Friday, April 20, 2012






சவப்பெட்டி!! 



தொலைக்காட்சித் தொடரில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். கதை விவாதம் நள்ளிரவு தாண்டியும் அதிகாலை வரை தொடர்கிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் நிலைமை பரிதாபமானது! போட்டி நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்து அதிலிருந்து மக்களை தங்கள் பக்கம் திருப்புவது எப்படி என்கிற போட்டியில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். இந்தப் போட்டி ஆரோக்கியமானதா? இன்றைக்கு 24 மணிநேரமும் தொலைக்காட்சிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. 200 தொலைக்காட்சி சேனல்களாவது இருக்கும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு சேனல்களும் மக்களை ஈர்ப்பது எப்படி என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றன. “நான் எந்த ஆயுதத்தை ஏந்துவது என்பதை எதிராளிதான் முடிவு செய்கிறான்” என்று சொல்வார்களே. அப்படித்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் நிலைமை இருக்கிறது.

போட்டி நிகழ்ச்சிகளைப் பார்த்து தங்களுடைய நிகழ்ச்சிகளின் தரத்தை, வடிவத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். எதையாவது புதிதாக உருவாக்கி, அதை பார்வையாளர்களுக்கு படைக்க வேண்டிய அவசர அவசியம் அவர்களுக்கு. இப்படி யாரோ ஒருவர் பணம் பண்ண செய்யும் முயற்சிக்கு மக்கள் தொலைக்காட்சி முன்பு அடிமை ஆக்கப்படுகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய வேதனை. பாவம். அவர்களும் என்னதான் செய்வார்கள்.

24 மணி நேரமும் நிகழ்ச்சிகளை வழங்கியே ஆகவேண்டும். எதையாவது மக்களுக்குத் திணித்துக் கொண்டே இருக்க வேண்டும். மக்களை தொலைக்காட்சிப் பெட்டியோடு கட்டிப் போட வேண்டும்.

இந்தப் போட்டியின் விளைவு என்ன? யார் யாரை எல்லாம் நம் வீட்டுக்குள் நுழைய விட மாட்டோமோ அவர்கள் நம் வரவேற்பு அறைக்குள் வந்து விடுகிறார்கள். பேய், பிசாசு, காமுகர்கள், குடிகார்கள், கொலைகாரர்கள், எண் கணித ஜோதிடர்கள் என ஒட்டுமொத்த அயோக்கியர்கள் நம் வீட்டுக்குள் தொலைக்காட்சி வழியாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். பெண்கள் விரும்புவது எல்லாம் நெடுந்தொடரில் நடக்கின்றன. அதைப் பார்த்து அவர்கள் திருப்தி பட்டுக் கொள்கிறார்கள். ஒரு தொடரில் மாமியாரை மருமருகள் பழிதீர்க்கிறார். அதைப் பார்த்து மருமகள்கள் திருப்தி பட்டுக் கொள்கிறார்கள். இன்னொன்றில் மருமகளை மாமியார் பழிவாங்குகிறார். அதைப் பார்த்து மாமியார்கள் திருப்தி பட்டுக் கொள்கிறார்கள்.

குழந்தைகளின் தொலைக்காட்சி உலகத்தில் குண்டு வீசுகிறார்கள். துப்பாக்கியில் சுடுகிறார்கள். வாள் சண்டை போடுகிறார்கள். அதைப் பார்த்து பார்த்து நம் பிள்ளைகள் வன்முறைக்கு வாழ்க்கைப் பட்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் தன் மகனின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக சென்றிருந்தார். ஒவ்வொரு வீட்டிலும் அழைப்பிதழை வழங்க அரை மணி நேரம் எடுத்துக் கொண்டார். “ஏன் இவ்வளவு நேரம் ஆகிறது” என்று கேட்டதற்கு, அவர் சொன்ன பதில்தான் அதிர்ச்சிகரமானது. அழைப்பிதழ் கொடுக்கும் பணியால் தினமும் பார்க்கும் நெடுந்தொடரை இழக்க வேண்டியிருக்கிறதாம். எனவே அழைப்பிதழை கொடுத்துவிட்டு அந்த வீட்டிலேயே அமர்ந்து ஒரு தொடரை பார்த்து விடுவது. அடுத்த வீட்டுக்குப் போய் இன்னொரு தொடரைப் பார்த்துவிட்டு அழைப்பிதழைக் கொடுப்பது என்று முடிவெடுத்து அதை செயல்படுத்தியிருக்கிறார் அந்தப் பெண்மணி.

இன்றைக்கு பெரும்பாலான நம் பெண்களின் நிலைமை இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி பார்ப்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. இவர்கள் எதற்காகவும் நெடுந்தொடர்கள், நிகழ்ச்சிகளைத் தவற விடுவதில்லை. தொலைக்காட்சியை வெறுப்பவர்களை இவர்கள் வெறுக்கிறார்கள். தொலைக்காட்சி இல்லாத வாழ்க்கை வெறுமையானது என்று நினைக்கிறார்கள். சூரியன், பறவைகைள், வண்ணத்துப் பூச்சிகள், மலர்கள், உறவுகள், நட்பு வட்டாரம் என அற்புதங்களை ரசிக்காமல் அற்ப நிழல் வாழ்க்கையில் இளைப்பாறுகிறார்கள். வீட்டிலேயே உட்கார்ந்து சுகமாக எல்லா அனுபவங்களை பெற்றுக் கொள்வது என்பது சரியா? தங்களுடைய வாழ்க்கை நாம் வாழ வேண்டும் என்கிற தைரியம் இல்லாதவர்கள் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியைப் பார்த்து திருப்தி பட்டுக் கொள்கிறார்கள்.

நம்முடைய வாழ்க்கையை மற்றவர்கள் வாழப் பார்த்து திருப்தி பட்டுக் கொள்வது ஒருவிதமான மனநோய் இல்லையா? பார்வையாளர்களுக்காக நடிகர்-நடிகைகள் சிரிக்கிறார்கள். உலாவுகிறார்கள். விளையாடுகிறார்கள். காதலிக்கிறார்கள். அழுகிறார்கள். சுற்றுலா செல்கிறார்கள். இப்படியே போனால் மக்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை. இது வசதியாக இருப்பது போல் தோன்றலாம். ஆனால் தொலைக்காட்சிப் பெட்டி கொடுக்கும் இந்த வசதி ஒரு சவப்பெட்டிக்குச் சமமமானது என்பதை உணர்வது எப்போது? 

தொலைக்காட்சியை நமக்கு அளித்த அதே விஞ்ஞானம் தான் அதைக் கட்டுப்படுத்தும் கருவியையும் (ரிமோட் கண்ட்ரோல்) நம் கையில் வழங்கியிருக்கிறது. எதைப் பார்ப்பது எதை தவிப்பது என்கிற அறிவும் வசதியும் நம்மிடமே இருக்கிறது. என்ன செய்யப் போகிறோம்?

(Vetrivel chandrasekar V)

No comments:

Post a Comment