Wednesday, November 10, 2010

அருந்ததி ராய் சீமான் :- ஓர் ஒப்பீடு




அருந்ததிராயின் கருத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் விவாதங்கள் ஊடகங்களால் முன்வைக்கப்படுகின்றன. அப்படி என்ன சொல்லிவிட்டார் அருந்ததி ராய்? “காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி அல்ல என்பதுதான் வரலாற்று உண்மை” என்று சொல்லியிருக்கிறார். ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “இந்த வரலாறு எல்லோரும் அறிந்ததே. நான் ஒன்றும் மக்களுக்கு ஆரம்பக்கல்வி நிலையில் சரித்திரப் பாடம் புகட்டவில்லை ஆனால் சிக்கலான காஷ்மீர் வரலாறு இன்றைய காஷ்மீர் சிக்கலுக்கும் காரணமில்லை என்றால், இந்திய அரசு 7 இலட்சம் ராணுவ வீரர்களை காஷ்மீரில் ஏன் நிறுத்தி வைத்திருக்கிறது? காஷ்மீர் தெருக்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்த நிஜங்களைக் கண்டு கொள்ளாமல் எப்போது நாம் ஏன் நம் கண்களை மூடிக் கொள்கிறோம்?” என்று பதிலளித்திருக்கிறார், அ.ராய்.

இந்தக் கருத்துக்குத்தான் டைம்ஸ் நவ் செய்தித் தொலைக்காட்சி அருந்ததிராயை தேசத் துரோகி என்று வர்ணிக்கிறது. காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் அருந்ததி ராயின் அக்கருத்துகள் மிகவும் சரியானதே.

அருந்ததி ராயின் அந்தப் பேச்சை அடுத்து, பா.ஜ.க. போன்ற இந்துத்துவக் கட்சிகளும், இந்திய தேசியத்தைத் தூக்கிப்பிடிக்கும் சில ஆங்கில இந்தி ஊடகங்களும் அருந்ததிராயைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. அருந்ததிராயின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிரானதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம் என்று இந்திய அரசும் அறிவித்தது. இதற்கிடையே, பா.ஜ.க. உள்ளிட்ட சில இந்துத்துவ அமைப்புகள் அருந்ததிராயின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்தளவுக்கு எதிர்ப்பு இருந்தும் அருந்ததிராயைக் கைது செய்யப் போவதில்லை என்று இந்திய அரசு அறிவித்துவிட்டது. இந்திய அரசு அருந்ததி ராயை ஏன் கைது செய்ய வில்லை என்பது ஆராய வேண்டிய கேள்வி. அருந்ததிராயைக் கைது செய்யாமல் தவிர்ப்பதற்கு பா.ஜ.க. கோரிக்கை விடுக்கிறது; அதற்கு அடிபணியக் கூடாது என்ற அரசியல் காரணம் மட்டுமே காரணம் அல்ல. அருந்ததிராய் இந்திய அளவில் அறியப்பட்ட சமூகப் போராளி. அதற்கு மேலும் அருந்ததி ராய் கேரளத் தாய்க்கும் வங்காள தந்தைக்கும் பிறந்தவர். ஆங்கிலத்தில் எழுதக் கூடியவர். (தில்லியில் படித்ததால் இந்தி பேசக் கூடியவர்). இன்னும் பச்சையாக சொல்ல வேண்டும் என்றால் அருந்ததி ராய் தமிழர் அல்ல.இவைதான் அவரைக் கைது செய்யாமல் இருப்பதற்கான காரணங்கள்.

சரி, நேராக விஷயத்துக்கு வருகிறேன். சீமான் ராமேஸ்வரத்தில் பேசுகிறார். ஈரோட்டில் பேசுகிறார். புதுவையில் பேசுகிறார். சென்னையில் பேசுகிறார். அந்தப் பேச்சுகளுக்கு எல்லாம் அவர் கைது செய்யப்படுகிறார். சீமானை ஏன் கைது செய்யவில்லை என்று (பரம) எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா அறிவிக்கை விடுகிறார். உடனே தி.மு.க. அரசு அவரைக் கைது செய்கிறது. சீமானை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கேட்கிறது, உடனே கலைஞர் கைது செய்ய உத்தரவிடுகிறார்.

இத்தனைக்கும் அருந்ததிராய் பேசியது, இந்தியத் தேசியத்துக்கு எதிராக. சீமான் பேசியது இலங்கை அரசுக்கு எதிராக. அருந்ததிராயை கைது செய்ய மத்திய அரசு ஆலோசனை செய்கிறது. ஆனால் சீமானைக் கைது செய்வதற்கு முன்பு இதுபோன்ற எந்த ஆலோசனையும் நடக்கவில்லையே ஏன்? நான் அருந்ததிராய்க்கு எதிரானவனல்ல. சீமானுக்கு ஆதரவாளனும் அல்ல. (தேவர் சிலைக்கு மாலை அணிவித்தது, தேர்தலில் போட்டியிடும் அவரது முடிவு உள்ளிட்ட விவகாரங்களில் அவருடன் வேறுபடுகிறேன்)

வடஇந்திய ஊடகங்கள் அருந்ததிராய்க்கு எதிராக செயல்படுகின்றன என்றும் அருந்ததி ராய் வீடு தாக்கப்பட்டது என்றும் சொல்லி தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் போராட்டத்துக்குத் தயாராகி வருகிறார்கள். இந்தப் போராட்டடும் அவசியமே. அதை நான் வரவேற்கிறேன். ஆனால் தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் எல்லாம் தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்கு குரல் கொடுக்கிறதா என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும். சினிமாக்காரர் மணிவண்ணன், சினிமாக்காரர் பாரதிராஜா என்று இன்றுவரை எழுதும் தினமலரை எதிர்த்து இவர்கள் போராடவில்லையே ஏன்? (சினிமாக்காரர் பாலச்சந்தர், சினிமாக்காரர் மணிரத்னம் என்று எழுதுவார்களா?)

கடந்த 2009 மே மாதம் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து தமிழகக் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று, யாராவது கேட்டுச் சொல்வார்களா? தமிழ் மொழி சமஸ்கிருத்ததையும், இந்தியையும் எதிர்த்து நிற்கிறது. இதனாலேயே தமிழனை இன்னும் எதிரியாகவே பார்க்கிறது, இந்தி(ய) அரசு. அப்படிப்பட்ட இந்திய அரசுக்கு கேடுகெட்ட திராவிட கட்சிகள் துணை போய் அவர்கள் கைகாட்டும் நபர்களை எல்லாம் கைது செய்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் வைகோ கைதும், தி.மு.க. ஆட்சியில் சீமான் கைதும் இதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன. (தற்போது வைகோ அ.தி.மு.க.வை ஆதரிப்பது போல், நாளை சீமான் தி.மு.க.வை ஆதரித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.)

இந்தியாவுக்கு எதிராக கருத்து சொன்ன அருந்ததிராயைக் கைது செய்ய இந்திய அரசு யோசிக்கும் வேளையில் இலங்கை அரசுக்கு எதிராக கருத்து சொன்ன சீமானை கைது செய்தது ஏன் என்று இந்தப் போராட்டக்காரர்கள் கேட்க வேண்டும். டைம்ஸ் நவ்வை எதிர்க்கும் அதே வேளையில் இங்கே தமிழர்களுக்கு விரோதமாக செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
இந்திய அரசால் புறக்கணிக்குள்ளாகும் ஆறு கோடி தமிழர்களின் பிரதிநிதியாகவே இதைக் கேட்கிறேன். மற்றபடி, நானும் தோழர் அருந்ததி ராய் போல் காஷ்மீர் மக்களின் விடுதலையை ஆதரிக்கிறேன்.

No comments:

Post a Comment