Friday, February 26, 2010

விண்ணைத் தாண்டி வரவேண்டாம் ப்ளீஸ் கௌதம் மேனன்!


விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை நேற்று பார்க்க நேர்ந்தது. படம் ஆரம்பித்த போதே தெரிந்து விட்டது, இது வழக்கமான வழவழப்பான கௌதம் மேனன் படம் என்று. படத்தில் உதவி இயக்குநர் வாய்ப்புத் தேடுகிறார் கார்த்திக் (சிம்பு). மலையாள கிறிஸ்துவ குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டில் சிம்பு தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேல் போர்ஷனில் வீட்டு உரிமையாளர் வசிக்கிறார். அவரது மகள் தான் ஜெஸ்சி (த்ரிஷா) . இந்தப் படத்துக்கும் வாரணம் ஆயிரம் படத்துக்குமான ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்க முடிந்தவர்கள் படத்தின் டிக்கெட்டுடன் உடனடியாக விண்ணப்பித்தால் த்ரிஷாவுடன் ஒருநாள் தங்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று விளம்பரம் செய்யலாம்.

கௌதம் மேனன் நிறைய காதலித்திருக்கலாம். தன் காதல் அனுபவங்களை அவர் படமும் எடுக்கலாம். ஆனால் அதற்காக அடுத்தடுத்து எத்தனை படங்களில் ஒரே கதையைப் பார்ப்பது? சிம்புவை அழகாகக் காட்டியிருக்கிறார். த்ரிஷாவையும்தான். சென்னையில் இப்படியொரு தெரு இப்படியான மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள்? எதார்த்தத்தை விட்டு விலகியே நிற்கிறது இந்தப் படம். நான் ஏன் உன்னைக் காதலித்தேன் என்று சிம்புவும், நான் ஏன் உன்னுடன் ஓடி வரமாட்டேன் என்று த்ரிஷாவும் படம் முழுவதும் விளக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

இதெல்லாம் படத்தில் வெளிப்படையாகத் தெரியும் எரிச்சல்கள். ஆனால் கமுக்கமாக சில வேலைகளை தெரிந்தே செய்திருக்கிறார், கௌதம் மேனன். காக்க காக்க ஒளிப்பதிவாளர் என்ற கதாப்பாத்திரத்தில் கௌதம் மேனனின் படங்களில் வழக்கமாக வரும் ஒரு நடிகர் நடித்திருக்கிறார். என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே என்று நிஜ ஒளிப்பதிபாளர் ஆர்.டி.ராஜசேகர் கேட்காமல் விட்டால் ஆச்சரியம் தான். அந்தளவுக்கு அவரைப் போட்டுத் தாக்கியிருக்கிறார்கள். சிம்புவின் காதலுக்கு அவர் உதவுகிறார், உதவுகிறார், உதவுகிறார் உதவிக் கொண்டே இருக்கிறார். விளக்குப் பிடிக்காதது தான் பாக்கி என்று நினைத்தால் கடைசியில் தன் ஆடம்பரமான வீட்டை அவர்கள் தங்குவதற்குக் கொடுத்து அதையும் செய்துவிடுகிறார். உங்களுக்கு வேறு வேலையே இல்லையா ராஜசேகர்? இத்துடன், மலையாளிகளைத் தூக்கோ தூக்கென்று தூக்குகிறார், இந்த மேனன். கே.எஸ்.ரவிக்குமார் மூலம் தமிழ் இயக்குநர்களை திறமையற்றவர்கள் என்று காட்ட முயற்சிக்கிறார். (கே.எஸ்.ரவிக்குமார் ஆகச்சிறந்த படங்களை செய்துவிட்டார் என்று நான் சொல்லவில்லை) அமீர் உலகப் படமொன்றினை சுட்டுப் (யோகி) படம் எடுத்ததற்காக கோபித்துக் கொண்ட இதே கௌதம், டிரயில்டு என்ற ஆங்கிலப் படத்தில் இருந்து பச்சைக்கிளி முத்துச்சரத்தை அப்படியே சுட்டதை ஒப்புக் கொள்ளவே மறுக்கிறாரே ஏன்? மலையாளிகள் உசத்தி, தமிழர்கள் என்றால் கேவலமா? ஏதோ கேரளாவில் இருப்பவர்கள் எல்லாம் கையில் அரிவாளோடு சுற்றும் வீரர்கள் போலும் காக்க காக்க படத்தின் காமிரா மேன் அவர்களிடம் அடிவாங்கிக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வருவது போன்றும் காட்டியிருக்கிறார்.

இந்தக் கருத்துக்குள் எல்லாம் போகாமல் படத்தைப் பார்த்தாலும், ஒரே காமெடிதான். படத்திற்கு மூன்று கிளைமாக்ஸ். முடிந்து விடும், முடிந்து விடும் என்று எழ முயற்சி செய்தால் திடீரென பாட்டைப் போட்டு கொல்கிறார்கள். அடியே கொல்லுதே பாடல் போலவே இந்தப் படத்தில் மூன்று நான்கு பாடல்கள் வருகிறது. சென்னையில் காதலி சிரித்தால் அமெரிக்காவில் வெள்ளைக்காரிகளுடன் நடனம் ஆடுகிறார்.பாடுகிறார். கடவுளே.. கடைசியில் தன் காதல் தோல்வி வரலாற்றை ஜெஸ்சி என்ற பெயரில் படம் எடுக்கிறார்கள். வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொண்ட த்ரிஷா இயக்குநர் சிம்வுடன் அமர்ந்து அந்தப் படததைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறார். மொத்ததில் இயக்குநர் விக்ரமனுக்கும், கௌதம் மேனனனுக்கும் என்ன வித்தியாசம் என்றே புரியவில்லை. விக்ரமனுக்கு ஏற்பட்ட நிலைமை கௌதமனுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. திறமையான இந்தத் தமிழ் இயக்குநரிடம் நாம் நிறைய வித்தியாசமான படங்களை எதிர்பார்க்கிறோம்.

6 comments:

  1. தோழா... யாரு தமிழ் இயக்குனர்.... தமிழில் படம் பண்ணிட்டா தமிழ் இயக்குனரா? இவருடைய காஸ்ட்லி அமெரிக்க கனவு படங்களை கேரளாவுல எடுக்கட்டும்... இங்க வேணாம்...?

    ReplyDelete
  2. தோழா... யாரு தமிழ் இயக்குனர்.... தமிழில் படம் பண்ணிட்டா தமிழ் இயக்குனரா? இவருடைய காஸ்ட்லி அமெரிக்க கனவு படங்களை கேரளாவுல எடுக்கட்டும்... இங்க வேணாம்...?

    ReplyDelete
  3. அமுதா அவர்களே இது என்னுடைய கருத்து. நீங்கள் கௌதம் மேனனின் படத்தைப் பார்ப்பவராக இருந்தால் பார்த்துவிடவும். மற்றபடி இந்தப் படம் நிச்சயம் வணிகரீதியாக ஓடாது. அதன் மூலம் கௌதம் மேனன் பாடம் கற்றுக் கொள்ளட்டும். படத்தின் தோல்வியைப் பற்றி எனக்குக் கவலை கிடையாது. ஊரை அடித்துச் சம்பாதிக்கும் கலைஞர் குடும்ப வாரிசு எடுத்தப் படம் என்பதால் பொருளாதார ரீதியாக இந்தப் படம் தோல்வி அடைவதை இருகரம் கூப்பி வரவேற்போம்.

    ReplyDelete
  4. //ஊரை அடித்துச் சம்பாதிக்கும் கலைஞர் குடும்ப வாரிசு எடுத்தப் படம் என்பதால் //

    நான் கலைஞர் குடும்ப வாரிசுகள்(சன் டிவி உட்பட) படம் எதனையும் திரையரங்கிற்கு சென்று பார்க்க கூடாது என்ற கொள்கையில் இருக்கிறேன்.!!!!!

    இப்படிக்கு,
    இந்தியன் என்ற அடையாளத்தில்(எனது விருப்பமில்லாமலே) வாழும் ஒரு கையிலாகாத தமிழன்

    ReplyDelete