதியைக் காண்பிக்கிறார்கள். அந்தப் பெண்கள் எல்லோரும் பார்ப்பனர்கள் என்பதை பல்வேறு காட்சிகளில் திரும்பத் திரும்ப காட்டப்படுகிறது. உண்மையில், கார்கில் போரில் உயிரிழந்த பார்ப்பனர்கள் எத்தனை பேர் என்று ஷங்கரால் சொல்ல முடியுமா? கார்கில் போரில் வேறு இனத்தவர்கள் யாரும் தங்கள் இன்னுயிரை இழக்கவில்லையா?

2. படத்தின் நாயகனான விஞ்ஞானி வசீகரன் (ரஜினி) பெற்றோரும் அவர்களின் வீடும் அவர்கள் பார்ப்பனர்கள் என்பதையே வலியுறுத்துகிறது. ராணுவத்துக்கு உதவும் வகையில் ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானியும் பார்ப்பனரே. வாழ்க ஷங்கரின் பார்ப்பன வெறி!

3. எந்திர மனிதனுக்கு மனித உணர்வுகளை கற்றுத் தருவதற்காக அதை சென்னையிலுள்ள பிரித்தானிய நூலகத்துக்கு அழைத்துச் செல்கிறார், வசீகரன். அங்கே எந்திர மனிதனுக்கு படிப்பதற்காக அவர் கொடுக்கும் புத்தகங்களில் இடம் பெறும் ஒரே ஒரு தமிழ்ப் புத்தகம், ஆச்சார கோவை! பார்ப்பனர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறைகளை (திண்டாமையை) வலியுறுத்தும் இந்த நூலைக் கொடுத்து எந்திர மனிதனையும் பார்ப்பனனாக்கப் பார்க்கும் இயக்குநரின் சாமர்த்தியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

4. படத்தில் ஒரு காட்சியில் மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் திருவிழா நடக்கிறது. திருவிழாவை நடத்தும் ரௌடிகள் படத்தின் கதாநாயகியை கிண்டல் செய்கிறார்கள். மாரியம்மன் கோயில் திருவிழா நடத்துவோர் எல்லாம் ரௌடிகள் என்றால், பார்ப்பனர்கள் மட்டும்தான் கோயில் திருவிழாக்களை நடத்த வேண்டும் என்கிறாரா ஷங்கர்? கருவறைக்குள் சல்லாபத்தில் ஈடுபட்ட காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் பற்றியெல்லாம் இவர் படம் எடுக்க மாட்டாரா?
மொத்தத்தில், பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு போன்ற ஏகபோக மனோபாவத்தில் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்ட எந்திரன் ஒரு பூணூல் அணியாத பார்ப்பனன்

Monday, September 6, 2010

ஜோதியை அணைத்த ‘மன்னர் ஜவகர்’கள்!!



பத்தாம் வகுப்பில், 500க்கு 475 மதிப்பெண்கள்! பனிரெண்டாம் வகுப்பில் 1200க்கு 1105 மதிப்பெண்கள்!! நாமக்கல் மாவட்டம் முள்ளக்குறிச்சி அருந்ததியர் தெருவில் வசித்து வந்த 18 வயதான ஜோதி பெற்ற மதிப்பெண்கள் தான் இவை. பத்தாம் வகுப்பு வரை அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் படிப்பு. நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி இவரை இலவசமாக பனிரெண்டாம் வகுப்பு படிக்கவைத்தது.

அரசு ஒதுக்கீட்டில் சென்னை அண்ணா பல்கலையில் பொறியியல் (இசிஇ) படிக்க வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. இதற்கும் அவரது தாத்தா விவசாயக் கூலியாக வேலை பார்க்கும் பண்ணையின் உரிமையாளர் பணஉதவி செய்து பல்கலையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு ஜோதி உயிருடன் இல்லை.

கடந்த மாதம்தான் ஜோதி பல்கலையில் சேர்ந்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்கலை விடுதியிலிருந்து வீடுக்குச் சென்றவர், துப்பட்டாவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கிறார். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஜோதி தமிழ் வழியில் படித்த கிராமத்து மாணவி. சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியாத இவரை கல்லூரியில் சகமாணவர்கள் கேலியும் கிண்டலும் செய்திருக்கிறார்கள். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள். ஆனால் “மூன்று ஆண்டுகளாக எங்கள் பல்கலையில் ராக்கிங் கிடையாது. ஜோதியின் தற்கொலைக்குக் காரணம் குடும்பப் பிரச்னைதான்” என்று துணை வேந்தர் மன்னர் ஜவகர் கூறுகிறார். பதினெட்டு ஆண்டுகளாக இல்லாத குடும்பப் பிரச்னை அண்ணா பல்கலையில் சேர்ந்த ஒரு மாதத்திற்குள் வந்தது எப்படி? அதுவும் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குப்போகுமா என்பதை யோசிக்க வேண்டும்.

பத்திரிகைகளும் ஜோதியின் தற்கொலைக்கு ராக்கிங் தான் காரணம் என்று தவறுதலாக எழுதுகிறார்கள். உண்மையில் இது ராக்கிங் கிடையாது. ஆங்கிலம் பேசத் தெரியாத கிராமத்து மாணவ மாணவிகளை கேலி கிண்டல் செய்யும் போக்கிது! இதை சீனியர் மாணவர்கள் என்றில்லை சக மாணவர்களும் கூட செய்திருக்கலாம். மாணவர்கள் என்றில்லை சில ஆசிரியர்களும் ஆங்கிலம் தெரியாத மாணவ மாணவிகளை எளக்காரமாக நடத்துவதை மறுக்கமுடியாது.

தமிழ் வழியில் படித்த அதுவும் கிராமத்து மாணவ மாணவிகள் சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு கல்வி கற்க வரும்போது ஏராளமான சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. இப்போது ஜோதியின் தற்கொலை மூலமாக அந்தப் பிரச்னை வெளிப்பட்டிருக்கிறது. பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்ததால்தான் கிராமத்து
மாணவ மாணவிகள் அதிகளவில் இந்தப் படிப்புகளில் சேர வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அதுவும் ஜோதி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இடஒதுக்கீட்டால் மேல்சாதி உயர்த்தட்டு மக்களின் கல்வி வாய்ப்பு மறுக்கப்படுவதாக ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. அதை நகரத்து மேல்தட்டு இளம் மாணவர்களின் மனதில் அவர்களின் பெற்றோர்களும், சில ஊடகங்களும் பதியச் செய்கிறார்கள். இதனாலேயே ஜோதி போன்ற மாணவிகள் ஆயிரம் தடைகளைத் தாண்டி முதல் தலைமுறையாக கல்லூரிகளுக்குள் நுழையும்போது நகரத்தைச் சேர்ந்த சகமாணவர்களாலேயே கேலியும், கிண்டலுக்கும் ஆளாக நேரிடுகிறது.

சமூகவியல் இளங்கலை முடித்துவிட்டு (கோவை பூ.சா.கோ) அதே கல்லூரியில் எம்.ஏ., மாஸ் கம்யூனிகேஷன் மக்கள் தொடர்பியல் துறையில் சேர்ந்தேன். அப்போது துறைத் தலைவரான பிச்சாண்டி, இளங்கலையில் ஆங்கிலம் இலக்கியம் படித்தவர்கள் மட்டுமே மாஸ் கம்யூனிகேஷன் படிக்க முடியும் என்று கூறி மாணவர்களை பயமுறுத்தினார். இதனால் சில மாணவர்கள் பயந்தடித்துக் கொண்டு வேறு துறைகளுக்கு மாறிச்சென்றனர். நானும் அப்படிச் சென்றிருந்தால் அது எனக்கேற்பட்ட மிகப்பெரிய இழப்பாக இருந்திருக்கும். பின்னாளில் ஆங்கில இலக்கியம் படித்த மாணவிகளை விட நான் கூடுதல் மதிப்பெண் பெற்றேன்.

ஜோதியும் பொறுமை காத்திருந்தால் சிறந்த பொறியாளராக வந்திருப்பார். பள்ளிக் கல்வியில் முதல் மாணவியாக சிறந்து விளங்கிய இவரால் அண்ணா பல்கலையில் நேர்ந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்திருக்கிறார். இத்தனையும் மறைத்துவிட்டு “எங்களிடம் தவறில்லை. ஜோதியின் குடும்பத்தினர்தான் தவறு செய்திருக்கிறார்கள்“ என்று வாய்கூசாமல் மன்னர் ஜவகர் பேசுகிறார். மீடியாக்களும் மன்னர் ஜவகரை வழிமொழிகின்றன. முன்னதாக ஜோதியைப் பற்றி காவல்துறை மற்றும் ஊடகங்களிடம் எதுவும் பேசக்கூடாது என்று மன்னர் ஜவகர் தன்னுடைய மாணவர்களிடம் அறிவுறுத்தியிருக்கிறார். மடியில் கனமில்லை என்றால் வழியில் எதற்குப் பயம்?

ஜோதியின் தற்கொலை, ஏழை-கிராமத்து மற்றும் தமிழ் வழியில் படிக்கும் மாணவிகள் மீது நமது கல்வி முறை ஏவும் வன்முறையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. இந்த உண்மையை மறைக்க முயல்வதை கைவிட்டு, இந்த சமூகக் குற்றத்தை சரிசெய்தால் (கல்வி)ஜோதிகள் அணையாமல் இருந்து தன் சமூகத்துக்கு வெளிச்சம் பாய்ச்சும்!

Saturday, August 28, 2010

ஜூனியர் விகடனிடம் அடைக்கலமாகும் தினமலர்!



ஜூனியர் விகடன் விவகாரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் ஒன்றாக இணைந்து அழகிரி ஆதரவாளர்களுக்கு எதிராக களம் இறங்கியிருப்பது ஆக்கப் பூர்வமான ஆரம்பம். தினகரன் ஊழியர்கள் மூன்று பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தினகரன் நிர்வாகம் அடித்த அல்தர் பல்டிக்கு இது ஒரு பாடம்.

ஜூனியர் விகடன் விவகாரத்தில், அண்மையில் முதல்வரை சந்தித்த பத்திரிகையாளர்கள் குழு, தினமலர் செய்தி ஆசிரியர் (உண்மையில் அப்படியொரு பதவி தினமலரில் யாருக்கும் தரப்படுவதில்லை) லெனின் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று கோரியிருந்தார்கள்.தினமலர் மீது ஏன் வழக்குத் தொடரப்பட்டது, எதற்காக லெனின் கைது செய்யப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

நடிகை புவனேஸ்வரி கைது விவகாரத்தைத் தொடர்ந்து பாலியல் தொழில் செய்யும் நடிகைகளின் பட்டியலை தினமலர் வெளியிட்டது. ரஜினி உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையுலகமும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க அதிர்ந்து போன தினமலர் மறுநாள் வருத்தம் தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட நடிகைகள் சார்பில் ஒட்டுமொத்த நடிகர்களும் இணைந்து தினமலருக்கு எதிராகப் புகார் கொடுக்க தினமலர் உரிமையாளர்கள் பதுங்கிக் கொண்டு, லெனினை போலீசில் காட்டிக் கொடுத்தார்கள். லெனினும் கைது செய்யப்பட்டார்.

இதில் பலருக்கும் தெரியாத ஓர் உண்மை மறைக்கப்பட்டது. அப்படியொரு செய்தியை ஆதாரமின்றி வழங்கியதற்காக செய்தியாளர் விஜய் என்பவர், உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இப்போது திருச்சி காலைக்கதிரில் அவர் வேலை பார்க்கிறார். இதை மறைத்துவிட்டு, அந்தச் செய்தியில் என்ன தவறு இருக்கிறது என்கிற பிரசாரத்தில் இறங்கிய தினமலர், தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்களை (நயவஞ்சகமாக) ஒன்று திரட்டி நடிகர் நடிகைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அந்த நேரத்தில் நடிகர் நடிகைகளும் ஒட்டுமொத்த பத்திரிகை உலகையே கொச்சைப்படுத்தி பேசிய பேச்சும், அனைத்து பத்திரிகையாளர்களையும் கோபம் மூட்டியது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த லெனின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இப்போது அவர் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வரிடம் கோரியிருக்கிறார்கள். முதல்வரோ, “குடும்பத்துடன் வாழும் பெண்களைப் பற்றி இஷ்டத்துக்கு அவதூறாக எழுதியது சரியா? சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரிலேயே நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அவர்களிடம் பேசித்தான் முடிவு எடுக்க முடியும்” என்று மிகச் சரியாகப் பேசியிருக்கிறார்.

தினமலர் அந்த வழக்கிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைத்தால் சம்பந்தப்பட்ட அந்த நடிகைகளிடம் போய், மன்னிப்புக் கேட்டு வழக்கை திரும்பப் பெற கோர வேண்டும். அதைவிடுத்து குறுக்கு வழியில் முதல்வரிடம் முறையிட்டு அதுவும் ஜூனியர் விகடன் விவகாரத்தை சாக்காக வைத்து ஆதாயம் தேட நினைப்பது கோழைத்தனம்.

ஜூனியர் விகடன் ஆளும் கட்சியில் அதிகாரத்தில் இருப்பவர்களின் அடாவடித் தனத்திற்கு எதிராக செய்தி வெளியிட்டு அதற்குக் கிளம்பிய எதிர்ப்பை மிக நேர்மையாக சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நடிகைகள் பாலியல் தொழில் செய்வதாக எந்த ஆதாரமும் இன்றி அந்த நடிகைகளின் புகைப்படத்துடன் (வாடிக்கையாளர்களிடம் படுப்பதற்கு அவர்கள் வாங்கும் தொகையையும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள்) செய்தி வெளியிட்டது எந்த வகையில் பத்திரிகை தர்மத்துக்கு உகந்தது?

பத்திரிகை சுதந்திரம் என்ற போர்வையில் ஜூனியர் விகடனுடன் தன்னை இணைத்துப் பார்க்கும் தகுதி தினமலருக்கில்லை. பத்திரிகை சுதந்திரத்தை தமிழர்களுக்கும், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கும், தலித்களுக்கும் எதிராக தினமலர் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. தினமலருக்கு தைரியம் இருந்தால் அந்த வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்கட்டும். அப்படி சந்தித்தால் ‘சந்தி சிரித்துவிடும்!‘

Friday, August 20, 2010

திருட்டு வி.சி.டி.யில் மட்டும் படம் பாருங்கள்!



திரையரங்குக்குள் தின்பண்டம் கொண்டுசெல்வதை திரையரங்கு நிர்வாகம் தடுப்பது முறையல்ல என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. யாரோ ஒரு புண்ணியவான் தொடர்ந்த பொதுநல வழக்கால் மக்கள் தங்களுடைய உரிமையை உணர்ந்திருக்கிறார்கள். சினிமாவில் அநியாயத்துக்கு எதிராகப் பொங்கும் ஹீரோக்கள், திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்காதீர்கள் என்று பொதுமக்களிடம் கெஞ்சுவார்கள். ஆனால் திரையரங்கு நிர்வாகத்தின் கொள்ளை லாபம் பற்றி எல்லாம் வாய் திறக்கவே மாட்டார்கள். உண்மையில் அவர்களால் அது பற்றி பேசவே முடியாது. திரையரங்கு உரிமையாளர்களுக்கும் படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இடையே கமுக்கமான உடன்பாடு உண்டு.

அது பற்றி பார்ப்போம். சுறா படத்துக்கு 5 கோடி சம்பளம் வாங்கிய விஜய் அடுத்த படமான காவலனுக்கு 7 கோடி வரை சம்பளம் வாங்கியதாக சொல்கிறார்கள். இத்தனைக்கு சுறா படம் படுதோல்வி. பிறகு எப்படி இது சாத்தியமானது என்கிறீர்களா? இதற்கு மினிமம் கியாரண்டி என்ற வியபார உத்திதான் காரணம். அதாவது தயாரிப்பாளர்கள் தங்களுடைய படத்தை திரையரங்குகளுக்கு குறிப்பிட்ட விலை வைத்து கொடுத்துவிடுவார்கள். அதில் நட்டம் ஏற்பட்டால், அதுபற்றி தயாரிப்பாளர்களுக்குக் கவலை இல்லை. லாபம் கிடைத்தால் அதில் தயாரிப்பாளர்களுக்கு பங்கு தரவேண்டும் என்பதுதான் இந்த மினிமம் கியாரண்டியில் உள்ள சூட்சமம்.

ரஜினி, கமல், அஜித், விஜய், (இப்போது சூர்யாவும்) போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் மினிமம் கியாரண்டியில் வியாபாரம் செய்யப்படுகிறது. வேட்டைக்காரனை விட அதிக விலைக்கு சுறாவையும் சுறாவை விட அதிக விலைக்கு காவலனையும் திரையரங்கு உரிமையாளர்கள் வாங்கியாக வேண்டும். எனவேதான் நடிகர்கள் படத்துக்குப் படம் தங்கள் சம்பளத்தை உயர்த்திக் கொள்ள முடிகிறது.

திரையரங்கு உரிமையாளர்களும் டிக்கெட் விலையை உயர்த்தியும், ப்ளாக்கில் விற்பது மூலம் கிடைக்கும் கமிஷன், கேண்டீன், பார்க்கிங் வசூல் ஆகியவை மூலமும் லாபம் பார்த்து விடுகின்றனர். நடிகர்கள், தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறது. அதன்படி, திரையரங்குகளில் டிக்கெட் விலையை எவ்வளவு உயர்த்தி விற்றாலும் அது பற்றி யாரும் கேள்வி கேட்கக் கூடாது. திரையரங்கு உரிமையாளர்கள் ஆட்சியில் இருப்பவர்களையும் கவனித்து விடுவதால் அவர்களின் அத்துமீறல்கள் கவனிக்கப்பட மாட்டாது. அண்மையில் அபிராமி மால் (மல்டி ஃபிளக்ஸ்) திரையரங்கு தரம் உயர்த்தப்பட்ட போது அதை திறந்து வைத்தவர், நமது முதல்வர்! அங்கு குறைந்த பட்ச டிக்கெட் விலை 100.

அரசும் ஹீரோக்களும் திரையரங்குகளின் அத்துமீறல்களுக்கு எதிராக நிச்சயம் எதுவும் செய்யப் போவதில்லை. எனவேதான் சொல்கிறேன் எல்லோரும் திருட்டு வி.சி.டி.யில் மட்டும் படத்தைப் பார்த்து ரசியுங்கள். திரையரங்கு பக்கம் வரவே வராதீர்கள்.அதுதான் சரி.. என்று எனக்குப் படுகிறது!

Wednesday, August 11, 2010

சீமான் முதல் உமா சங்கர் வரை....

# எதிர்க்கட்சியாக இருக்கும் போதெல்லாம் மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள் என்று தி.மு.க. மார்த்தட்டிக் கொள்ளும். தி.மு.க. ஆளும் கட்சியாக இருக்கும் போது தங்களை எதிர்ப்பவர்களுக்கு மிசாவையே காட்டிவிடுவார்கள். சீமானின் தொடங்கி உமா சங்கர், ஜூனியர் விகடன் என போய்க் கொண்டே இருக்கிறது உடன் பிறப்புகளின் அத்துமீறல்.

# பத்திரிகையாளர்கள் மீதான அச்சுறுத்தலை கண்டித்து சென்னையில் செவ்வாய் அன்று நடந்த போராட்டத்தில் நக்கீரன் கோபால் கலந்து கொண்டாரா என்பதை கேட்டுச் சொல்லவும்/ நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

# தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்ட இதழ் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் உள்பட மூன்று பேர் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டுள்ளனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்யாமல் கள்ள மௌனம் சாதிக்கின்றனர்/ இதற்குப் பேருதான் எமர்ஜென்ஸி!

# ஆளும் கட்சி ஜூனியர் விகடன் மீது கடுங்கோபத்திலிருக்கிறது. அப்படியென்றால் மற்ற பத்திரிகைகள் ஆளும் கட்சியினருக்கு ஜால்ரா போடறாங்களா என்று, கேட்காதீர்கள்?

# நான் எழுதிய இனப்படுகொலையில் கருணாநிதி புத்தகங்கள் விற்ற பணம் வரவில்லை என்று என்னுடைய ஆதங்கத்தைப் படித்த பாடலாசியர்-கவிஞர் கவிபாஸ்கர் என்னைத் தொடர்பு கொண்டார். அவ்வப்போது வசூலாகும் தொகையை உடனுக்குடன் கொடுத்து வருபவர் அவர். எதிர்வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகக் கடை போடலாம் என்று இருவரும் பேசியிருக்கிறோம். (திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் கையை சுட்டுக் கொண்டது போதாக்கும் என்கிறாள் என் மனைவி)

# இந்திய அரசின் போலி ஜனநாயகத்தை ஆதாரங்களுடன் பட்டியலிட்டு புத்தகம் எழுத வேண்டும் என்பது ஆசை. சோம்பேறித்தனத்தால் அந்த வேலை தள்ளிக் கொண்டே போகிறது.

# எந்திரன் படத்தின் தெலுங்கு பதிப்பான ரோபோவின் உரிமை தன்னிடம் இருப்பதாகப் போலி ஆவணங்களைக் காட்டி ஆந்திர தியேட்டர் உரிமையாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிய இயக்குநர் ஷங்கரின் அலுவலக மேலாளர், உதயகுமார் கைது. நீங்கள் வருமான வரித்துறையை ஏமாற்றுகிறீர்கள். உங்களை ஒருவன் ஏமாற்றுகிறான். ஏமாத்துக்கு ஏமாத்து சரியா போச்சுப்போ...

Sunday, August 8, 2010

இனப்படுகொலையில் கருணாநிதியும் இயக்குநர் ஷங்கரும்!



# நான் எழுதிய இனப்படுகொலையில் கருணாநிதி (ஆயிரம் புத்தங்கங்கள்) விற்றுத் தீர்ந்து விட்டன. ஆனால் விற்பனைத் தொகைதான் கைக்கு வந்தபாடில்லை.

# த்ரி இடியட்ஸ் படத்தை தமிழில் ஷங்கர் இயக்கலாம் என்கிறார்கள். எந்திரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் எல்லோரும் ஷங்கரைப் புகழ்ந்து தள்ளினார்கள். இடியட்ஸ்!

# தோள்பட்டை சவ்வில் ஏற்பட்ட பாதிப்பால் அறுபத்து சொச்சம் வயதான என் தாய் புஷ்பம் கடுமையான வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். காலையில் கைப்பேசி வழியாக ஊரிலிருந்து வந்த இந்தத் தகவல் மனசஞ்சலத்தை ஏற்படுத்திவிட்டது. 87 வயதில் முதல்வர் பணியை செய்யும் ஓய்வறியா சூர்யன் இருக்கும் தமிழ்நாட்டில் என் தாய்க்கு ஏனிந்த கொடுமை?

# பதிவெழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. சமூக அரசியல் சர்ச்சைகள் குறித்து குறுந்தகவல் அனுப்புவது, இணைய தளங்களில் எழுதுவது போன்றவற்றால் தங்கள் சமூகக் கடமை தீர்ந்து விட்டதாக இன்றைய இளைய தலைமுறை நினைக்கிறது. நம்முடைய மதிப்புமிக்க நேரத்தை யும் இணையம் வீணடித்து வருகின்றன. நானும் இவற்றிலிருந்து முழுவதுமாக விடுபட்டு விட்டேன் என்று சொல்வதற்கில்லை. அதேநேரத்தில் இணைய தளங்களில் எழுதுவதோடு என் அரசியல் நடவடிக்கைகளை முடிந்து போவதில்லை.

# அமானுஷ்யத்தைக் கருவாகக் கொண்ட நெடுந்தொடருக்கு கதை, திரைக்கதை தயாரித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கிடையே அரசியல் வேலைகளும் பத்திரிகைப் பணிகளும் போய்க் கொண்டிருதானிருக்கிறது.

# ஒரு சொந்தத் தொழில் அமைந்து விட்டால், முழுமையாக சினிமாவில் இறங்கிவிடலாம். என் ஆசைக்காக மனைவியை கஷ்டப்படுத்தக் கூடாதல்லவா?

# ஜெயமோகனின் லோகி, எமர்ஜென்ஸியில் நடந்தது என்ன?, ஜே.ஜே.சில குறிப்புகள் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே நேரத்தில வெவ்வேறான புத்தகங்களை மாறி மாறிப் படிப்பது (திட்டமிடாத) பழக்கமாகிவிட்டது.



# லோகியின் கிரீடம் பார்த்தேன். அற்புதம். மலையாளம் சாந்துப் பொட்டு பார்த்தேன். தமிழில் விக்ரம் அல்லது சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும்.