Wednesday, March 21, 2012

பெயர்ச் சொல்...


ஆறாம் வகுப்பு என்று நினைக்கிறேன். துணைப்பாடப் புத்தகத்தில் ‘பெயரில் என்ன இருக்கிறது?’ என்ற கதை வந்திருந்தது. அமாவாசை என்கிற தனது பெயர் பிடிக்காமல் வருத்தப்படுகிறான் ஒரு சிறுவன். கண் பார்வை அற்ற கண்ணாயிரம், பிச்சை எடுக்கும் கோடீஸ்வரன், அல்ப ஆயுசில் இறந்த சிரஞ்சீவி ஆகியோரைப் பற்றி கேள்விப்பட்டு பெயரில் என்ன இருக்கிறது? என அந்தச் சிறுவன் தெளிவு பெறுகிறான்.

நானும் ‘பெயரில் என்ன இருக்கிறது’ என்று தீவிரமாக யோசித்தேன். அலைப்பேசியில் ஒருவர் வைத்திருக்கும் அலைப்பொலி (ரிங்டோன்) அவர் எப்படிப்பட்டவர்கள் என்பதை காட்டுவிடும் என்பார்கள். சாவு வீட்டில் கூட “ஓய் திஸ் கொலவெறி..” என யாராவது ஒருவருடைய செல்போன் அலறி மரண பயத்தை ஏற்படுத்துவண்டு. அதுபோல ஒருவருடைய பெயரைக் கேட்டதும், அந்தப் பெயரே அவரைப் பற்றி நமக்கு சொல்லிவிடுவதுண்டு. உடுமலைப் பேட்டையில் பிறந்த என் நண்பனின் பெயர் ஜெயபிரகாஷ் நாராயணன். அவசரநிலை பிரகடனத்தின் போது பிறந்ததால் இந்தப் பெயரை அவரது அப்பா வைத்திருக்கிறார்.

சிறுவயதில் கோயமுத்தூரில் உள்ள எங்கள் சொந்த ஊரான கள்ளிமடை கிராமத்துக்குச் செல்லும் போது, அங்குள்ளவர்களின் பெயர்கள் வியப்பை ஏற்படுத்தும். நாங்கள் வசித்து வந்த திருப்பூரில், பழனிச்சாமி, கோவிந்தசாமி, ராமசாமி என எல்லோரும் சாமிகளாகவே இருக்க கள்ளிமடை கிராமத்தில், கரிகாலன், அறிவழகன், கபிலன், மாதவி, பூங்கோதை, மணிமேகலை, அமுதா என்கிற பெயர்களை கேட்கும் போது ஆச்சரியமாகத்தானே இருக்கும்!
அதே ஊருக்கு 20 ஆண்டுகளுக்குப்பின் இப்போது போகும்போது கரிகாலனின் மகளுக்கு ஹரினி என்றும், கபிலனின் மகன் கமலேஷ் என்றும் பெயர் வைத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறேன். '


கபிலன் தன் மகனுக்கு பாரிவேந்தன் என்று பெயர் வைத்திருந்தால் ஞாயம். எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டே இருந்தேன். அந்த வேளையில் திருப்பூரில் பிரபல நாளிதழில் செய்தியாளராகப் பணியாற்றும் நண்பர் தமிழ்ச் செல்வனுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். தஷ் புஷ் என்று ஏதோ சொன்னார். (உண்மையில் அவர் சொன்ன பெயர் என்ன வென்று பலமுறை யோசித்தும் இதை எழுதும் இப்போது ஞாபகத்துக்கு வரவில்லை)
அந்தப் பெயரைக் கேட்டதும், ‘தமிழுக்கு’ப் பிறந்த குழந்தைக்கு இந்தக் கதியா? என்று என் புருவங்கள் நெளிந்ததை புரிந்துகொண்ட அவர், “தமிழ்ப் பெயர் வைத்தால் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அங்குள்ளவர்கள் இவள் பெயரை உச்சரிக்க சிரமப்படுவார்கள் என்று இப்படி பெயர் வைத்தேன்” என்று புதுவிதமான சாக்கை போக்குச் சொன்னார்.


“வெளிநாட்டுக்காரனுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்றால், டயானா, வெர்ஜினியா என ஆங்கிலப் பெயர்தானே வைத்திருக்க வேண்டும். நீங்கள் வைத்திருப்பது வடமொழிப் பெயர். வடமொழியும் வெளிநாட்டுக்கானுக்குத் தமிழைப் போல அயல்மொழிதான் என்றேன். பாவம், அவரால் பதில் சொல்ல முடியவில்லை. யோசிக்கத் தொடங்கிவிட்டார்.
இதுவரையில் ஈழத்திலிருந்து 17 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளுக்குப் போய் வாழ்ந்து வருகிறார்கள். அந்த நாடுகளில் பிறக்கும் தங்கள் வாரிசுகளுக்கு அவர்கள் வைக்கும் தமிழ்ப் பெயர்களை நம்மில் பலர் கேள்விப்பட்டும் இருக்க மாட்டோம்! தமிழ்ப் பெயர் வைத்ததால் அவர்களை யாரும் அங்கிருந்து துரத்திவிடவில்லை. தமிழ்நாட்டுக்கு வந்து தொழில் செய்து பிழைப்பு நடத்தும் மலையாளிகள், மார்வாடிகள், பீகாரிகள், மணிப்பூரிகள் தமிழனுக்கு உச்சரிக்க சிரமம் தரக்கூடாது என்று தங்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைக்கிறார்களா?


தமிழில் பெயர் வைப்பதே, பிற்போக்குத்தனமானது. குறுகிய மனப்பான்மையானது என பலரும் நினைக்கத் தொடங்கி விட்டார்கள். அதன் வெளிப்பாடுதான் கரிகாலனின் மகன் ஹரினி என்றானதும். தமிழ்ப் பத்திரிகையில் தமிழில் எழுதி சம்பாதித்து நல்லபடியாக வாழ்க்கை நடத்தும் ஒருவர், தன் மகளுக்குத் தமிழ்ப் பெயர் வைக்கத் தயங்குவதும்.
பெயர்கள் தமிழில் இல்லை என்றால், தமிழ் அழிந்து விடுமா என்று கேட்கலாம். பெயர்கள் வெறும் பெயர்கள் அல்ல. ஷோபா என்று தன் குழந்தைகள் பெயர் வைத்திருந்த என் நண்பரிடம் அந்தப் பெயருக்கான அர்த்தத்தைக் கேட்டேன். தெரியாமல் விழித்தார்.

அப்படித்தான், அர்த்தமே புரியாமல் ஏதோ பெயர் வைக்கிறார்கள். அர்த்தமே தெரியாமல் ஒரு பெயரை காலம் முழுவதும் அழைத்துக் கொண்டிருக்கச் சம்மதம். தாய் மொழியில் பெயர் வைக்க மட்டும் சங்கடம். இது ஞாயமா? தமிழ்ப் பெயர் கொண்ட ஒருவர் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அவருடன் தமிழ்மொழியும் போகிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
பெயரில் கூட தமிழைத் தவிர்ப்பது, எழுதுவதில் பேசுவதில் அயல்மொழி கலப்பை ஏற்பது என்று போனால் என்ன ஆகும்? தமிழ் அழியும். பிறமொழியில் பெயர் வைக்கும் தமிழர்கள், 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு மொழியை அழிக்கும் வேலையில் பங்கெடுக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது. இறந்து போன முன்னோர்களின் புகைப்படங்களை பாதுகாத்து வைக்கிறோம். அவற்றுக்கு மாலை மரியாதை செய்து வணங்குகிறோம். அதே உணர்வில் நம் மொழியை பாதுகாக்க வேண்டாமா?

திரைத்துறையினர் வணிகநோக்கத்திற்காக தமிழ்ப் படங்களுக்கும் ஆங்கிலப் பெயர் வைக்கிறார்கள். தமிழ்ப் பாடல்களில் பிறமொழிக் கலப்பில் பாட்டு எழுதுகிறார்கள். நம் வாரிசுகளை மலிந்த வியபாரப் பண்டமாக்க வேண்டாம். ஆங்கிலம் பேசுவோம், பிரெஞ்சு கற்றுக் கொள்வோம். இந்தி பேசுவோம். விரும்பிய பிற மொழிகளைக் கற்றுக் கொள்வோம் தாய்மொழியைப் புறக்கணிக்கத் தொடங்கினால், அந்த மொழி அழியும் மொழி அழிந்தால் அந்த தேசிய இனமே அழிந்து விடும். நம் வாரிசுகள் அடையாளம் இல்லாத அநாதைகளாக வளரும் சூழலை உருவாக்க வேண்டுமா?
“மொழி தொடர்பு கொள்ளும் கருவியாக மட்டும் கருதுவது, தாய் என்பவள் பிள்ளை பெற்றுத் தருகின்ற கருவி என்று சொல்வதைப் போல்.. அதுவல்ல தாய். அதையும் தாண்டி மேலானவள். அப்படித்தான் தாய்மொழியும்” என்ற கவிஞர் காசி ஆனந்தனின் வரிகளை மறந்துவிட வேண்டாம். தாயை மறப்பது மன்னிக்கவே முடியாத குற்றம் அல்லவா.. தாயில்லாமல் நாமில்லை. நம் பிள்ளைகளுக்க நம் தாயின் அருமையை சொல்லிக் கொடுப்போம்..

வே.வெற்றிவேல்சந்திரசேகர்…

No comments:

Post a Comment